பொது மாநாடு
இச்சையடக்கம் எனும் நற்பண்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளோம்
அக்டோபர் 2025 பொது மாநாடு


15:8

இச்சையடக்கம் எனும் நற்பண்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளோம்

கிறிஸ்துவைப் போன்ற நற்பண்பான இச்சையடக்கத்தால் நம் மனதையும் இருதயத்தையும் அலங்கரிக்க நான் நம் அனைவருக்கும் ஒரு மனமார்ந்த அழைப்பை விடுக்கிறேன்.

மே 2021 இல், சால்ட் லேக் ஆலயத்தின் புதுப்பித்தல் பணிகளைப் பார்வையிட்டபோது, ​​தலைவர் ரசல் எம். நெல்சன், குறைவான ஆதாரங்களுடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், காலத்தின் சோதனையைக் கடந்து நிற்கும் அந்த பரிசுத்தமான கட்டிடத்தை, ஆவிக்குரிய தலைசிறந்த படைப்பை கட்டிய முன்னோடிகளின் முயற்சிகளைக் கண்டு வியந்தார். இருப்பினும், காலப்போக்கில் ஆலயத்தின் அசல் அஸ்திவாரக் கற்களில் இடைவெளிகளையும், கட்டுமான வேலைகளில் உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்திய அரிப்பின் விளைவுகளையும் அவர் கவனித்தார், இவை கட்டமைப்பை வலுவூட்ட வேண்டிய அவசியத்தின் தெளிவான அறிகுறிகளாகும்.

சால்ட் லேக் ஆலயத்துக்கு வெளியே தலைவர் நெல்சன்.

இயற்கையின் சக்திகளைத் தாங்கும் பொருட்டு, ஆலயத்தின் அஸ்திவாரத்தை வலுப்படுத்த முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்துவது அவசியம் என்பதைப் போலவே, இயேசு கிறிஸ்துவில் நமது சொந்த ஆவிக்குரிய அடித்தளத்தை வலுப்படுத்த, நாம் அசாதாரணமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்—ஒருவேளை நாம் இதற்கு முன்பு ஒருபோதும் எடுக்காத நடவடிக்கைகளைக் கூட என அப்போது நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி நமக்குக் கற்பித்தார். அவர் தனிப்பட்ட சிந்தனைக்காக இரண்டு ஆழமான கேள்விகளை நம்மிடம் விட்டுச் சென்றார்: “உங்கள் அடித்தளம் எவ்வளவு உறுதியானது? சுவிசேஷத்தின் உங்களுடைய சாட்சியத்துக்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் என்ன வலுப்படுத்துதல்கள் தேவையாயிருக்கிறது?”

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், நமது ஆத்துமாக்களில் ஆவிக்குரிய அரிப்பைத் தடுக்க தெய்வீகமாக உணர்த்தப்பட்ட மற்றும் பயனுள்ள வழிமுறைகளை நமக்கு வழங்குகிறது, நமது அடித்தளத்தை வல்லமைவாய்ந்த முறையில் வலுப்படுத்துகிறது மற்றும் நமது சாட்சியத்திலும், சுவிசேஷத்தின் பரிசுத்த சத்தியங்களைப் பற்றிய நமது புரிதலிலும் நமது விசுவாசத்திலும் உறுதியற்ற தன்மையிலும் ஐயப்பாடுகளைத் தவிர்க்க உதவுகிறது. வெறும் வெளிப்புற மாற்றத்திற்காக அல்ல, மாறாக தனது சீஷத்துவத்தில் அசைக்க முடியாதபடி—பரலோகத்தின் தூண்களைப் போல உறுதியாக நிற்க, கர்த்தருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள ஆர்வத்துடன் முயன்ற ஒரு நீதிமானாகிய, ஜோசப் நைட்டுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் வழங்கப்பட்ட ஒரு வெளிப்படுத்தலான, இந்த நோக்கத்தை அடைவதற்கான குறிப்பாக பொருத்தமான கொள்கை, கோட்பாடும் உடன்படிக்கைகளும், பாகம் 12 இல் காணப்படுகிறது.” கர்த்தர் அறிவித்தார்:

“இதோ, உன்னிடமும், இந்த பணியை கொண்டுவந்து, ஸ்தாபிக்க வாஞ்சிக்கிற அனைவரிடமும் நான் பேசுகிறேன்;

“தாழ்மையாயும் அன்பில் பூரணப்பட்டுமிருந்து, விசுவாசம், நம்பிக்கை மற்றும் தயாளமுள்ளவர்களாயிருந்து, அவனது பொறுப்பில் விடப்பட்ட எக்காரியமாயிருந்தாலும், எல்லாவற்றிலும் இச்சையடக்கமுள்ளவர்களைத் தவிர யாராலும் இந்த பணிக்கு உதவமுடியாது.”

இந்த பரிசுத்த வெளிப்படுத்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள இரட்சகரின் வழிகாட்டுதல், இயேசு கிறிஸ்துவில் உறுதியான அடித்தளத்திற்கு இச்சையடக்கம் ஒரு அத்தியாவசிய வலுவூட்டல் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இது சேவை செய்ய அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, கர்த்தருடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து, அவரை விசுவாசத்துடன் பின்பற்ற ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் இன்றியமையாத நற்பண்புகளில் ஒன்றாகும். இந்த வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கிறிஸ்துவைப் போன்ற பிற பண்புகளான தாழ்மை, விசுவாசம், நம்பிக்கை, தயாளம் மற்றும் அவரிடமிருந்து வரும் பரிசுத்தமான அன்பு ஆகியவற்றை இச்சையடக்கம் ஒருங்கிணைத்து பலப்படுத்துகிறது. மேலும், இயேசு கிறிஸ்துவிலான நமது அடித்தளத்தை பலவீனப்படுத்தக்கூடிய உலக செல்வாக்குகளால் ஏற்படும் நுட்பமான ஆனாலும் தொடர்ந்த ஆவிக்குரிய அரிப்புக்கு எதிராக நமது ஆத்துமாக்களைப் பாதுகாக்க இச்சையடக்கத்தை வளர்ப்பது ஒரு அர்த்தமுள்ள வழியாகும்.

கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களை அலங்கரிக்கும் குணங்களில், இச்சையடக்கம் என்பது இரட்சகரின் பிரதிபலிப்பாகத் தனித்து நிற்கிறது, இது தெய்வீக வழிகாட்டுதலை விரும்புகிற அனைவருக்கும் கிடைக்கிற ஆவியின் விலைமதிப்பற்ற கனியாகும். இது ஆசைகளையும் உணர்ச்சிகளையும் ஞானத்தாலும் அமைதியாலும் வடிவமைக்கிற இருதயத்திற்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நற்பண்பாகும். வேதங்களில், நமது ஆவிக்குரிய பயணத்தின் முன்னேற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாக இச்சையடக்கம் முன்வைக்கப்படுகிறது, நமது உணர்வுகள், வார்த்தைகள் மற்றும் செயல்களைச் செம்மைப்படுத்துகையில், பொறுமை, தேவதன்மை மற்றும் மனதுருக்கத்தை நோக்கி நம்மை வழிநடத்துகிறது.

கிறிஸ்துவைப் போன்ற இந்தப் பண்பை வளர்த்துக் கொள்ள பாடுபடும் கிறிஸ்துவின் சீஷர்கள், அதிகமாக மனத்தாழ்மையும் அன்பும் நிறைந்தவர்களாக மாறுகிறார்கள். அவர்களுக்குள் ஒரு அமைதியான பலம் எழுகிறது, மேலும் அவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும், பொறுமையை வளர்க்கவும், துன்பக் காற்று கடுமையாக வீசினாலும் கூட, மற்றவர்களை சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்த, சிறந்த திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செயல்படாமல், சாந்தத்தாலும் பரிசுத்த ஆவியின் மென்மையான செல்வாக்காலும் வழிநடத்தப்பட்டு, ஆவிக்குரிய ஞானத்துடன் செயல்படத் தேர்வு செய்கிறார்கள். இந்த வழியில், அவர்கள் ஆவிக்குரிய அரிப்புக்கு ஆளாகாமல் இருப்பார்கள், ஏனென்றால், அவரைப் பற்றிய அவர்களுடைய சாட்சியத்தை அசைக்கக்கூடிய சோதனைகளின் மத்தியிலும் அப்போஸ்தலனாகிய பவுல் கற்பித்தபடி, அவர்களைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில், இரட்சகரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் அவருடைய சித்தத்தைச் செய்யவும் விரும்புவோரின் தகுதிகள் குறித்த பரிசுத்த ஆலோசனையை பவுல் தெரிவித்தான். அவர்கள் அந்நியரை உபசரிக்கிறவர்களாகவும், தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், நீதிமான்களாகவும், பரிசுத்தவான்களாகவும் இருக்க வேண்டும் என்று அவன் கூறினான்—இந்தப் பண்புகள் இச்சையடக்கத்தின் செல்வாக்கைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.

எனினும் அவர்கள், “தன் இஷ்டப்படி செய்யாதவர்களாயும், முற்கோபமில்லாதவர்களாயும், அடியாதவர்களாயுமாக” இருக்க வேண்டும் என பவுல் எச்சரித்தான். இத்தகைய பண்புகள் இரட்சகரின் மனதிற்கு முரணானவை மற்றும் உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கின்றன. வேதக் கருத்தில், “தன் இஷ்டப்படி செய்யாதவர்“ என்பது ஆணவத்துடனும் பெருமையுடனும் செயல்பட மறுப்பவர்; “முற்கோபமில்லாதவர்“ என்பது பொறுமையிழந்து எரிச்சலடையும் இயல்பான தூண்டுதலைத் தவிர்ப்பவர்; மேலும் “அடியாதவர்“ என்பது வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சர்ச்சைக்குரிய, ஆக்ரோஷமான மற்றும் கடுமையான நடத்தையை நிராகரிப்பவரைக் குறிக்கிறது. விசுவாசத்துடனும் பணிவுடனும் நமது நடத்தையை மாற்றிக்கொள்ள நாம் பாடுபடும்போது, ​​அவருடைய கிருபையின் உறுதியான பாறையில் உறுதியாக நங்கூரமிடப்பட்டு, அவருடைய பரிசுத்த கரங்களில் தூய்மையான மற்றும் மெருகூட்டப்பட்ட கருவிகளாக மாறலாம்.

அன்னாளும் சாமுவேலும்

இச்சையடக்கம் என்ற நற்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சிந்திக்கும்போது, ​​தீர்க்கதரிசி சாமுவேலின் தாயான அன்னாளின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன—விசேஷித்த விசுவாசமுள்ள பெண், பெரும் சோதனைகளுக்குப் பிறகும், கர்த்தருக்கு நன்றியுணர்வின் பாடலைப் பாடினாள். அவள் சொன்னாள், “இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?” அவளுடைய பாடல் ஒரு ஜெபத்தை விட சிறந்தது—அது மனத்தாழ்மை, சுய கட்டுப்பாடு மற்றும் மிதமான தன்மையுடன் செயல்பட சுய விலாசமிட்ட அழைப்பு. உண்மையான ஆவிக்குரிய வலிமை உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளிலோ அல்லது ஆணவமான வார்த்தைகளிலோ வெளிப்படுத்தப்படுவதில்லை, மாறாக கர்த்தருடைய ஞானத்துடன் இணைந்த மிதமான, சிந்தனைமிக்க மனப்பான்மைகளில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை அன்னாள் நமக்கு நினைவூட்டுகிறாள்.

பொதுவாக, உலகம் ஆக்ரோஷம், ஆணவம், பொறுமையின்மை மற்றும் அதிகப்படியான தன்மை ஆகியவற்றால் பிறந்த நடத்தைகளை உயர்த்திப்பிடிக்கிறது, பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் மற்றும் அங்கீகாரம் மற்றும் பிரபலமானவைகள் மீது சாய்வதன் மூலம் அத்தகைய அணுகுமுறைகளை நியாயப்படுத்துகிறது. நாம் இச்சையடக்கத்தின் நற்பண்பிலிருந்து நம் பார்வையைத் திருப்பி, நமது நடத்தையிலும் பேச்சிலும் பரிசுத்த ஆவியின் மென்மையான மற்றும் மிதமான செல்வாக்கைப் புறக்கணிக்கும்போது, ​​நாம் எளிதில் எதிரியின் வலையில் விழுந்துவிடுகிறோம், இது தவிர்க்க முடியாமல் நம்மை வார்த்தைகளைப் பேசவும், நமது சமூக, குடும்ப, அல்லது சபை உறவுகளில் கூட நாம் மிகவும் வருத்தப்பட வேண்டிய மனப்பான்மைகளை ஏற்றுக்கொள்ளவும் வழிவகுக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், குறிப்பாக சவால் நிறைந்த காலங்களில் இந்த நற்பண்பைப் பயன்படுத்த நம்மை அழைக்கிறது, ஏனெனில் இந்த சந்தர்ப்பங்களில்தான் தனிநபர்களின் உண்மையான குணம் வெளிப்படுகிறது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒருமுறை கூறியது போல், “ஒரு மனிதனின் தார்மீக வலிமையானது அவர் சொகுசான மற்றும் வசதியான தருணங்களில் எங்கு நிற்கிறார் என்பதல்ல, மாறாக சவால் மற்றும் சர்ச்சையின் நேரங்களில் அவர் எங்கு நிற்கிறார் என்பதில் இருக்கிறது.”

உடன்படிக்கை மக்களாக, நாம் கர்த்தருக்கு அளித்த பரிசுத்த வாக்குறுதிகளில் உறுதியாக வேரூன்றியவர்களாக, அவர் தம்முடைய பரிபூரண முன்மாதிரியின் மூலம் நிறுவிய மாதிரியை கவனமாகப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம். பதிலாக அவர் வாக்களித்திருக்கிறார், “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இதுவே என் கோட்பாடு. இதின்மேல் கட்டுகிற எவனும் என் கன்மலையின்மேல் கட்டுகிறான். பாதாளத்தின் வாசல்கள் அவனை மேற்கொள்ளாது.”

இரட்சகர்

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக – ஹோவார்ட் லையன், நன்றி ஹெவன் லைட்

பூமியில் இரட்சகரின் ஊழியம், அவரது குணத்தின் அனைத்து அம்சங்களிலும் இச்சையடக்கத்தின் நற்பண்பால் குறிக்கப்பட்டது. அவருடைய பரிபூரண முன்மாதிரியின் மூலம், “உபத்திரவங்களில் பொறுமையாயிரு, தூஷிப்பவர்களுக்கு எதிராக தூஷிக்காதே“ என்று அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். வாக்குவாதங்கள் மற்றும் பிணக்குகள் காரணமாக நாம் கோபத்திற்கு அடிபணியக்கூடாது என்று அவர் கற்பித்தபடி, அவர் அறிவித்தார்: “நீங்கள் மனந்திரும்பி ஒரு சிறுபிள்ளையைப் போலாக வேண்டும்.” இருதயத்தின் முழு நோக்கத்தோடு அவரிடம் வர விரும்பும் அனைவரும், தாங்கள் கோபமாக இருப்பவர்களுடனோ அல்லது தங்களுக்கு எதிராக ஏதாவது நினைத்திருப்பவர்களுடனோ ஒப்புரவாக வேண்டும் என்றும் அவர் போதித்தார். இச்சையடக்க மனப்பான்மையுடனும், இரக்கமுள்ள இருதயத்துடனும், நாம் கடுமையாகவோ, தயவின்மையாகவோ, அவமரியாதையாகவோ அல்லது புறக்கணிப்போடு நடத்தப்பட்டால், அவருடைய தயவு நம்மை விட்டு விலகாது என்றும், அவருடைய சமாதான உடன்படிக்கை நம் வாழ்க்கையிலிருந்து அகற்றப்படாது என்றும் அவர் நமக்கு உறுதியளித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மெக்சிகோ நகரத்தில் உள்ள சில விசுவாசமிக்க சபை உறுப்பினர்களைச் சந்திக்கும் பரிசுத்த சிலாக்கியம் எனக்கும் என் மனைவிக்கும் கிடைத்தது. அவர்களில் பலர், தனிப்பட்ட முறையிலோ அல்லது தங்கள் அன்புக்குரியவர்கள் மூலமாகவோ, கடத்தல்கள், கொலைகள் மற்றும் பிற இருதயத்தை நொறுக்கும் துயரங்கள் உள்ளிட்ட விவரிக்க முடியாத சோதனைகளை சகித்தனர்.

அந்தப் பரிசுத்தவான்களின் முகங்களைப் பார்த்தபோது, ​​கோபமோ, வெறுப்போ, பழிவாங்கும் எண்ணத்தையோ நாங்கள் பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, நாங்கள் ஒரு அமைதியான தாழ்மையைக் கண்டோம். அவர்களின் முகரூபங்கள் துக்கத்தால் வேறுபட்டிருந்தாலும், குணமடைதலுக்கும் ஆறுதலுக்கும் ஒரு உண்மையான ஏக்கத்தை வெளிப்படுத்தின. தங்கள் பாடுகள் தங்கள் விசுவாசத்தில் ஐயப்பாடுகளாக மாறவோ அல்லது சுவிசேஷம் குறித்த சாட்சியத்தில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தவோ அனுமதிக்கக்கூடாது என்பதைத் தேர்ந்தெடுத்து துன்பத்தால் தங்கள் இருதயங்கள் உடைந்திருந்தாலும், இந்தப் பரிசுத்தவான்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் முன்னேறிச் சென்றனர்.

அந்தப் பரிசுத்தக் கூடுகையின் முடிவில், நாங்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்தினோம். ஒவ்வொரு கைகுலுக்கலும், ஒவ்வொரு அரவணைப்பும், கர்த்தரின் உதவியுடன், வாழ்க்கையின் விரக்திகள் மற்றும் சவால்களுக்கு இச்சையடக்கத்துடன் பதிலளிக்க நாம் தேர்வு செய்யலாம் என்பதற்கு அமைதியான சாட்சியமாக மாறியது. அவர்களின் அமைதியான மற்றும் அடக்கமான முன்மாதிரி, எல்லாவற்றிலும் இச்சையடக்கத்துடன் இரட்சகரின் பாதையில் நடக்க ஒரு மென்மையான அழைப்பாக செயல்பட்டது. நாங்கள் தேவதூதர்களின் சமூகத்தில் இருப்பது போல் உணர்ந்தோம்.

எல்லாவற்றிலும் மகத்துவமானவரான இயேசு கிறிஸ்து, ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் வரும் வரை நமக்காகப் பாடுபட்டார், ஆனாலும் அவர் ஒருபோதும் கோபம் தம்முடைய இருதயத்தைப் பற்றவைக்க அனுமதிக்கவில்லை, அத்தகைய பாடுகளுக்கு மத்தியிலும் கூட, ஆக்ரோஷமான, புண்படுத்தும் அல்லது அவதூறான வார்த்தைகள் அவரது உதடுகளிலிருந்து வெளியேறவில்லை. பரிபூரணமான இச்சையடக்கத்துடனும், ஒப்பிடமுடியாத சாந்தத்துடனும், அவர் தன்னைப் பற்றி நினைக்காமல், மாறாக கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால தேவனின் ஒவ்வொரு பிள்ளையையும் பற்றி நினைத்தார். அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்துவின் உன்னதமான மனப்பான்மையைக் குறித்து சாட்சியமளித்தான்: “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” அவருடைய மிகப்பெரிய வேதனையின் மத்தியிலும், இரட்சகர் பரிபூரணமான மற்றும் தெய்வீக இச்சையடக்கத்தை வெளிப்படுத்தினார். அவர் அறிவித்தார், “ஆயினும் பிதாவுக்கே மகிமையுண்டாவதாக, மனுபுத்திரருக்காக நான் பங்கெடுத்து எனது ஆயத்தங்களை முடித்தேன்.”

என் அன்பான சகோதர சகோதரிகளே, நமது அன்பான தலைவர் ரசல் எம். நெல்சனின் தீர்க்கதரிசன அழைப்புக்கு ஒரு பரிசுத்தமான பதிலாக, கிறிஸ்துவைப் போன்ற இச்சையடக்கத்தின் நற்பண்பால் நம் மனதையும் இதயத்தையும் அலங்கரிக்க நம் அனைவருக்கும் ஒரு மனமார்ந்த அழைப்பை நான் வழங்குகிறேன். நமது செயல்களிலும் வார்த்தைகளிலும் இச்சையடக்கத்தை இணைக்க விசுவாசத்துடனும் கருத்துடனும் நாம் பாடுபடும்போது, ​​நமது மீட்பரின் உறுதியான அடித்தளத்தில் நமது வாழ்க்கையை மேலும் பாதுகாப்பாக வலுப்படுத்தி நங்கூரமிடுவோம் என்று நான் சாட்சியமளிக்கிறேன்.

தொடர்ந்து இச்சையடக்கத்தைப் பின்பற்றுவது நம் ஆத்துமாவைச் சுத்திகரித்து, இரட்சகருக்கு முன்பாக நம் இருதயத்தைப் பரிசுத்தப்படுத்துகிறது, மெதுவாக நம்மை அவரிடம் நெருக்கமாக இழுத்து, அவருடைய இரண்டாம் வருகையில் நாம் அவரைச் சந்திக்கும் அந்த மகிமையான நாளுக்காக நம்பிக்கையுடனும் சமாதானத்துடனும் நம்மைத் தயார்படுத்துகிறது என்று நான் பயபக்தியுடன் சாட்சியமளிக்கிறேன். இந்த பரிசுத்த வார்த்தைகளை, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பகிர்கிறேன், ஆமென்.