நமது கலக ஆயுதங்களைப் புதைத்தல்
நம் வாழ்வில் தேவனுக்கு எதிரான கலகத்தின் எந்தவொரு கூறுகளையும் மிக மிக ஆழமாகப் புதைத்து, அதை விருப்பமுள்ள இதயம் மற்றும் விருப்பமுள்ள மனதுடன் மாற்றுவோமாக.
கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன்பு மோசியா ராஜாவின் குமாரர்கள் லாமானியர்களுக்கு 14 ஆண்டு ஊழியத்தை ஆரம்பித்தனர் என்று மார்மன் புஸ்தகம் பதிவு செய்கிறது. கிறிஸ்துவின் கோட்பாட்டின் மீது லாமானிய மக்களை ஒரு நம்பிக்கைக்கு கொண்டு வர பல தலைமுறைகளாக தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இந்த முறை, பரிசுத்த ஆவியின் அற்புதமான இடைபடுதலால், ஆயிரக்கணக்கான லாமானியர்கள் மனமாற்றம் செய்யப்பட்டு இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆனார்கள்.
நாம் வாசிக்கிறோம், “கர்த்தர் ஜீவிக்கிறது எவ்வளவு உண்மையோ, அதுபோல, தங்களுக்குள் அற்புதத்தைக் கிரியை செய்யும் தேவ வல்லமையினாலும், வெளிப்படுத்தல் மற்றும் தீர்க்கதரிசன ஆவியோடும், அம்மோனும் அவன் சகோதரரும் பிரசங்கம் பண்ணுவதின் மூலமாய், அநேகர் சத்திய ஞானத்திற்கு கொண்டு வரப்பட்டார்கள். ஆம், அவர்களுடைய உபதேசங்களை விசுவாசித்த லாமானியர் அநேகரும், கர்த்தருக்குள்ளே மனம்மாறி பின்வாங்கிப் போகாதிருந்தார்கள் என்று, கர்த்தர் ஜீவிக்கிறபடியே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.“
இந்த மக்களின் நீடித்த மனமாற்றத்திற்கான திறவுகோல் அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது: “அவர்கள் நீதியுள்ள ஜனமாக மாறி, தங்கள் கலக ஆயுதங்களைக் கீழே போட்டார்கள்; அதற்குப் பின்பு அவர்கள் தேவனுக்கு விரோதமாயும், தங்கள் சகோதரருக்கு விரோதமாயும் யுத்தம் பண்ணவில்லை.“
“கலக ஆயுதங்கள்” பற்றிய இந்தக் குறிப்பு, நேரடியானதாகவும் உருவகமாகவும் இருந்தது. இது அவர்களின் பட்டயங்களையும் மற்ற போர் ஆயுதங்களையும் குறிக்கிறது, ஆனால் தேவனுக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் அவர்களது கீழ்ப்படியாமையையும் குறிக்கிறது.
இந்த மனமாறிய லாமானியர்களின் ராஜா இதை இவ்வாறு வெளிப்படுத்தினான்: இப்பொழுதும் இதோ, என் சகோதரரே, “நாம் செய்யவேண்டியதெல்லாம் நாம் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும், கொலைகளிலிருந்தும், மனந்திரும்பி, நம்முடைய இருதயங்களிலிருந்து அவைகளைத் தேவன் நீக்கும்படிக்கு, நம்முடைய கறையை தேவன் நீக்கும்படியாக, அவர் சமுகத்தில் போதுமான அளவு மனந்திரும்புவதே, நாம் செய்யவேண்டிய காரியமாயிருக்கிறது.“
ராஜாவின் வார்த்தைகளைக் கவனியுங்கள்—அவர்களுடைய நேர்மையான மனந்திரும்புதல் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதற்கு மட்டும் வழிவகுத்ததே அல்லாமல், அந்த பாவங்களின் கறையையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து பாவம் செய்வதற்கான விருப்பத்தையும் தேவன் அகற்றினார். நீங்கள் அறிந்தவாறே, தேவனுக்கு எதிரான அவர்களின் முந்தைய கலக நிலைக்குத் திரும்புவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் பட்டயங்களைப் புதைத்தனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் புதைத்தபோது, மாற்றப்பட்ட இதயங்களுடன், அவர்கள் பாவத்தின் மீதான தங்கள் மனநிலையையும் புதைத்தனர்.
இந்த மாதிரியைப் பின்பற்றுவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம், “[நமது] கலகத்தின் ஆயுதங்களை கீழே போட்டு” அவை எதுவாக இருந்தாலும், நமது இதயங்களில் இருந்து பாவத்தின் கறை மற்றும் பாவத்தின் ஆசை ஆகியவை எடுக்கப்படும் அளவுக்கு “கர்த்தரிடம் மனமாறி”. நாம் ஒருபோதும் விலக மாட்டோம்.
கலகம் செயலில் அல்லது செயலற்றதாக இருக்கலாம். வேண்டுமென்றே செய்யும் கலகத்துக்கு சிறந்த உதாரணம் லூசிபர், அவன் பூலோக வாழ்க்கைக்கு முந்தைய உலகில், பிதாவின் மீட்பின் திட்டத்தை எதிர்த்தான் மற்றும் அதை எதிர்க்க மற்றவர்களையும் திரட்டினான், “அந்த நாளில் அநேகர் அவனுக்குப் பின்சென்றார்கள்.“ நம் காலத்திலும் அவனது தொடர்ச்சியான கிளர்ச்சியின் தாக்கத்தை கண்டறிவது கடினம் அல்ல.
மார்மன் புத்தக புனிதமற்ற அந்தி கிறிஸ்து மூவரான—சேரம், நேகோர் மற்றும் கோரிகோர் ஆகியோரின் தேவனுக்கு எதிரான செயலில் உள்ள கலகம் பற்றிய உன்னதமான ஆய்வை வழங்குகிறது. நேகோர் மற்றும் கோரிகோர் ஆகியோரின் மேலோட்டமான அறிக்கையானது பாவம் இல்லை என்பதுதான்; எனவே, மனந்திரும்புதல் தேவையில்லை, இரட்சகரும் இல்லை. “ஒவ்வொரு மனிதனும் அவனது புத்திக்கு ஏற்ப செழிக்கிறான். ஒவ்வொரு மனிதனும் அவனது பலத்துக்கு ஏற்ப மேற்கொள்ளுகிறான், ஒரு மனிதன் எதைச் [செய்தாலும்] அது குற்றமில்லை.” அந்தி கிறிஸ்து மத அதிகாரத்தை நிராகரிக்கிறான், நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள், வல்லமையையும் அதிகாரத்தையும் அபகரிப்பதற்காக “பழங்கால ஆசாரியர்களால் வழிவகுக்கப்பட்ட” நிகழ்ச்சிகளாக வகைப்படுத்துகிறான்.
ஒரு மகிழ்ச்சியான முடிவுடைய மனமுவந்த கலகத்தின் பிற்கால உதாரணம் வில்லியம் டபிள்யூ. பெல்ப்ஸின் கதை. பெல்ப்ஸ் 1831 இல் சபையில் சேர்ந்தார் மற்றும் சபை அச்சிடுபவராக நியமிக்கப்பட்டார். அவர் பல ஆரம்பகால சபை வெளியீடுகளை அச்சிட்டார், ஏராளமான பாடல்களை எழுதினார், மேலும் ஜோசப் ஸ்மித்துக்கு எழுத்தராகப் பணியாற்றினார். துரதிர்ஷ்டவசமாக, ஜோசப் ஸ்மித்துக்கு எதிராக மிசௌரி நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளிக்கும் அளவுக்கு, அவர் சபைக்கும் தீர்க்கதரிசிக்கும் எதிராகத் திரும்பினார், அது தீர்க்கதரிசி சிறையில் அடைக்கப்பட்டதற்கு பங்களித்தது.
பின்னர் பெல்ப்ஸ் மன்னிப்பு கேட்டு ஜோசப்பிற்கு கடிதம் எழுதினார். “என் சூழ்நிலையை நான் அறிவேன், நீங்கள் அறிவீர்கள், தேவன் அறிவார், என் நண்பர்கள் உதவினால் நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன்.”
அதற்கு தீர்க்கதரிசி பதிலளித்தார்: “உங்கள் நடத்தை நிமித்தம் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம் என்பது உண்மைதான். … இருப்பினும், கோப்பை குடிக்கப்பட்டு விட்டது, நமது பரலோக பிதாவின் சித்தம் செய்யப்பட்டது, நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம். … வாருங்கள், அன்பான சகோதரரே, போர் முடிந்துவிட்டதால், முதலில் நண்பர்கள் கடைசியாக மீண்டும் நண்பர்கள்.”
நேர்மையான மனந்திரும்புதலுடன், வில்லியம் பெல்ப்ஸ் தனது “கலக ஆயுதங்களை” புதைத்தார், மீண்டும் ஒருமுறை முழு ஐக்கியத்தைப் பெற்றார், மேலும் ஒருபோதும் விலகவில்லை.
இருப்பினும், தேவனுக்கு எதிரான கலகத்தின் மிகவும் நயவஞ்சகமான வடிவம், நம் வாழ்வில் அவருடைய சித்தத்தை புறக்கணித்தல். செயலற்ற வழியாகும். சுறுசுறுப்பான கலகத்தை ஒருபோதும் கருத்தில் கொள்ளாத பலர், தெய்வீக வழிநடத்துதலைப் பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் தேவனின் விருப்பத்தையும் வார்த்தையையும் எதிர்க்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு பாடகர் பிராங்க் சினாட்ரா எழுதிய “நான் அதை என் வழியில் செய்தேன்” என்ற உச்சக்கட்ட வரியுடன் பிரபலமான பாடலை எனக்கு நினைவூட்டுகிறது. நிச்சயமாக, வாழ்க்கையில் தனிப்பட்ட விருப்பம் மற்றும் சொந்த விருப்பத்திற்கு நிறைய இடம் உள்ளது, ஆனால் இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவனைப் பற்றிய விஷயங்களில், நமது தலைப்புப் பாடல், “நான் தேவனின் வழியில் செய்தேன்” என்று இருக்க வேண்டும், ஏனென்றால் உண்மையில் வேறு வழியில்லை.
உதாரணமாக ஞானஸ்நானம் சம்பந்தமாக இரட்சகரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் பிதாவுக்கு விசுவாசத்தை நிரூபிப்பவராகவும் நமக்கு முன்மாதிரியாகவும் ஞானஸ்நானம் பெற்றார்:
மாம்சத்தின் பிரகாரமாய் பிதாவுக்கு முன்பாகத் தம்மைத் தாழ்த்தினார் என்பதை மனுபுத்திரருக்குக் காண்பித்து, பிதாவினுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிகிறார் என்றும், அவருக்குச் சாட்சி கொடுக்கிறார். …
“அவர் மனுபுத்திரரை நோக்கி: என்னைப் பின்பற்றுங்கள் என்றார். ஆகையால் என் பிரியமான சகோதரரே, பிதாவின் கட்டளைகளைக் கைக்கொள்ள சித்தமுடையவர்களாயிராமல், நாம் இயேசுவைப் பின்பற்ற முடியுமா?”
கிறிஸ்துவின் முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டுமானால் “என் வழி” என்பது இல்லை. கிறிஸ்துவையும் அவருடைய இரட்சிப்பையும் பார்ப்பதற்குப் பதிலாக, பரலோகத்துக்கு வேறு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிப்பது, பாபேல் கோபுரத்தில் பயனற்ற வேலை செய்வது போன்றது.
லாமானிய மனமாறியவர்கள் புதைத்த பட்டயங்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கலகத்துக்கான ஆயுதங்களாக இருந்தன, ஏனெனில் அவர்கள் அவற்றை அவ்வாறு பயன்படுத்தினார்கள். தங்கள் குமாரர்களின் கைகளில் இருக்கும் அதே வகையான ஆயுதங்கள், குடும்பம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, அவை தேவனுக்கு எதிரான கலகத்துக்கான ஆயுதங்கள் அல்ல. நேபியர்களின் கைகளில் இருந்த அத்தகைய ஆயுதங்களுக்கும் உண்மையாக இதற்காகவே இருந்தன: “ஏனெனில் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ யுத்தம் பண்ணாமல், தங்கள் வீடுகளுக்காவும், தங்கள் சுதந்திரங்களுக்காவும், தங்கள் மனைவிகளுக்காவும், தங்கள் பிள்ளைகளுக்காவும், தங்களுக்கு உண்டான யாவற்றிற்காகவும், ஆம், தங்களின் வழிபாட்டு சடங்குகளுக்காகவும் தங்கள் சபைக்காகவும் யுத்தம் பண்ணினார்கள்.”
இதைப் போலவே, நம் வாழ்வில் நடுநிலையாகவோ அல்லது இயல்பாகவே நல்லதாகவோ இருக்கலாம், ஆனால் தவறான வழியில் பயன்படுத்தப்படும் விஷயங்கள் “கலகத்தின் ஆயுதங்களாக” மாறும். உதாரணமாக, நமது பேச்சு, பண்படுத்தலாம் அல்லது இழிவுபடுத்தலாம். யாக்கோபு சொன்னதுபோல:
“நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
“அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
“துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.”
இன்று பொது மற்றும் தனிப்பட்ட சொற்பொழிவுகளில் தீங்கிழைக்கும் மற்றும் கீழ்த்தரமான பேச்சுக்கள் உள்ளன. இளைஞர்கள் மத்தியில் கூட அநாகரிகமான மற்றும் அவதூறான பல உரையாடல்கள் உள்ளன. இந்த வகையான பேச்சு, அவதூறு மற்றும் திட்டுதலுடன் சேர்ந்து, தேவனுக்கு எதிரான “கலகத்தின் ஆயுதங்கள்”, “கொடிய விஷம் நிறைந்தவை.”
அடிப்படையில் நல்லது, ஆனால் அது தெய்வீக கட்டளைகளுக்கு எதிரான கலகமாக மாறக்கூடும் என்பதற்கு மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள்—ஒரு நபரின் தொழில். ஒரு தொழில், பணி அல்லது சேவையில் ஒருவர் உண்மையான திருப்தியைக் காணலாம், மேலும் பல துறைகளில் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்டவர்கள் சாதித்து உருவாக்கியவற்றால் நாம் அனைவரும் பயனடைகிறோம்.
இருப்பினும், தொழில் மீதான அர்ப்பணிப்பு ஒருவரின் வாழ்க்கையின் முக்கிய மையமாக மாறக்கூடும். ஒருவருடைய நேரம் மற்றும் திறமையின் மீது இரட்சகர் செய்யக்கூடிய எந்தவொரு கோரிக்கையும் உட்பட மற்ற அனைத்தும் இரண்டாம் நிலை ஆகின்றன. ஆண்களுக்கும், பெண்களுக்கும், திருமணத்திற்கான சட்டபூர்வமான வாய்ப்புகளைத் துறப்பது, தன் மனைவியுடன் இணங்கத் தவறுவது, தன் குழந்தைகளை வளர்க்கத் தவறுவது, ஒருவரின் குழந்தைகளை போஷிக்கத் தவறியது அல்லது தொழில் முன்னேற்றத்திற்காக மட்டுமே குழந்தை வளர்ப்பின் ஆசீர்வாதத்தையும் பொறுப்பையும் வேண்டுமென்றே தவிர்க்கும் தன்மை பாராட்டத்தக்க சாதனையை கலகமாக மாற்றும்.
மற்றொரு உதாரணம் நமது சரீரத்தைப் பற்றியது. சரீரத்திலும் ஆவியிலும் நாம் தேவனை மகிமைப்படுத்த வேண்டும், இந்த சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம், “இந்த சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா”? என்று பவுல் நமக்கு நினைவூட்டுகிறான். எனவே, நம்மால் முடிந்தவரை நம் உடலைப் பராமரிப்பதில் நேரத்தைச் செலவிடுவதில் நமக்கு நியாயமான ஆர்வம் உள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனைகளில், நம்மில் சிலரே செயல்திறன் உச்சத்தை அடைவோம், அல்லது தலைவர் எம். ரசல் பல்லார்ட் “ரிவெட்டுகள் தளர்ந்து வருகிறது” என்று அழைத்தது போல, மேலும் நம்மில் சிலர் வயதின் விளைவுகளை அனுபவித்து வருகிறோம்.
இருந்தபோதிலும், அவருடைய அற்புதமான வரமாகிய ஒரு உடலைக் கவனித்துக்கொள்வதற்கு நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யும்போது அது நம் சிருஷ்டிகரை மகிழ்விக்கிறது என்று நான் நம்புகிறேன். ஒருவரின் உடலை சிதைப்பது, அல்லது அதை துஷ்பிரயோகம் செய்வது அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர ஒருவரால் முடிந்ததைச் செய்யத் தவறுவது கலகத்தின் அடையாளமாக இருக்கும். அதே நேரத்தில், மாயை மற்றும் ஒருவரின் உடலமைப்பு, தோற்றம் அல்லது உடை ஆகியவற்றுடன் நுகரப்படுவதும், மறுபுறம் ஒரு கலகத்தின் வடிவமாக இருக்கலாம், இது தேவனுக்குப் பதிலாக தேவனின் வரத்தை வணங்குவதற்கு வழிவகுக்கும்.
இறுதியில், தேவனுக்கு எதிரான நமது கலக ஆயுதங்களைப் புதைப்பது என்பது பரிசுத்த ஆவியின் தூண்டுதலுக்கு அடிபணிந்து, சுபாவ மனிதனைக் களைந்துவிட்டு, “கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் பரிசுத்தவானாக” மாறுவதைக் குறிக்கிறது. இது நம் வாழ்வில் முதல் கட்டளைக்கு முதலிடம் கொடுப்பதைக் குறிக்கிறது. இதன் பொருள், தேவன் ஜெயம்பெற அனுமதிப்பது. தேவன்மீது நமக்குள்ள அன்பும், முழு ஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும் அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நம்முடைய உறுதியும், எல்லாவற்றையும் தீர்ப்பளிப்பதற்கும், நம் எல்லா முடிவுகளையும் எடுப்பதற்கும் உரைகல்லாக மாறினால், நம் கலக ஆயுதங்களை நாம் புதைத்திருப்போம். கிறிஸ்துவின் கிருபையால், தேவன் நம்முடைய பாவங்களையும், கடந்தகால கலகங்களையும் மன்னித்து, அந்த பாவங்கள் மற்றும் நம் இருதயங்களிலிருந்து கலகங்களின் கறையை நீக்கிவிடுவார். காலப்போக்கில், அவர் கடந்த கால லாமானிய மனம் மாறியவர்களுக்குச் செய்ததைப்போலவே நம் இதயங்களிலிருந்து தீமைக்கான எந்த விருப்பத்தையும் அகற்றுவார். ஆகவே நாமும் “ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.”
நமது கலக ஆயுதங்களை புதைப்பது ஒரு தனித்துவமான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. கர்த்தரிடத்தில் மனமாறிய அனைவருடனும், நாம் “மீட்கும் அன்பைப்பற்றிப் [பாடலைப்] பாட அழைத்து வரப்பட்டிருக்கிறோம்.” நம்முடைய பரலோக பிதாவும் அவருடைய குமாரனும், நம்முடைய மீட்பரும், தியாகம் மற்றும் மிக ஆழமான மற்றும் நிலையான அன்பின் மூலம் நமது இறுதி மகிழ்ச்சிக்கான மாற்ற முடியாத அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். நாம் அவர்களது அன்பை தினமும் அனுபவிக்கிறோம். நிச்சயமாக நாம் நமது சொந்த அன்புடனும் விசுவாசத்துடனும் பதிலடி கொடுக்க முடியும். நம் வாழ்வில் தேவனுக்கு எதிரான கலகத்தின் எந்தவொரு கூறுகளையும் மிக மிக ஆழமாகப் புதைத்து, அதை விருப்பமுள்ள இதயம் மற்றும் விருப்பமுள்ள மனதுடன் மாற்றுவோமாக. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.