நமது மீட்பின் மகிழ்ச்சி
இயேசு கிறிஸ்துவின் அன்பும் வல்லமையும் நம் ஒவ்வொருவரையும் நம்முடைய தவறுகளிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் காப்பாற்றி, ஏதாவது அதிகமாக ஆக உதவி நம்மை இரட்சிக்க முடியும்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்சகரின் உருவப்படத்தை வரைய நான் எண்ணினேன். நான் ஒரு ஓவியக் கலைஞர் என்றாலும், அதை சற்று கடினமென்று உணர்ந்தேன். இயேசு கிறிஸ்துவின் ஆத்துமாவைக்கொண்ட அவரது உருவப்படத்தை எப்படி நான்வரைவது? நான் எங்கிருந்து ஆரம்பிப்பது? இதற்கான நேரத்தை நான் எப்படி ஒதுக்குவது?
என் கேள்விகளுடன் கூட, நான் முன்னேற முடிவு செய்தேன், கர்த்தர் எனக்கு உதவுவார் என்று நம்பினேன். ஆனால் நான் தொடர்ந்துகொண்டே சாத்தியங்களை அவரிடம் விட்டுவிட வேண்டியிருந்தது. நான் ஜெபித்தேன், சிந்தித்தேன், ஆராய்ச்சி செய்தேன், ஓவியம் வரைந்தேன், உதவிகளையும் ஆதாரங்களையும் கண்டுபிடிக்க ஆசீர்வதிக்கப்பட்டேன். வெள்ளையாக இருந்த வரைகலம் மேலும் நிறைவானவொன்றாக மாறத் தொடங்கியது.
எளிதான செயல்முறையாக இருக்கவில்லை. சில நேரங்களில் நான் எதிர்பார்த்தபடி அது தோன்றவில்லை. சில சமயங்களில் உணர்த்தப்பட்ட கோடுகளும் கருத்துக்களும் தோன்றின. மேலும் பல முறை, நான் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டியிருந்தது.
ஆயில் ஓவியம் இறுதியாக முடிந்ததும் அது உலர்ந்தது என்று நான் நினைத்தபோது, அழுக்கு மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க மேலே ஒரு வெளிப்படையான வார்னிஷ் பூச தொடங்கினேன். நான் அதைச் செய்தபோது, ஓவியத்தில் உள்ள முடி மாறத் தொடங்குவதையும், தேய்வதையும், கரைவதையும் கவனித்தேன். நான் மிக விரைவில் வார்னிஷை பயன்படுத்திவிட்டேன் என்பதை நான் உடனடியாக உணர்ந்தேன், ஓவியத்தின் அந்த பகுதி இன்னும் ஈரமாக இருந்தது!
எனது ஓவியத்தின் ஒரு பகுதியை வார்னிஷ் கொண்டு துடைத்திருந்தேன். ஓ, என் இதயம் நொறுங்கியது. தேவன் எனக்கு செய்ய உதவியதை நான் அழித்துவிட்டதைப் போல உணர்ந்தேன். நான் அழுதேன், உள்ளுக்குள் சோர்வாக உணர்ந்தேன். விரக்தியில், இது போன்ற சூழ்நிலையில் பொதுவாக அனைவரும் செய்வதையே நானும் செய்தேன்: நான் என் அம்மாவை அழைத்தேன். அவர் புத்திசாலித்தனமாகவும் அமைதியாகவும் கூறினார், “உன்னிடம் இருந்ததை நீ திரும்பப் பெற மாட்டாய், ஆனால் உன்னிடம் இருப்பதைக் கொண்டு உன்னால் முடிந்ததைச் செய்.“
And I Partook, by Kristin M. Yee
எனவே நான் ஜெபித்தேன், உதவிக்காக கெஞ்சினேன், விஷயங்களை சரிசெய்ய இரவு முழுவதும் வண்ணம் தீட்டினேன். காலையில் அந்த ஓவியத்தைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது—அது முன்பை விட நன்றாக இருந்தது. அது எப்படி சாத்தியமாயிற்று? திருத்தம் செய்யாத தவறு என்று நான் நினைத்தது அவருடைய இரக்கத்தின் கரம் வெளிப்பட ஒரு வாய்ப்பாக இருந்தது. அவர் ஓவியத்தில் முடிக்கப்படவில்லை, என்னிலும் அவர் முடிக்கப்படவில்லை. என்ன ஒரு சந்தோஷமும் நிம்மதியும் என் இதயத்தை நிறைத்தது. ஓவியத்தை மீட்டது மட்டுமல்லாமல், நம் ஒவ்வொருவரையும் நமது தவறுகள், பலவீனங்கள் மற்றும் பாவங்களிலிருந்து மீட்டு, நாம் மேலும் நிறைவாக மாற உதவும் அவரது அன்பையும் வல்லமையையும் பற்றி எனக்கு அதிகம் கற்பித்த இந்த இரக்கத்துக்காகவும் அற்புதத்திற்காகவும் நான் கர்த்தரை துதித்தேன்.
“பழுதுபார்க்க முடியாத“ ஓவியத்தை சரிசெய்ய அவர் எனக்கு இரக்கத்துடன் உதவியபோது, இரட்சகருக்கான எனது நன்றியுணர்வின் ஆழம் வளர்ந்ததைப் போலவே, எனது பலவீனங்களில் அவருடன் இணைந்து பிரயாசப்படவும் என் தவறுகள் மன்னிக்கப்படவும் நான் முயன்றபோது, என் இரட்சகருக்கான எனது தனிப்பட்ட அன்பும் நன்றியுணர்வும் தீவிரமடைந்துள்ளது. என்னால் மாறவும் சுத்திகரிக்கப்படவும்முடியும் என்பதற்காக என் இரட்சகருக்கு என்றென்றைக்கும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர் என் இதயத்தை வைத்திருக்கிறார், அவர் நான் என்ன செய்ய வேண்டும், என்ன ஆக வேண்டுமென நினைக்கிறாரோ அதைச் செய்ய வேண்டும் என்று நம்புகிறேன்.
மனந்திரும்புவது தேவனின் அன்பை உணரவும், நாம் ஒருபோதும் அறியாத வழிகளில் அவரை அறிந்து கொள்ளவும் நேசிக்கவும் அனுமதிக்கிறது. இரட்சகரின் பாதங்களை அபிஷேகம் செய்த பெண்ணைக்குறித்து, அவர் சொன்னார், “இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே; எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்.“ அவள் இயேசுவை மிகவும் நேசித்தாள், ஏனென்றால் அவர் அவளை அதிகமாக மன்னித்திருந்தார்.
மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தபடி, நாம் உண்மையாக மனந்திரும்பும்போது, பரிசுத்த ஆவியின் பரிசுத்தப்படுத்தும் வல்லமையின் மூலம் நமது பாவங்களிலிருந்து தொடர்ச்சியான மன்னிப்பைப் பெற முடியும், என நாம் மீண்டும் முயற்சி செய்யலாம் என்பதை அறிவதில் அத்தகைய நிம்மதியும் நம்பிக்கையும் இருக்கமுடியும்.
இயேசு கிறிஸ்துவின் மீட்கும் வல்லமை நமது உடன்படிக்கைகளின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். பரிசுத்த நியமங்களில் நீங்கள் பங்கேற்கும்போது இதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அது இல்லாமல், பரலோகத்தில் உள்ள நம் பிதாவின் சமுகத்துக்கும், நாம் நேசிப்பவர்களிடமும் வீடு திரும்ப முடியாது.
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து மீட்க வல்லமையுள்ளவர் என்று நான் அறிவேன். உலகத்தின் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்து, தம்முடைய சொந்த ஜீவனைக் கொடுத்து அதை மீண்டும் எடுத்த தேவகுமாரனாக, மீட்பு மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமையை அவர் வைத்திருக்கிறார். எல்லாருக்கும் அழியாமையையும், தம்மைத் தெரிந்துகொள்பவர்களுக்கு நித்திய ஜீவனையும் அவர் சாத்தியமாக்கியிருக்கிறார். அவரது பாவநிவாரண பலியின் மூலம் நாம் மனந்திரும்பி உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டு மீட்கப்படலாம் என நான் அறிவேன். இந்த விதத்தில் அவர் உங்களையும் என்னையும் நேசிப்பது ஒரு அற்புதம்.
“நீங்கள் இப்பொழுதாவது என்னிடத்தில் திரும்பி, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, நான் உங்களை குணப்படுத்தும்படியாக மனம் மாறமாட்டீர்களோ? என்று அவர் சொல்லியிருக்கிறார். உங்கள் ஆத்துமாவின் “பாழான இடங்களை“ - பாவம் மற்றும் துக்கத்தால் வறண்ட, கடுமையான, பாழடைந்த இடங்களை அவர் குணமாக்க முடியும், மேலும் “[உங்கள்] வனாந்தரத்தை ஏதேனைப் போல ஆக்க முடியும்.“
கெத்சமனேயிலும் சிலுவையிலும் கிறிஸ்துவின் பாடுகளின் வேதனையையும் ஆழத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாததைப் போலவே, நம்மால் “[அவருடைய] தெய்வீக மன்னிப்பு, இரக்கம் மற்றும் அன்பின் எல்லைகளை அளவிடவோ ஆழத்தை அறிந்துகொள்ளவோ முடியாது“
மீட்கப்படுவது சாத்தியமில்லை என்று சில நேரங்களில் நீங்கள் உணரலாம், ஒருவேளை நீங்கள் போராடுவதின் காரணமாகவோ அல்லது நீங்கள் செய்த காரியத்தின் காரணமாகவோ தேவனின் அன்புக்கும் இரட்சகரின் பாவநிவர்த்தி வல்லமைக்கும் நீங்கள் விதிவிலக்கு என்றும் எண்ணலாம். ஆனால் நீங்கள் போதகரின் எல்லைக்கு அப்பால் இல்லை என்று நான் சாட்சியமளிக்கிறேன். இரட்சகர் “சகலவற்றிற்கும் கீழே,“ இறங்கி, உங்களை தூக்கி, இருண்ட பாதாளத்திலிருந்து மீட்டு, உங்களை “தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு“ கொண்டு வர ஒரு தெய்வீக நிலையில் இருக்கிறார். அவரது பாடுகள் மூலம், நம் ஒவ்வொருவருக்கும் நமது தனிப்பட்ட பலவீனங்களை, பாவங்களை மேற்கொள்ள அவர் ஒரு வழியை உருவாக்கியுள்ளார். “அவருடைய நாமத்தில் விசுவாசித்து மனந்திரும்புதலுக்கேதுவான கனியைக்கொண்டுவருகிற அனைவரையும் இரட்சிக்க அவரிடத்திலே சகல வல்லமையும் உண்டு.”
அந்த ஓவியத்தைப் பழுதுபார்ப்பதற்கு உழைப்பும், பரலோகத்தின் உதவிக்காக மன்றாடுவதும் தேவைப்பட்டதைப் போலவே, “மனந்திரும்புதலுக்கான கனிகளைச் சேர்ப்பதற்கு“ உழைப்பும், இருதயத்தின் நேர்மையும், மனத்தாழ்மையும் தேவை. இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவநிவாரண பலியிலும் நமது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் செலுத்துதல், நொறுங்குண்ட இருதயத்தையும் நருங்குண்ட ஆவியையும் தேவனுக்கு அர்ப்பணித்தல், பாவத்தை அறிக்கையிட்டு கைவிடுதல், சேதமடைந்ததை நமது சிறந்த திறனுக்கு மீட்டெடுத்தல், மற்றும் நீதியாக வாழ முயற்சித்தல்ஆகியவை இந்தக் கனிகளில் அடங்கும்.
உண்மையிலேயே மனந்திரும்புவதற்கும், மாறுவதற்கும், முதலில் நாம் “நம்முடைய பாவங்களை ஏற்க“ வேண்டும். ஒரு நபர் நோய்வாய்ப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளாத வரை மருந்து உட்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் காண்பதில்லை. சில சமயங்களில் நமக்குள்ளேயே பார்த்து, உண்மையில் குணப்படுத்தவும் சரிசெய்யவும் வேண்டியவைகளைக் காண நாம் தயாராக இல்லாமல் இருக்கலாம்.
சி.எஸ். லூயிஸின் எழுத்துக்களில், அஸ்லான் தனது சொந்த சாதனங்களில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனுக்கு இந்த வார்த்தைகளை முன்வைக்கிறார்: “[மனிதகுலம்], உங்களுக்கு நன்மை செய்யக்கூடிய எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக உங்களைப் பாதுகாத்துக் கொள்கிறீர்கள்.“
நமக்கு நன்மை செய்யக்கூடிய அந்தக் காரியங்களிலிருந்து நீங்களும் நானும் எங்கேயாவது நம்மைப் பாதுகாத்துக்கொள்கிறோமா?
தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்பும் நன்மையிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டாம். நாம் உணர வேண்டும் என்று அவர் விரும்பும் அன்பு மற்றும் இரக்கத்திலிருந்து. அவர் நமக்கு அளிக்க விரும்பும் ஒளி மற்றும் அறிவிலிருந்து. நமக்கு உடனடித் தேவை என்பதை அவர் அறிந்திருக்கும் குணமாக்குதலிலிருந்து. அவர் தம்முடைய குமாரர் மற்றும் குமாரத்திகள் அனைவருக்காகவும் விரும்புகிற ஆழமான உடன்படிக்கை உறவிலிருந்து.
தேவனின் அன்பின் ஆசீர்வாதங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் தெரிந்தோ தெரியாமலோ எடுத்த எந்தவொரு “போர் ஆயுதங்களையும்“ நாம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். பெருமையின் ஆயுதங்கள்—சுயநலம், பயம், வெறுப்பு, குற்றம், மனநிறைவு, அநீதியான தீர்ப்பு, பொறாமைகள்—நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனை நேசிப்பதிலிருந்தும், அவருடனான நமது உடன்படிக்கைகள் அனைத்தையும் கைக்கொள்வதிலிருந்தும் நம்மை எதிலிருந்தும் தடுக்கும்.
நாம் நமது வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்து, அவருடனான நமது உடன்படிக்கைகளை கனம்பண்ணும்போது, பெருமை என்கின்ற ஆவிக்குரிய ஒட்டுண்ணி உட்பட நமது பலவீனங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் மேற்கொள்ளவும் தேவையான உதவியையும் வல்லமையையும் கர்த்தாரால் நமக்குத் தர முடியும். நமது தீர்க்கதரிசி கூறியிருக்கிறார்:
“அன்றாட மனந்திரும்புதல் தூய்மைக்கு நடைபாதை, தூய்மை வல்லமையைக் கொண்டுவருகிறது.”
“ ஓ எவ்வளவாய் வரும் நாட்களில் அவருடைய வல்லமை நமக்குத் தேவைப்படும்.”
என் ஓவியத்தைப் போலவே, நாம் தவறு செய்யும்போது கர்த்தர் நம்முடனான அவரது வேலையை முடித்துக்கொள்வதில்லை, நாம் தடுமாறும் போது அவர் ஓடுவதில்லை. குணப்படுத்துதல் மற்றும் உதவிக்கான நமது தேவை அவருக்கு ஒரு பாரம் அல்ல, அவர் வந்ததற்கான காரணம் அதுவே. இரட்சகர் தாமே சொன்னார்:
“இதோ, உலகத்தைப் பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி உலகத்திற்கு மீட்பைக் கொண்டுவருவதற்கே நான் உலகத்திற்கு வந்தேன்.”
“இதோ, என் இரக்கத்தின் புயம் உங்களுக்கு நேராய் நீட்டப்பட்டிருக்கிறது. யார் வந்தாலும், அவனை நான் ஏற்றுக்கொள்ளுவேன். என்னிடத்தில் வருகிறவர்கள் பாக்கியவான்கள்.”
ஆகையால் வாருங்கள், சோர்ந்து, களைத்தவர்களே, வாருங்கள், உங்கள் பிரயாசங்களை விட்டு, உங்களை மிகவும் நேசிக்கிறவருக்குள் இளைப்பாறுதல் கண்டடையுங்கள். அவருடைய நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் அவர் சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ளவர்.
நமது பரலோக பிதாவும் நமது இரட்சகரும் உங்களை பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் இருதயத்தை அறிவார்கள். நீங்கள் நேசிப்பவர்கள் உட்பட, நீங்கள் அக்கறை காட்டுபவைகளைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.
உடைந்த மற்றும் முறிந்த உறவுகள் உட்பட இழந்தவற்றை இரட்சகர் மீட்டெடுக்க முடியும். விழுந்த அனைத்தும் மீட்கப்படுவதற்கு அவர் ஒரு வழியை—மரித்த மற்றும் நம்பிக்கையற்றதாக உணருபவற்றிற்குள் ஜீவனை சுவாசிக்க, உருவாக்கினார்.
நீங்கள் இந்நேரத்திற்குள் மீண்டு வந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு சூழ்நிலையுடன் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், விட்டுவிடாதீர்கள். உங்களுடன் நீங்களே பொறுமையாக இருங்கள், உங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுங்கள், அடிக்கடி மனந்திரும்புங்கள், தேவைப்பட்டால் உங்கள் தலைவர்களின் உதவியை நாடுங்கள், உங்களால் முடிந்தவரை தவறாமல் கர்த்தருடைய வீட்டிற்குச் செல்லுங்கள். அவர் உங்களுக்கு அனுப்பும் தூண்டுதல்களைக் கேளுங்கள், கவனியுங்கள். உங்களுடனான உடன்படிக்கை உறவை அவர் கைவிடமாட்டார்.
என் வாழ்க்கையில் கடினமான மற்றும் சிக்கலான உறவுகள் இருந்தன, அவற்றுடன் நான் போராடினேன் மற்றும் அவற்றை மேம்படுத்த உளமார்ந்த முயற்சிகள் செய்தேன். சில சமயங்களில், நான் அடிக்கடி தோல்வியடைவதைப் போல உணர்ந்தேன். நான் ஆச்சரியப்பட்டேன், “கடந்த முறை நான் விஷயங்களை சரிசெய்யவில்லையா? நான் உண்மையிலேயே என் பலவீனத்தை மேற்கொள்ளவில்லையா?” குறைபாடுள்ளவளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் அதிக பிரயாசமும், அதிக குணப்படுத்துதலும் தேவைபடுகிறது என்று காலப்போக்கில் கற்றுக்கொண்டேன்.
மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் போதித்தார், “பலவீனத்தை பெலனாக மாற்றும்படி நாளுக்கு நாள் உறுதியாக உழைக்கிற, தகுதியுடன் நியாயத்தீர்ப்புக்கு வர விரும்புகிறவர்களைக் குறித்து கர்த்தர் புன்னகைக்கிறார். உண்மையான மனந்திரும்புதலுக்கு, உண்மையான மாற்றத்திற்கு மீண்டும் மீண்டும் முயற்சிகள் தேவைப்படலாம், ஆனால் அத்தகைய முயற்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் புனிதமான ஏதோ ஒன்று உள்ளது. அத்தகைய ஆத்துமாவுக்கு தெய்வீக மன்னிப்பும் குணப்படுத்துதலும் மிக இயல்பாகவே பாய்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் ஒவ்வொரு நாளும் நம்பிக்கை மற்றும் சாத்தியங்கள் நிறைந்த ஒரு புதிய நாள். ஒவ்வொரு நாளும் நீங்களும் நானும் அன்னை ஏவாள் அறிவித்தபடி, “எங்கள் மீட்பின் மகிழ்ச்சியையும்“ முழுமையடையச் செய்வதன் மகிழ்ச்சியையும் , உங்கள் மீது தேவனின் மாறாத அன்பை உணரும் மகிழ்ச்சியையும் அறிந்து கொள்ளலாம்.
பரலோகத்தில் இருக்கிற நமது பிதாவும் இரட்சகரும் உங்களை நேசிக்கின்றனர் என நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவே மனுக்குலத்தின் இரட்சகரும் மீட்பருமாவார். அவர் ஜீவிக்கிறார்! அவருடைய பாவநிவாரண பலியின் மூலம், பாவம் மற்றும் மரணத்தின் கட்டுகள் என்றென்றும் உடைக்கப்பட்டன, இதனால் நாம் நேசிப்பவர்களுடன் குணப்படுத்துதல், மீட்பு மற்றும் நித்திய வாழ்வைத் தேர்ந்தெடுக்க சுதந்திரமாக இருக்க முடியும். இயேசு கிறிஸ்து என்ற அவருடைய நாமத்தினாலே இவைகளைக்குறித்து நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.