சாட்சியத்தின் நித்திய வரம்
தேவனின் ஒவ்வொரு மகனும் அல்லது மகளும் தங்களுக்கு ஒரு ஆழமான, உறுதியான மற்றும் நிச்சயமான அறிவைப் பெற முடியும்.
என் அன்பான சகோதர சகோதரிகளே, சமீபமாக நான் மறுஸ்தாபிதத்தின் மூன்று வல்லமைவாய்ந்த சத்தியங்களைப் பற்றி சிந்தித்து வருகிறேன். இந்த சத்தியங்கள் என் வாழ்க்கையை மிகவும் ஆசீர்வதித்துள்ளன. இன்று, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பற்றிய உறுதியான சாட்சியை நோக்கிய எனது பயணத்தில் இந்த சத்தியங்கள் என்னை எவ்வாறு வழிநடத்தின என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. தேவனே நமது அன்புமிக்க பரலோக பிதா
அவர் சர்வஞானி, சர்வ வல்லமையுள்ளவர். கிறிஸ்துவின் ஒளி மற்றும் பரிசுத்த ஆவியின் ஊழியத்தின் மூலம், அவருடைய செல்வாக்கு எல்லா இடங்களிலும் உள்ளது. நம்மை ஆசீர்வதிப்பது அவருடைய இயல்பு.
அவர் நமது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் நித்திய இலக்கைக் காண்கிறார். அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.
“சிலஸ்டியலாக சிந்தியுங்கள்“ என்ற தலைவர் ரசல் எம். நெல்சனின் அழைப்பு, நமது பரலோக பிதாவின் தரிசனத்தையும் இயல்பையும் பின்பற்ற நம்மை ஊக்குவிக்கிறது.
அவருடைய தெய்வீக பண்புகளின் காரணமாக, ஒவ்வொன்றும் அவருடைய நித்திய கண்ணோட்டத்தையும் நோக்கத்தையும் மனதில் கொண்டு, நமது பரலோக பிதா நமக்கு ஒவ்வொரு நல்ல வரத்தையும் தருகிறார்.
2. சுயாதீனம் என்பது நமக்காகத் தேர்ந்தெடுத்து செயல்படுவதற்கான வரம்.
நன்றாகத் தேர்ந்தெடுப்பதும் பொறுப்புதான்.
இயேசு கிறிஸ்து தம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தினால் அந்த சிலாக்கியத்திற்கான இறுதி விலையைச் செலுத்தினார்.
சில நேரங்களில் சுயாதீனம் என்றால் நாம் விரும்பியதைச் செய்வது என்று நாம் நம்பலாம். ஆனால் விலை கொடுக்கப்பட்டது என்ற உண்மை சுயாதீனம் ஒரு பரிசுத்த வரம் என்பதாகும்.
நாம் சுயாதீனர்கள், சுயாதீனர்கள் ஏதோவொன்றுக்கு பொறுப்பானவர்கள். இந்த விஷயத்தில், நம்மிடம் உள்ள அறிவு மற்றும் நமக்கு வழங்கப்படும் வரங்களின் அடிப்படையில் நாம் செய்யும் தேர்வுகளுக்கு நாமே பொறுப்பு. விளைவுகளுக்குப் பொறுப்பேற்காமல் நாம் எந்தத் தேர்வும் செய்ய முடியாது.
நாம் ஏன் சுயாதீனம் பெற்றிருக்கிறோம்?
நன்மையானதைத் தேர்ந்தெடுக்க.
கிறிஸ்துவைத் தேர்ந்தெடுக்க.
3. நமது சாட்சியம் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் வருகிறது.
பரிசுத்த ஆவியின் சாட்சியம், பார்வையை விடப் பெரியது. அவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் முதன்மையான சாட்சியாக இருக்கிறார். தலைவர் நெல்சன் போதித்தார், “வருங்காலத்தில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலில்லாமல், வழிகாட்டுதலில்லாமல், ஆறுதலில்லாமல், நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரியவிதமாக பிழைத்திருப்பது சாத்தியமில்லை.”
சகோதர சகோதரிகளே, இதனால்தான் இன்று நம் ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமை தேவை.
பரிசுத்த ஆவியின் மூலம் ஒரு சாட்சியம் பல வழிகளில் வரலாம். ஒரு இருண்ட அறையில் ஒரு மின்விளக்கைப் போல, அது அதிசயமாகவும் திடீரெனவும் எரியக்கூடும். அது சூரிய உதயம் போல படிப்படியாகவும் காலப்போக்கிலும் வரலாம். அது ஒளிக்கதிர்கள் போலவும், தூய நுண்ணறிவை அவ்வப்போது வெளிப்படுத்துவது போலவும் வரலாம். எந்த வழியாக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியின் மூலமாக வருகிறது.
ஜமைக்காவில் சாட்சியத்தைக் கண்டறிதல்
நான் அழகான ஜமைக்காவில் வளர்ந்தேன்; அது வேடிக்கையாகவும் அற்புதமாகவும் இருந்தது. இருப்பினும், நான் உயர்நிலைப் பள்ளி செல்லத் தொடங்கியபோது, இயேசு கிறிஸ்து சபையில் உறுப்பினராக வேண்டும் என்ற எனது முடிவை சில வகுப்புத் தோழர்களும் நண்பர்களும் புரிந்து கொள்ள முடியவில்லை. “நீ எப்படி அந்த சபையில் சேர முடியும்?“ என்று அவர்கள் கேட்பார்கள். முதல் தரிசனத்தைக் குறிப்பிட்டு—“அந்தக் கதையை நீ எப்படி நம்ப முடிந்தது?“ மார்மன் புஸ்தகத்தைக் குறிப்பிட்டு —“அந்தப் புத்தகத்தை எப்படிப் படிக்க முடிந்தது?“ “நீ இதையெல்லாம் உண்மையிலேயே நம்புகிறாயா?“ “நீ ஏன் உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்?“
அது வேதனையாக இருந்தது, குறிப்பாக இது நான் அக்கறை கொண்டவர்களிடமிருந்து வந்தபோது.
ஆனால் அவர்களுக்குத் தெரியாதது இதுதான்: எனக்கு பரிசுத்த ஆவியுடன் ஒரு அனுபவம் இருந்தது. அந்த சாட்சியம் என் இருதயத்தை நிரப்பியபோது, அது நாட்களின் வலியை மங்கச் செய்தது, மேலும் “ஒரு சிறு கணம், பரலோகத்தின் காட்சி என் பார்வைக்கு முன் [தோன்றியது].“
ஒருவேளை உங்களிடம் பிறவற்றுடன் இந்தக் கேள்விகள் சில கேட்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை இப்போது கூட நான் தாக்கப்பட்டதைப் போலவே நீங்களும் தாக்கப்படலாம்.
பரிசுத்த ஆவியின் வரமும் சாட்சியமும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றன.
ஜோசப் ஸ்மித்துக்கு பல்மைரா எப்படி இருந்ததோ அப்படித்தான் ஜமைக்கா எனக்கு. அது என்னுடைய பரிசுத்த தோப்பு. பரிசுத்த தோப்பில் ஜோசப் ஜெபிக்க முழங்கால்படியிட்ட சரியான இடம் எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய பரிசுத்த தோப்பு நிஜமானபோது நான் எங்கே இருந்தேன் என்பது எனக்குத் தெரியும். நான் ஞானஸ்நானம் பெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை காலை 6:00 மணிக்கு ஜமைக்காவின் மான்டெவில்லில் உள்ள போர் க்ரோவ் சாலையில் என் குளியலறையில் இது நடந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு உணர்த்தப்பட்ட சகோதரி ஊழியக்காரர் என்னை மார்மன் புஸ்தகத்தைப் படிக்க அழைத்ததால் இந்தப் பரிசுத்த அனுபவம் ஏற்பட்டது. சகோதரி ஆட்ரி க்ராஸ் இன்று இந்த மாநாட்டில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார், நான் அவர்களை என்றென்றும் நேசிக்கிறேன்.
அந்த அனுபவம் என்னை மாற்றியது.
சகோதர சகோதரிகளே, சாட்சியம் தற்காலிக பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்படவில்லை. நமது அன்பான பரலோக பிதாவிடமிருந்து வந்த இந்த வரம் நித்தியமானது, ஏனென்றால் கொடுப்பவர் நித்தியமானவர். ஒரு சாட்சியத்திற்கு காலாவதி தேதி இருக்கக்கூடாது. என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று மாறிவிட்டதாலோ அல்லது உலகில் ஏதோ ஒன்று மாறிவிட்டதாலோ அது பலவீனமடையவோ அல்லது குறையவோ கூடாது. தாலந்துகளின் உவமையில் வரும் வேலைக்காரனைப் போலவே, என்னுடைய தனிப்பட்ட சாட்சியமும் பெருக்கப்பட வேண்டிய ஒரு வரம்—புதைக்கப்பட வேண்டியதல்ல என்பதால் அது மேலும் வலுவடைய வேண்டும்.
ஒரு குழந்தையாக நான் கடந்து வந்த சோதனைகள் மற்றும் துன்புறுத்தல்களின் கடினமான நாட்களைத் திரும்பிப் பார்ப்பது, இப்போது நான் என்னை அறிந்த இடத்திற்கு வர எனக்கு உதவியது. நிச்சயமான சாட்சியத்தை அடையும் பாதையில் இவை நம்பிக்கையின் குறிப்பிடத்தக்க துகள்களாக இருந்தாலும், நான் நம்புவது, நம்பிக்கை வைப்பது, விசுவாசிப்பது மட்டுமல்ல. கேள்விகள் கேட்பது, படிப்பது, ஜெபிப்பது, உபவாசம் இருப்பது மற்றும் சிந்திப்பதன் மூலம் உங்கள் சொந்த வழியை உருவாக்கியதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். தயவுசெய்து நிறுத்தாதீர்கள். சாட்சியமளிக்கும் இந்தப் பாதையைப் பின்பற்றுவதற்கு ஒவ்வொரு முயற்சியும் மதிப்புக்குரியது. அதை எடுத்துக் கொள்ள யாரை அல்லது எதை நீங்கள் அனுமதிப்பீர்கள்? தேவனிடமிருந்து வருகிறதைவிட மேன்மையான எந்த சாட்சியை நீங்கள் பெற முடியும்?”
தேவனின் ஒவ்வொரு மகனும் அல்லது மகளும் தங்களுக்கு ஒரு ஆழமான, உறுதியான மற்றும் நிச்சயமான அறிவைப் பெற முடியும். எதிர்ப்பின் மத்தியிலும் தனது சாட்சியத்தை உறுதிப்படுத்திய ஜோசப் ஸ்மித்தைப் போல, நாம் தைரியமாகச் சொல்லலாம், “அதை நான் அறிவேன், அதை தேவன் அறிவாரென நான் அறிவேன், அதை என்னால் மறுக்க முடியாது, அதைச்செய்ய எனக்கு துணிவுமில்லை.”
என் அன்பான சகோதர சகோதரிகளே, சாட்சியத்தின் சிறிய நாற்று நித்திய மகிமையான நிச்சயமான அறிவாக வளரும் வரை உங்களில் செயல்படட்டும்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் பரிசுத்தவான்களின் சபையின் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட உறுப்பினராக இருந்தும், “எனக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை” என்று இன்னும் போராடுபவர்கள், தயவுசெய்து: “அவருடைய ஆவியை அவர்கள் எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படியாகவும்,” என்ற இந்த வாக்குறுதியை நினைவில் கொள்ளுங்கள். இந்த வாக்குறுதியின் காரணமாக, நாம் ஒவ்வொருவரும் சாட்சியம் மற்றும் நிச்சயமான அறிவுக்கான பாதையைத் தொடர முடியும்.
உங்கள் சாட்சியத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வது
இப்போது இதோ ஒரு மகத்தான உண்மை: எந்த விதத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டாலும்—அது சூரிய உதயத்தைப் போல வடிகட்டப்பட்டாலும் சரி அல்லது ஒரு மகிமையான தரிசனத்தில் வந்தாலும் சரி—இந்த விலைமதிப்பற்ற வரத்தைப் பெறுவதற்கு இன்னும் ஒரு தேர்வு தேவைப்படுகிறது.
“நான் நம்புவதைத் தேர்வு செய்கிறேன்“ என்று சொல்வது தேவனிடமிருந்து சாட்சியைப் பெறுவதை எளிதாக்குகிறது. நமது சாட்சியம் பலவீனமடைவதைக் கண்டால், நாம் செய்யும் தேர்வுகள்தான் சாட்சியத்தின் வல்லமையைக் குறைக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் சாட்சியம் எங்கும் செல்லவில்லை. நாம் அதனுடன் மீண்டும் இணைவதைத் தேர்வு செய்ய வேண்டும்.
நம்புவதைத் தேர்ந்தெடுப்பது உங்கள் சுயாதீனத்தை பயன்படுத்துவதற்கான ஒரு ஞானமான மற்றும் வல்லமை வாய்ந்த வழியாகும்.
எனது சாட்சியத்தைப் பாதுகாப்பதை விட எனது சுயாதீனத்தை பயன்படுத்துவதற்கு வேறு சிறந்த வழியை நான் காண முடியவில்லை.
தலைவர் நெல்சன் போதித்தார், “உங்கள் சாட்சியத்திற்கு பொறுப்பேற்குமாறு நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். அதற்காக உழைத்திடுங்கள். அதை சொந்தமாக்குங்கள். அதை கவனித்துக்கொள்ளுங்கள். வளரும்படியாக அதைப் போஷியுங்கள். இதற்கு சத்தியத்தை ஊட்டுங்கள்.”
எனக்கு, பொறுப்பேற்க, வேலை செய்ய, பராமரிக்க, சொந்தமாக்க, போஷிக்க, உணவளிக்க என்ற வார்த்தைகள் விலைமதிப்பற்ற மற்றும் முக்கியமான ஒன்றிற்குப் பொறுப்பேற்கக் கொடுக்கப்பட்ட ஒரு உக்கிராணத்துவமாகத் தெரிகிறது.
ஆரம்பகால சபையில், பார்லி பி. பிராட், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் மீது அதிருப்தி அடைந்து, அவரையும் சபையையும் விமர்சிக்கத் தேர்ந்தெடுத்தார். “பார்லி சுவிசேஷத்தைக் கற்பித்த ஜான் டெய்லர் ஊருக்கு வந்தபோது, பார்லி அவரைத் தனியாக அழைத்துச் சென்று ஜோசப்பைப் பின்பற்ற வேண்டாம் என்று எச்சரித்தார். ஜான் டெய்லர் பார்லியிடம் கூறினார்:
“நீங்கள் கனடாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி என்பதற்கு நீங்கள் ஒரு வலுவான சாட்சியத்தை அளித்தீர்கள், … மேலும் வெளிப்படுத்தலினாலும் பரிசுத்த ஆவியின் வரத்தினாலும் நீங்கள் இவற்றை அறிந்திருப்பதாகக் கூறினீர்கள்.”
“… நீங்கள் அப்போது களிகூர்ந்த அதே சாட்சியம் இப்போது எனக்கு உண்டு,” என்றார். “ஆறு மாதங்களுக்கு முன்பு பணி உண்மையாக இருந்திருந்தால், அது இன்றும் உண்மையாக இருக்கிறது.” “ஜோசப் ஸ்மித் அப்போது ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், இப்போதும் அவர் ஒரு தீர்க்கதரிசி.”
ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி என்றும், அவர் பெற்ற தீர்க்கதரிசன பொறுப்பு இன்றும் தொடர்கிறது என்று சாட்சியமளிக்கிறேன். இயேசு கிறிஸ்து இந்த பணியை வழிநடத்துகிறார்.
இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்தின் நிச்சயமான சாட்சியத்துக்கான உங்கள் பாதையைப் பற்றி சிந்திக்க நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் சாட்சியத்துக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் சுயாதீனத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள், கொடுப்பவரையும் அவருடைய அனைத்து மகிமையான பண்புகளையும் பாராட்டுங்கள். வல்லமை உங்களுக்குள் இருக்கிறது என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன். உங்களுக்காக யாரும் தேர்வு செய்ய முடியாது. இந்த வரத்தை யாரும் பறிக்க முடியாது. நீங்கள் நம்புவதைத் தேர்வுசெய்யலாம்.
நீங்கள் இதைச் செய்யும்போது, உங்கள் சாட்சியம் “நித்திய ஜீவனுக்கு ஜீவதண்ணீரின் துரவாய் ஊற்றெடுக்கிறதாய்” இருக்கும் என்று நான் வாக்களிக்கிறேன். இது ஒரு நங்கூரமாகவும், ஊக்குவிப்பதாகவும் இருக்கும், மேலும் கடினமான காலங்களில் உங்களைத் தாங்கி நிற்கும். இது ஆவிக்குரிய வரங்களை வளர்த்துக் கொள்ள உங்களுக்கு சாத்தியமாக்கும். இது உங்கள் தனிப்பட்ட ஊழியத்திலும் சேவையிலும் உங்களுக்கு உதவும். அது சாத்தானுக்கும் உங்கள் சத்துருக்களுக்கும் எதிரான ஒரு ஆயுதமாக இருக்கும். உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள், நீங்கள் நேசிக்கிறவர்களிடமும் சேவை செய்கிறவர்களிடமும் உங்கள் சாட்சியம் பிரதிபலிப்பதைப் பார்க்கும்போது அது மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் அதைப் பகிர்ந்துகொண்டு சாட்சியமளிக்கப் பயன்படுத்தும்போது அது வல்லமை வாய்ந்ததாக இருக்கும்.
உங்களுக்குத் தெரிந்தால், இது புரியும். எனக்குத் தெரியும் என நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் பற்றி நமக்கு இன்னும் நிச்சயமான சாட்சிகள் தேவை. அங்கே செல்லுங்கள்! அதைத் தேடுங்கள்! இது அவசரம்!” இதுவே இறுதி ஊழியக்காலம்—காலங்களின் நிறைவின் ஊழியக்காலம்.
இயேசு கிறிஸ்து இந்த சத்தியத்தை அறிவித்தார்: “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.“
சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் சாட்சியம் ஒருபோதும் தற்காலிக வரமாக இருக்கக்கூடாது. இதில் எதுவும் தற்காலிகமானது அல்ல—கொடுப்பவர் அல்ல, வரம் அல்ல, வரத்தை வழங்குபவர் அல்ல, வரம் யாரைப் பற்றியது என்பது அல்ல. உங்கள் சாட்சியம் இவ்வாறே விவரிக்கப்படட்டும். “வானமும் பூமியும் ஒழிந்துபோம்“, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பற்றிய உங்கள் சாட்சியும் சாட்சியமும் ஒழிந்துபோகாது. இந்த விலைமதிப்பற்ற வரத்தைப் பற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இப்போதுதான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.