2020–2024
உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுங்கள்
அக்டோபர் 2024 பொது மாநாடு


12:3

உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுங்கள்

இயேசு கிறிஸ்து தேவனுடன் தொடர்புகொள்வதற்கும் அவரால் பெலப்படுத்தப்படுவதற்கும் அமைதியான நேரத்தை நாடும்போது, நாமும் அவ்வாறே செய்வது ஞானமாக இருக்கும்.

பல வருடங்களுக்கு முன்பு, நானும் என் மனைவியும் ஜப்பானிலுள்ள டோக்கியோவில் ஊழியத் தலைவர்களாக சேவை செய்தோம். அப்போதைய மூப்பர் ரசல் எம். நெல்சன் எங்களது ஊழியத்திற்கு விஜயம் செய்தபோது, ஊழியக்காரர்களில் ஒருவர், அவர்கள் சொல்வதைக் கேட்க முடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள் என்று ஒரு நபர் அவர்களிடம் சொல்லும்போது எவ்வாறு சிறப்பாக பதிலளிப்பது என்று அவரிடம் கேட்டார். கொஞ்சம் தயக்கத்துடன், மூப்பர் நெல்சன் சொன்னார், “அந்த நாளில் மதிய உணவு சாப்பிட அவர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்களா என்று நான் கேட்பேன்; பின்னர் அவர்களுக்கு ஒரு சரீரம் மற்றும் ஆவி இரண்டும் உள்ளன என்றும், போஷிக்கப்படாவிட்டால் அவர்களின் சரீரம் மரித்துப்போவதைப் போலவே, தேவனுடைய நல்ல வசனத்தினால் போஷிக்கப்படாவிட்டால் அவர்களின் ஆவியும் மரித்துவிடும் என்று அவர்களுக்குப் போதிப்பேன்.”

“பிஸி“ என்பதற்கான ஜப்பானிய சொல் இசோகாஷி, இரண்டு குறியீடுகளைக் கொண்ட ஒரு எழுத்துக்களால் ஆனது என்பது சுவாரஸ்யமானது(忙). இடதுபுறத்தில் இருப்பது “இருதயம்” அல்லது “ஆவி” என்றும், வலதுபுறத்தில் இருப்பது “மரணம்” என்றும் அர்த்தம்—தலைவர் நெல்சன் போதித்தபடி, நமது ஆவிகளை போஷிக்க மிகவும் பிஸியாக இருப்பது ஆவிக்குரிய பிரகாரமாக மரிக்க நம்மை வழிநடத்தக்கூடும் என்று பரிந்துரைக்கிறது.

கவனச்சிதறல்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த இந்த வேகமான உலகில், அவருக்காக தரமான நேரத்தை உருவாக்குவது நமது நாளின் முக்கிய சவால்களில் ஒன்றாக இருக்கும் என்பதை—கர்த்தர் அறிந்திருந்தார். ஏசாயா தீர்க்கதரிசி மூலம் பேசுகையில், அவர் இந்த ஆலோசனை மற்றும் எச்சரிக்கையின் வார்த்தைகளை வழங்கினார், இது நாம் வாழும் கொந்தளிப்பான நாட்களுடன் ஒப்பிடப்படலாம்:

“நீங்கள் மனந்திரும்பிஅமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும்நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;

அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள்.

வேறு வார்த்தைகளில் எனில், நம்முடைய இரட்சிப்பு அடிக்கடி அவரிடம் திரும்பி வருவதையும், உலகின் கவலைகளிலிருந்து இளைப்பாறுவதையும் சார்ந்திருந்தாலும், நாம் அவ்வாறு செய்வதில்லை. தியானத்திலும் நினைத்துப் பார்ப்பதிலும் கர்த்தருடன் உட்கார்ந்து அமைதியான காலங்களில் வளர்ந்த ஒரு பலத்திலிருந்து நமது நம்பிக்கை வந்தாலும், நாம் அவ்வாறு செய்வதில்லை. ஏன் செய்வதில்லை? ஏனென்றால் நாம் சொல்கிறோம், இல்லை, நாங்கள் மற்ற விஷயங்களில் பிஸியாக இருக்கிறோம்—எங்கள் குதிரைகளின் மேல் ஏறி ஓடுகிறோம், என்பதாகச் சொல்லலாம். எனவே, நாம் தேவனிடமிருந்து மேலும் மேலும் விலகிச் செல்வோம்; வேக வேகமாகச் செல்ல வலியுறுத்துவோம்; நாம் எவ்வளவு வேகமாகச் செல்கிறோமோ, அவ்வளவு வேகமாக சாத்தான் பின்தொடருவான்.

ஒருவேளை இதனால்தான் தலைவர் நெல்சன் ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையில் கர்த்தருக்காக நேரம் ஒதுக்க நம்மிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சினார். “அமைதியான நேரம் என்பது பரிசுத்தமான நேரம், இது தனிப்பட்ட வெளிப்பாட்டை எளிதாக்கும் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நேரம்,” என்று அவர் நமக்கு நினைவூட்டுகிறார். ஆனால் கர்த்தரின் இந்த அமர்ந்த குரலைக் கேட்க, “நீங்களும் அமைதியாய் இருக்க வேண்டும்,” என்று அவர் ஆலோசனையளித்தார்.

எவ்வாறாயினும், அமைதியாய் இருப்பதற்கு, கர்த்தருக்காக நேரம் ஒதுக்குவதை விட அதிகம் தேவைப்படுகிறது—அதற்கு நமது சந்தேகம் மற்றும் பயம் நிறைந்த எண்ணங்களை விட்டுவிட்டு, நமது இருதயங்களையும் மனதையும் அவர் மீது ஒருமுகப்படுத்த வேண்டும். மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தபடி, “அமைதியாய் இருப்பது” என்ற கர்த்தரின் அறிவுரை வெறுமனே பேசாமல் இருப்பதையோ அல்லது அசையாமல் இருப்பதையோ விட அதிகமானதை உள்ளடக்கியது. “அமைதியாய் இருப்பது“ என்றால், “இரட்சகர் மீது தவறாமல் கவனம் செலுத்த நமக்கு நினைவூட்டும் ஒரு வழியாக இருக்கலாம்,“ என்று அவர் பரிந்துரைத்தார்.

அமைதியாய் இருப்பது விசுவாசத்தின் செயலாயிருக்கிறது, அதற்கு முயற்சி தேவை. Lectures on Faithகூறுகிறது, “ஒரு மனிதன் விசுவாசத்தினால் வேலை செய்யும்போது அவன் மன உழைப்பால் செயல்படுகிறான். தலைவர் நெல்சன் அறிவித்தார், “நமது கவனம் இரட்சகர் மற்றும் அவரது சுவிசேஷத்தில் நிலைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு சிந்தனையிலும் அவரை நோக்கிப் பார்க்க முயல்வது மனதளவில் கடினமானது. ஆனால் நாம் அதைச் செய்யும்போது, நமது சந்தேகங்களும் பயங்களும் பறந்து போகும்.” . நம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றி தலைவர் டேவிட் ஓ. மெக்கே சொன்னார்: “அர்ப்பணிப்பின் கொள்கையான தியானத்தின் மதிப்புக்கு, நாம் மிகக் குறைந்த கவனம் செலுத்துகிறோம் என்று நான் நினைக்கிறேன், “தியானம் … கர்த்தரின் பிரசன்னத்திற்குள் நாம் கடந்து செல்லும் மிகவும் பரிசுத்தமான கதவுகளில் ஒன்று.”

ஜப்பானிய மொழியில் ஒரு வார்த்தை உள்ளது, மோய், என்னைப் பொறுத்தவரை, இந்த அதிக விசுவாசம் நிறைந்த, அமைதியாய் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றிய சிந்தனைமிக்க உணர்வை விவரிக்கிறது. இது இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ளது (無為). இடதுபுறத்தில் உள்ள எழுத்து “ஒன்றுமில்லை“ அல்லது “ஒன்றுமில்லாமை“ என்றும், வலதுபுறத்தில் உள்ள எழுத்து “செய்வது“ என்றும் பொருள். இவை இரண்டும் சேர்ந்து “செய்யாமை“ என்று பொருள்படும். சொல் அர்த்தமாக எடுத்துக் கொண்டால், இந்த வார்த்தையை “ஒன்றும் செய்யாமல்“ என்று தவறாகப் புரிந்து கொள்ளலாம், அவ்வாறே “அமைதியாய் இருப்பது“ என்பது “பேசாமல் அல்லது அசையாமல் இருப்பது“ என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இருப்பினும், “அமைதியாய் இருப்பது“ என்ற சொற்றொடரைப் போலவே, இது உயர்ந்த பொருளைக் கொண்டுள்ளது; என்னைப் பொறுத்தவரை இது வேகத்தைக் குறைக்கவும், அதிக ஆவிக்குரிய விழிப்புணர்வுடன் வாழவுமான ஒரு நினைவூட்டலாயிருக்கிறது.

மூப்பர் டகாஷி வாடாவுடன் ஆசியா வடக்குப் பிரதேச தலைமையில் சேவை செய்தபோது, அவரது மனைவி சகோதரி நவோமி வாடா, ஒரு திறமையான ஜப்பானிய எழுத்துக்கலை கலைஞர் என்பதை நான் அறிந்துகொண்டேன். .மோய் என்ற வார்த்தைக்கு ஜப்பானிய எழுத்துக்களை எனக்காக வரைய முடியுமா என்று சகோதரி வாடாவிடம் கேட்டேன். அமைதியாய் இருக்கவும், இரட்சகரில் கவனம் செலுத்தவும் ஒரு நினைவூட்டலாக எழுத்துக்கலையை என் சுவரில் தொங்கவிட விரும்பினேன். எளிமையானதாகத் தோன்றும் இந்த வேண்டுகோளை அவர் உடனடியாக ஏற்றுக்கொள்ளாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த நாள், அவளுடைய தயக்கத்தை நான் தவறாகப் புரிந்துகொண்டேன் என்பதை அறிந்து, அந்த எழுத்துக்களை எழுதுவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி தேவைப்படும் என்று மூப்பர் வாடா விளக்கினார். தனது ஆத்துமாவில் ஆழமாக அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வரை, அவர் கருத்தையும் எழுத்துக்களையும் சிந்தித்து தியானிக்க வேண்டும். பின்பு தனது தூரிகையின் ஒவ்வொரு அசைவிலும் இந்த இதயப்பூர்வமான எண்ணங்களைவெளிப்படுத்த முடியும். இவ்வளவு தேவைப்படும் ஒரு காரியத்தை எவ்வளவு சாதாரணமாய் அவரை செய்யச் சொன்னேனே என்று எனக்கு வெட்கமாக இருந்தது. எனது அறியாமைக்காக அவரிடம் என் மன்னிப்பைத் தெரிவிக்கும்படியும், எனது கோரிக்கையை நான் திரும்பப் பெறுவதை அவருக்குத் தெரியப்படுத்தும்படியும் அவரிடம் கேட்டேன்.

பிஷப் பட்ஜின் அலுவலகத்தில் ஜப்பானிய எழுத்துக்கள்.

ஜப்பானை விட்டுக் கிளம்பும்போது, சகோதரி வாடா, கேட்காமலேயே, மோய் என்ற வார்த்தைக்கு ஜப்பானிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இந்த அழகான எழுத்துக்கலைப் படைப்பை எனக்குப் பரிசளித்தபோது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தையும் நன்றியையும் நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அது இப்போது என் அலுவலகத்தின் சுவரில் எடுப்பாய் தொங்குகிறது, ஒவ்வொரு நாளும் கர்த்தரைத் தேடவும், என் முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும் அவருக்கு சேவை செய்வதையும் எனக்கு நினைவூட்டுகிறது. இந்த தன்னலமற்ற செயலில், மோய் அல்லது அமைதியின் அர்த்தத்தை, எந்த வார்த்தைகளையும் விட சிறப்பாக அவர் விவரித்திருந்தார். கவனமில்லாமல், கடமைக்காக எழுத்துக்கலையை வரைவதற்குப் பதிலாக, இருதயத்தின் முழு நோக்கத்தோடும் உண்மையான எண்ணத்துடனும் அவர் எழுத்துக்கலையை அணுகினார்.

அதேபோல், நாமும் அவரோடு இருக்கும் காலத்தை அதே வகையான இதயப்பூர்வமான பக்தியுடன் அணுக வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் அப்படிச் செய்யும்போது, ​​நம் ஆராதனை அவர்மீது நமக்குள்ள அன்பின் வெளிப்பாடாக மாறுகிறது.

நாம் அவருடன் தொடர்பு கொள்ள அவர் ஏங்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில், பிரதான தலைமையுடனான ஒரு கூட்டத்தில் ஆரம்ப ஜெபத்தை ஏறெடுத்த பிறகு, தலைவர் நெல்சன் என் பக்கம் திரும்பிச் சொன்னார், “நீங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, தேவனை ஏற்றுக்கொள்ள நமது பிஸியான கால அட்டவணைகளில் இருந்து நேரம் ஒதுக்கும்போது தேவன் எவ்வளவு பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன்.“ அவருடன் தொடர்பு கொள்ள நாம் இடைநிறுத்தும்போது அது பரலோக பிதாவிற்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதற்கான எளிய ஆனால் வல்லமைவாய்ந்த நினைவூட்டலாக இருந்தது.

நம்முடைய கவனத்தை அவர் எவ்வளவுக்கெவ்வளவு விரும்புகிறாரோ, அந்த அளவுக்கு அவர் நம்மை அவரிடம் வரும்படி வற்புறுத்த மாட்டார். உயிர்த்தெழுந்த கர்த்தர் நேபியர்களிடம், “கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பதைப்போல நான் உங்களை எவ்வளவு விசை கூட்டிச் சேர்த்தேன், நீங்கள் மனதில்லாதிருந்தீர்கள்” என்றார். அதைத் தொடர்ந்து அவர் இந்த நம்பிக்கையான அழைப்பை விடுத்தார், இது இன்று நமக்கும் பொருந்துகிறது: “நீங்கள் மனந்திரும்பி, இருதயத்தின் முழு நோக்கத்தோடும் என்னிடத்தில் திரும்பினால், “கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பதைப்போல நான் உங்களை எவ்வளவு விசை கூட்டிச் சேர்ப்பேன்“.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அடிக்கடி அவரிடம் திரும்புவதற்கான வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. இந்த வாய்ப்புகளில் தினசரி ஜெபங்கள், வேதப் படிப்பு, திருவிருந்து நியமம், ஓய்வுநாள் மற்றும் ஆலய ஆராதனை ஆகியவை அடங்கும். இந்த பரிசுத்தமான வாய்ப்புகளை நமது “செய்ய வேண்டிய” பட்டியல்களிலிருந்து எடுத்து அவற்றை நமது “செய்யாத” பட்டியல்களில் வைத்தால் என்னவாகும்; அதாவது, சகோதரி வாடா தனது எழுத்துக்கலையை அணுகும் அதே ஆர்வத்துடனும் கவனத்துடனும் போல அவைகளை அணுக வேண்டாமா?

“எனக்கு நேரம் இல்லை” என்று நீங்கள் நினைக்கலாம். நானும் அவ்வாறே பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் தேவைப்படுவது அதிக நேரம் அல்ல, ஆனால் நாம் ஏற்கனவே அவருக்காக ஒதுக்கி வைத்துள்ள நேரங்களில் தேவனைப் பற்றிய அதிக விழிப்புணர்வு மற்றும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்

உதாரணமாக, ஜெபிக்கும்போது, நாம் பேசுவதற்கு குறைந்த நேரத்தையும், தேவனுடன் அதிக நேரம் இருப்பதையும் செலவிட்டும்; நாம் பேசவிருக்கும்போது, நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தும் இதயப்பூர்வமான, திட்டவட்டமான வார்த்தைகளைக் கொடுப்பதும் எப்படியிருக்கும்?

நாம் வெறுமனே வேதங்களை வாசிப்பதில்லை, மாறாக அவற்றை ருசிக்கிறோம் என்று தலைவர் நெல்சன் ஆலோசனையளித்தார். படிப்பதைக் குறைத்து, அதிகம் ருசிப்பதாக இருந்தால் என்ன வித்தியாசம் ஏற்பட்டுவிடப் போகிறது?

திருவிருந்தில் பங்கேற்க நமது மனதை ஆயத்தப்படுத்த நாம் அதிகம் செய்து, இந்த பரிசுத்த நியமத்தின்போது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களை மகிழ்ச்சியுடன் சிந்தித்தால் எப்படியிருக்கும்?

எபிரேய மொழியில் “இளைப்பாறுதல்“ என்று பொருள்படும் ஓய்வுநாளில், மற்ற கவலைகளிலிருந்து நாம் ஓய்வெடுத்து, கர்த்தருக்கு நமது அர்ப்பணிப்புகளைச் செலுத்த அவருடன் அமைதியாக உட்கார நேரம் ஒதுக்கினால் எப்படியிருக்கும்?

நமது ஆலய வழிபாட்டின் போது, அறிவுறுத்தப்பட்டபடி, அதிக ஒழுக்கமான மற்றும் கவனம் செலுத்த முயற்சி செய்தால் அல்லது அமைதியான சிந்தனையில் சிலஸ்டியல் அறையில் சிறிது நேரம் தங்கியிருந்தால் எப்படியிருக்கும்?

செய்வதில் நமது கவனம் குறைவாக இருக்கும்போது, பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நமது உடன்படிக்கை இணைப்பை பெலப்படுத்துவதில் கவனம் அதிகமாக இருக்கும்போது, இந்த பரிசுத்த தருணங்கள் ஒவ்வொன்றும் செழுமையாக்கப்படும், நமது தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையான வழிநடத்துதலை நாம் பெறுவோம் என நான் சாட்சியமளிக்கிறேன் லூக்கா புத்தகத்தில் வரும் மார்த்தாளைப் போல நாமும் அநேக காரியங்களைக் குறித்து அடிக்கடி கவலைப்பட்டுக் கலங்குகிறோம். இருப்பினும், ஒவ்வொரு நாளும் நாம் கர்த்தருடன் தொடர்பு கொள்ளும்போது, மிகவும் தேவையானதை அறிய அவர் நமக்கு உதவுவார்.

இரட்சகருங்கூட தனது ஊழியத்திலிருந்து அமைதியாய் இருக்கவும் தேவனுடன் தொடர்பு கொள்ளவும் நேரம் எடுத்துக்கொண்டார். கர்த்தர் ஒரு தனிமையான இடம், மலை, வனாந்தரம், ஒரு பாலைவனமான இடத்திற்கு விலகிச்செல்வது அல்லது பிதாவிடம் ஜெபிக்க “சற்று தூரம்“ செல்வது போன்ற உதாரணங்களால் வேதங்கள் நிரம்பியுள்ளன. இயேசு கிறிஸ்து தேவனுடன் தொடர்புகொள்வதற்கும் அவரால் பெலப்படுத்தப்படுவதற்கும் அமைதியான நேரத்தை நாடினால், நாமும் அவ்வாறே செய்வது ஞானமாக இருக்கும்.

பரலோக பிதாவிலும் இயேசு கிறிஸ்துவிலும் நமது இருதயங்களையும் மனதையும் ஒருமுகப்படுத்தி, பரிசுத்த ஆவியானவரின் அமர்ந்த, மெல்லிய சத்தத்துக்கு செவிகொடுக்கும்போது, எது மிகவும் தேவை என்பதைப் பற்றி நமக்கு அதிக தெளிவு இருக்கும், ஆழமான இரக்கத்தை வளர்த்துக்கொள்ளும், அவரில் இளைப்பாறுதலையும் பெலனையும் கண்டடைவோம். முரண்பாடாக, இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியை விரைவுபடுத்த தேவனுக்கு உதவுவதற்கு நாம் வேகத்தை குறைப்பதும் தேவைப்படலாம். எப்பொழுதும் “நகர்வில்” இருப்பது நம் வாழ்க்கையில் “குழப்பத்தை” அதிகரித்து, நாம் தேடும் சமாதானத்தை நம்மிடமிருந்து பறிக்கக்கூடும்.

இருதயத்தின் முழு நோக்கத்தோடு நாம் அடிக்கடி கர்த்தரிடம் திரும்பும்போது, அமைதியிலும் நம்பிக்கையிலும் நாம் அவரை அறிந்துகொள்வோம், நம்மீது அவரது எல்லையற்ற அன்பை உணருவோம் என நான் சாட்சியமளிக்கிறேன்.

கர்த்தர் வாக்களித்தார்:

“என்னிடத்தில் கிட்டிச் சேருங்கள், நான் உங்களிடத்தில் கிட்டிச் சேருவேன்; கருத்தாய் என்னைத் தேடுங்கள், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்,” என்று கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணினார்.

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.”

இந்த வாக்குத்தத்தம் உண்மையானது என நான் சாட்சியமளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. ஏத்தேர் 2:14–15 பார்க்கவும்.

  2. ஏசாயா 30:15–16, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  3. 2 நேபி 10:24 தேவனின் விருப்பத்துடன் நம் விருப்பத்தை ஒப்புரவாக்க நம்மை அழைக்கிறது. “ரெ“ என்றால் மீண்டும், “கன்“ என்றால் உடன், மற்றும் “சைல்“ என்பது நாற்காலி அல்லது சிம்மாசனம். தேவனின் விருப்பத்துடன் நம் விருப்பத்தை சமரசம் செய்வது என்பது தேவனுடன் மீண்டும் உட்காருவதைக் குறிக்கும்.

  4. ரசல் எம். நெல்சன், “கர்த்தருக்காக நேரம் ஒதுக்குங்கள்,” லியஹோனா, Nov. 2021, 120.

  5. ரசல் எம். நெல்சன்,”நாம் கற்றுக் கொள்வதை ஒருபோதும் மறக்க மாட்டோம்,”லியஹோனா, மே 2021, 80.

  6. Russell M. Nelson, “What We Are Learning and Will Never Forget,” 80.

  7. டேவிட் எ. பெட்னார், “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்,” லியஹோனா, மே 2024, 28.

  8. எபிரெயர் 11:6 பார்க்கவும்.

  9. Lectures on Faith (1985), 72.

  10. Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 41.

  11. David O. McKay, “Consciousness of God: Supreme Goal of Life,” Improvement Era, June 1967,80 .

  12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:2 பார்க்கவும்.

  13. மோசியா 7:33; ஏத்தேர் 2:14 பார்க்கவும்.

  14. “ஆரோக்கியமான, செயல்படும் இதயம் நம் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் மையமானது. இருப்பினும், ஒரு ஊழியனாகவும் இயேசு கிறிஸ்துவின் சாட்சியாகவும் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஆரோக்கியமான சரீர இருதயம் நமது சவாலில் பாதி மட்டுமே. நம் முழு இருதயத்தோடும் தேவனை நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன், ஏனென்றால் அவரை நேசிப்பதே நம்மை துடிப்பாக வைத்திருக்கிறது” (ரசல் எம். நெல்சன், The Heart of the Matter: What 100 Years of Living Have Taught Me [2023], 8; emphasis added).

  15. சங்கீதம் 14:2; வெளிப்படுத்தின விசேஷம் 3:20 பார்க்கவும்.

  16. 3 நேபி 10:5; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  17. எல்டர் டேல் ஜி. ரென்லண்ட் கற்பித்தார்: “நம் நடத்தையை மாற்றுவதும், ‘சரியான பாதைக்கு’ திரும்புவதும் மனந்திரும்புதலின் ஒரு பகுதியாகும், ஆனால் ஒரு பகுதி மட்டுமே. உண்மையான மனந்திரும்புதலில் நம் இருதயத்தையும் விருப்பத்தையும் தேவனிடம் திருப்புவதும் பாவத்தைத் துறப்பதும் அடங்கும்”(“Repentance: A Joyful Choice,” Liahona, Nov. 2016, 121; emphasis added).

  18. 3 நேபி 10:6; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  19. Elder Neal A. Maxwell taught, “மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் போதித்தார், “அர்ப்பணிப்பு அதிகரிப்பது, அதிக மணிநேரம் ஆலயப் பணிக்கான தேவை அல்ல, ஏனெனில் இது உண்மையில் யாருடைய வேலை என்பது பற்றிய விழிப்புணர்வுக்காக!” (“Settle This in Your Hearts,” Ensign, Nov. 1992, 67).

  20. காலப்போக்கில் அவரது ஜெபங்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதைப் பற்றி டெஸ்மண்ட் டுட்டு கூறினார்: “நான் அங்கு இருப்பதில் வளர முயற்சிக்கிறேன் என்று நினைக்கிறேன். நீங்கள் குளிர்காலத்தில் நெருப்பின் முன் உட்காருவதைப் போல, நீங்கள் நெருப்புக்கு முன்னால் இருக்கிறீர்கள், நீங்கள் புத்திசாலியாகவோ அல்லது எதனையும் கொண்டிருக்க வேண்டியதில்லை. “நெருப்பு உன்னை வெதுவெதுப்பாக்குகிறது” (“Desmond Tutu, Insisting We Are ‘Made for Goodness’” [NPR interview by Renee Montagne, Mar. 11, 2010], npr.org).

  21. Russell M. Nelson, “Think Celestial!,” Liahona, Nov. 2023, 117-19 பார்க்கவும்.

  22. See Russell M. Nelson, “Living by Scriptural Guidance,” Liahona, Nov. 2001, 19-22; see also Russell M. Nelson, “The Answer Is Always Jesus Christ,” Liahona, May 2023, 127–28.

  23. 3 நேபி 17:3 பார்க்கவும். டேவிட் ஓ. மெக்கே அறிவித்தார்:

    “திருவிருந்தை நிர்வகிப்பதற்கான குறுகிய காலம், அத்தகைய தியானத்திற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன், மேலும் அந்த பரிசுத்த காலத்தில் அந்த நியமத்தின் நோக்கத்திலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்ப எதுவும் இருக்கக்கூடாது. …

    இந்த பரிசுத்ததமான நியமத்தை மிகவும் பயபக்தியுடன், சரியான ஒழுங்குடன் சூழப்பட்டிருக்க வேண்டும் என்று நான் கடுமையாக வலியுறுத்துகிறேன்; தேவனின் வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் தியானித்து, மௌனமாகவும் ஜெபத்துடனும் தேவனின் நற்குணத்திற்கு நன்றி தெரிவிக்கலாம். … வழிபாடு செய்பவர் தனது தேவனுடன் தொடர்புகொள்வது சாத்தியம் என்பதை தனக்குள்ளேயே உணர முயற்சிக்கும் நாளின் ஒரு அனுபவமாக திருவிருந்து நேரம் இருக்கட்டும்” (“Consciousness of God: Supreme Goal of Life,” Improvement Era, June 1967, 80–81).

  24. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:10 பார்க்கவும்.

  25. உங்களுடைய ஆலய பரிந்துரையை, நருங்குண்ட இருதயத்தை, கர்த்தருடைய கற்றுக்கொள்ளும் வீட்டிற்கு ஒரு தேடுதல் மனதை நீங்கள் கொண்டுவரும்போது அவர் உங்களுக்குப் போதிப்பார்.(Russell M. Nelson, “The Temple and Your Spiritual Foundation,” Liahona, Nov. 2021).

  26. உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அவருக்காக நேரத்தை ஒதுக்கினால், அவர் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களை வழிநடத்துவார். (Russell M. Nelson, “Make Time for the Lord,,” 121).

  27. லூக்கா 10:40–42 பார்க்கவும்.

  28. 3 நேபி 19:19;ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 4:1 (மத்தேயு 4:1, footnote a); மத்தேயு 5:1; 14:13, 23; மாற்கு 1:35; 6:46; லூக்கா 5:16; 6:12 பார்க்கவும்.

  29. 3 நேபி 21:29 பார்க்கவும்.

  30. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:63.

  31. எரேமியா 29:13; புலம்பல் 3:25 ஐயும் பார்க்கவும்.