யாரும் தனியாக உட்காரவில்லை
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வது என்பது அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் எல்லாருக்கும் இடமளிப்பதையும் உள்ளடக்கியது.
I.
50 ஆண்டுகளாக, நான் சுவிசேஷ கலாச்சாரம் உட்பட கலாச்சாரத்தைப் படித்திருக்கிறேன். நான் அதிர்ஷ்ட பிஸ்கட்டுடன் தொடங்கினேன்.
சான் பிரான்சிஸ்கோவின் சைனாடவுனில், காங் குடும்ப இரவு உணவுகள் ஒரு அதிர்ஷ்ட பிஸ்கட் மற்றும் “ஆயிரம் மைல்கள் பயணம் ஒரு அடியில் தொடங்குகிறது“ போன்ற ஒரு புத்திசாலித்தனமான பழமொழியுடன் முடிவடைந்தன.
ஒரு இளைஞனாக, நான் அதிர்ஷ்ட பிஸ்கட்களை செய்தேன். வெள்ளை பருத்தி கையுறைகளை அணிந்துகொண்டு, ஓவனிலிருந்து சூடான வட்ட வடிவமாக பிஸ்கட்களை மடித்து வைத்தேன்.
நான் ஆச்சரியப்படும் விதமாக, அதிர்ஷ்ட பிஸ்கட்கள் முதலில் சீன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதை நான் அறிந்தேன். சீன, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிர்ஷ்ட பிஸ்கட் கலாச்சாரத்தை வேறுபடுத்துவதற்காக, பல கண்டங்களில் அதிர்ஷ்ட பிஸ்கட்களைத் தேடினேன்—காட்டுத் தீயின் ஆரம்பத்தைக் கண்டுபிடிக்க பல இடங்களைப் பயன்படுத்துவது போல. சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்கில் உள்ள சீன உணவகங்கள் அதிர்ஷ்ட பிஸ்கட்களை வழங்குகின்றன, ஆனால் பெய்ஜிங், லண்டன் அல்லது சிட்னியில் உள்ளவற்றில் இல்லை. அமெரிக்கர்கள் மட்டுமே தேசிய அதிர்ஷ்ட பிஸ்கட் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். சீன விளம்பரங்கள் மட்டுமே “உண்மையான அமெரிக்க அதிர்ஷ்ட பிஸ்கட்களை” வழங்குகின்றன.
அதிர்ஷ்ட பிஸ்கட்கள் ஒரு வேடிக்கையான, எளிமையான உதாரணம். ஆனால் வெவ்வேறு கலாச்சார அமைப்புகளில் நடைமுறைகளை ஒப்பிடும் அதே கொள்கை சுவிசேஷ கலாச்சாரத்தை வேறுபடுத்த உதவும். மார்மன் புஸ்தக உருவகம் மற்றும் புதிய ஏற்பாட்டு உவமை தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்போது, சுவிசேஷ கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ள இப்போது கர்த்தர் புதிய வாய்ப்புகளை திறக்கிறார்.
II.
எல்லா இடங்களிலும் மக்கள் இடம் பெயர்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை 281 மில்லியன் சர்வதேச புலம்பெயர்ந்தோர் என்று தெரிவித்துள்ளது. இதன்படி 1990 ஐ விட 128 மில்லியன் பேர் அதிகம், மேலும் 1970 மதிப்பீடுகளை விட மூன்று மடங்கு அதிகம். எல்லா இடங்களிலும், சாதனை எண்ணிக்கையிலான மனமாறியோர், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையைக் கண்டுபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஓய்வுநாளிலும், 195 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் நண்பர்களும் 31,916 சபைகளில் கூடுகிறார்கள். நாம் 125 மொழிகளைப் பேசுகிறோம்.
சமீபத்தில், அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, கொசோவோ, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியில், புதிய உறுப்பினர்கள் மார்மன் புஸ்தகத்தின் ஒலிவ மர உருவகத்தை நிறைவேற்றுவதை நான் கண்டேன். யாக்கோபு 5-ல், திராட்சைத் தோட்டத்தின் எஜமானரும் அவருடைய ஊழியர்களும் பல்வேறு இடங்களிலிருந்து வந்த ஒலிவ மர வேர்களையும் கிளைகளையும் சேகரித்து ஒட்டுவதன் மூலம் பலப்படுத்துகிறார்கள். இன்று தேவனுடைய பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவில் ஒன்றாக கூடிவருகிறார்கள்; கர்த்தர் அவருடைய பரிபூரண மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் நமது உயிரோட்டமுள்ள வாழ்க்கையை விரிவுபடுத்த ஒரு குறிப்பிடத்தக்க இயற்கை வழிமுறையை வழங்குகிறார்.
பரலோக ராஜ்யத்திற்கு நம்மை தயார்படுத்தும் விதமாக, இயேசு பெரிய இரவு உணவு மற்றும் திருமண விருந்தின் உவமைகளைச் சொல்கிறார். இந்த உவமைகளில், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் வராமல் இருப்பதற்கு சாக்குப்போக்குகளைக் கூறுகின்றனர். “பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும்“ “பெருவழிகளிலும் வேலிகளருகிலும் சீக்கிரமாய்ப் போய்“ ஏழைகளையும் ஊனரையும், சப்பாணிகளையும் குருடரையும் “இங்கே கூட்டிக்கொண்டு வா“ என்று எஜமானர் தனது ஊழியக்காரர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆவிக்குரிய விதமாக கூறினால், அவர்கள் நாம் ஒவ்வொருவருமே.
வேதம் அறிவிக்கிறது:
“கர்த்தரின் வீட்டின் விருந்துக்கு,” “சகல ஜாதிகளும் அழைக்கப்படுவார்கள்.”
“அவருடைய ராஜ்யம் பூமியின்மீது ஸ்தாபிக்கப்படவும், அங்குள்ள குடிகள் அதைப் பெறவும், வரப்போகிற நாட்களுக்காக ஆயத்தப்பட … கர்த்தரின் வழியை ஆயத்தப்படுத்துங்கள்.”
இன்று, கர்த்தருடைய இராப்போஜனத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் எல்லா இடங்களிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் வருகிறார்கள். வயதானவர்கள், இளைஞர்கள், பணக்காரர்கள், ஏழைகள், உள்ளூர் மற்றும் உலகளாவிய, நாம் நமது சபை கூடுகைகளை நமது சமூகங்களைப் போல தோற்றமளிக்கச் செய்கிறோம்.
பிரதான அப்போஸ்தலனாக, பேதுரு, “நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல … சகலவிதமான, காட்டுமிருகங்களும், …” வானம் திறந்திருக்கிறதாகவும் தரிசனம் கண்டான். பேதுரு நினைத்தான், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், … எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”
நல்ல சமாரியனின் உவமையில், இயேசு நம்மை ஒருவரொருவரிடத்தில் வரவும், தம்மிடத்திலும், தம்முடைய சத்திரத்துக்கு—தம் சபைக்கும் அழைக்கிறார். நாம் நல்ல பிறனாயிருக்க அவர் நம்மை அழைக்கிறார். நல்ல சமாரியன் திரும்பி வந்து தனது விடுதியில் உள்ளவர்களின் பராமரிப்பிற்கு ஈடு செய்வதாக உறுதியளிக்கிறான். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வது என்பது அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் எல்லாருக்கும் இடமளிப்பதையும் உள்ளடக்கியது.
“சத்திரத்தில் அறை“ என்பதன் உணர்வு “யாரும் தனியாக உட்காரவில்லை“ என்பதையும் உள்ளடக்கியது. நீங்கள் சபைக்கு வரும்போது, யாரையாவது தனியாகக் கண்டால், தயவுசெய்து வணக்கம் சொல்லி அவருடன் உட்காருவீர்களா? இது உங்கள் வழக்கம் இல்லாமல் இருக்கலாம். அந்த நபர் உங்களை விட வித்தியாசமாக தோற்றமளிக்கலாம் அல்லது பேசலாம். நிச்சயமாக, ஒரு அதிர்ஷ்ட பிஸ்கட் சொல்வது போல், “சுவிசேஷ நட்பு மற்றும் அன்பின் பயணம் முதல் வணக்கத்துடன் தொடங்குகிறது, யாரும் தனியாக உட்காரவில்லை.“
“யாரும் தனியாக உட்காரவில்லை“ என்பது உணர்ச்சி ரீதியாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியாகவோ யாரும் தனியாக உட்காரவில்லை என்பதையும் குறிக்கிறது. மனம் உடைந்த ஒரு தகப்பனுடன் அவரது மகனைப் பார்க்கச் சென்றேன். பல வருடங்களுக்கு முன்பு, மகன் ஒரு புதிய உதவிக்காரனாக மாறுவதற்கு உற்சாகமாக இருந்தான். அந்த சந்தர்ப்பத்தில் அவனது குடும்பத்தினர் அவனுக்கு முதல் ஜோடி புதிய காலணிகளை வாங்கிக் கொடுத்ததும் இருந்தது.
ஆனால் சபையில், உதவிக்காரர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர். அவனுடைய காலணிகள் புதியவை, ஆனால் நாகரீகமாக இல்லை. வெட்கப்பட்டு, வேதனையடைந்த அந்த இளம் உதவிக்காரன், இனி ஒருபோதும் சபைக்குச் செல்ல மாட்டேன் என்று கூறினான். அவனுக்காகவும் அவனது குடும்பத்தினருக்காகவும் என் இதயம் இன்னும் உடைந்து போயிருக்கிறது.
எரிகோவிற்குச் செல்லும் புழுதி நிறைந்த சாலைகளில், நாம் ஒவ்வொருவரும் இகழப்பட்டிருக்கிறோம், அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம், காயப்படுத்தப்பட்டிருக்கிறோம், ஒருவேளை அவமதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறோம். மேலும், பல்வேறு அளவிலான நோக்கங்களுடன், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் புறக்கணித்திருக்கிறோம், கவனக்குறைவாகவும் அறியாமலும், ஒருவேளை வேண்டுமென்றே காயப்படுத்தியிருக்கலாம். நாம் காயமடைந்ததாலும், மற்றவர்களை காயப்படுத்தியதாலும் தான் இயேசு கிறிஸ்து நம் எல்லாரையும் தம்முடைய சத்திரத்திற்குக் கொண்டுவருகிறார். அவருடைய சபையிலும், அவருடைய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் மூலமாகவும், நாம் ஒருவருக்கொருவர் மற்றும் இயேசு கிறிஸ்துவிடம் வருகிறோம். நாம் நேசிக்கிறோம், நேசிக்கப்படுகிறோம், சேவை செய்கிறோம், சேவை பெறுகிறோம், மன்னிக்கிறோம், மன்னிக்கப்படுகிறோம். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், “பரலோகம் குணப்படுத்த முடியாத துக்கம் பூமியில் இருந்ததில்லை“ பூமியின் சுமைகள் இலகுவாகின்றன—நமது இரட்சகரின் மகிழ்ச்சி உண்மையானது.
1 நேபி 19-ல், நாம் வாசிக்கிறோம்: “மெய்யான இஸ்ரவேலின் தேவனைக்கூட [அவர்கள்] தம் பாதங்களால் மிதிக்கிறார்கள்; … அவரை அற்பமாய் எண்ணுகிறார்கள். … ஆகையால் அவரை வாரினால் அடிக்கிறார்கள், அவர் அதை பாடனுபவிக்கிறார்; அவரை அடிக்கிறார்கள், அவர் அதை பாடனுபவிக்கிறார். ஆம், அவர் மேல் அவர்கள் துப்புகிறார்கள், அவைகளின் பாடனுபவிக்கிறார்.”
என் நண்பர் பேராசிரியர் டெர்ரி வார்னர் கூறுகையில், நியாயந்தீர்த்தல், சவுக்கடி, அடித்தல் மற்றும் துப்புதல் ஆகியவை கிறிஸ்துவின் அநித்திய வாழ்க்கையில் மட்டுமே நிகழ்ந்த, அவ்வப்போது நடந்த நிகழ்வுகள் அல்ல. நாம் ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறோமோ—குறிப்பாக பசித்திருப்போர், தாகமாயிருப்போர், தனிமையில் விடப்பட்டவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறோமோ, அதேபோல் அவரையும் நடத்துகிறோம்.
அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில், யாரும் தனியாக உட்காராதபோது நாம் அனைவரும் சிறப்பாக இருக்கிறோம். நாம் வெறுமனே இணங்குதலோ அல்லது பொறுத்துக்கொள்ளுதலோ செய்யாதிருப்போமாக. நாம் உண்மையாக வரவேற்போம், ஏற்றுக்கொள்வோம், ஊழியம் செய்வோம், நேசிப்போம். ஒவ்வொரு நண்பரும், சகோதரியும், சகோதரரும் வெளிநாட்டினராகவோ அல்லது அந்நியராகவோ இல்லாமல், வீட்டில் ஒரு குழந்தையாக இருக்கட்டும்.
இன்று பலர் தனிமையாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறார்கள். சமூக ஊடகங்களும் செயற்கை நுண்ணறிவும் மனித நெருக்கத்தையும் மனித தொடுதலையும் விரும்பும்படி நம்மைத் தூண்டிவிட முடியும். நாம் ஒருவருக்கொருவரின் குரல்களைக் கேட்க விரும்புகிறோம். நாம் உண்மையான சொந்தமாதலையும் தயவையும் விரும்புகிறோம்.
நாம் சபையில் பொருந்தவில்லை என்று நாம் உணரக்கூடிய பல காரணங்கள் உள்ளன—அடையாளப்பூர்வமாகச் சொன்னால், நாம் தனியாக அமர்ந்திருக்கிறோம். நமது பேச்சுவழக்கு, உடைகள், குடும்ப சூழ்நிலை பற்றி நாம் கவலைப்படலாம். ஒருவேளை நாம் போதுமானவர்களாக இல்லை என்று உணரலாம், புகையிலை வாடை, ஒழுக்க தூய்மைக்காக ஏங்கலாம், ஒருவருடன் பிரிந்து, வேதனைப்பட்டு, சங்கடமாக உணரலாம், குறிப்பிட்ட சபைக் கொள்கையைப் பற்றி நாம் கவலைப்படலாம். நாம் ஒற்றையராக, விவாகரத்து பெற்றவராக, விதவையாக இருக்கலாம். நமது குழந்தைகள் சத்தம் போடுகிறவர்கள்; நமக்குக் குழந்தைகள் இல்லை. நாங்கள் ஊழிய சேவை செய்யவில்லை அல்லது சீக்கிரமாக வீடு திரும்பிவிட்டோம். பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
மோசியா 18:21 நம் இருதயங்களை அன்பினால் ஒன்றாக இணைக்க அழைக்கிறது. நாம் குறைவாகக் கவலைப்படவும், குறைவாகத் தீர்ப்பளிக்கவும், மற்றவர்களிடம் குறைவாகக் கோரவும் —தேவைப்படும்போது, நம்மீது குறைவாகக் கடுமையாக இருக்கவும் நான் நம்மை அழைக்கிறேன். நாம் ஒரே நாளில் சீயோனை உருவாக்குவதில்லை. ஆனால் ஒவ்வொரு “வணக்கம்,” ஒவ்வொரு அன்பான சைகை, சீயோனை நெருக்கமாகக் கொண்டுவருகிறது. நாம் கர்த்தரை அதிகமாக நம்பி, அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படியத் தேர்ந்தெடுப்போமாக.
III.
கோட்பாட்டளவில், பரிசுத்தவான்களின் விசுவாசம் மற்றும் ஐக்கியத்தின் வீட்டில், இயேசு கிறிஸ்துவில் உடன்படிக்கைக்கு சொந்தமானவராக இருப்பதால் யாரும் தனியாக உட்காருவதில்லை.
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கற்பித்தார்: “தேவனின் பரிசுத்தவான்கள் ஒவ்வொரு தேசத்திலிருந்தும், ஜாதிகளிடமிருந்தும், ஜனத்திடமிருந்தும் ஒன்றாகக் கூடிவரும்போது, ‘காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலம் …’ என்ற பிற்கால மகிமையைக் காண்பதும், பங்கேற்பதும், முன்னோக்கிச் செல்ல உதவுவதும் நமக்கு விடப்பட்டிருக்கிறது.”
அவர் உலகத்தின் நன்மைக்கு ஏதுவானவையே அல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்யார்; எல்லா மனுஷரையும் [பெண்களையும்] தம்மிடம் அழைத்துக்கொள்ள. .…
“… அவர்கள் அனைவரும் தம்மிடத்தில் வரும்படியாகவும், தம் நன்மையைப் புசிக்கும்படியாகவும் அழைக்கிறார், … மற்றும் அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே.”
இயேசு கிறிஸ்துவில் மனமாற்றத்துக்கு சுபாவ மனிதனையும் உலகப் பண்பாட்டையும் களைந்து போடுவது தேவைப்படுகிறது. தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதிப்பது போல, தேவனின் கட்டளைகளுக்கு முரணான எந்தவொரு பாரம்பரியத்தையும் கலாச்சார நடைமுறையையும் நாம் கைவிட்டு, பிற்காலப் பரிசுத்தவான்களாக மாற வேண்டும். “பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவான மதிப்புகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நடைமுறைகளின் தொகுப்பான, ஒரு தனித்துவமான சுவிசேஷ கலாச்சாரம் உள்ளது“ என்று அவர் விளக்குகிறார். சுவிசேஷ கலாச்சாரத்தில் கற்புடைமை, வாரந்தோறும் சபைக்குச் செல்வதும் பிறகு மது, புகையிலை, தேநீர் மற்றும் காபி ஆகியவற்றைத் தவிர்ப்பதும் அடங்கும். இது நேர்மை மற்றும் உத்தமத்தை உள்ளடக்கியது, சபை பதவிகளில் மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ அல்ல, நாம் முன்னேறிச் செல்வதைப் புரிந்துகொள்வது.
ஒவ்வொரு நாட்டிலும், கலாச்சாரத்திலும் உள்ள விசுவாசமிக்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன். பல மொழிகளிலும் கலாச்சாரக் கண்ணோட்டங்களிலும் படிக்கப்படும் வேதங்கள் சுவிசேஷ புரிதலை ஆழப்படுத்துகின்றன. கிறிஸ்துவைப் போன்ற பண்புகளின் பல்வேறு வெளிப்பாடுகள் என் இரட்சகரைப் பற்றிய எனது அன்பையும் புரிதலையும் ஆழப்படுத்துகின்றன. தலைவர் ரசல் எம். நெல்சன் கற்பித்தது போல, தேவனின் பிள்ளையாக, உடன்படிக்கையின் பிள்ளையாக, இயேசு கிறிஸ்துவின் சீஷராக, நமது கலாச்சார அடையாளத்தை வரையறுக்கும்போது அனைவரும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் சமாதானம் நமக்கு தனிப்பட்ட முறையில் உரியது. சமீபத்தில், ஒரு இளைஞன், “மூப்பர் காங், நான் இப்போதும் பரலோகத்திற்குச் செல்ல முடியுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டான். தான் மன்னிக்கப்பட முடியுமா என்று அவன் ஆச்சரியப்பட்டான். நான் அவனுடைய பெயரைக் கேட்டேன், கவனமாக செவிகொடுத்தேன், அவனுடைய ஆயருடன் பேச அழைத்தேன், அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்தேன். அவன் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையுடன் புறப்பட்டான்.
நான் அந்த இளைஞனைப் பற்றி வேறொரு சூழலில் குறிப்பிட்டேன். பின்னர், “மூப்பர் காங், என் மனைவியும் நானும் ஒன்பது குழந்தைகளை வளர்த்துள்ளோம் … இரண்டு ஊழியங்களில் சேவை செய்துள்ளோம்“ என்று தொடங்கும் கையொப்பமிடப்படாத கடிதத்தைப் பெற்றேன். ஆனால் “நான் எப்போதும் சிலஸ்டியல் ராஜ்யத்தில் அனுமதிக்கப்பட மாட்டேன் என்று நினைத்தேன் … ஏனென்றால் நான் இளைஞனாக இருந்தபோது செய்த பாவங்கள் மிகவும் மோசமானவை!“
அந்தக் கடிதம் தொடர்ந்தது, “மூப்பர் காங், அந்த இளைஞன் மன்னிப்பு பெறும் நம்பிக்கையைப் பற்றி நீங்கள் சொன்னபோது, நான் மகிழ்ச்சியால் நிறைந்தேன், ஒருவேளை நான் [மன்னிக்கப்படலாம்] என்பதை உணர ஆரம்பித்தேன்.” அந்தக் கடிதம், “இப்போது நான் என்னையே விரும்புகிறேன்!” என்று முடிகிறது.
நாம் ஒருவரொருவரிடத்திலும் மற்றும் கர்த்தரிடம் அவருடைய சத்திரத்தில் வரும்போது உடன்படிக்கை சொந்தமாகுதல் ஆழமடைகிறது. யாரும் தனியாக உட்காராதபோது கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார். மற்றும் யாருக்குத் தெரியும்? ஒருவேளை நமக்கு அருகில் அமர்ந்திருப்பவர் நமது சிறந்த அதிர்ஷ்ட பிஸ்கட் நண்பராக மாறக்கூடும். ஆட்டுக்குட்டியானவரின் இராப்போஜனத்தில் நாம் அவருக்கும் ஒருவருக்கொருவருக்கும் இடம் கொடுப்போமாக, நான் தாழ்மையுடன் ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.