உங்கள் சிலாக்கியங்களுக்கு ஏற்ப வாழுங்கள்
ஆசாரியத்துவ நியமங்களும் உடன்படிக்கை வாக்குத்தத்தங்களும் தேவனின் வல்லமை உங்கள் வாழ்க்கையில் பாய்வதற்கு எவ்வாறு அனுமதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் என் கணவர், கிரெக், தீவிர அறுவை சிகிச்சை மற்றும் பல மாதங்கள் கீமோதெரபி தேவைப்படும் தனக்கிருக்கும் நோயைப்பற்றி அறிந்து கொண்டார். இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்ட உங்களில் பலரைப் போலவே, நாங்களும் உடனடியாக பரலோகத்தின் உதவிக்காகவும் தேவனுடைய வல்லமைக்காகவும் ஜெபிக்க ஆரம்பித்தோம். கிரெக்கின் அறுவை சிகிச்சைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திருவிருந்து எங்கள் மருத்துவமனை அறையில் வழங்கப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில், திருவிருந்தை எடுத்தது நான் மட்டுமே. ஒரு துண்டு ரொட்டி. ஒரு கிண்ணம் தண்ணீர். சபையில், என் மனம் அடிக்கடி திருவிருந்தின் விநியோக முறையின் மீது கவனம் செலுத்துகிறது—ஆயத்தப்படுத்துதல், ஆசீர்வதித்தல் மற்றும் விநியோகித்தல். ஆனால் அந்த பிற்பகலில், பரிசுத்த நியமத்தின் மூலமாக கிடைக்கும் தேவனுடைய வல்லமையின் வரத்தையும், அந்த ரொட்டித் துண்டையும் தண்ணீர் கிண்ணத்தையும் நான் எடுக்கும்போது நான் செய்த உடன்படிக்கை வாக்குத்தத்தத்தையும் பற்றி சிந்தித்தேன். பரலோகத்திலிருந்து எனக்கு வல்லமை தேவைப்பட்ட நேரம் இது. மிகுந்த மனவேதனை, சோர்வு மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், எனக்கு மிகவும் தீவிரமாக தேவைப்பட்ட அவரிடமிருந்து வல்லமையைப் பெற அனுமதிக்கும் இந்த வரத்தைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டேன். திருவிருந்தில் பங்குகொள்வது கர்த்தருடைய ஆவியுடன் என் தோழமையை அதிகரிக்கும், தூதர்களின் ஊழியம் உட்பட, தேவனின் வல்லமையின் வரத்தைப்பெற எனக்கு அதிக அணுகலை அளிக்கிறது மற்றும் மீட்பரின் மேற்கொள்ள சாத்தியமாக்கும் பெலனையும்.
நியமத்தை யார் நடத்துகிறார்கள் என்பது மட்டும் முக்கியமல்ல—நியமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடன்படிக்கை எதைத் திறக்கிறது என்பதும் எனது கவனத்திற்கு உரியதாகும் என இவ்வளவு தெளிவுடன் நான் இதற்கு முன் உணர்ந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆசாரியத்துவ நியமங்களும் உடன்படிக்கை வாக்குத்தத்தங்களும் தேவன் நம்மைப் பரிசுத்தப்படுத்தவும், நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்யவும் அனுமதிக்கிறது. ஆனால் இது எப்படி நடக்கிறது?
முதலாவதாக, நம் வாழ்வில் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்த ஒரு நியமம் வேண்டுமென்றால், அது தேவனுடைய குமாரனிடமிருந்து அதிகாரத்துடன் செய்யப்பட வேண்டும். விநியோக முறை முக்கியமானது. இயேசு கிறிஸ்து அவருடைய ஆசாரியத்துவ நியமங்களை வழங்குவதை மேற்பார்வையிட பிதா திறவுகோல்களையும் அதிகாரத்தையும் அவரிடம் ஒப்படைத்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ், அவரது ஆசாரியத்துவத்தின் முறைமையில், தேவனின் குமாரர்கள் தேவ குமாரனுக்குப் பதிலாக நிற்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக, நாம் உடன்படிக்கை வாக்குறுதிகளை மட்டும் செய்வதில்லை—நாம் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். பல சுவிசேஷ நியமங்களில், நாம் தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளை செய்கிறோம்; அந்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது நம்மை ஆசீர்வதிப்பதாக அவர் வாக்குத்தத்தம் செய்கிறார். உடன்படிக்கை வாக்குத்தத்தங்களைக் கைக்கொள்வதோடு ஆசாரியத்துவ நியமங்களின் கலவையானது தேவனின் வல்லமையைப் பெற நம்மை அனுமதிக்கிறது என்பதை நாம் உணர்கிறோமா?
தேவனின் உடன்படிக்கையின் மகளாகிய நான், ஆசாரியத்துவ நியமங்கள் மூலம் தேவனின் வல்லமையை எவ்வாறு பெறுவது என்பதையும், எனக்குள் செயல்படும் தேவ வல்லமையை உண்மையில் புரிந்துகொண்டேனா என்று அன்று பிற்பகல் நான் ஆச்சரியப்பட்டேன்.
2019 ஆம் ஆண்டில், சபையின் பெண்களுக்கு ஒரு தீர்க்கதரிசன அழைப்பு விடுக்கப்பட்டது, இரட்சகரின் வல்லமையை நம் வாழ்வில் எவ்வாறு ஈர்ப்பது என்று நமக்குக் கற்பிக்கிறது. ஹார்மனி, பென்சில்வேனியாவில் எம்மா ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு வெளிப்பாடாகிய கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25, படிக்குமாறு தலைவர் ரசல் எம். நெல்சன் நம்மை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றது என் வாழ்க்கையை மாற்றியது.
கடந்த மாதம் நான் எதிர்பாராத விதமாக ஹார்மனிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு, மேப்பிள் மரங்களின் கீழ், ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரிக்கு ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது. அந்த மரங்களுக்கு அருகில் ஜோசப் மற்றும் எம்மாவின் வீட்டின் முன் கதவு உள்ளது. அந்த வீட்டில் நெருப்பிடத்துக்கு எதிரே ஒரு ஜன்னல் உள்ளது. நான் அந்த ஜன்னலருகே நின்று, மரங்களின் ஊடாக பார்த்தபோது எம்மா என்ன நினைத்திருப்பார் என்று யோசித்தேன்.
1830 ஜூலையில், எம்மாவுக்கு 26 வயது; அவள் மிகவும் இளமையாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தன. அவள் ஒரு ஆண் குழந்தையை இழந்தார்—அவளுடைய முதல் குழந்தை. அவனது சிறிய கல்லறை அவளது வீடிருக்கும் தெருவின் கடைசியில் உள்ளது. அந்த ஜன்னலருகே நின்றிருந்த எனக்கு அவளது எண்ணங்களில் என்ன நிறைந்திருக்கும் என்று கற்பனை செய்வது கடினமாக இல்லை. அவர்களின் நிதிநிலை குறித்தும், அவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள் குறித்தும், அவர்களின் எதிர்காலம் குறித்தும் நிச்சயமாக அவள் கவலைப்பட்டாள். இன்னும் தேவனின் பணி அவளைச் சுற்றி எங்கும் இருந்தது. திட்டத்தில் அவளுடைய இடம், அவருடைய ராஜ்யத்தில் அவளுடைய நோக்கம் மற்றும் தேவனின் பார்வையில் தன்னுடைய திறனைப் பற்றி அவள் ஆச்சரியப்பட்டாளா?
அவள் எண்ணியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சாலையின் மறுபக்கம் தேவனின் ஆசாரியத்துவ அதிகாரத்தின் வரம் மற்றும் திறவுகோல்கள் பூமிக்கு மீட்டெடுக்கப்பட்டன. எம்மாவுக்கு உண்மையில் பரலோகத்திலிருந்து வல்லமை தேவைப்பட்ட நேரம் இது. மிகுந்த மனவேதனை, சோர்வு மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், அது அவளுக்கு மிகவும் அவசியமான வல்லமையைத் திறக்க முடிகிற, தேவனின் ஆசாரியத்துவத்தின் வரம் பற்றி எம்மா ஆச்சரியப்படுவதை நான் கற்பனை செய்கிறேன்,
ஆனால் எம்மா அந்த ஜன்னலில் நின்றுமட்டும் வியக்கவில்லை.
தீர்க்கதரிசி ஜோசப், திறவுகோல்கள், அலுவல்கள், நியமங்கள் மற்றும் ஆசாரியத்துவ சேவையில் எவ்வாறு உதவுவது என்று கற்பிக்கப்படும்போது, கர்த்தர் தாமே தனது தீர்க்கதரிசி மூலம் எம்மாவுக்கு ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தார். நாவூ ஒத்தாசை சங்க-தலைவர்-எம்மா அல்ல - இந்த வெளிப்பாடு ஹார்மனியில் 26 வயதான எம்மாவுக்கு வழங்கப்பட்டது. வெளிப்பாட்டின் மூலம், அந்த ஆசாரியத்துவ நியமங்கள் தன் வாழ்வில் செயல்படும் திறனை அதிகரிக்கும் உள்ளான பரிசுத்தம் மற்றும் உடன்படிக்கை தொடர்பைப் பற்றி எம்மா அறிந்து கொள்வாள்.
முதலாவதாக, கர்த்தர் எம்மாவிற்கு தனது திட்டத்தில் அவள் யார், அவள் யாருடையவர்—அவருடைய ராஜ்யத்தில் ஒரு மகள் என்பது உட்பட அவளுடைய இடத்தை நினைவூட்டினார். எம்மா தனது உடன்படிக்கைகளை கடைப்பிடித்தால் தேவ வல்லமையைத் திறக்கும் நியமங்களை உள்ளடக்கிய “நற்குணத்தின் பாதைகளில்” அவள் அழைக்கப்பட்டாள்.
இரண்டாவதாக, அவளுடைய ஆழ்ந்த துக்கத்தின் காலத்தில், கர்த்தர் அவளுக்கு நோக்கத்தைக் கொடுத்தார். மறுஸ்தாபிதத்துக்கு எம்மாவுக்கு முன் வரிசை இருக்கை மட்டும் இல்லை; அவள் நடக்கும் வேலையில் இன்றியமையாத பங்கேற்பாளராக இருந்தாள். “வேதங்களை விளக்கவும், சபைக்கு அறிவுரை வழங்கவும்” அவள் பணிக்கப்பட்டார். அவளுடைய நேரம் “எழுதுவதற்கும், அதிகம் கற்றுக்கொள்வதற்கும்” கொடுக்கப்படும். பரிசுத்தவான்கள் ஆராதிக்கத் தயார்படுத்துவதற்கு எம்மாவுக்கு ஒரு பரிசுத்தமான பாத்திரம் வழங்கப்பட்டது; கர்த்தருக்கான அவர்களின் பாடல்கள் ஜெபங்களாகப் பெறப்பட்டு, “அவர்கள் தலைகளின்மேல் ஒரு ஆசீர்வாதத்தோடு அது பதிலளிக்கப்படும்.”
கடைசியாக, எம்மாவை மேன்மையடைதலுக்கு தயார்படுத்தும் உள்நோக்கிய பரிசுத்தத்தின் செயல்முறையை கர்த்தர் கோடிட்டுக் காட்டினார். கர்த்தர் அவருக்கு விளக்கினார், “இதை நீ செய்யாதவரை நானிருக்கிற இடத்திற்கு உன்னால் வரமுடியாது.”
பாகம் 25ஐ கவனமாக வாசித்தால், ஒரு முக்கியமான முன்னேற்றம் நடைபெறுவதைக் காணலாம். எம்மா ராஜ்யத்தில் ஒரு மகளாக இருந்து “தெரிந்துகொள்ளப்பட்ட பெண்ணிலிருந்து” ராணியாக மாறுவாள். ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ நியமங்கள், அவளது உடன்படிக்கையின் வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதுடன் இணைந்து, ஆவியானவர் மற்றும் தூதர்களுடன் அவளது தோழமையை அதிகரிக்கும், தெய்வீக வழிகாட்டுதலுடன் அவளுடைய வாழ்க்கையை வழிநடத்த அவளுக்கு வல்லமையை அளிக்கும். அவரது தெய்வீக வல்லமையின் மூலம், தேவன் அவளது இதயத்தை குணப்படுத்துவார், அவளுடைய ஆற்றலை அதிகரிப்பார், மேலும் அவள் ஆக முடியும் என்று அவருக்குத் தெரிந்த பதிப்பாக மாற்றுவார். மேலும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் நியமங்கள் மூலம், “தேவபக்திக்குரிய வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது” அவளது வாழ்வில் அவள் அவரிடமிருந்து புரிதலைப் பெறுவதற்காக கர்த்தர் திரையைப் பிரிப்பார். தேவ வல்லமை நமக்குள் செயல்படுவது இதுபோல்தான் என தெரிகிறது.
தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்:
இப்பகுதியில் நடந்த எல்லாமுமே உங்கள் வாழ்க்கைக்கு ஆழமான தாக்கங்களாயிருக்கின்றன. எம்மாவுக்கு கர்த்தருடைய ஆலோசனையுடன், ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதம் உங்கள் ஒவ்வொருவரையும் வழிநடத்தி ஆசீர்வதிக்கும். …
உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை பெறுவதற்கு கர்த்தர் எம்மா மற்றும் [நம்] ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்திய அதே காரியங்கள் தேவை.”
ஹார்மனியில் அந்த ஜன்னலின் இருபுறமும் முக்கியமான விஷயங்கள் நடந்தன, கர்த்தர் அழைத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணிக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்பாடு உட்பட—தேவனின் மகளான எம்மா ஸ்மித்தை பலப்படுத்தவும், ஊக்குவிக்கவும், அறிவுறுத்தவும் செய்யும் ஒரு வெளிப்பாடு.
எங்கள் பேத்தி இசபெல்லுக்கு பெயரும் ஆசீர்வாதமும் வழங்கப்பட்டபோது, அவளது அப்பா அவளுக்கு ஆசாரியத்துவத்தைப் பற்றிய புரிதலை ஆசீர்வதித்தார்; அவள் தொடர்ந்து வளர்வாள் மற்றும் அது அவளுடைய வாழ்க்கையில் வழங்கும் ஆசீர்வாதத்தைப் பற்றி அறிந்துகொள்வாள்; மேலும் அவள் தொடர்ந்து புரிந்து கொள்ளும்போது ஆசாரியத்துவத்தின் மீதான நம்பிக்கை வளரும்.
ஆசாரியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கும், அதனுடன் தொடர்புடைய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் எவ்வாறு தேவனுடைய வல்லமையை பெறுவதற்கு அவளுக்கு உதவும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கும் ஒரு சிறுமி பெரும்பாலும் ஆசீர்வதிக்கப்படுவதில்லை. ஆனால் நான் எம்மாவை நினைத்துக்கொண்டு, ஏன் முடியாது? என நினைத்தேன். இந்த சிறிய மகள் அவரது ராஜ்யத்தில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணாகவும், இறுதியில் ஒரு ராணியாகவும் மாறும் சாத்தியம் உள்ளது. அவருடைய ஆசாரியத்துவ நியமங்கள் மற்றும் அவளுடைய உடன்படிக்கையின் வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தேவ வல்லமை அவளுக்குள்ளும் அவள் மூலமும் கிரியை செய்யும், மேலும் அவள் வாழ்க்கையில் எது வந்தாலும் அதைக் கடந்து, அவள் ஆக முடியும் என்று தேவன் அறிந்த பெண்ணாக மாற அவளுக்கு உதவும். இது ராஜ்யத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிற ஒன்று.
“உங்கள் சிலாக்கியங்களுக்கு ஏற்ப வாழுங்கள்”.
ஆசாரியத்துவ நியமங்கள் மற்றும் உடன்படிக்கை வாக்குறுதிகள் எவ்வாறு தேவ வல்லமையை உங்கள் வாழ்க்கையில் அதிக செயல்திறனுடன் பாய்ச்ச அனுமதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், உங்களிலும் உங்கள் மூலமும் கிரியை செய்து, உங்கள் முழு நோக்கத்தையும் திறனையும் அடைய உங்களுக்கு வல்லமையளித்து, வசப்படுத்தும்.
ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ நியமங்கள், ஒவ்வொருவருடனும் நாம் செய்யும் அதனுடன் தொடர்புடைய உடன்படிக்கை வாக்குறுதிகள் மற்றும் அந்த நியமங்களின் மூலம் நாம் பெறும் தேவனுடைய வல்லமை ஆகியவற்றைக் கவனமாகப் படித்து, சிந்தித்துப் பாருங்கள்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நியமங்களை யார் நடத்துவது என்பது மட்டும் முக்கியமல்ல; நியமம் மற்றும் தொடர்புடைய உடன்படிக்கை வாக்குத்தத்தம் எதைத் திறக்கிறது என்பதும் உங்களுடைய கவனத்துக்கு உகந்ததாகும்.
ரொட்டியிலும் தண்ணீரிலும் பங்கெடுப்பது அவருடைய வல்லமை உங்களில் கிரியை செய்து வெற்றி பெற உதவுகிறது என்பது வாராந்திர நினைவூட்டலாகும். பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரத்தை அணிவது, நீங்கள் ஆக உதவுவதற்கு உங்களில் செயல்படும் அவருடைய வல்லமையின் வரத்தை தினசரி நினைவூட்டுவதாகும்.
நாம் அனைவரும் தேவ வல்லமையின் வரத்தை பெறலாம்.
ஒவ்வொரு முறையும் நாம் திருவிருந்தில் பங்கேற்கிறோம்.
ஒவ்வொரு முறையும் ஒரு ஆலயத்தின் வாசலைக் கடக்கிறோம்.
இதுதான் என் ஓய்வுநாளின் சிறப்பம்சம். இதனாலேயே எனது ஆலயப் பரிந்துரையை நான் மிகவும் மதிக்கிறேன்.
“அதிலுள்ள நியமங்களில் தேவபக்திக்குரிய வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது.”
இந்த வரம்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.