அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1–31
இயேசு சவுலுக்குத் தோன்றுகிறார்
மனந்திரும்பி கர்த்தரைப் பின்பற்ற ஒரு அழைப்பு
சவுல் ஒரு பரிசேயன்—வேதங்களை நன்கு அறிந்த யூதர்களின் தலைவன். ஆனால் இயேசுவே இரட்சகர் என்பதை சவுல் நம்பவில்லை. அவன் பல சமயங்களில் இயேசுவின் சீஷர்களைச் சிறையில் அடைத்தான். ஒரு நாள் சவுல், இயேசுவின் சீஷர்களில் சிலரைக் கைது செய்து, எருசலேமுக்குக் கொண்டு சென்று தண்டிக்க தமஸ்கு என்ற பட்டணத்திற்குப் பயணம் செய்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1–2; 22:4–5; 26:5
சவுல் பயணம் செய்துகொண்டிருக்கையில், திடீரென்று ஒரு ஒளி அவன் மீது பிரகாசித்தது. அது சூரியனை விட பிரகாசமாக இருந்தது. சவுல் தரையில் விழுந்தான். “சவுலே, சவுலே” என்று சொல்லுகிற ஒரு குரலை அவன் கேட்டான். பின்னர் அந்தக் குரல் சவுலிடம், ஏன் இயேசுவுக்கு எதிராகப் போராடி அவருடைய சீஷர்களைத் துன்புறுத்துகிறாய் என்று கேட்டது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:3–4; 26:13–14
யார் பேசுகிறார்கள் என்று சவுல் கேட்டான். அந்தக் குரல், “இயேசு நானே,” என்றது. சவுல் பயந்து ஆச்சரியப்பட்டான். அவன் இயேசுவிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். இயேசு சவுலிடம், “நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ” என்றார். அங்கே அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:5–6
சவுல் கீழ்ப்படிந்து எழுந்து நின்றான். ஆனால் இப்போது அவன் பார்வையற்றவனாக இருந்தான். அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. அவனுடன் பயணம் செய்த மக்கள் அவனை தமஸ்கு பட்டணத்திற்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்கள் சவுல் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:8–9
தமஸ்குவில் வாழ்ந்த இயேசுவின் சீஷர்களில் ஒருவன் அனனியா. இயேசு ஒரு தரிசனத்தில் அனனியாவைச் சந்தித்து, சவுலுக்கு உதவி செய்யச் சொன்னார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:10–12
ஆனால் அனனியா குழப்பமடைந்தான். அவன் சவுலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். இயேசுவின் சீஷர்களுக்கு எதிராக சவுல் எவ்வளவு சண்டையிட்டிருந்தான் என்பது அவனுக்குத் தெரியும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13–14
எவ்வகையிலாவது சவுலுக்கு உதவுமாறு இயேசு அனனியாவிடம் கேட்டார். யூதர்கள் அல்லாத, தம்மைப் பற்றி அறியாத பலருக்குத் தம்முடைய சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல சவுலைத் தேர்ந்தெடுத்ததாக இயேசு கூறினார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15–16
அனனியா இயேசுவுக்குக் கீழ்ப்படிந்தான். அவன் சவுலைக் கண்டுபிடித்து அவனுக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தான். அனனியா அவரை “சகோதரனாகிய சவுலே” என்று அழைத்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17
சவுல் குணமடையவும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படவும் இயேசு தன்னை அனுப்பியதாக அனனியா கூறினான். உடனே, சவுல் மீண்டும் பார்வை பெற்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17–18
சவுல் ஞானஸ்நானம் பெற்றான். பின்னர் அவன் நகரத்தில் உள்ள அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தான். சவுல் இவ்வளவு மாறிவிட்டதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். சவுல் வாழ்நாள் முழுவதும் பவுல் என்று அழைக்கப்பட்டான். அவன் எல்லா மக்களுக்கும், யூதர்களுக்கும், இன்னும் பலருக்கும், இயேசுவை விசுவாசிக்கும்படி போதித்தான். பவுல் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனானான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:18–22, 29–31; 13:9