நீங்கள் உண்மையில் யார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
சீஷத்துவத்தின் பாதையில் நாம் எங்கிருந்தாலும், நாம் உண்மையில் யார் என்பதை நன்கு புரிந்துகொண்டால் நம் வாழ்க்கை அடிப்படையில் மாறும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் மகள் தனது ஊழியப்பணியில் ஒரு ஆழமான அனுபவத்தைப் பெற்றாள். அவளது ஒப்புதலுடன், அந்த வாரம் அவள் எங்களுக்கு எழுதியதன் ஒரு பகுதியை நான் பகிர்ந்து கொள்கிறேன்:
“நேற்று, திரும்ப வரும் ஒரு உறுப்பினர் எங்களை விரைவில் வருமாறு கேட்டாள். நாங்கள் அங்கு வந்தபோது, அவள் தரையில் கிடந்ததைக் கண்டோம், கட்டுப்படுத்தமுடியாமல் விம்மி அழுதாள். கண்ணீருக்கிடையில், அவள் வேலையை இழந்துவிட்டாள், அவளுடைய குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படப் போகிறாள், மீண்டும், வீடற்றவளாக மாறுவாள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
எங்கள் மகள் தொடர்ந்தாள்: “நான் பதட்டத்துடன் என் வேதத்தைத் தேட ஆரம்பித்தேன், அவளுக்கு உதவ எதையாவது கண்டுபிடிக்க முயற்சித்தேன். நான் சரியான வசனத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, நினைத்தேன், ‘நான் என்ன செய்கிறேன்? கிறிஸ்து இதை செய்ய மாட்டார். இது நான் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினை அல்ல, ஆனால் இவள் என் உதவி தேவைப்படும் தேவனின் உண்மையான குமாரத்தி. எனவே, நான் என் வேதங்களை மூடி, அவளருகில் மண்டியிட்டு, அவள் எழுந்து நின்று இந்த சோதனையை எதிர்கொள்ளத் தயாராகும் வரை நாங்கள் ஒன்றாக அழுதுகொண்டு அவளைப் பிடித்துக் கொண்டிருந்தேன்.
இந்த பெண் ஆறுதல் அடைந்த பிறகு, அவளது தெய்வீக மதிப்பின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும், நமது இருப்பின் மிக அடிப்படையான சத்தியங்களில் ஒன்றைக் கற்பிக்கவும் எங்கள் மகள் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தினாள்—நாம் தேவனின் அன்பான குமாரர்கள் மற்றும் குமாரத்திகள் என்றும், நாம் துன்பப்படும்போது நமக்காக பரிபூரண இரக்கத்தை உணரும் ஒரு தேவன், நாம் மீண்டும் எழுந்து நிற்கும்போது நமக்கு உதவ தயாராகவும் இருக்கிறார் என்பதை.
நமது ஊழியக்காரர்கள் கற்பிக்கும் கோட்பாட்டின் முதல் கருத்தான, தேவன் நமது அன்பான பரலோக பிதா என்பது உள்ளார்ந்த புரிதலாகும். அடுத்தடுத்த ஒவ்வொரு சத்தியமும் நாம் உண்மையில் யார் என்ற அடிப்படை புரிதலை உருவாக்குகிறது.
சூசன் எச். போர்ட்டர், ஆரம்ப வகுப்பு பொதுத் தலைவர் கற்பித்தார்: “தேவனின் ஒரு பிள்ளையாக எவ்வளவு முழுமையாக நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து புரிந்துகொள்ளும்போது இது எல்லாவற்றையும் மாற்றுகிறது. நீங்கள் தவறுகளைச் செய்யும்போது உங்களைப்பற்றி நீங்கள் உணருகிற வழியை அது மாற்றுகிறது. கடினமான காரியங்கள் நடக்கும்போது உங்களைப்பற்றி நீங்கள் உணருகிற வழியை அது மாற்றுகிறது. தேவனின் கட்டளைகளைப்பற்றிய உங்கள் பார்வையை அது மாற்றுகிறது. மற்றவர்களைப்பற்றிய உங்கள் பார்வையையும், ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ண உங்களுடைய திறனையும் அது மாற்றுகிறது.”
தேவனை முகமுகமாய்க் கண்ட மோசேக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி வாசிக்கும்போது இந்த மாற்றம் விளக்கப்படுகிறது. அந்த உரையாடலின் போது, தேவன் மோசேக்கு அவனது தெய்வீக பாரம்பரியத்தை மீண்டும் மீண்டும் கற்பித்தார், “மோசே, நீயே என்னுடைய குமாரன்.“ மோசே தம்முடைய ஒரேபேறானவரின் சாயலில் இருக்கிறான் என்று தேவன் விளக்கினார். தான் யார், தனக்கு ஒரு வேலை இருக்கிறது என்பதையும், தனக்கு அன்பான பரலோக பிதா இருக்கிறார் என்பதையும் மோசே தெளிவாகப் புரிந்துகொண்டான்.
இந்த அனுபவத்திற்குப் பிறகு, சத்துரு அவனை சோதித்து, உடனடியாக அவனை நோக்கி, “மோசே, மனுஷகுமாரனே“ என்று சொன்னான். இது சத்துருவின் ஆயுதக் கிடங்கில் உள்ள ஒரு பொதுவான மற்றும் ஆபத்தான கருவியாகும். நமது பரலோக பிதா நாம் அவருடைய பிள்ளைகள் என்பதை தொடர்ந்து அன்புடன் நமக்கு நினைவூட்டும்போது, சத்துரு எப்போதும் நமது பலவீனங்களால் நம்மை முத்திரை குத்த முயற்சிப்பான். ஆனால் மோசே தான் ஒரு “மனுஷகுமாரன்“ என்பதையும் விட மேலானவன் என்று ஏற்கெனவே அறிந்திருந்தான். அவன் சாத்தானிடம் அறிவித்தான், “நீ யார்? ஏனெனில் இதோ, நான் தேவனுடைய குமாரன்” என அறிவித்தான். இதேபோல், பூலோக வாழ்க்கையின் சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது, அல்லது நமது பலவீனங்களால் யாராவது நம்மை முத்திரை குத்த முயற்சிக்கிறார்கள் என்று உணரும்போது, நாம் உண்மையில் யார் என்ற அறிவில் வலுவாக நிற்க வேண்டும். நாம் தேவனிடம் சரிபார்ப்பைத் தேட வேண்டும், மற்றவர்களிடமிருந்து அல்ல. அவ்வாறு நாம் செய்யும்போது, “நான் தேவனின் பிள்ளை“ என்று நாமும் தைரியமாக அறிவிக்கலாம்.
இளம் வயதுவந்தோருக்கான உலகளாவிய ஆராதனையில், தலைவர் ரசல் எம். நெல்சன் கற்பித்தார்: “எனவே நீங்கள் யார்? முதலாவதும் முக்கியமானதுமாக, நீங்கள் தேவனுடைய பிள்ளை, உடன்படிக்கையின் பிள்ளை மற்றும் இயேசு கிறிஸ்துவின் சீஷனுமாயிருக்கிறீர்கள். “இந்த சத்தியங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில் நித்தியமாக வாழ்வதற்கான உங்கள் இறுதி இலக்கை அடைய நம் பரலோக பிதா உங்களுக்கு உதவுவார்.”
மிகவும் திரும்பத் திரும்ப சொல்லப்படும் வேதவாக்கியத்தில், தேவன் அவருடனான நமது உறவை நமக்கு நினைவூட்டுகிறார் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. திருவிருந்து ஜெபத்தில் அவர் அடையாளம் காணக்கூடிய அனைத்து பெயர்களிலும், அவர் “நித்திய பிதாவாகிய, தேவனே“ என்று அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
நாம் யார் என்பதை நாம் உண்மையிலேயே அறிந்துகொள்ளும்போது, நமது அன்பான பரலோக பிதாவிடம் திரும்பிச் சென்று மறுபடியும் வாழ நமக்கு ஒரு திட்டத்தை வழங்கியிருக்கிறார் என்று நாம் இன்னும் உறுதியாக நம்புவோம். மூப்பர் பாட்ரிக் கியரோன் போதித்தார், “நமது பிதாவின் அழகான திட்டம், அவருடைய ‘அற்புதமான‘ திட்டம் கூட, உங்களை வீட்டிற்கு அழைத்து வர வடிவமைக்கப்பட்டுள்ளது, உங்களை வெளியேற்றுவதற்காக அல்ல. … தேவன் இடைவிடாமல் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.” அதைப் பற்றி ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்—சர்வ வல்லமையுள்ள, அன்பான நமது பிதா “இடைவிடாமல் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.“
சீஷத்துவத்தின் பாதையில் நாம் எங்கிருந்தாலும், நாம் உண்மையில் யார் என்பதை நன்கு புரிந்துகொண்டால் நம் வாழ்க்கை அடிப்படையில் மாறும். இந்த புரிதலை ஆழப்படுத்துவதற்கான இரண்டு வழிகளை நான் பரிந்துரைக்கிறேன்.
முதலாவதாக, ஜெபம்
இரட்சகர் தம்முடைய பூலோக ஊழியத்தைத் தொடங்கியபோது, அவர் “தேவனோடே இருப்பதற்காக“ வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்.” ஒருவேளை ஒவ்வொரு நாளும் உண்மையிலேயே தொடர்புகொள்வதற்கும் “தேவனோடே இருப்பதற்காகவும்“ போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு வெறுமனே நமது ஜெபங்களைச் சொல்வதிலிருந்து நம் மனநிலையை மாற்ற வேண்டும்.
என் பிதாவிடம் பேச ஆயத்தப்பட சில நிமிடங்கள் எடுத்துக்கொள்வதால், என் ஜெபங்களின் தரம் மேம்படுவதை நான் கண்டேன். இதுவே உகந்த ஒரு மாதிரி என்று வேதவாக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. அது ஜோசப் ஸ்மித்தோ; ஏலமனின் குமாரன் நேபியோ; அல்லது ஏனோஸ் ஆக இருந்தாலும், தேவனுடனான அவர்களின் பதிவு செய்யப்பட்ட தொடர்புகளுக்கு முன்பு எல்லாரும் ஏதோவொரு வகையான தியானிப்பதையும் யோசிப்பதையும் கொண்டிருக்கின்றனர். தனது தகப்பனின் வார்த்தைகள் தனது இருதயத்தில் ஆழமாக பதிந்ததால் தனது ஆத்துமா பசியுற்றதாக ஏனோஸ் கூறினான். இந்த உதாரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் “தேவனோடே இருப்பதற்காக“ ஆவிக்குரிய முறையில் ஆயத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நமக்குக் கற்பிக்கின்றன.
நேபியர்களிடம், “நீயோ ஜெபிக்கும்போது, உனது அறைவீட்டினுள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டிய பின்பு, உன் பிதாவினிடத்தில் ஜெபம் பண்ணு.“ என்று இரட்சகர் அறிவுறுத்தினார்.
அது ஒரு அறைவீடோ அல்லது படுக்கையறையோ, உங்கள் ஆத்துமா அசையாமலிருக்க அனுமதிப்பதற்கும், “அமர்ந்த மெல்லிய சத்தத்தின்“ தூண்டுதல்களை உணரவும், நீங்கள் ஜெபிக்க தனியாக இருக்கக்கூடிய ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதே கொள்கையாகும். நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிற காரியங்களைப் பற்றியும், நம் பிதாவிடம் கொண்டு வர விரும்பும் கேள்விகள் அல்லது அக்கறைகளைப் பற்றியும் சிந்திப்பதன் மூலமும் நாம் ஆயத்தம் செய்யலாம். மனப்பாட முறையில் ஜெபம் செய்ய முயலாமல், கூடுமானால் நம் பிதாவுடன் சத்தமாக பேச நாம் முயற்சி செய்ய வேண்டும்.
நம் வாழ்க்கையின் குழப்பத்தில், நாம் குழந்தைகளுடன் போராடும்போது அல்லது ஒரு கூட்டத்திலிருந்து அடுத்த கூட்டத்துக்கு ஓடும்போது, அமைதியான அறைவீடுகள் மற்றும் சிந்தனைமிக்க ஆயத்தத்தின் சௌகரியம் நமக்கு இல்லாமல் இருக்கலாம் என்பதை நான் உணர்கிறேன்—ஆனால் நாளின் தொடக்கத்தில் “தேவனோடே இருப்பதற்காக“ முயற்சி செய்யும்போது அந்த அமைதியான, விரைவான மற்றும் அவசர ஜெபங்கள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
நீண்ட காலமாக ஜெபிக்காத சிலரும் அல்லது தங்கள் ஜெபங்கள் கேட்கப்படுவதாக உணராத மற்றவர்களும் இருக்கலாம். உங்கள் பரலோக பிதா உங்களை அறிந்திருக்கிறார், உங்களை நேசிக்கிறார், உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அவர் உங்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார். நீங்கள் யார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
தலைவர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் சமீபத்தில் கற்பித்தார், “நீங்கள் எவ்வளவு அதிகமாய் ஜெபித்தாலும், மேலும் ஜெபியுங்கள். நீங்கள் எவ்வளவு கடினமாக ஜெபித்தாலும், இன்னும் கடினமாக ஜெபியுங்கள்.
நமது ஜெபங்களின் இடைவெளி மற்றும் உருக்கத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தினமும் மார்மன் புஸ்தகத்தைப் படிப்பது மற்றும் ஆலயத்தில் ஆராதிப்பது வெளிப்படுத்தலுக்கு நம் மனங்களை தயார்படுத்த உதவும். நமது பரலோக பிதாவுடனான நமது தொடர்பை மேம்படுத்த நாம் முயற்சி செய்யும்போது, நாம் அவருடைய பிள்ளைகள் என்பதை இன்னும் ஆழமாக உணர அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.
இரண்டாவதாக, இயேசுவே கிறிஸ்து என்பதை அறிந்துகொள்வது
பரலோக பிதா தம்முடைய பிள்ளைகளாக நம்மீது வைத்திருக்கும் அன்பின் மிகப் பெரிய வெளிப்பாடு, நம்முடைய சொந்த இரட்சகரான தம்முடைய குமாரனை நாம் வீட்டிற்கு வர உதவுவதற்காக அனுப்பினார் என்ற யதார்த்தம். எனவே, நாம் அவரை அறிந்து கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிணையத் தலைவராக பணியாற்றியபோது, ஒரு சகோதரர் ஆலயத்தில் நியம பணியாளராக பணியாற்ற ஒரு பரிந்துரையை சமர்ப்பித்தேன். அவர் என்ன ஒரு அற்புதமான நியம பணியாளராக இருப்பார் என்பதை விளக்கிய பிறகு, நான் கவனக்குறைவாக “ஒப்புதல் அளிக்க வேண்டாம்“ என்பதை அழுத்தினேன், இது பரிந்துரையை சமர்ப்பித்தது. செய்தியை திரும்பப் பெற முயற்சி செய்து தோல்வியுற்ற பிறகு, நான் ஆலயத் தலைவரை அழைத்து, “நான் ஒரு பயங்கரமான தவறு செய்துவிட்டேன்“ என்று சொன்னேன். தயக்கமின்றி, இந்த நல்ல ஆலயத் தலைவர், “தலைவர் ஐர், மன்னிக்க முடியாத மற்றும் இறுதியில் சரி செய்ய முடியாத எதுவும் நீங்கள் செய்யவில்லை“ என்றார். என்ன ஒரு மகத்தான உண்மை. உண்மையில், இயேசு கிறிஸ்து “இரட்சிக்க வல்லமையுடையவர்.”
2019 ஆம் ஆண்டில், ஆலயப் பரிந்துரை கேள்விகளில் ஆழமான மாற்றம் ஏற்பட்டது. முன்னதாக, நமது இரட்சகராகவும் மீட்பராகவும் இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தில் உங்களுக்கு சாட்சியமுண்டா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களுடைய இரட்சகராகவும் மீட்பராகவும் அவருடைய பாத்திரத்தில் உங்களுக்கு சாட்சியமுண்டா? என்று அது இப்போது கேட்கிறது. இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றவர்களுக்கு மட்டுமல்ல; இது உங்களுக்கும் எனக்கும் வேலை செய்கிறது. அவர் எனது இரட்சகர். அவர் உங்களது இரட்சகர். தனித்தனியாக. அவர் மூலமாக மட்டுமே நீங்களும் நானும் நமது பிதாவோடு இருக்க திரும்பி வர முடியும்.
எனவே, சகோதர சகோதரிகளே, நாம் அவரைத் தேடுவோம். பிதாவுடனும், நம் ஒவ்வொருவருடனுமான அவரது தெய்வீக உறவை நாம் படிப்போம். நாம் மனந்திரும்பும்போது நமது மீட்பர் மூலம் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வரும் மீட்பின் அன்பைப் பற்றியதான பாடலை அனுபவிப்போம். “இரட்சிக்க வல்லமையுள்ளவரை“ நாம் அறியும்போது, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய சந்தோஷம்—அவருடைய மிக முக்கியமான கவனம்— மேலும் நாம் ஒவ்வொருவரும் உண்மையில் காப்பாற்றப்படத் தகுதியானவர்கள் என்பதை புரிந்துகொள்வோம்.
நமக்கு அன்பான பரலோக பிதா இருக்கிறார் என்று நான் சாட்சியமளிக்கிறேன். வல்லமையுள்ள ஜெபம், தனிப்பட்ட வெளிப்படுத்தல் மற்றும் இயேசு கிறிஸ்துவிடம் வருவதன் மூலம் இந்த நித்திய சத்தியத்தை நாம் அறிந்துகொள்ளும்போது, நாம் இப்போதும் எப்போதும் தைரியமாக “நான் தேவனுடைய பிள்ளை“ என்று அறிவிக்கலாம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.