லூக்கா 24:13–35
இயேசு இரண்டு சீஷர்களுக்கு ஆறுதல் கூறுதல்
எம்மாவு கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஒன்றாக நடந்து செல்லுதல்.
இயேசு உயிரோடு எழுந்த அதே நாளில், இரண்டு சீஷர்கள் எருசலேமிலிருந்து எம்மாவு என்னும் கிராமத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்கள், அதனால் அவர்கள் மிகவும் சோகமாக இருந்தார்கள். கடந்த சில நாட்களாக இயேசுவின் மரணத்தைப் பற்றியும், அங்கே நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே சென்றார்கள்.
லூக்கா 24:13–14
அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, இயேசு அவர்களோடு வந்து சேர்ந்து நடந்தார். ஆனால், அவர்தான் இயேசு என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், ஏன் சோகமாக இருக்கிறார்கள் என்றும் அவர் கேட்டார்.
லூக்கா 24:15–17
அங்கே என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியவில்லையே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் அவரிடம் இயேசுவைப் பற்றிச் சொன்னார்கள். அவர் தங்கள் இரட்சகராக இருப்பார் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் அவர் மரித்துவிட்டார்.
லூக்கா 24:18–21
சில பெண்கள் அவருடைய கல்லறைக்குச் சென்றார்கள் என்றும், ஆனால் அங்கே இயேசுவின் உடல் இல்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். இயேசு உயிரோடு இருக்கிறார் என்று தூதர்கள் அந்தப் பெண்களிடம் சொன்னார்கள்.
லூக்கா 24:21–24
பின்னர் இயேசு, இரட்சகரைப் பற்றி வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது என்று அவர்களுக்குப் போதித்தார். இரட்சகர் மரித்து மீண்டும் உயிர்த்தெழுவார் என்று தீர்க்கதரிசிகள் போதித்திருந்தார்கள் என்று அவர் கூறினார்.
லூக்கா 24:25–27
அவர்கள் எம்மாவு கிராமத்துக்கு வந்தபோது, நேரம் மிகவும் ஆகிவிட்டது. இரண்டு சீஷர்கள் இயேசுவைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு அமர்ந்தார். அவர் அப்பத்தை எடுத்து, அதை ஆசீர்வதித்து, சீஷர்களுக்குக் கொடுத்தார். அந்த நிமிஷமே, அவர் இயேசு என்று அவர்கள் அறிந்தார்கள். திடீரென்று அவர் மறைந்து போனார்.
லூக்கா 24:29–31
இயேசு வேதவாக்கியங்களிலிருந்து தங்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது, தங்கள் இருதயத்தில் எவ்வளவு ஆறுதலாய் இருந்தது என்பதைப் பற்றி அந்த இரண்டு சீஷர்களும் பேசிக்கொண்டார்கள். தாங்கள் இயேசுவைக் கண்டதை மற்ற சீஷர்களிடம் சொல்வதற்காக அவர்கள் ஆவலோடு எருசலேமுக்கு விரைந்து சென்றார்கள்.
லூக்கா 24:32–35