அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–7
ஸ்தேவான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்கிறான்
ஒரு துணிச்சலான ஊழியன் தனது சாட்சியத்திற்காக தனது உயிரைக் கொடுக்கிறான்
சபை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. எல்லா உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்வது அப்போஸ்தலர்களுக்கு கடினமாகிக்கொண்டே போனது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:1–2
அப்போஸ்தலர்கள் உதவக்கூடிய ஏழு பேரை அழைக்க முடிவு செய்தனர். ஞானமும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களுமான மனிதர்களைத் தேடும்படி அவர்கள் உறுப்பினர்களைக் கேட்டார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3
அவர்கள் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவர் ஸ்தேவான். அப்போஸ்தலர்கள் அவனுக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தார்கள். ஸ்தேவானுக்கு மிகுந்த விசுவாசம் இருந்தது, மக்களிடையே பெரிய அற்புதங்களைச் செய்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:5–8
ஸ்தேவான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஞானத்தோடும் ஆவியோடும் போதித்தான். ஆனால் ஒரு ஜெப ஆலயத் தலைவர்களுக்கு அவன் போதித்தது பிடிக்கவில்லை. அவன் மோசேக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசுவதாக அவர்கள் சொன்னார்கள். அவர்கள் ஸ்தேவானைப் பிரதான ஆசாரியனுக்கும் மற்றத் தலைவர்களுக்கும் முன்பாகக் கொண்டு வந்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:9–15; 7:1
ஸ்தேவானின் முகம் ஒரு தூதனின் முகம் போல இருந்தது. இஸ்ரவேலர்களைக் காப்பாற்ற தேவன் மோசேயை அனுப்பினார் என்பதை அவன் தலைவர்களுக்கு நினைவூட்டினான், ஆனால் அவர்கள் எப்போதும் மோசேயைப் பின்பற்றவில்லை. மோசே இயேசு கிறிஸ்துவைப் போன்றவன் என்று ஸ்தேவான் கூறினான். தேவன் தம் மக்களைக் காப்பாற்ற இயேசுவை அனுப்பினார், ஆனால் தலைவர்கள் அவரைப் பின்பற்றவில்லை. தலைவர்கள் ஸ்தேவான் மீது கோபமடைந்தனர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:20–43; 51–54
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஸ்தேவான் பரலோகத்தைப் பார்த்தான். அவன் பரலோக பிதாவின் அருகில் இயேசு கிறிஸ்து நிற்பதைக் கண்டான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:55–56
ஸ்தேவான் தான் கண்டதைத் தலைவர்களிடம் சொன்னபோது, அவர்கள் இன்னும் கோபமடைந்தனர். அவர்கள் கோபத்தில் கூச்சலிட்டு ஸ்தேவானைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியே இழுத்துச் சென்றனர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:57
அவர்கள் தங்கள் மேலங்கிகளை சவுல் என்ற மனிதனின் காலடியில் வைத்தார்கள். பின்னர் அவர்கள் ஸ்தேவானைக் கொல்லும்படி கற்களை எறிந்தனர். அவர்கள் செய்ததை சவுல் ஏற்றுக்கொண்டான். ஸ்தேவான் ஜெபித்தான். தன்னைத் துன்புறுத்திய மக்களை மன்னிக்கும்படி அவன் கர்த்தரிடம் கேட்டான். அவன் தனது ஆவியை பரலோகத்தில் பெறும்படி கர்த்தரிடம் கேட்டான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59–60; 8:1–4