கர்த்தர் தம் பணியை விரைவுபடுத்துகிறார்.
கர்த்தர் தம்முடைய பணியை விரைவுபடுத்தும்போது, அவருடைய சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்பவர்களை நாம் நேசிக்க வேண்டும், போஷிக்க வேண்டும், சேவை செய்ய வேண்டும்.
சார்லஸ் டிக்கன்ஸ் தனது புகழ்பெற்ற நாவலான தி டேல் ஆப் டூ சிட்டிஸ் ஐ “இது சிறந்த காலங்கள்; இது மிக மோசமான காலங்கள்“ என்ற கூற்றுடன் தொடங்கினார். ஒரு வகையில் இது நம் நாளிலும் உண்மைதான்.
“பூமி முழுவதும் குழப்பத்திலிருக்கும்,“ ஒரு கொந்தளிப்பான காலத்தில் நாம் வாழ்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, சமாதானம் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற தலைவர் ரசல் எம். நெல்சனின் அறிவுரையை மூப்பர் கேரி இ. ஸ்டீவென்சன் இன்று காலை அழகாக வலியுறுத்தினார். “மோசமான காலங்களில்“ ஒற்றுமை, அமைதி மற்றும் குணப்படுத்துதலை வளர்ப்பதில் இது ஒரு முக்கிய பகுதியாகும்.
நாம் “சிறந்த காலங்களில்“ வாழ்கிறோம், அதுவே எனது வலியுறுத்தலாக இருக்கும். கர்த்தர், கோட்பாடும் உடன்படிக்கைகளும், பாகம் 1, முன்னுரையில், சுவிசேஷத்தின் பரிபூரணம் “உலகின் கடைசி எல்லைவரை … அறிவிக்கப்படும்.” என்று அறிவித்தார். உண்மையிலேயே, நமது காலத்தில் கர்த்தர் தமது கிரியையை தீவிரமாய் நடப்பிக்கிறார். இவ்வளவு சவாலான காலங்களுக்கு மத்தியிலும், நிகழ்ந்து வரும், விரைவுபடுத்தலுக்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் அவருடைய குரலைக் கேட்டு, திறந்த இருதயங்களுடனும் மனங்களுடனும் பதிலளிக்கும் சிலாக்கியம் பெற்ற ஒரு நாளில் நாம் வாழ்கிறோம். இரட்சகருக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் அர்ப்பணித்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்கள், நோக்கத்தையும் ஆழ்ந்த தனிப்பட்ட சமாதானத்தையும் காண்கிறார்கள்.
சபை வரலாற்றில் பல்வேறு காலங்களில், உடன்படிக்கைப் பாதையில் பிரவேசித்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 1837 மற்றும் 1850 க்கு இடையில் இதுபோன்ற ஒரு காலம் நிகழ்ந்தது. கர்த்தருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் ஆரம்பகால அப்போஸ்தலர்களில் சிலர் ஐக்கிய இராஜ்யத்தில் ஊழியம் செய்தனர். இந்த ஊழியங்கள் ஆயிரக்கணக்கானோர் சபையில் சேர வழிவகுத்தன, மேலும் 1850 வாக்கில் அமெரிக்காவை விட ஐக்கிய இராஜ்யத்தில் சபையின் உறுப்பினர்கள் அதிகமாக வாழ்ந்தனர். அந்த நேரத்தில், கர்த்தர் இந்தப் பரிசுத்தவான்களை யூட்டாவில் கூடிவரச் சொன்னார். பெருமளவிலான குடியேற்றம் ஏற்பட்டது, சில நிரந்தர குடியேற்ற நிதியத்தால் வழங்கப்பட்ட கடன்களால் ஆதரிக்கப்பட்டன.
1852 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலிருந்து ஏராளமான மனமாறியவர்கள் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு வந்ததைப் பற்றிய விவரம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தக் குழு எமிகிரேஷன் கேன்யன் முகப்பில் பிரதான தலைமை, கேப்டன் பிட்டின் குழுவால் சந்திக்கப்பட்டது. டெசரெட் நியூஸ் அவர்களை “சகோதரிகள் மற்றும் பிள்ளைகள் உட்பட பயணிகளின் குழு, நடந்து, வெயிலில் வெந்து, வானிலையால் பாதிக்கப்பட்டு, ஆனால் சோகமாக இல்லாமல்; அவர்களின் இருதயங்கள் இலகுவாகவும், உற்சாகமாகவும் இருந்தன, இது அவர்களின் மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான முகபாவங்களால் தெளிவாக வெளிப்பட்டது“ என்று விவரித்தது.
அவர்கள் “ஆலய பகுதியைக் கடந்து செல்லும்போது, …ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூடி, மகிமையான மற்றும் மகிழ்ச்சியான வரவேற்பில் ஒன்றுபட்டனர்.“ தலைவர் பிரிகாம் யங் அவர்களிடம் உரையாற்றினார்: “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. … நாங்கள் உங்களுக்காகத் தொடர்ந்து ஜெபித்திருக்கிறோம்; இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதன் மூலம் மனுபுத்திரரைக் காப்பாற்றவும், மேசியாவின் வருகைக்கு அவர்களைத் தயார்படுத்தவும் எங்களுக்குக் கட்டளையிட்டவருக்கு, தினமும் ஆயிரக்கணக்கான ஜெபங்கள் உங்களுக்காக ஏறெடுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தின் உணர்வோடு, புதிதாக மனந்திரும்பிய அனைவருக்கும், கர்த்தருடைய சபைக்குத் திரும்புபவர்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன்: நாங்கள் உங்களை நேசிக்கிறோம்; எங்களுக்கு நீங்கள் தேவை; கர்த்தருக்கும் நீங்கள் தான் தேவை. அணிவகுப்பு இசைக்குழுக்களுடன் நாங்கள் உங்களை வரவேற்க முடியாது, ஆனால் பரலோக ராஜ்யத்தில் பிதாவாகிய தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் வழிநடத்தும் உடன்படிக்கைப் பாதையில் முன்னேற உங்கள் முயற்சிகளுக்கு பரலோகத்தின் ஆசீர்வாதங்கள் துணை புரியும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
நம் நாளில் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் அதிகரித்து வருகிறது என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில், மனம் மாறியவர்கள் மற்றும் மனம் மாறியவர்களின் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 36 மாதங்களில் கிட்டத்தட்ட 900,000 மனமாறியவர்கள் சபையில் சேர்ந்துள்ளனர். இந்த மனமாறியவர்கள் மொத்த சபை உறுப்பினர்களில் தோராயமாக 5 சதவீதமாக உள்ளனர். நீங்கள் தேர்ந்தெடுத்த பாதைக்கு புதிய உறுப்பினர்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம், ஆழ்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 36 மாதங்களில் இந்த 900,000 மனமாறியவர்கள், 1940 ஆம் ஆண்டு அதன் 110 வது ஆண்டு விழாவில் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர், இது 860,000 உறுப்பினர்களுக்கு சற்று அதிகமாக இருந்தது. இது, மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட், மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் மற்றும் நான் பிறந்த ஆண்டாகும்.
இந்த அற்புதமான புதிய மனமாறியவர்கள் உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வருகிறார்கள். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் மனமாற்றங்கள் முந்தைய ஆண்டை விட 20 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 17 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளோம். கர்த்தருடைய பணி வல்லமைவாய்ந்த வழிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுவிசேஷம் எல்லா இடங்களிலும் இருதயங்களைத் தொடுகிறது மற்றும் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதற்கு இந்த அதிகரித்து வரும் எண்ணிக்கை தெளிவான சான்றாகும்.
நமது நாளில், இந்த விலைமதிப்பற்ற மனமாறியவர்கள் இனி ஒரு மைய இடத்தில் கூடுவதில்லை. சபை உறுப்பினர்களின் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, உலகம் முழுவதும் கூடுமிடங்கள் மற்றும் ஆலயங்களைக் கட்டுவதன் மூலம் சபைகளை ஆதரிக்க ஆதாரங்கள் கிடைக்கின்றன. தேவையான ஆசாரியத்துவ திறவுகோல்கள் மற்றும் வழங்கப்பட்ட ஆதாரங்களுடன், உலகின் பெரும்பாலான பகுதிகளில் இரட்சிக்கும் நியமங்கள் இப்போது கிடைக்கின்றன.
நாம் எங்கு வாழ்ந்தாலும், தற்போதைய உறுப்பினர்கள் நமது ஆரம்பகால வரலாற்றில் நான் விவரித்த ஆங்கில மற்றும் வெல்ஷ் பரிசுத்தவான்களைப் போலவே லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களை வரவேற்க வேண்டும். இந்த அமர்வில் மூப்பர் கெரிட் டபிள்யூ. காங் ஆற்றிய உரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உணர்ச்சி ரீதியாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியாகவோ யாரும் தனியாக உட்காரக்கூடாது என்று அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்.
புதிய மற்றும் திரும்பிவரும் உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வதும் வரவேற்பதும் நமது பரிசுத்தமான கடமையாகும். கர்த்தர் தம்முடைய பணியை விரைவுபடுத்தும்போது, அவருடைய சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்பவர்களை நாம் நேசிக்க வேண்டும், போஷிக்க வேண்டும், அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். “அவர்கள் ஏக சிந்தனையிலும் ஏக உள்ளத்திலுமிருந்ததாலும், நீதியில் [வாசம் செய்ததாலும்]” நாம் ஒரு சீயோன் மக்களைக் கட்டியெழுப்ப உதவ முடியும். கர்த்தருடன் ஒன்றாக இருக்க, நாம் கர்த்தருக்கு முன்பாக ஒன்றாக இருக்க வேண்டும். ஞானஸ்நான தேதியைப் பொருட்படுத்தாமல், அனைத்து உறுப்பினர்களும் மற்றவர்களை வரவேற்கும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட இந்த விலைமதிப்பற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை நம் கரங்களால் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதே சபை உறுப்பினர்களுக்கு எனது அறிவுரை.
புதிதாக மனந்திரும்பியவர்களுக்கு, “ஒரு நண்பர், ஒரு பொறுப்பு, மற்றும் ‘தேவனின் நல்வார்த்தையால்‘ போஷிப்பு தேவை என்று தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி நமக்குக் கற்பித்தார் (மரோனி 6:4).”.புதிதாக மனந்திரும்பியவர்களுக்கு, உண்மையிலேயே அவர்கள் நம்முடையவர்கள் என்றும் வெறும் விருந்தினர்கள் அல்ல என்பதை உறுதியாகச் சொல்லும் நண்பர்களில் ஒருவராகவும் நாம் இருக்க முடியும். அவர்கள் மற்றவர்களுக்கு ஊழியம் செய்து, சேவை செய்ய அழைப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதைப் புரிந்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவலாம். இளம் மனமாறியவர்கள் முழுநேர ஊழியம் செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையை வாழ முயற்சிக்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
பலர் மிகுந்த தனிப்பட்ட தியாகத்துடன் சபையில் இணைகிறார்கள், மேலும் தங்கள் சக பரிசுத்தவான்களின் அன்பும் ஆதரவும் அவர்களுக்கு மிகவும் தேவை.
புதியவர்கள் அல்லது விசுவாசத்திற்குத் திரும்புபவர்களாகிய உங்களுக்கு, நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் இருக்கலாம். உங்களோடே பொறுமையாயிருங்கள். ஊழியக்காரர்கள் உங்களுக்கு அத்தியாவசியமான கோட்பாட்டைக் கற்பித்திருக்கிறார்கள், வேதங்களிலும் என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் இலும் குறிப்பிடப்பட்டுள்ள ராஜ்யத்தின் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களை விளக்கியிருக்கிறார்கள்.
நியமங்களையும் உடன்படிக்கைகளையும் பெற்று, கட்டளைகளின்படி வாழ்வது அவசியம். மேன்மையடைதலுக்குத் தேவையான உடன்படிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். சுவிசேஷம் மேன்மையடைதலை சாத்தியமாக்குகிறது, அதற்கு தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது. ஞானஸ்நானம், திடப்படுத்தல் மற்றும் ஆண்களுக்கான மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை வழங்குதல் தவிர, நாம் பிரவேசிக்கும் உடன்படிக்கைகள் ஆலயத்தில் செய்யப்படுகின்றன. மரித்தவர்களுக்கு, இந்த இரட்சிப்பின் நியமங்கள் ஒவ்வொன்றும் ஆலயத்தில் மட்டுமே செய்யப்படுகின்றன. அதன்படி ஆலயத்திற்கு உங்களை தயார்படுத்துவது உடனடி இலக்காக இருக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரிந்ததைப் பற்றி நீங்கள் சில சமயங்களில் நீங்கள் போதுமானவரில்லை என உணர்வீர்கள். சுவிசேஷ அறிவு என்பது காலப்போக்கில் படிப்படியாகப் பெறப்படும் ஒரு பெரிய ஆசீர்வாதம், ஆனால் அது ஒரு இரட்சிக்கும் நியமம் அல்ல. சுவிசேஷம் அறிவின் பரீட்சை அல்ல. எனினும் தலைவர் ரசல் எம்.நெல்சன் வாக்களித்தபடி: “மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு தினமும், நீங்கள் படிக்கும்போது தினமும் நீங்கள் சிறந்த தீர்மானங்களை எடுப்பீர்கள். … நீங்கள் படிப்பதை சிந்தித்துப் பார்க்கும்போது, வானத்தின் பலகணிகள் திறக்கும், உங்கள் சொந்த கேள்விகளுக்கும் உங்களுக்குப் பதில் கிடைக்கும், உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் வரும்.”
கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் சபை பாடத்திட்டம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, மார்மன் புஸ்தகம் மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. காலப்போக்கில் உங்கள் சுவிசேஷ அறிவு வளரும்போது நீங்கள் அதிக நம்பிக்கையுடன் உணருவீர்கள். வேதங்களை தவறாமல் படிப்பது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் உங்கள் மனந்திரும்புதலை ஆழப்படுத்தி, உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்களையும் வளங்களையும் கொண்டு வரும்.
இயேசு கிறிஸ்துவின் தூய கோட்பாட்டைக் கற்றுக்கொள்வது, கோட்பாட்டைப் புரிந்துகொள்வதிலும், கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையை வாழ்வதிலும் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒரு முயற்சியாகும். அத்தியாவசிய உடன்படிக்கைகள் நாம் உடன்படிக்கைப் பாதை என்று விவரிக்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன. இந்தக் கொள்கைகள் தலைவர் நெல்சனால் வல்லமைவாய்ந்த முறையில் கற்பிக்கப்பட்டுள்ளன. உடன்படிக்கைகள் மற்றும் உடன்படிக்கைப் பாதை பற்றிய அவரது தீர்க்கதரிசன செய்திகளைப் படித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் அனைத்து உறுப்பினர்களும், குறிப்பாக புதியவர்களும், திரும்பி வருபவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
மேன்மையடைதலுக்குத் தேவையான ஒவ்வொரு உடன்படிக்கையையும் தகுதியுடன் பெறுவதற்கான இலக்கை நீங்கள் நிர்ணயித்தால், நீங்கள் பரலோக ராஜ்யத்திற்கு வழிவகுக்கும் பாதையில் இருப்பீர்கள். நம் கவனம், ஆலயத்திலும் ஆலய நியமங்களிலும் நிலைத்திருக்க வேண்டும். பெரும்பாலான உடன்படிக்கைகள் ஒவ்வொரு நபருக்கும் கிடைக்கின்றன. ஒரு உடன்படிக்கை, நித்திய திருமணம், உங்கள் முயற்சிகளை ஒரு துணைவருடன் இணைப்பதை உள்ளடக்கியது. அந்த நித்திய துணையைக் கண்டுபிடிப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
இருப்பினும், இந்த நேரத்தில் நித்திய திருமணம் சாத்தியமில்லை என்றால் ஊக்கமிழக்க வேண்டாம். கட்டளைகளைக் கைக்கொள்ளும் விசுவாசமிக்க உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆசீர்வாதமும் தடுக்கப்படாது என்று தீர்க்கதரிசிகள் போதித்திருக்கிறார்கள். மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகளில் ஒருவரான பென்யமீன் ராஜா இதை அழகாகச் சொன்னான்: “தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுபவர்கள் … சகல காரியங்களிலும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; … அவர்கள் முடிவுபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களெனில் … முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்வார்கள்.”
நீங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கவில்லை என்றால், உறுப்பினர்கள் பரிபூரணமானவர்கள் அல்ல என்பதைக் காண்பீர்கள். நாம் பூமியில் தங்கும்போது தவறுகளைச் செய்வோம் என்பதை வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடு தெளிவுபடுத்துகிறது. நாம் ஒரு சிலஸ்டியல் உலகில் அல்ல, பரிபூரணமற்ற, வீழ்ச்சியடைந்த உலகில் வாழ்கிறோம். இந்த வாழ்க்கை ஒரு சோதனைக் காலம், மனந்திரும்பி நம்மை நிரூபிக்க நிலையான வாய்ப்புகள் உள்ளன.
இயேசு கிறிஸ்துவைப் போல ஆக பாடுபடும்போது, நாம் அனைவரும் போதுமானவர்களாக இல்லை என உணர்கிறோம். நாம் தவறும்போது, அவருடைய பாவநிவர்த்தி தினமும் நம்மை மனந்திரும்ப அனுமதிக்கிறது. மார்மன் புஸ்தகத்தின் மற்றொரு தீர்க்கதரிசியான நேபி சொன்னது போல்: “ஆகையால், கிறிஸ்துவில் திடநம்பிக்கையாய், பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும், எல்லா மனுஷரிடத்திலும் அன்போடும் நீங்கள் முன்னேறிச்செல்லவேண்டும். “அதனால் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்து, முடிவுபரியந்தம் நிலைநின்று முன்னேறிச் செல்வீர்களானால், நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள், என பிதா உரைக்கிறார்.”
நமது நாளின் சவால்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, இரட்சகர், தமது பூமிக்குரிய ஊழியத்தின் போது, கொந்தளிப்பான மற்றும் வன்முறையான காலங்களிலும் வாழ்ந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவரது கவனம் அன்றைய அரசியல் சவால்களில் இல்லை; அது பரிசுத்தவான்களின் பரிபூரணத்தில் இருந்தது.
தொடர்ந்து குழப்பத்தில் இருக்கும் உலகில் இரட்சகரையும் அவரது கோட்பாடு மற்றும் போதனைகளையும் பின்பற்றுவது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. இரட்சகருக்கு தமது பூலோக பயணத்தின் போது இந்நிலையற்ற உலகில் அது எளிதாக இருக்கவில்லை, நமது ஆரம்பகால தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் எளிதாக இருக்கவில்லை, நமக்கும் இன்று எளிதாக இல்லை. அதிர்ஷ்டவசமாக, நமது நாளுக்கு நமக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்க வாழும் தீர்க்கதரிசி நமக்கு இருக்கிறார். தலைவர் டாலின் எச். ஓக்ஸ் அத்தகைய வல்லமையான ஆவிக்குரிய மரபைத் தொடர்வார்.
இயேசு கிறிஸ்து சபையின் கோட்பாடு நித்தியமானது மற்றும் உண்மையானது என்று நான் சாட்சியமளிக்கிறேன். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதற்கும், அவருடைய பாவநிவர்த்தியின் காரணமாக, நாம் கிறிஸ்துவுடன் ஒன்றாக இருக்க முடியும் என்பதற்கும் நான் உறுதியான மற்றும் நிச்சயமான சாட்சியாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.