“நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?”
தேவன் மீதுள்ள நம் அன்பைக் காட்ட விரும்பினால், அவர் நம் அன்பை எவ்வாறு அங்கீகரிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கெட்ட குமாரனின் உவமையில், தனது இளைய சகோதரன் சிறிது கால மோசமான தேர்வுகளுக்குப் பிறகு, “துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டு,“ வீடு திரும்பியபோது, அண்ணன் ஆரம்பத்தில் கொண்டாட சிரமப்பட்டான். மூத்த சகோதரனின் பெருமையும் சுயநீதியும், தன் சகோதரன் மனந்திரும்பி திரும்பி வந்த மகிழ்ச்சியைத் தழுவுவதைத் தடுத்தன. நம் அன்புக்குரியவர்கள் மீது நாம் கொண்டுள்ள உண்மையான அன்பை, நம் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அவர்களுக்குத் தெரியப்படுத்தாமல், வாய்ப்புகளை நாமும் கடந்து செல்ல அனுமதிக்கலாம்.
நகோமி மற்றும் ரூத், அம்மோன் மற்றும் லாமோனி ராஜா, கெட்ட குமாரன் மற்றும் அவனது தகப்பன், இரட்சகர் மற்றும் அவரது சீஷர்கள் என பகிரப்பட்ட மற்றும் பெறப்பட்ட உண்மையான அன்பின் பல வல்லமைவாய்ந்த எடுத்துக்காட்டுகள் வேதங்களில் உள்ளன.
அன்பு இலவசமாகக் கொடுக்கப்பட்டு, உண்மையாகப் பெறப்படும்போது, கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையே அன்பின் அதிகரிப்புடன் ஒரு நல்லொழுக்கச் சுழற்சி ஏற்படுகிறது.
தேவனின் அன்பு பரிபூரணமானது, எல்லையற்றது, நீடித்தது, மற்றும் “மிக மதுரமானது.” அது என் ஆத்துமாவை “மிகுந்த மகிழ்ச்சியால் நிறைத்தது.” சில சமயங்களில் நம் வாழ்வில் தேவனின் அன்பை அடையாளம் காண்பது கடினமாக இருக்கலாம். இருப்பினும், நம்முடைய பரிபூரணமாக நேசிக்கும் பரலோக பிதா நாம் அவருடைய அன்பை அனுபவிக்க வேண்டும் என்று மிகவும் அதிகமாக விரும்புகிறார், அதனால் அவர் “[நம்முடைய] புரிதலின்படி … [நம்மிடம்] பேசுகிறார்.” நாம் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய வழிகளில் அவர் நம்மீது தனது அன்பை வெளிப்படுத்துவார். இயற்கையின் அழகுகளைக் கவனிக்கும்போது, அல்லது ஜெபங்களுக்கு பதில்களைப் பெறும்போது, அல்லது தேவைப்படும் தருணத்திலேயே நமது மனங்களுக்கு எண்ணங்கள் வரும்போது, அல்லது மகிழ்ச்சியின் இனிமையான தருணங்களை அனுபவிக்கும்போது, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் அனுபவிக்கலாம். அவர் தம்முடைய நேச குமாரனை பாவநிவாரணமாகத் தம்மையே பலியாகக் கொடுக்க அனுமதித்தபோது, பரலோக பிதா நம் மீது கொண்ட அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடு, மனதிலும் இருதயத்திலும் எதிரொலிக்கிறது.
கெட்ட குமாரனின் மூத்த சகோதரனைப் போலவே, நம்முடைய கவனமும் பெரும்பாலும் நம் மீதே குவிந்துள்ளது. தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் அத்தாட்சிகளைத் தேடுவதில் நாம் மிகவும் மூழ்கிவிட்டோம், அதைக் காணாதபோது நாம் விரக்தியடைகிறோம். ஆனால் அழகான முரண்பாடு என்னவென்றால், தேவன் மீதுள்ள நம் அன்பைக் காட்டுவதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அவ்வளவு எளிதாக அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை அடையாளம் கண்டுகொள்கிறோம். ஒருவேளை இதனால்தான் இரட்சகர் “எந்தக் கற்பனை பிரதானமானது?” என்ற கேள்விக்கு இந்த எளிய மற்றும் முக்கியமான அழைப்போடு பதிலளித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.”
சில நேரங்களில் நாம் மிகவும் அன்பானவர்களிடம் நம் அன்பைக் காட்டும் விதம், அவர்கள் அன்பை அடையாளங்காணும் விதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் விரக்தியை ஏற்படுத்தக்கூடும். நாம் நேசிப்பவர்களிடம், வெளிப்படுத்தப்படும் அன்பை அவர்கள் எவ்வாறு அடையாளங்காண்கிறார்கள் என்று கேட்பது உதவியாக இருக்கும். அதேபோல், தேவன் மீதுள்ள நம் அன்பைக் காட்ட விரும்பினால், அவர் நம் அன்பை எவ்வாறு அங்கீகரிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிர்ஷ்டவசமாக, அவர் மீதுள்ள நம் அன்பைக் காட்ட பல வழிகளை வேதங்களில் அவர் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?
திபேரியா கடலில் பேதுருவுக்கும் உயிர்த்தெழுந்த கர்த்தருக்கும் இடையிலான போதனையான பரிமாற்றத்தில், கர்த்தர் மீதான நமது அன்பைக் காட்டக்கூடிய வழிகளைக் கற்றுக்கொள்கிறோம்.
“யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான்.”
கர்த்தரின் இந்த விசாரணையின் முக்கிய கேள்வி என்னவென்றால், “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா“ என்பதாகும். நாம் கர்த்தரை “இவர்களிலும்“ மேலாக வைக்கும்போது, நாம் அவரிடம் நம் அன்பைக் காட்டுகிறோம். “இவர்கள்“ என்பது யாராக இருந்தாலும், எந்தச் செயலாக இருந்தாலும், அல்லது நம் வாழ்வில் மிக முக்கியமான செல்வாக்கிலிருந்து அவரை நீக்கும் எதையும் கொண்டிருக்கலாம்.
நாம் விரும்பும் அல்லது நாம் சாதிக்கத் தேவையான அனைத்தையும் செய்து முடிக்க ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில் போதுமான நேரம் இருக்காது. நமது நித்திய நன்மைக்காக மிக முக்கியமானவற்றிற்காக நேரத்தைப் பயன்படுத்துவதும், குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விட்டுவிடுவதும் பூலோகவாழ்க்கையின் சோதனையின் ஒரு பகுதியாகும்.
தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார்: “நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கேள்வி… ஒன்றுதான். … உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு, தேவனாக இருக்க அனுமதிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் செயல்களில் செல்வாக்கு செலுத்த அவருடைய வார்த்தைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய உடன்படிக்கைகளையும் நீங்கள் அனுமதிப்பீர்களா? வேறு எதையும் விட அவருடைய குரல் முன்னுரிமை பெற நீங்கள் அனுமதிப்பீர்களா? மற்ற எல்லா லட்சியங்களுக்கும் மேலாக, அவர் நீங்கள் செய்ய விரும்புவற்கு முன்னுரிமை அளிக்க நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்களா? உங்கள் விருப்பம் அவரது சித்தத்தால் விழுங்கப்படுவதற்கு நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்களா?” நாம் தேவனை நமது முதன்மையான முன்னுரிமையாகக் கொள்ளும்போது, நாம் நமது சீஷத்துவத்தையும், தேவனின் மீதான அன்பையும் வெளிப்படுத்துகிறோம்.
என் ஆடுகளை மேய்ப்பாயாக
பேதுருவுக்கும் இரட்சகருக்கும் இடையிலான இதே கலந்துரையாடலின் அடுத்த வசனத்தில், நம்முடைய அன்பின் வெளிப்பாடுகளை கர்த்தர் அங்கீகரிக்கும் மற்றொரு வழியைப் பற்றி நாம் அறிகிறோம்: “[கர்த்தர்] இரண்டாந்தரம் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர் அவனிடம், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.”
நாம் பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு சேவை செய்யும்போது, செவிகொடுக்கும்போது, நேசிக்கும்போது, உயர்த்தும்போது அல்லது ஊழியம் செய்யும்போது அவர் மீதுள்ள நமது அன்பைக் காட்டுகிறோம். அந்த சேவை மற்றவர்களை நியாயந்தீர்க்காமல் உண்மையிலேயே பார்ப்பது போல எளிமையாக இருக்கலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76,வது பாகத்தில், சிலஸ்டியல் மகிமையைப் பெறுபவர்களின் குணாதிசயங்களைப் பற்றிய ஒரு பார்வை நமக்குக் கிடைக்கிறது: “அவைகள் காணப்படுகிறதைப்போல காண்கிறார்கள், அவைகள் அறியப்படுவதைப் போல அறிகிறார்கள்.” தேவன் தங்களைப் பார்ப்பது போலவே அவர்கள் மற்றவர்களைப் பார்க்கிறார்கள், மேலும் மகிமையான தெய்வீக ஆற்றலுடன் அவர்கள் யார் ஆக முடியுமோ அப்படி, அவர் அவர்களைப் பார்க்கிறார்.
எனது ஊழியத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு, நானும் என் சகோதரர்களும் பதின்ம வயதினர்களாக இருந்தபோது தொடங்கிய புல்வெளி பராமரிப்பு தொழிலை நான் ஏற்றுக்கொண்டேன். நான் என் பல்கலைக்கழகப் படிப்பிலும் மும்முரமாக இருந்தேன். ஒரு வசந்த கால வாரம், கனமழை மற்றும் நெருங்கி வந்த இறுதித் தேர்வுகள் என்னை மிகவும் சோர்வடையச் செய்து, புல்வெளி வேலைகளில் பின்தங்க வைத்தன.
வாரத்தின் நடுப்பகுதியில் வானம் தெளிவாக இருந்தது, வகுப்புகளுக்குப் பிறகு புல்வெளி வேலை செய்ய திட்டமிட்டேன். ஆனால் நான் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, என்னுடைய லாரியும் உபகரணங்களும் காணாமல் போயிருந்தன. ஆர்வத்துடன், திட்டமிடப்பட்ட புல்வெளிகளைப் பார்வையிட்டேன்; ஒவ்வொன்றும் ஏற்கனவே அழகாக வெட்டப்பட்டிருந்தன. திட்டமிடப்பட்ட கடைசி புல்வெளியில், என் தம்பி அறுக்கும் இயந்திரத்தின் பின்னால் நடந்து செல்வதைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து, புன்னகைத்து, கையசைத்தான். நன்றியுணர்வு பொங்கி நான், அவனைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னேன். அவனது அர்த்தமுள்ள சேவைச் செயல் அவன் மீதான எனது அன்பையும் விசுவாசத்தையும் ஆழமாக வலுப்படுத்தியது. ஒருவருக்கொருவர் சேவை செய்வது, தேவன் மீதும் அவருடைய நேச குமாரன் மீதும் நாம் கொண்டுள்ள அன்பைக் காட்டும் ஒரு தெளிவான வழியாகும்.
சகல காரியங்களிலும் அவரது ஈடுபாட்டை அறிக்கையிடுங்கள்
நன்றியுள்ள இருதயத்தைக் கொண்டிருப்பதன் மூலமும் நாம் தேவன் மீதான நமது அன்பை வெளிப்படுத்துகிறோம். கர்த்தர் சொன்னார், “சகல காரியங்களிலும் அவரது ஈடுபாட்டை அறிக்கையிடாதவர்களை தவிர,… தேவனை மனுஷன் நிந்திக்க எதையும் செய்யமுடியாது.” நம் வாழ்வில் உள்ள ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் தேவனே ஆதாரமாக இருப்பதை ஒப்புக்கொள்வதன் மூலம் நாம் அவர் மீதுள்ள அன்பைக் காட்டுகிறோம்.
ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், நானும் எனது வணிக கூட்டாளியும் முக்கியமான கூட்டங்களுக்கு முன்பு பரலோக பிதாவின் உதவியைக் கேட்டு ஊக்கமாக ஜெபிப்போம். மீண்டும் மீண்டும், தேவன் எங்கள் ஜெபங்களுக்கு பதிலளித்தார், எங்கள் கூட்டங்கள் நன்றாக நடந்தன. ஒரு கூட்டத்திற்குப் பிறகு, நாங்கள் உதவி கேட்க அவசரப்பட்டோம், ஆனால் நன்றி சொல்ல தாமதித்தோம் என்று என் வணிக கூட்டாளி சுட்டிக்காட்டினார். அப்போதிருந்து, எங்கள் வெற்றிகளில் கர்த்தரின் கரத்தை அங்கீகரித்து, நன்றியுணர்வின் உண்மையான ஜெபங்களைச் செய்வதை நாங்கள் ஒரு பழக்கமாக்கிக் கொண்டோம். நாம் தேவன் மீதுள்ள அன்பை “நன்றியுணர்வின் மனப்பான்மையுடன்“ காட்டுகிறோம்.
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்
பரலோக பிதாவுக்கும் அவருடைய நேச குமாரனுக்கும் நமது அன்பைக் காட்ட மற்றொரு வழி, அவர்களுக்குக் கீழ்ப்படிய தேர்ந்தெடுப்பதாகும். இரட்சகர் கூறினார், நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். இந்த வகையான கீழ்ப்படிதல் குருட்டுத்தனமானதோ அல்லது கட்டாயமானதோ அல்ல, மாறாக அது அன்பின் உண்மையான மற்றும் விருப்பமான வெளிப்பாடாகும். பரலோக பிதா நாம் கீழ்ப்படிதலுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். சகோதரி தமரா டபிள்யூ. ரூனியா இதை “பாசமுள்ள கீழ்ப்படிதல்“ என்று அழைத்தார். “நாம் இன்னும் பரிபூரணமான கீழ்ப்படிதலைப் பெறவில்லை என்றாலும், நாம் இப்போது பாசமுள்ள கீழ்ப்படிதலை முயற்சிக்கிறோம், மீண்டும் மீண்டும் தரித்திருத்தலைத் தேர்வு செய்கிறோம், ஏனென்றால் நாம் அவரை நேசிக்கிறோம்,“ என்று அவர் சொன்னார்.
பரலோக பிதா, நாம் அவரைத் தேர்ந்தெடுக்க விரும்பி, நமக்கு உணர்த்த சுயாதீனத்தை நமக்குக் கொடுத்தார். அவருடைய பணியும் மகிமையும் நமது நித்திய ஜீவனை நிறைவேற்றுவது மட்டுமல்ல, நமது மிகப்பெரிய ஆசை அவரிடம் திரும்புவதே என்ற நம்பிக்கையையும் உள்ளடக்கியது. இருப்பினும், அவர் ஒருபோதும் நம்மைக் கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்த மாட்டார். “ஒவ்வொரு ஆத்துமாவும் சுதந்திரமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்“ என்ற பாடலில் நாம் பாடுகிறோம்:
ஊழியத் தலைவர்களாக, என் மனைவி கிறிஸ்டினாவும் நானும் கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுத்த பல ஊழியக்காரர்களால் ஈர்க்கப்பட்டோம், அது ஒரு ஊழியத் தரநிலை என்பதால் மட்டுமல்ல, தாழ்மையுடன் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் கர்த்தர் மீதான தங்கள் அன்பைக் காட்ட விரும்பியதாலும்.
மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் சொன்னார், “நமது பரலோக பிதாவின் குறிக்கோள், அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்ய வேண்டுமென்பதல்ல; அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுத்து இறுதியில் அவரைப் போல் ஆக வேண்டும் என்பதே.” நாம் கீழ்ப்படிதலுடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினால், நமது நடத்தைகளைப் பாதிக்க உடனடி வெகுமதிகளையும் தண்டனைகளையும் அவர் பயன்படுத்துவார். நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்ற தேர்ந்தெடுக்கும்போது, அவர் மீதுள்ள நம் அன்பைக் காட்டுகிறோம்.
நம் வாழ்வில் அவர்களை முதன்மையாக வைத்து, ஒருவருக்கொருவர் சேவை செய்து, அவர்களிடமிருந்து வரும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து பின்பற்றத் தேர்ந்தெடுக்கும்போது, நமது பரலோக பிதாவும் இரட்சகரும் அவர்கள் மீதான நமது அன்பின் வெளிப்பாடுகளை அங்கீகரிக்கிறார்கள்.
நாம் ஒவ்வொருவரும் உண்மையிலேயே தேவனின் பிள்ளை என்றும் அவர் நம்மை முழுமையாக நேசிக்கிறார் என்றும் நான் சாட்சியமளிக்கிறேன். நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் விதத்தில் அவருடைய அன்பை அனுபவிக்க அவர் ஏங்குகிறார் என்பதற்கு நான் சாட்சியமளிக்கிறேன். அழகான முரண்பாடு என்னவென்றால், அவர் மீது நமது அன்பைக் காட்டும்போது நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பை இன்னும் அதிகமாக அனுபவிப்போம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.