வேதக் கதைகள்
காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு, காணாமல் போன மகன்—தேவனின் அன்பைப் பற்றிய மூன்று உவமைகள்


லூக்கா 15

காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு, காணாமல் போன மகன்

தேவனின் அன்பைப் பற்றிய மூன்று உவமைகள்

இயேசு ஒரு கூட்டத்தினருடன் பேசிக் கொண்டும், அவர்களுடன் உணவருந்திக் கொண்டும் இருத்தல்.

சில யூதத் தலைவர்கள், அவர்கள் பாவிகள் என்று நினைத்த மக்களுடன் இயேசு பேசிக்கொண்டு சாப்பிடுவதைக் கண்டனர். இயேசு பாவிகளுடன் சாப்பிடுவது தவறு என்று அந்த தலைவர்கள் நினைத்தார்கள். அனைவரும் மனந்திரும்ப அவர் உதவ விரும்புகிறார் என்பதையும், அவர்கள் அவ்வாறு மனந்திரும்பும்போது அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள இயேசு அந்த தலைவர்களுக்கு மூன்று கதைகள் அல்லது உவமைகளைச் சொன்னார்.

லூக்கா 15:1–3

ஒரு மேய்ப்பன் காணாமல் போன ஆட்டைத் தேடுதல்

முதல் உவமை 100 ஆடுகளை வைத்திருந்த ஒரு மனுஷனைப் பற்றியது. அவனுடைய ஆடுகளில் ஒன்று தொலைந்து போனது.

லூக்கா 15:4

மேய்ப்பன் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடித்தல்.

அந்த மனுஷன் மற்ற 99 ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிச் சென்றான். அதைக் கண்டுபிடிக்கும் வரை அவன் தேடிக்கொண்டே இருந்தான்.

லூக்கா 15:4

மேய்ப்பன் காணாமல் போன ஆட்டைத் தன் தோள்களில் சுமந்து வருதல்.

கடைசியில் அவன் தன் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடித்தபோது, அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்! அவன் ஆட்டை தனது தோள்களில் சுமந்து வீட்டிற்குச் சென்று, தனது நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் தன்னுடன் கூட மகிழ்ச்சியடையும்படி சொன்னான். ஒருவன் அவனுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி பரலோக பிதாவிடம் திரும்பும்போது இப்படித்தான் அவர் உணருகிறார் என்று இயேசு கூறினார்.

லூக்கா 15:5–7

ஒரு ஸ்திரீ தொலைந்து போன காசைத் தேடுதல்.

இரண்டாவது உவமை 10 வெள்ளிக் காசுகளை வைத்திருந்த ஒரு ஸ்திரீயைப் பற்றியது. அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனபோது, விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைத் தேடினாள். அதைக் கண்டுபிடிக்கும் வரை அவள் தேடிக்கொண்டே இருந்தாள்.

லூக்கா 15:8

அந்த ஸ்திரீ தொலைந்து போன காசைக் கண்டுபிடித்து மிகவும் மகிழ்ச்சியடைதல்.

கடைசியில் அவள் தொலைந்து போன காசைக் கண்டுபிடித்தபோது, அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்! அவள் தன் தோழிகளிடமும் அண்டை வீட்டாரிடமும் தன்னுடன் கூடமகிழ்ச்சியடையச் சொன்னாள். ஒருவர் தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பும்போது பரலோகத்திலுள்ள தூதர்கள் இப்படித்தான் உணருவார்கள் என்று இயேசு கூறினார்.

லூக்கா 15:9–10

இளைய மகன் குடும்பத்தை விட்டு வெளியேறுதல் .

மூன்றாவது உவமை இரண்டு மகன்கள் இருந்த ஒரு மனுஷனைப் பற்றியது. இளைய மகன் இனிமேலும் தன் தந்தையுடன் வாழ விரும்பவில்லை. குடும்ப ஆஸ்தியில் தனக்குக் கிடைக்கும் பங்கை இப்போதே தருமாறு அவன் தன் தந்தையிடம் கேட்டான். பின்னர் மகன் வீட்டை விட்டு வெளியேறி தொலைதூர நாட்டிற்குச் சென்றான்.

லூக்கா 15:11–13

மகன் தன் தந்தையின் பணத்தை வீணாகச் செலவழித்தல்.

மகன் சில மோசமான தேர்வுகளைத் தேர்ந்தெடுத்தான். அவன் தன் தந்தை கொடுத்த பணத்தை வீணடித்தான்.

லூக்கா 15:13

மகன் சாப்பிட எதுவும் இல்லாதிருத்தல்.

அவனுடைய பணம் எல்லாம் தீர்ந்த பிறகு, அவனுக்கு மிகவும் பசியாக இருந்தது. யாரும் அவனுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. கடைசியில் அவனுக்கு பன்றிகளுக்கு உணவளிக்கும் வேலை கிடைத்தது. மகன் மிகவும் பசியுடன் இருந்ததால், பன்றிகளின் உணவைச் சாப்பிட விரும்பினான். அவன் தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என அவன் தெரிந்து கொண்டான்.

லூக்கா 15:14–18

மகன் தன் தந்தையிடம் கூலிக்காரனாக இருக்க அனுமதிக்குமாறு கேட்க முடிவு செய்தல்.

ஆனால் மகனுக்கோ தன் தந்தை தன்னைத் திரும்ப ஏற்றுக்கொள்வாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. அவன் தன் தந்தையிடம், அவருடைய கூலிக்காரர்களில் ஒருவனாக இருக்க முடியுமா என்று கேட்பதென முடிவு செய்தான்.

லூக்கா 15:17–19

மகனைப் பார்த்ததும் தந்தை மகிழ்ச்சியடைதல்.

மகன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவன் தந்தை தூரத்திலிருந்து அவன் வருவதைக் கண்டான். அந்தத் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்தான், அவன் தனது மகனிடம் ஓடினான்!

லூக்கா 15:20

தந்தையும் மகனும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளுதல்.

தந்தை தன் மகனைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். அவன் தனது மகனுக்கு சிறந்த ஆடைகளைக் கொண்டு வந்து விருந்து தயாராக்குமாறு தனது வேலைக்காரர்களிடம் கூறினான். தன் மகன் வீடு திரும்பிவிட்டதால் அனைவரும் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.

லூக்கா 15:20–24

மூத்த மகன் வயலில் வேலை செய்துவிட்டுத் திரும்புதல்.

இவ்வளவு நேரமும், மூத்த மகன் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டான் என்ன நடக்கிறது என்று ஒரு வேலைக்காரனிடம் கேட்டான். வேலைக்காரன் அவனிடம், அவனுடைய சகோதரன் வீட்டிற்கு வந்துவிட்டான் என்றும், அவர்கள் கொண்டாட ஒரு விருந்து வைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னான்.

லூக்கா 15:25–27

இளைய மகன் திரும்பி வந்ததைக் குறித்து மகிழ்ச்சியடையும்படி தந்தை மூத்த மகனிடம் கேட்டுக்கொண்டார்.

மூத்த மகன் கோபமடைந்தான். அவன் தந்தை அவனை விருந்துக்கு அழைத்தான், ஆனால் அவன் போகவில்லை. அவன் தன் தந்தையிடம், பல வருடங்களாக சேவை செய்து வருவதாகவும், ஆனால் யாரும் தனக்கு ஒரு விருந்து இதுவரை வைக்கவில்லை என்றும் கூறினான். “எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது”, ஆனால் ஒருவர் மனந்திரும்பி வீடு திரும்பும்போது மகிழ்ச்சியாக இருப்பதுதானே நல்லது! என்று தந்தை அவனிடம் கூறினான்.

லூக்கா 15:28–32