அவர்களே தங்கள் சொந்த நியாயாதிபதிகள்
நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருந்து, தேவனோடு கூட உடன்படிக்கைகளைச் செய்து கைக்கொண்டு, நம்முடைய பாவங்களிருந்து மனந்திரும்பியிருந்தால், நியாயவிசாரணைக் கூண்டு இன்பமானதாய் இருக்கும்.
மார்மன் புஸ்தகம், “கிறிஸ்துவினிடத்தில் வந்து,” “அவரில் பரிபூரணப்படுங்கள்,” “எல்லா அசுத்தங்களிலிருந்தும் [நம்மை] விலக்கிக் காத்துக் கொள்ளுங்கள்,” “[நம்முடைய] முழுஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் அன்புகூருங்கள்” என்ற மரோனியிடமிருந்து வரும் உணர்த்தும் அழைப்புகளுடன் முடிகிறது. சுவாரஸ்யமாக, அவரது அறிவுறுத்தலின் இறுதி வாக்கியம் உயிர்த்தெழுதல் மற்றும் இறுதித் தீர்ப்பு இரண்டையும் முன்கூட்டியே எதிர்பார்க்கிறது.
அவர் “என் ஆவியும், சரீரமும் மறுபடியும் இணையும் வரைக்குமாயும், தேவ பரதீசில் இளைப்பாற சீக்கிரம் போகவிருக்கிறேன்; ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் நித்திய நியாயாதிபதியாகிய மகா யேகோவாவின் இன்பமான நியாயவிசாரணைக் கூண்டுக்கு முன்பாக உங்களைக் காணும்படியாக காற்றினூடே ஜெயத்தோடு கொண்டுவரப்படுகிறேன்“ என்றார்.
இறுதி நியாயத்தீர்ப்பை மரோனி “இன்பமான“ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விவரித்தான், அதில் நான் ஆர்வமாக உள்ளேன். மார்மன் புஸ்தகத்தின் மற்ற தீர்க்கதரிசிகளும் நியாயத்தீர்ப்பை ஒரு “மகிமையான நாள்“ என்றும், நாம் “விசுவாசக்கண்ணால் முன்நோக்க வேண்டும்“ என்றும் விவரிக்கிறார்கள். ஆயினும் பெரும்பாலும் நாம் நியாயத்தீர்ப்பு நாளை எதிர்பார்க்கும்போது, “வெட்கத்தோடும் பயங்கரமான பாவ உணர்ச்சியோடும்“, “அஞ்சத்தக்க திகிலாலும், பயத்தாலும்“, மற்றும் “முடிவற்ற தவிப்பு“ போன்ற பிற தீர்க்கதரிசன விளக்கங்கள் நம் நினைவுக்கு வருகின்றன.
மரோனியும் பிற தீர்க்கதரிசிகளும், ஆவிக்குரிய வகையில் ஆயத்தப்படாதவர்களுக்கானது என்று அவர்கள் எச்சரித்திருந்த பயத்தினால் அல்ல, அந்த மகத்துவமுள்ள நாளை அவர்கள் ஆவலோடும் நம்பிக்கையுடனும் எதிர்நோக்கும்படியாக கிறிஸ்துவின் கோட்பாடு சாத்தியமாக்கியது என்று தீர்க்கமான மாறுபாடு குறிப்பதாக நான் நம்புகிறேன். நீங்களும் நானும் கற்றுக்கொள்ள வேண்டிய என்ன விஷயத்தை மரோனி புரிந்துகொண்டான்?
பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டம் மற்றும் இரக்கம், பிதாவின் திட்டத்தில் இரட்சகரின் பாவநிவாரணப் பங்கு, மற்றும் “நியாயத்தீர்ப்பின் நாளில் [நமது] சொந்த பாவங்களுக்காக நாம் பொறுப்பேற்போம்“ என்பதை நாம் கருத்தில் கொள்ளும்போது பரிசுத்த ஆவியின் உதவிக்காக நான் ஜெபிக்கிறேன்.
பிதாவின் மகிழ்ச்சியின் திட்டம்
பிதாவின் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள், அவருடைய ஆவிக் குழந்தைகள் ஒரு சரீரத்தைப் பெறவும், அநித்திய அனுபவத்தின் மூலம் “தீமையிலிருந்து நன்மையைக் கற்றுக்கொள்ளவும்” வாய்ப்புகளை வழங்குவதும், ஆவிக்குரிய ரீதியில் வளரவும், நித்தியமாக முன்னேறவும் இது உதவுகிறது.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் “ஒழுக்க சுயாதீனம்”என்று குறிப்பிடுவது, தேவன் தம்முடைய குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்குமான அழியாமையையும் நித்திய ஜீவனையும் சாத்தியமாக்குகிற தேவனுடைய திட்டத்தில் முதன்மையானதாகும். இந்த அத்தியாவசியக் கொள்கை, வேதங்களில் சுயாதீனம் என்றும், தேர்வு செய்து செயல்படுவதற்கான சுதந்திரம் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
“ஒழுக்க சுயாதீனம்“ என்ற சொல் அறிவுறுத்தக்கூடியது. “ஒழுக்கம்“ என்ற வார்த்தையின் ஒத்த சொற்களில் “நல்லது,“ “நேர்மையானது,“ மற்றும் “நல்லொழுக்கம்“ ஆகியவை அடங்கும். “சுயாதீனம்“ என்ற வார்த்தையின் ஒத்த சொற்களில் “செயல்,“ “நிகழ்ச்சி,“ மற்றும் “பணி“ ஆகியவை அடங்கும். எனவே, “ஒழுக்க சுயாதீனம்“ என்பது நமக்காக நல்ல, நேர்மையான, நல்லொழுக்கமுள்ள மற்றும் உண்மையான வழிகளில் தேர்ந்தெடுத்து செயல்படும் திறன் மற்றும் சிலாக்கியம் என்று புரிந்து கொள்ளப்படலாம்.
தேவனின் சிருஷ்டிகளில் “செயல்படவும், செயல்படுத்தப்படும்படியாகவும் வேண்டியவை“ இரண்டும் அடங்கும்.” மேலும் ஒழுக்க சுயாதீனம் என்பது தெய்வீகமாக வடிவமைக்கப்பட்ட “சுதந்திரமான செயலின் வல்லமை“ ஆகும், இது தேவனின் பிள்ளைகளாகிய நம்மை செயல்படும் முகவர்களாக மாற அதிகாரம் அளிக்கிறது, வெறுமனே செயல்படுத்தப்பட வேண்டிய பொருட்களாக அல்ல.
பரலோக பிதாவின் பிள்ளைகள் “அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்ட சகல காரியங்களையும்“ செய்வார்களா என்பதை சோதிக்கக்கூடிய இடமாக பூமி உருவாக்கப்பட்டது. சிருஷ்டிப்பு மற்றும் நமது பூலோக வாழ்வின் முதன்மையான நோக்கம், கர்த்தர் நம்மை என்னவாக நாம் மாற அழைக்கிறாரோ, அப்படிச் செயல்படவும் ஆகவும் நமக்கு வாய்ப்பளிப்பதாகும்.
கர்த்தர் ஏனோக்கிற்கு அறிவுறுத்தினார்:
“இதோ, இவர்களே உன்னுடைய சகோதரர்கள்; அவர்கள் என் கைகளின் வேலைப்பாடுகள், அவர்களை நான் சிருஷ்டித்த நாளிலே அவர்களின் ஞானத்தை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; ஏதேன் தோட்டத்திலே அவனுடைய சுயாதீனத்தை நான் மனுஷனுக்குக் கொடுத்தேன்;
அவர்கள் ஒருவரிலொருவர் அன்பு கூரவேண்டும், அவர்களுடைய பிதாவான என்னை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என உன்னுடைய சகோதரர்களுக்கு நான் சொல்லி கட்டளையையும் கொடுத்தேன்.”
ஒருவரையொருவர் நேசிப்பதும், தேவனைத் தேர்ந்தெடுப்பதும்தான் சுயாதீனத்தைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை நோக்கங்கள். இந்த இரண்டு நோக்கங்களும், தேவனிடத்தில் நம் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் அன்புகூர வேண்டும், நம்மைப் போலவே பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும் என்ற முதல் மற்றும் இரண்டாவது பெரிய கட்டளைகளுடன் துல்லியமாக ஒத்துப்போகின்றன.
வெறும் அறிவுரையோ அல்லது ஆலோசனையோ அல்ல, நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்—நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் நேசிக்கவும், தேவனைத் தேர்ந்தெடுக்கவும் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் வேதங்களில், “ஒழுக்கம்“ என்ற மாற்றியமைக்கும் சொல் வெறும் உரிச்சொல் மட்டுமல்ல, நமது சுயாதீனம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய தெய்வீக உத்தரவும் கூட என்று நான் பரிந்துரைக்கலாமா?
ஒரு பிரபலமான பாடல் “சரியானதைத் தேர்ந்தெடு“ என்று தலைப்பிடப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யும் ஒழுக்க சுயாதீனத்தால் நாம் ஆசீர்வதிக்கப்படவில்லை. மாறாக, பிதாவின் திட்டத்தின்படி, நித்திய சத்தியத்தைத் தேடி அதன்படி செயல்பட நமக்கு ஒழுக்க சுயாதீனம் பெற்றுள்ளோம். “[நமக்கு நாமே] பிரதிநிதிகளாக,“ நாம் நல்ல காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும், “[நம்முடைய] சுயவிருப்பத்தில் அநேக காரியங்களைச் செய்து, மிகுந்த நீதியைக் கொண்டு வரவேண்டும்.“
ஒழுக்க சுயாதீனத்தின் நித்திய முக்கியத்துவம், அநித்தியத்திற்கு முந்தைய ஆலோசனைக் குழுவின் வேதப் பதிவில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. தம்முடைய பிள்ளைகளுக்கான பிதாவின் திட்டத்திற்கு எதிராக லூசிபர் கலகம் செய்து, சுதந்திரமான செயலின் வல்லமையை அழிக்க முயன்றான். குறிப்பிடத்தக்க வகையில், பிசாசின் எதிர்ப்பு நேரடியாக ஒழுக்க சுயாதீனத்தின் கொள்கையின் மீது கவனம் செலுத்தியது.
தேவன் விளக்கினார், “ஆகவே, … சாத்தான் எனக்கு விரோதமாக கலகம் செய்து, மனுஷனுக்குக் கொடுத்த சுயாதீனத்தை, அழிக்க அவன் வகை தேடினான், … அவன் புறம்பே தள்ளப்படச் செய்தேன்.”
நீதியில் செயல்படக்கூடிய “தங்களுக்கு பிரதிநிதிகளாக“ மாறும் திறனை தேவனுடைய பிள்ளைகளிடமிருந்து பறிப்பதே சத்துருவின் சுயநலத் திட்டமாகும். பரலோக பிதாவின் பிள்ளைகளை செயல்பட வைக்கக்கூடிய பொருட்களாக மட்டுமே மாற்றுவதே அவனது நோக்கமாக இருந்தது.
செய்வதும், ஆவதும்
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், நீதியான ஒழுக்க சுயாதீனப் பயன்பாட்டின் மூலம், எதையாவது அறியவும், ஏதாவது ஆகவும் நம்மை அழைக்கிறது என்று தலைவர் டாலின் எச். ஓக்ஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் சொன்னார்:
“பல வேதாகம மற்றும் தற்கால வேதங்கள் இறுதித் தீர்ப்பைப் பற்றிப் பேசுகின்றன, அதில் எல்லா மனிதர்களும் தங்கள் செயல்களுக்கு அல்லது கிரியைகளுக்கு ஏற்ப அல்லது தங்கள் இருதயங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வெகுமதி பெறுவார்கள். ஆனால் பிற வேதங்கள், நாம் அடைந்துள்ள நிலையைக் கொண்டு நாம் நியாயந்தீர்க்கப்படுவதைக் குறிப்பிடுவதன் மூலம் இதை விரிவுபடுத்துகின்றன.
“நாம் என்னவாகிவிட்டோம் என்பதன் அடிப்படையில் தீர்க்கதரிசி நேபி இறுதி நியாயத்தீர்ப்பை விவரிக்கிறான்: ‘அவர்கள் கிரியைகள் அசுத்தமானதாய் இருந்தால் அவர்களும் அசுத்தமாயிருக்க வேண்டும்; அவர்கள் அசுத்தமாயிருப்பின், தேவனுடைய ராஜ்யத்தில் அவர்கள் வாசமாயிருக்கமுடியாது.’ (1 நேபி 15:33; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது). மரோனி அறிவிக்கிறான், ‘அசுசியானவன் அசுசியாயும், நீதிமான் இன்னும் நீதிமானாயும் இருப்பான்’ [மார்மன் 9:14; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது].”
தலைவர் ஓக்ஸ் தொடர்ந்தார், “இறுதி நியாயத் தீர்ப்பு என்பது நாம் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் மொத்த மதிப்பீடு அல்ல, என்பதை இது போன்ற போதனைகளிலிருந்து நாம் முடிவெடுக்கிறோம். இது நாம் என்ன ஆனோம் என நமது செயல்கள் மற்றும் எண்ணங்களின் இறுதி விளைவை ஒப்புக்கொள்வதாகும்.”
இரட்சகரின் பாவநிவர்த்தி
நமது செயல்களும் ஆசைகளும் மட்டும் நம்மை இரட்சிக்காது, இரட்சிக்கவும் முடியாது. “நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பின்பு,“ இரட்சகரின் அநாதியும், நித்தியமுமான பாவநிவாரண பலியின் மூலம் கிடைக்கும் இரக்கம் மற்றும் கிருபையின் மூலம் மட்டுமே நாம் தேவனுடன் ஒப்புரவாகிறோம்.
ஆல்மா: “தம் ஜனத்தை மீட்க தேவகுமாரன் வருவாரென்றும், அவர்களுடைய பாவங்களை நிவர்த்தியாக்க அவர் பாடுபட்டு மரிப்பாரென்றும் அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுவாரென்றும் அதினிமித்தம் அவர்களுடைய கிரியைகளின்படி கடைசியும், நியாயத்தீர்ப்புமான நாளிலே நியாயந்தீர்க்கப்படும்படி அவருக்கு முன்பு சகல மனுஷரும் நிற்கும்பொருட்டு உயிர்த்தெழுதல் சம்பவிக்கும் என்றும் விசுவாசியுங்கள்” என்று அறிவித்தான்.
“கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக, சுவிசேஷத்தின் பிரமாணங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிவதன் மூலம், அனைத்து மனுக்குலமும் இரட்சிக்கப்படலாம் என்றும் நாம் நம்புகிறோம்.” நாம் உண்மையிலேயே “மறுபடியும் ஜெனித்தவர்கள்“, மீட்பர் மீது விசுவாசம் வைத்து, “உண்மையான இருதயத்தோடும்“ “உண்மையான நோக்கத்தோடும்“ மனந்திரும்பி, “முடிவுபரியந்தம் நிலைத்திருந்தால்“, நமது பாவங்களும் துன்மார்க்கச் செயல்களும் நமக்கு எதிரான சாட்சியமாக நிற்காது என்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தேவ பயம்
நித்திய நியாயாதிபதியின் நியாயவிசாரணைக் கூண்டு முன் நாம் தோன்றுவது உலகப்பிரகார நீதிமன்றத்தில் நடக்கும் நடவடிக்கையைப் போன்றதாக இருக்கும் என்று நம்மில் பலர் எதிர்பார்க்கலாம். ஒரு நீதிபதி தலைமை தாங்குவார். ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும். தீர்ப்பு வழங்கப்படும். இறுதி முடிவை அறியும் வரை நாம் நிச்சயமற்றவர்களாகவும் பயந்தும் இருப்போம். ஆனால் அத்தகைய வர்ணனை தவறானது என்று நான் நம்புகிறேன்.
நாம் அடிக்கடி அனுபவிக்கும் மரண பயங்களிலிருந்து வேறுபட்டது, ஆனால் அதனுடன் தொடர்புடையது, வேதங்கள் “தேவ பயம்“ அல்லது “கர்த்தருக்குப் பயப்படுதல்“ என்று விவரிக்கிறது. பீதியையும் பதட்டத்தையும் உருவாக்குகிற உலக பயத்தைப் போலல்லாமல், தேவ பயம் சமாதானம், உறுதி மற்றும் நம்பிக்கை ஆகியவைகளை நம்முடைய வாழ்வினுள் அழைத்துவருகிறது.
நீதியான பயம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது ஆழ்ந்த பயபக்தி மற்றும் பிரமிப்பு, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், இறுதித் தீர்ப்பை எதிர்பார்த்தல், அவரது கையிலுள்ள நீதி ஆகியவற்றை உள்ளடக்கியது. மீட்பரின் தெய்வீக இயல்பு மற்றும் ஊழியம் பற்றிய சரியான புரிதல், நமது விருப்பத்தை அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்துவதற்கான விருப்பம், மற்றும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நியாயத்தீர்ப்பு நாளில் தங்கள் சொந்த பூலோக ஆசைகள், எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அறிவு ஆகியவற்றிலிருந்து தேவ பயம் வளர்கிறது.
கர்த்தருக்குப் பயப்படுவது என்பது, நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவருடைய பிரசன்னத்திற்கு வருவதைப் பற்றிய தயக்கமான பயம் அல்ல. மாறாக, நம்மைப் பற்றிய விஷயங்களை அவை உண்மையில் இருப்பது போலவும், அவை உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் போலவும் இறுதியில் ஒப்புக்கொள்வதற்கான வாய்ப்பாகும்.
பூமியில் வாழ்ந்த, இப்போது வாழ்கிற, இன்னும் வாழப்போகும் ஒவ்வொரு நபரும் “[அவரது] செயல்கள் நல்லவையா அல்லது தீயவையா என்பதைப் பொறுத்து, அவரால் நியாயந்தீர்க்கப்படுவதற்காக, தேவனுடைய நியாயாசனத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.“
நமது ஆசைகள் நீதிக்காகவும், நமது நல்ல செயல்களுக்காகவும் இருந்திருந்தால்—அதாவது நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கடைப்பிடித்து, நமது பாவங்களுக்காக மனந்திரும்பியிருந்தால்—விசாரணைக் கூண்டு இன்பமானதாய் இருக்கும். ஏனோஸ் அறிவித்தபடி, நாம் “[மீட்பருக்கு] முன் நிற்போம்; பின்பு [நாம்] அவர் முகத்தை மகிழ்ச்சியுடன் காண்போம்.” கடைசி நாளில் நாம் “நீதிக்கடுத்த பிரதிபலனைப் பெறுவோம்.“
மாறாக, நமது ஆசைகள் தீமையாகவும், நமது செயல்கள் தீயதாகவும் இருந்தால், நியாயாசனம் அச்சத்திற்குக் காரணமாக இருக்கும். நமக்கு “பூரண அறிவு”, “தெள்ளத்தெளிவாய் நினைவுகூருதல்”, மற்றும் “[நம்முடைய] சொந்த குற்றத்தின் தெளிந்த உணர்ச்சி” இருக்கும். தேவனைப் பார்க்க தைரியமில்லாதவர்களாய் இருப்போம், மலைகளும் கற்பாறைகளும், அவர் பிரசன்னத்திலிருந்து நம்மை மறைத்துப்போடும்படிக்கு நம்மேல் விழ நாம் கட்டளையிட இயல்வது, நமக்கு மிகவும் மகிழ்ச்சி தரும். கடைசி நாளில் நாம் “பொல்லாப்பின் [நமது] பலனைப் பெறுவோம்.“
இறுதியில், நாமே நமது நியாயாதிபதிகள். எங்கு செல்ல வேண்டும் என்று யாரும் நமக்குச் சொல்லத் தேவையில்லை. கர்த்தருடைய பிரசன்னத்தில், நாம் அநித்தியத்தில் என்னவாகத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்வோம், மேலும் நித்தியத்தில் நாம் எங்கு இருக்க வேண்டும் என்பதை நாமே அறிவோம்.
வாக்களிப்பும் சாட்சியும்
இறுதித் தீர்ப்பு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது மரோனிக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட ஆசீர்வாதம் அல்ல.
இரட்சகரின் ஒவ்வொரு அர்ப்பணிப்புள்ள சீஷனுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று ஆல்மா விவரித்தான். அவர் சொன்னார்:
திரும்பச் சேர்க்கப்படுதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமென்னவெனில், பொல்லாப்புக்கு பொல்லாப்பையும், மாம்ச சிந்தனைக்கு மாம்ச சிந்தனையையும், பேய்த்தனத்திற்கு பேய்த்தனத்தையும், நன்மைக்கு நன்மையையும், நேர்மையுள்ளதற்கு நேர்மையானதையும், நீதியுள்ளதற்கு நீதியானதையும், இரக்கமுள்ளதற்கு இரக்கமானதையும் திரும்பிக்கொண்டு வருதலே ஆகும்.
“… நியாயமாயிரு, நீதியாய் நியாயந்தீர்த்து, இடைவிடாமல் நன்மை செய்துகொண்டு இரு; இவை அனைத்தையும் நீ செய்வாயாகில், உன் பலனைப் பெற்றுக் கொள்வாய்; ஆம், உன்னிடத்தில் இரக்கம் மறுபடியும் வந்து சேரும்; உன்னிடத்தில் நியாயம் மறுபடியும் வந்து சேரும்; உன்னிடத்தில் மறுபடியும் நீதியான நியாயத்தீர்ப்பு வந்து சேரும்; நீ நன்மையால் மறுபடியும் பலனளிக்கப்படுவாய். …”
இயேசு கிறிஸ்து நமது ஜீவனுள்ள இரட்சகர் என்பதற்கு நான் மகிழ்ச்சியுடன் சாட்சி கூறுகிறேன். ஆல்மாவின் வாக்குறுதி உண்மையானது மற்றும் உங்களுக்கும் எனக்கும் பொருந்தும்—இன்று, நாளை, மற்றும் நித்தியத்திற்கும். அப்படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.