மத்தேயு 25:1–13
பத்து கன்னிகைகளின் உவமை
இயேசு மீண்டும் வருவதற்கு ஆயத்தமாயிருத்தல்
இயேசு தம் பிதாவிடம் சென்ற பிறகு, ஒரு நாள் மீண்டும் பூமிக்கு வருவார் என்று அவருடைய சீஷர்கள் அறிந்திருந்தார்கள். அவர் எப்போது வருவார் என்பதை அவர்கள் எப்படி அறிந்து கொள்வது என்று அவரிடம் கேட்டார்கள். அவர்கள் அவருக்காக ஆயத்தமாக இருக்க விரும்பினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, இயேசு ஓர் உவமையைக் கூறினார்.
மத்தேயு 24:3 பார்க்கவும்.
இந்த உவமையில், பத்து பெண்கள் ஒரு திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். திருமணம் இரவில் நடந்ததால், அவர்கள் தங்கள் வழியை ஒளிரச் செய்ய எண்ணெய் நிரப்பப்பட்ட விளக்குகளை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அவர்களில் ஐந்து பெண்கள் புத்தியுள்ளவர்கள், அவர்கள் நிறைய எண்ணெய் கொண்டு வந்தனர். மற்ற ஐந்து பெண்கள் புத்தியில்லாதவர்கள், அவர்கள் போதுமான அளவு எண்ணெய் கொண்டு வரவில்லை.
மத்தேயு 25:1–4
மணமகன் மற்றும் அவரது திருமண வீட்டார் வருகைக்காக அந்தப் பெண்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் மணமகன் வர நீண்ட நேரம் ஆனது. அவர்கள் காத்திருந்தபோது, அவர்களனைவரும் தூங்கிவிட்டார்கள்.
மத்தேயு 25:5.
நள்ளிரவில், இறுதியாக மணமகன் வந்துகொண்டிருப்பதாக யாரோ ஒருவர் சத்தமிட்டார்! பெண்கள் திருமண விருந்தில் அவரோடு சேர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
மத்தேயு 25:6.
அனைத்துப் பெண்களும் தங்கள் வழிகளை ஒளிரச் செய்ய விளக்குகளை உயர்த்திப் பிடித்தார்கள். ஆனால், போதுமான எண்ணெய் கொண்டு வராத அந்த ஐந்து பெண்களிடம் வெளிச்சம் இல்லை. மணமகனுக்காகக் காத்திருந்தபோது அவர்களுடைய எண்ணெய் தீர்ந்து போனது.
(மத்தேயு 25:7-8).
எண்ணெய் இல்லாத ஐந்து பெண்கள் மற்றவர்களிடம் அவர்களுடையதை பகிரும்படி கேட்டார்கள். ஆனால் பகிர்ந்து கொடுப்பதற்கு அங்கே போதுமான அளவு எண்ணெய் இருக்கவில்லை. எண்ணெய் இல்லாத அந்த ஐந்து பெண்களும் விரைவாக மேலும் எண்ணெய் வாங்கச் சென்றார்கள்.
மத்தேயு 25:8–9
அவர்கள் சென்றிருந்த நேரத்தில், மணமகன் வந்துவிட்டார்! ஆயத்தமாக இருந்த ஐந்து பெண்கள் அவரோடு திருமணத்திற்குச் சென்றார்கள்.
மத்தேயு 25:10.
மற்ற பெண்கள் திரும்பி வந்தபோது, கதவு அடைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கதவைத் தட்டி, தங்களை உள்ளே விடும்படி மணமகனிடம் கேட்டார்கள். ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது. அவர்களால் திருமண விருந்திற்கு வர முடியவில்லை.
மத்தேயு 25:11–12
இந்த உவமையில் இயேசு மணமகனைப் போல இருக்கிறார். அவர் மீண்டும் எப்போது வருவார் என்று யாருக்கும் தெரியாது. பரலோக பிதாவிற்கு மட்டுமே அது தெரியும். எனவே, போதுமான எண்ணெய் வைத்திருந்த அந்த ஐந்து பெண்களைப் போல ஆயத்தமாக இருக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம் கூறினார். கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, ஆவியானவரைப் பின்பற்றி நடக்கும் ஜனங்கள், இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது ஆயத்தமாக இருப்பார்கள்.
மத்தேயு 24:36 ; 25:13 ; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:56–57