அனைவரும் பக்திவிருத்தி அடையும்படியாக
நாம் இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்தி, அவரது கோட்பாட்டைக் கற்பித்து, கருத்துடன் கற்றுக்கொள்ளும்போது, இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை ஆழப்படுத்தவும், அவரைப் போலாக நமக்கு உதவவும் பரிசுத்த ஆவியை அழைக்கிறோம்.
ஒரு இளம் பல்கலைக்கழக மாணவனைப் பற்றிய ஒரு கதை சொல்லப்படுகிறது, அவன் ஒரு சவாலான வகுப்பில் சிரமப்பட்டான், அதனால் அவன் தனக்கு உதவ ஒரு தனிப்பயிற்சியாளரை நியமித்தான். பாடம் முடியும் தருவாயில், மாணவர்கள் இறுதித் தேர்வுக்கு ஒரு காகிதத்தின் மேல் அதில் அவர்கள் விரும்பும் எதையும் எழுதி எடுத்து வரலாம் என்று பேராசிரியர் அறிவித்தார். சில மாணவர்கள் விரிவுரைகள் மற்றும் பாடப்புத்தகங்களிலிருந்து வரும் தகவல்களைக் கொண்டு உருப்பெருக்கியைப் பயன்படுத்தி மட்டுமே படிக்க முடிகிற சிறிய குறிப்புகளை உருவாக்கினர். ஆனால் அந்த இளைஞன் இறுதித் தேர்வுக்கு ஒரு வெற்றுத் தாளுடனும் ஒரு அந்நியனுடனும் வந்தான். பேராசிரியர் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த இளைஞன், “எதுவும் எழுதப்பட்ட ஒரு துண்டு காகிதத்தை நான் கொண்டு வர முடியும் என்று நீங்கள் சொன்னீர்கள்“ என்று பதிலளித்தான். பின்னர் அவன் காகிதத்தை தனது மேசைக்கு அருகில் தரையில் வைத்து, “எனது தனிப்பயிற்சியாளர் எனது காகிதத் துண்டின் மீது நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்“ என்றான்.
பரிசுத்த ஆவியானவர்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களாக, தேவத்துவ உறுப்பினரின் தோழமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக, நாம் பரிபூரண தனிப்பயிற்சியாளரின் உதவியைப் பெறலாம். பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், சத்தியத்திற்கு சாட்சியமளிக்கிறார், மேலும் “எல்லாவற்றையும் [நமக்கு] நினைப்பூட்டுவார்.” கர்த்தருடைய குரலைக் கேட்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி தலைவர் ரசல் எம். நெல்சன் அடிக்கடி பேசினார். பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை எவ்வாறு வரவேற்பது என்பதை அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார், மேலும் வெளிப்படுத்தலைப் பெற நமது ஆவிக்குரிய திறனை அதிகரிக்க மீண்டும் மீண்டும் நம்மிடம் மன்றாடினார்.
இன்று நான் உங்களை பரிசுத்த ஆவியின் பாத்திரத்தை, குறிப்பாக வீட்டிலும் சபையிலும் சுவிசேஷக் கற்றல் மற்றும் கற்பித்தலுடன் தொடர்புடையதைக் கருத்தில் கொள்ள அழைக்கிறேன். பரிசுத்த ஆவி விசுவாசத்தின் ஜெபத்தாலும், இந்த விலைமதிப்பற்ற பரிசுக்கு தகுதியானவராக வாழ நாம் முயற்சிக்கும்போதும் கொடுக்கப்படுகிறது. இரட்சகரின் வழியில் கற்பித்தல் என்ற உணர்த்தப்பட்ட சபை கையேடு, பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலை அழைக்க உதவும் கூடுதலான கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது.
கருத்தாய் கற்றலை வரவேற்கவும்
இந்தக் கொள்கைகளில் ஒன்று கருத்தாய் கற்றலை வரவேற்பது ஆகும். கடந்த காலத்தில், கற்பித்தல் என்பது ஒரு பெற்றோர் அல்லது ஆசிரியர் தங்கள் சொந்த ஆயத்தத்தில் ஆவியை அழைத்து, பின்னர் அவர்கள் கற்றுக்கொண்டதை, செவிகொடுப்பதை மட்டுமே பங்காகக் கொண்ட பிள்ளைகள் அல்லது வகுப்பு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக நினைத்திருக்கலாம், ஆனால், கற்பவர்களாகிய நாம் தயாராகி வரும்போதும், ஆசிரியர்கள் நம் இருதயங்களுக்கும் மனங்களுக்கும் நேரடியாக தனிப்பட்ட வெளிப்படுத்தலை வளர்க்கும் கற்றல் அனுபவங்களை உருவாக்கும்போதும் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். பின்னர், நமது படிப்பு மற்றும் பரிசுத்த ஆவியிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுவதால், நாம் ஒருவருக்கொருவர் அறிவுறுத்தப்பட்டு பக்திவிருத்திக்கு உதவுகிறோம். சுவிசேஷ கொள்கைகளை நாம் பயன்படுத்தும்போது, ஆவியானவர் அவற்றின் உண்மைத்தன்மைக்கு மீண்டும் சாட்சி பகருகிறார்.
எல்லாவற்றிலும் போலவே, இயேசு கிறிஸ்துவே பரிபூரண முன்மாதிரி. அவர் நம் ஒவ்வொருவரையும் கருத்துடன் கற்பவர்களாகவும், நமது சொந்த சாட்சியங்களை பொறுப்பேற்கவும் அழைத்திருக்கிறார். அவர் தம்முடைய சீஷர்களைக் கற்றுக்கொள்ளத் தயாராகவும், கற்றுக்கொண்டதைப் பகிர்ந்து கொள்ளவும், விசுவாசத்தில் செயல்படவும் அழைத்தார். அவர் அவர்களுக்காக ஜெபித்தார், அவர்களுடைய தெய்வீக ஆற்றலைக் கண்டார், அவர்களுக்குச் செவிசாய்த்தார், அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், தேவைப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிய உதவினார்.
ஆசிரியர்களாக, கற்றுக்கொள்பவர்களினுடைய முன்னேற்றத்திலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், வாழ்நாள் முழுவதும் சீஷத்துவத்தின் ஆவிக்குரிய பழக்கங்களை வளர்த்துக் கொள்ள உதவுவதிலும் நாம் அதிக கவனம் செலுத்தலாம். கற்பவர்களாக, கற்றல் செயல்பாட்டில் நமது சுயாதீனத்தைப் பயன்படுத்தும்போது, பரிசுத்த ஆவியானவரால் கற்பிக்கப்படுவதற்கான நமது விருப்பத்தை அவருக்கு சமிக்ஞை செய்கிறோம்.
என்னை சிறந்த கற்பவனாக மாற்ற அழைத்த ஒரு ஆசிரியருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கல்லூரி படிப்பைத் தொடங்கியபோது, விளையாட அனுமதிக்கப்படுவதற்குப் பள்ளிக்கூடத்தை சகித்துக்கொள்ள வேண்டும் என்று தவறாக நினைத்தேன். ஒரு நாள், நான் எழுதிய ஒரு பாடத்தைப் படித்த பிறகு, என் பேராசிரியர் என்னை ஒரு திறமையான பகுப்பாய்வு சிந்தனையாளன் என்று நினைத்ததாகக் கூறினார். அதன் அர்த்தம் என்ன என எனக்குத் தெரியவில்லை. அதிக கவனம் செலுத்தி முயற்சித்தால் நான் ஒரு நல்ல மாணவனாக முடியும் என்று அவர் சொன்னார். அந்த எண்ணம் என் மனதில் ஒருபோதும் வந்ததில்லை. அவரின் ஆர்வம், ஊக்கம் மேலும் அழைப்புகள் என் கல்வியின் போக்கையே மாற்றி, என் வாழ்க்கையை பெரிதும் ஆசீர்வதித்தன.
கோட்பாட்டைக் கற்பியுங்கள்
பரிசுத்த ஆவியை அழைப்பதற்கு பொருத்தமான மற்றொரு கொள்கை உண்மையான கோட்பாட்டைக் கற்பிப்பதாகும். இதன் பொருள், நமது சுவிசேஷ படிப்பும் போதனையும் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றியுள்ளன, மேலும் கர்த்தர் வெளிப்படுத்தாதவற்றை நாம் பரபரப்பாக்கவோ அல்லது ஊகிக்கவோ மாட்டோம். அதற்கு பதிலாக, நாம் அத்தியாவசியமான மற்றும் நித்திய சுவிசேஷ கொள்கைகளில் கவனம் செலுத்துகிறோம், இது ஆவியானவரை சத்தியத்திற்கு சாட்சியமளிக்க அனுமதிக்கிறது. மீண்டும், நாம் இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். அவர், “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது” என்றார்.
உண்மையான கோட்பாடு வேதங்களிலும் தற்கால தீர்க்கதரிசிகளின் போதனைகளிலும் காணப்படுகிறது. வேதங்களைத் தனித்தனியாகவும், குடும்பங்களாகவும் படிக்கவும், வாரந்தோறும் சபைக்குச் சென்று அவருடைய சுவிசேஷத்தைப் படிக்கவும் கர்த்தருடைய அறிவுரை, அவருடைய குரலைக் கேட்கவும் ஒரு குறிப்பிடத்தக்க கட்டமைப்பை வழங்குகிறது. கதை, அவை கற்பிக்கும் கொள்கைகள் மற்றும் இந்த சத்தியங்களை நம் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள நாம் வேதங்களைத் தேடுகிறோம். வேதங்கள் நம் விரல் நுனியில் இருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். ஆதாமும் ஏவாளும், அபிநாதியும் அல்லது தலைசிறந்த போதகரான இயேசு கிறிஸ்துவும் கூட நம் வீடுகளுக்கு அல்லது வகுப்புகளுக்கு வந்து நமக்குக் கற்பிப்பதை கற்பனை செய்து பாருங்கள். நாம் எப்படி கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பார்க்க முடியும்? தொடர்ச்சியான முயற்சியால், வேதங்களைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் கற்றுக்கொள்ளலாம், மேலும் ஆத்துமாவின் கேள்விகளுக்கு அவை பதில்களைக் கொண்டுள்ளன என்பதை நம்பலாம்.
எங்கள் திருமணத்திற்கு முன்பு, என் மனைவி கிறிஸ்டி, பரலோக பிதாவின் அன்பை உணரவும், தனக்கான அவரது திட்டத்தைப் புரிந்துகொள்ளவும் போராடிக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. வழிகாட்டுதலுக்காக அவள் ஜெபித்தபோது, அவள் முதிர் வேத பாட வகுப்பில் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்தது, எனவே அவள் ஒரு புதிய ஏற்பாட்டு வகுப்பில் சேர்ந்தாள். அவளுடைய பள்ளி ஆசிரியர் வேதங்களிலிருந்து கற்பித்த விதம், அவற்றை அவர் ஏந்தியிருந்த விதம் கூட, அவர் தேவனுடைய வார்த்தையை எவ்வளவு நேசித்தார் என்பதைக் காட்டியது. அவள் கலந்துகொண்டபோது, அவளுக்குத் தேவையான ஏதோ ஒன்று வேதங்களில் இருப்பதாக பரிசுத்த ஆவி அவளிடம் கிசுகிசுத்தது. வேதங்களின் மீதான அவளுடைய ஆசிரியரின் அன்பும், பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களும், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய தீவிரமான படிப்பைத் தொடங்குவதற்கான விருப்பத்தை அவளுக்கு அளித்தது—இது ஆழ்ந்த மனமாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு சேவையின் வாழ்நாள் பயணமாக மாறியது.
இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துங்கள்
இறுதியாக, இரட்சகரின் வழியில் கற்பித்தல் குறிப்பிடுவது போல, நமது கற்பித்தலும் கற்றலும் எப்போதும் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். நாம் அவரைப் பற்றி அடிக்கடி, அதிக பயபக்தியுடன் பேசலாம், மேலும் அவருக்கு சாட்சியம், நன்றியுணர்வு மற்றும் அன்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகளைத் தேடலாம். எந்த சூழ்நிலையிலும், நாம் அவரை நினைவில் கொள்ளும்போது, “அவருடைய ஆவியை [நம்முடன்] கொண்டிருக்க“ முடியும்.
நமது கற்பித்தலின் மையத்தில் இயேசு கிறிஸ்துவை வைப்பதற்கான ஒரு வழி, அவர் அனைத்து சுவிசேஷ கொள்கைகளின் சரியான முன்மாதிரி, உருவகம் மற்றும் வெளிப்பாடு என்பதை வலியுறுத்துவதாகும். வேத விவரத்தில் அவர் நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், கற்பிக்கப்படும் கொள்கையின் எடுத்துக்காட்டாக அவரை நாம் இன்னும் சுட்டிக்காட்டலாம். “இயேசு கிறிஸ்து இந்தக் கொள்கையை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு காலத்தை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?“ என்று நாம் எளிமையாகக் கேட்கலாம்.
அவருடைய பட்டங்கள், பங்குகள் மற்றும் பண்புகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் நாம் அவர் மீது கவனம் செலுத்தலாம், அவர் என்ன செய்தார் என்பதைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவர் யார் என்பதை நன்கு புரிந்துகொள்ளவும் முயலலாம். உதாரணமாக, மனந்திரும்புதலின் கொள்கையைப் படிக்கும்போது, எப்படி மனந்திரும்புவது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆனால் மனந்திரும்புதலை சாத்தியமாக்க இயேசு கிறிஸ்து என்ன செய்தார் என்பதை நினைவில் கொள்வதும், மனந்திரும்புதல், அவரைப் பற்றியும், அவருடைய உண்மையான இயல்பு மற்றும் குணாதிசயங்களைப் பற்றியும் நமக்கு என்ன கற்பிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். மனந்திரும்புவதற்கான நமது வாய்ப்பு, அவருடைய அன்பு, பொறுமை மற்றும் இரக்கம், நமது தெய்வீக ஆற்றலில் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை, நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய அவர் காட்டும் விருப்பம் மற்றும் மன்னிப்பதில் அவர் காணும் மகிழ்ச்சி பற்றி என்ன கூறுகிறது? தேவ ஆட்டுக்குட்டி, மீட்பர் மற்றும் வைத்தியர் போன்ற அவரது பட்டங்களைப் புரிந்துகொள்வது, மனந்திரும்புதல் என்பது நம்மைச் சுத்திகரிக்கவும், மாற்றவும், குணப்படுத்தவும் அவரது அழைப்பு என்பதைக் காண உதவுகிறது. அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார், அவர் யார் என்பதைப் பற்றி அது என்ன சொல்கிறது என்பதில் கவனம் செலுத்துவது, “மனந்திரும்புதலுக்கான விசுவாசத்தை” நாம் கொண்டிருக்க உதவும்.
சில சமயங்களில், வேத விவரத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இரட்சகரின் பண்புகளை நாம் உடனடியாகக் காணாமல் போகலாம். உதாரணமாக, நேபி ஒரு படகு கட்டுவதைப் பற்றி படிக்கும்போது, நாம் நேபியின் மீது மட்டுமே கவனம் செலுத்தலாம். ஆனால் இரட்சகரின் மீது கவனம் செலுத்துவது, இந்தப் பதிவு நேபியின் மகத்துவத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கப் பாதுகாக்கப்படவில்லை, ஆனால் தேவனின் மகத்துவத்தைக் காட்டவே பாதுகாக்கப்பட்டது என்பதைக் காண உதவும்—அவர் தம்முடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க நமக்கு பலத்தைத் தருகிறார், தேவைப்படும் நேரங்களில் நம்மை விடுவிப்பார்.
பரலோக பிதாவின் பரிபூரண மகிழ்ச்சித் திட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் மையப் பாத்திரத்திலும் நாம் கவனம் செலுத்தலாம். நமது உலகப்பிரகார சூழ்நிலைகளின் உருப்பெருக்கி மூலம் நமது சூழ்நிலைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, தேவனின் நித்திய திட்டத்தின் உருப்பெருக்கி மூலம் நமது சூழ்நிலைகளைப் பார்ப்பது நமது வாழ்க்கையின் போக்கையே மாற்றும். சுவிசேஷம் என்பது கோரிக்கைகளின் பட்டியல் அல்ல; அது இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் வென்றார் என்ற நற்செய்தி. தேவனுடனான நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவருடைய அற்புதமான கிருபையை அணுகுவதன் மூலம், நாம் இப்போது மகிழ்ச்சியாக வாழவும், நித்தியங்களில் பரலோகத்திலுள்ள நமது பிதாவுடன் வாழ்க்கைக்குத் தயாராகவும் முடியும். வேதங்களில் பரலோக பிதாவையும் இரட்சகரையும் நாம் காணக் கற்றுக் கொள்ளும்போது, நாம் அவர்களை நன்கு அறிந்துகொள்வோம், மேலும் அவர்களின் அன்பையும் செல்வாக்கையும் நம் சொந்த வாழ்க்கையில் அடிக்கடியும் மிகவும் வல்லமை வாய்ந்ததாகவும் காண்போம்.
இரட்சகரின் வாழ்க்கையின் இறுதி நாட்களைப் பற்றி எங்கள் ஆசிரியர் கற்பித்தபோது, நான் இளைஞனாக இருக்கும்போது உணர்ந்த ஆவியை எப்போதும் நினைவில் கொள்வேன். மேல் அறை, கெத்செமனே, கொல்கொதா மற்றும் காலியான கல்லறையில் நடந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அவர் எங்களுக்கு உதவினார். இரட்சகருக்கான தனது ஆழ்ந்த நன்றியையும், அவரைப் பின்பற்றுவதற்கான தனது ஆழ்ந்த விருப்பத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். அவருடைய போதனை இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்க பரிசுத்த ஆவியானவருக்கு ஒரு அழைப்பாக இருந்தது. மேலும் அந்த வகுப்பில் நான் உணர்ந்த ஆவி என் விசுவாசத்தை ஆழப்படுத்தி, இரட்சகர் மீதான என் அன்பையும் பாராட்டையும் அதிகரித்தது. அந்த ஆசிரியரின் தூண்டுதல் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் நிலைத்திருக்கிறது. மற்றொரு ஆசிரியரைப் பற்றி கூறப்பட்டது போல, “அவருடைய விசுவாசத்தின் நெருப்பால் நம் கைகளை இதமாக்க முடிந்தது.”
முடிவுரை
நமது வீடுகளிலும், சபைக் கூட்டங்களிலும், நாம் இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்தி, அவரது கோட்பாட்டைக் கற்பித்து, கருத்துடன் கற்றுக்கொள்ளும்போது, இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை ஆழப்படுத்தவும், அவரைப் போல மாற நமக்கு உதவவும் பரிசுத்த ஆவியை அழைக்கிறோம், இதுவே அனைத்து சுவிசேஷ கற்பித்தல் மற்றும் கற்றலின் நோக்கமாகும்.
என் வாழ்க்கையில் ஆசிரியர்களாகிய நல்ல பெற்றோர்கள், உள்ளூர் தலைவர்கள், ஆசிரியர்கள் முதல், இந்தப் பிரசங்க மேடையிலிருந்து கற்பிக்கவும் சாட்சியமளிக்கவும் அழைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வரை, இயேசு கிறிஸ்துவை அறிந்து பின்பற்ற நமக்கு உதவி செய்யும் ஆசிரியர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும், பரிபூரண தனிப்பயிற்சியாளரான பரிசுத்த ஆவிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பரிசுத்த ஆவியின் மூலமாகவே, பரலோக பிதா நம்மை நேசிக்கிறார், நமக்காக ஒரு சரியான திட்டத்தை வைத்திருக்கிறார்; இயேசுவே கிறிஸ்து, உலக இரட்சகர் மற்றும் மீட்பர்; அவருடைய சுவிசேஷமும் சபையும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தக் காரியங்களைக் குறித்து நான் நன்றியுடன் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.