நம்பிக்கையின் வெற்றி
நம்பிக்கை என்பது ஒரு ஜீவனுள்ள வரம், இயேசு கிறிஸ்துவில் நம் விசுவாசத்தை அதிகரிக்கும்போது வளரும் வரம்.
உலகெங்கிலும் உள்ள எனது அன்பான சகோதர சகோதரிகளே, “பொது மாநாட்டின்” இந்த சிறப்பு நேரத்தை நாம் தொடங்கும் போது, பரலோகத்தின் கண்கள் நிச்சயமாக நம்மீது கவனம் செலுத்தும். அவருடைய ஊழியர்கள் மூலம் “கர்த்தருடைய சத்தத்தை” கேட்போம்; பரிசுத்த ஆவியின் “வழிகாட்டுதல், வழிநடத்துதல் மற்றும் ஆறுதலின்” செல்வாக்கை உணர்வோம், மேலும் நமது விசுவாசம் பலப்படுத்தப்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தலைவர் ரசல் எம். நெல்சன் இந்த வார்த்தைகளுடன் பொது மாநாட்டைத் தொடங்கினார்: “உங்கள் இருதயத்தில் உள்ள கேள்விகளுக்கான சுத்தமான வெளிப்பாடு இந்த மாநாட்டை வெகுமதியான மறக்க முடியாததாகவும் மாற்றும். இந்த இரண்டு நாட்களிலும் கர்த்தர் நீங்கள் கேட்க விரும்புகிறதை நீங்கள் கேட்க உங்களுக்கு உதவ பரிசுத்த ஆவியின் ஊழியத்தை நீங்கள் இன்னும் நாடவில்லை என்றால், இப்போது அதைச் செய்ய நான் உங்களை அழைக்கிறேன். தயவுசெய்து இந்த மாநாட்டை அவருடைய ஊழியர்களின் மூலம் கர்த்தரிடமிருந்து வரும் செய்திகளை ருசித்துப் பார்க்கும் நேரமாக ஆக்கவும்.
வேதம் மூன்று வார்த்தைகளை ஒன்றாக வல்லமையுடன் இணைக்கிறது: விசுவாசம், நம்பிக்கை, தயாளம். நம்பிக்கையின் வரம் தேவனிடமிருந்து விலையற்ற அருட்கொடையாகும்.
நாம் நடக்க வேண்டுமென விரும்பும் பல விஷயங்களுக்கு நம்பிக்கை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, “மழை பெய்யாது என்று நம்புகிறேன்” அல்லது “எங்கள் அணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.” இயேசு கிறிஸ்து மற்றும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை மையமாகக் கொண்ட நமது புனிதமான மற்றும் நித்திய நம்பிக்கைகள் மற்றும் நமது “நம்பிக்கையான எதிர்பார்ப்புகள்… நீதியின் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்” பற்றி பேசுவதே எனது நோக்கம்.
நித்திய ஜீவனுக்கான நமது நம்பிக்கை
கிறிஸ்துவின் கிருபையினாலும், நம்முடைய சொந்த தேர்வுகளினாலும் நம்முடைய நித்திய ஜீவனின் நம்பிக்கை உறுதிசெய்யப்படுகிறது, நம்முடைய பரலோக வீட்டிற்குத் திரும்பி, நம்முடைய பரலோக பிதா, அவருடைய நேச குமாரன், நம்முடைய விசுவாசமுள்ள குடும்பம் மற்றும் விலைமதிப்பற்ற நண்பர்களுடன் மேலும் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒவ்வொரு நூற்றாண்டிலிருந்தும் பூமியின் நீதியுள்ள ஆண்களுடனும் பெண்களுடனும் என்றென்றும் சமாதானத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான குறிப்பிடத்தக்க ஆசீர்வாதத்தை அனுமதிக்கிறது.
பூமியில் நாம் சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படும்போது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அனுபவிக்கிறோம். நம்முடைய பாவங்கள், கஷ்டங்கள், சோதனைகள், அநியாயம் மற்றும் இந்த பூலோக வாழ்க்கையின் சவால்கள் ஆகியவற்றை நாம் வெற்றிபெறும்போது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் நமது வெற்றி கிடைக்கிறது.
நாம் இயேசு கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையை பலப்படுத்தும்போது, நித்தியத்தின் ஆசீர்வாதங்கள் மற்றும் வாக்குறுதிகளை, நம்முடைய போராட்டங்களுக்கு அப்பாலும் நாம் காண்கிறோம். பிரகாசம் அதிகரிக்கிற ஒரு ஒளியைப் போல, நம்பிக்கை இருண்ட உலகத்தை பிரகாசமாக்குகிறது, மேலும் நமது மகிமையான எதிர்காலத்தைப் பார்க்கிறோம்.
நம்பிக்கை தேவனிடத்திலிருந்து வருகிறது.
ஆரம்பத்திலிருந்தே, நம்முடைய பரலோக பிதாவும் அவருடைய நேச குமாரனும் நீதிமான்களுக்கு நம்பிக்கையின் விலைமதிப்பற்ற வரத்தை ஆவலுடன் ஆசீர்வதித்துள்ளனர்.
தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு, ஆதாம் மற்றும் ஏவாளுக்கு இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை ஒரு தூதன் கற்பித்தான். நம்பிக்கையின் வரம் அவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்தது. ஆதாம் அறிவித்தான், “என்னுடைய மீறுதலினிமித்தம் என்னுடைய கண்கள் திறக்கப்பட்டன, இம்மையில் எனக்கு சந்தோஷம் உண்டாயிருக்கும்.” “[அவர்களுடைய] மீட்பின் சந்தோஷத்தையும், கீழ்ப்படிபவர்கள் யாவருக்கும் தேவன் கொடுக்கிற நித்திய ஜீவனையும்” குறித்து ஏவாள் பேசினாள்.
பரிசுத்த ஆவியானவர் ஆதாமுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது போல், கர்த்தருடைய ஆவியின் வல்லமை இன்று விசுவாசிகளுக்கு தெளிவூட்டி, நித்திய ஜீவனின் யதார்த்தத்துக்கு ஒளி கொடுக்கிறது.
இரட்சகர் நமக்கு ஒரு தேற்றரவாளனை, பரிசுத்த ஆவியை அனுப்புகிறார், நமது விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கு ஒரு தோழனாக, “உலகம் கொடுக்கிற பிரகாரமாயில்லாமல்” சமாதானத்தைக் கொண்டுவருகிறார்.
இரட்சகர் சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், [நம்பிக்கையின் பிரகாசத்தை காத்துக்கொள்ளுங்கள்]; நான் உலகத்தை ஜெயித்தேன்”.
கடினமான காலங்களில், விசுவாசத்தில் கர்த்தரை நம்புவதை நாம் தேர்ந்தெடுக்கிறோம். “என்னுடைய சித்தமல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று நாம் அமைதியாக ஜெபிக்கிறோம். நம்முடைய சாந்தமான விருப்பத்திற்கு கர்த்தரின் அங்கீகாரத்தை நாம் உணர்கிறோம், மேலும் அவர் தேர்ந்தெடுத்த நேரத்தில் அவர் அனுப்பும் வாக்குறுதியளிக்கப்பட்ட சமாதானத்திற்காக நாம் காத்திருக்கிறோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் போதித்தான், “பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்;” “பரிசுத்த ஆவியின் பலத்தினாலே.”
நம்பிக்கையின் பாடம்
உபத்திரவத்தின் போது கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பது பற்றி தீர்க்கதரிசி மரோனி முன்பே அறிந்திருந்தான். அவன் தனது வேதனையான சூழ்நிலையை விளக்கினான்:
“நானோ தனியாய் இருக்கிறேன். … போவதற்கு இடமோ இல்லை.”
“அவர்கள் என்னை அழிக்காதபடிக்கு, நான் என்னை அவர்களுக்குக் காண்பிப்பதில்லை.”
குறிப்பிடத்தக்க வகையில், இந்த இருண்ட மற்றும் தனிமையான நேரத்தில், மரோனி தனது தகப்பனின் நம்பிக்கையின் வார்த்தைகளை பதிவு செய்கிறான்.
“ஆதலால் ஒரு மனுஷனுக்கு விசுவாசமிருந்தால் அவன் நம்பிக்கை உடையவனாய் இருக்க வேண்டும். ஏனெனில் விசுவாசமில்லாமல் எந்த நம்பிக்கையும் இருக்க முடியாது.”
“நீங்கள் எதை நம்புவீர்கள்? … இதோ கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் நித்திய ஜீவனுக்கேதுவாய் எழும்பும்படியான அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலம், நீங்கள் நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள்.”
நம்பிக்கை என்பது ஒரு ஜீவனுள்ள வரம், இயேசு கிறிஸ்துவில் நம் விசுவாசத்தை அதிகரிக்கும்போது வளரும் வரம். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி. ஜெபம், ஆலய உடன்படிக்கைகள், கட்டளைகளைக் கடைப்பிடித்தல், வேதம் மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைத் தொடர்ந்து ருசித்தல், திருவிருந்தை எடுத்துக்கொள்வது மற்றும் நமது சக பரிசுத்தவான்களுடன் வாராந்திர ஆராதனை ஆகியவற்றின் மூலம் நமது விசுவாசத்தின் ஆதாரங்களை உருவாக்குகிறோம்.
நமபிக்கையின் வீடு,
அக்கிரமங்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் நமது நம்பிக்கையை பலப்படுத்துவதற்காக, கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியை பூமியெங்கும் அவருடைய ஆலயங்களை கட்டும்படி வழிநடத்தியிருக்கிறார்.
நாம் கர்த்தருடைய வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, நம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தி, தேவனுடைய ஆவியை உணர்கிறோம்.
வெற்று கல்லறை மற்றும் திரைக்கு அப்பால் வாழ்க்கை அனைவருக்கும் தொடர்கிறது என்பதற்கு ஆலயம் சாட்சியமளிக்கிறது.
நித்திய துணை இல்லாதவர்களுக்கு, ஒவ்வொரு நீதிமானும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பெறுவார் என்பதை நியமங்கள் வலுவாக உறுதிப்படுத்துகின்றன.
ஒரு இளம் ஜோடி பீடத்தின் குறுக்கே மண்டியிட்டு முத்திரிக்கப்படுவதில் உன்னதமான நம்பிக்கை உள்ளது, அது இக்காலத்திற்கு மட்டுமல்ல, நித்தியத்திற்கும்.
நமது சந்ததியினருக்கு அவர்களின் தற்போதைய சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நமக்கு ஒரு பெரிய நம்பிக்கை உள்ளது.
நாம் விசுவாசித்து, கர்த்தருடைய வீட்டில் தேவனோடுள்ள நமது உடன்படிக்கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும்போது, எந்த வலியும் இல்லை, நோயும் இல்லை, அநீதியும் இல்லை, துன்பமும் இல்லை, நம் நம்பிக்கையை இருட்டடிப்பு செய்யக்கூடிய எதுவும் இல்லை. இது ஒரு ஒளியின் வீடு, நம்பிக்கையின் வீடு.
நம்பிக்கை போய்விட்டால்.
கிறிஸ்துவின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடத்தில் சோகத்தையும் விரக்தியையும் கண்டு துக்கத்தில் கண்ணீர் வடிக்கிறோம்.
ஒரு காலத்தில் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருந்து, ஆனால் பின்னர் அவர்களுடைய நம்பிக்கையை கைவிட்ட ஒரு தம்பதியை நான் சமீபத்தில் தூரத்திலிருந்து பார்த்தேன். அவர்கள் உலகில் வெற்றியடைந்தனர், மேலும் அவர்கள் தங்கள் அறிவில் மகிழ்ச்சி கண்டு விசுவாசத்தை நிராகரித்தனர்.
கணவன், இன்னும் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தவர், திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை எல்லாம் நன்றாகவே இருந்தது. சூரிய கிரகணத்தைப் போல, அவர்கள் குமாரனின் ஒளியைத் தடுத்தனர், அதன் விளைவு நம்பிக்கையின் கிரகணம். மனைவி, தன் அவநம்பிக்கையில், இப்போது திசையறியாது, வேதனையுடன் தன் குழந்தைகளை ஆறுதல்படுத்த தயாராக இல்லாமலிருப்பதை உணர்ந்தாள். திடீரென்று அவள் நாளை இல்லை என்று பார்க்கும் வரை அவளுடைய வாழ்க்கை சரியான ஒழுங்கில் இருப்பதாக அவளுடைய புத்தி சொன்னது. அவளுடைய விரக்தி இருளையும் குழப்பத்தையும் கொண்டு வந்தது.
இதயத்தை நொறுக்கும் சோகம்
இதயத்தை உடைக்கும் நேரத்தில் கிறிஸ்துவின் மீது மற்றொரு குடும்பத்தின் நம்பிக்கையுடன் அவளுடைய வேதனையான விரக்தியை வேறுபடுத்திப் பார்க்கிறேன்.
இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு, என் மருமகன் பென் ஆண்டர்சன் மற்றும் அவரது மனைவி ராபி ஆகியோரின் புதிதாய் பிறந்த மகன், அவர்களின் ஐடாஹோ விவசாய சமூகத்திலிருந்து சால்ட் லேக் சிட்டிக்கு உயிருடன் விமானத்தில் கொண்டு வரப்பட்டான். நான் மருத்துவமனைக்கு வந்தேன், பென் அவர்களின் குழந்தையின் இதயத்தில் உள்ள கடுமையான, உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை விளக்கினார். ட்ரேயின் சிறிய தலையில் எங்கள் கைகளை வைத்தோம். கர்த்தர் அவன் தொடர்ந்து வாழ ஆசீர்வதித்தார்.
ட்ரே தனது வாழ்க்கையின் முதல் வாரத்தில் இதய அறுவை சிகிச்சை பெற்றான், மேலும் பல அறுவை சிகிச்சைகள் தொடர்ந்தன. வருடங்கள் செல்ல செல்ல, ட்ரேக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது தெரிந்தது. அவனது உடல் செயல்பாடுகள் குறைவாக இருந்தபோதிலும், அவனது விசுவாசம் விரிவடைந்தது. அவன் எழுதினான், “இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் முக்கியத்துவத்தையும் இரட்சிப்பின் திட்டத்தின் சாட்சியத்தையும் நான் எப்போதும் அறிந்திருக்கிறேன், அதனால் நான் என் மீது ஒருபோதும் வருத்தப்படவில்லை.”
தலைவர் நெல்சனின் இந்த மேற்கோளை ட்ரே தன் போனில் வைத்திருந்தான், “நாம் அடைகிற மகிழ்ச்சி, நமது வாழ்க்கை சூழ்நிலைகளைப் பொருத்தது அல்ல, எல்லாம் நமது வாழ்க்கையின் நோக்கத்தைப் பொருத்ததே.”
ட்ரே எழுதினான்: “நான் எப்போதும் ஒரு முழுநேர ஊழியம் செய்வதை எதிர்நோக்கியிருந்தேன், ஆனால். … எனது மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு வருடம் வரை என் மருத்துவர்கள் என்னை ஒரு ஊழியம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். நான் இயேசு கிறிஸ்து மீது விசுவாசம் வைத்துள்ளேன்.”
இந்த செமஸ்டரின் தொடக்கத்தில் பிஒய்யு இல் கணக்கியல் மேஜராக ஏற்றுக்கொள்ளப்பட்டதில் ட்ரே உற்சாகமாக இருந்தான், ஆனால் ஜூலை இறுதியில் தனது இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவதற்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைபேசி அழைப்பைப் பெற்றபோது மிகவும் உற்சாகமடைந்தான்.
“ஒரு வருடம், கழித்து நான் ஊழியத்தில் இருப்பேன்” என்று ட்ரே கூறினான்.
அறுவைசிகிச்சை அறைக்குள் அவன் நுழைந்ததும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், அறுவை சிகிச்சையின் போது ஆபத்தான சிக்கல்கள் இருந்தன, ட்ரே மீண்டும் சுயநினைவு பெறவில்லை.
அவனது தாய் ராபி கூறினாள்: “வெள்ளிக்கிழமை மிகவும் மனதை நொறுக்கும் நாளாக இருந்தது … அதைச் சுற்றி எங்கள் மனதை வைக்க முயற்சிக்கிறோம். … நான் தாமதமாக விழித்திருந்தேன், எல்லாவற்றையும் சிந்திக்க முயற்சித்தேன். … ஆனால் சனிக்கிழமை, நான் முழுமையான மகிழ்ச்சியுடன் எழுந்தேன். அது சமாதானம் மட்டுமல்ல; அது மறுப்பு இல்லை. என் மகனுக்காக நான் மகிழ்ச்சியை உணர்ந்தேன், அவனுடைய தாயாக நான் மகிழ்ச்சியை உணர்ந்தேன். … பென் என்னை விட மிகவும் முன்னதாகவே எழுந்திருந்தார், கடைசியாக எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்தபோது, பென் அதே உணர்வோடு விழித்தெழுந்தார்.”
பென் விளக்கினார்: “தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் எனக்குக் கற்பித்ததால் என் ஆத்துமாவுக்கு தெளிவு வந்தது. நான் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்தேன், விவரிக்க முடியாத சமாதானம் மற்றும் மகிழ்ச்சியால் நிறைந்தேன். இது எப்படி சாத்தியமாகும்? … ட்ரேயின் மறைவு மிகவும் வேதனையானது, நான் அவனை மிகவும் தேடுகிறேன். ஆனால் கர்த்தர் நம்மை ஆறுதலில்லாமல் விடுவதில்லை. … மகிழ்ச்சியான மறு சந்திப்பை நான் எதிர்நோக்குகிறேன்.”
நம்பிக்கையின் வாக்குத்தத்தம்
தலைவர் நெல்சனின் பொது மாநாட்டு உரையிலிருந்து இந்த வார்த்தைகளை ட்ரே தனது குறிப்பிதழில் குறிப்பிட்டிருந்தான்: “உங்கள் பிள்ளை குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும்போது அல்லது உங்கள் வேலையை இழக்கும்போது அல்லது உங்கள் துணை உங்களுக்குத் துரோகம் செய்யும் போது மகிழ்ச்சியை உணர முடியாது. ஆயினும் அது துல்லியமாக இரட்சகர் அளிக்கும் மகிழ்ச்சி. அவருடைய மகிழ்ச்சி நிலையானது, நம்முடைய ‘துன்பங்கள் ஒரு சிறிய தருணம் மட்டுமே’[கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7] என்றும், நம்முடைய நன்மைக்காக அர்ப்பணிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறார்.”
சகோதர சகோதரிகளே, நீங்கள் தேடும் சமாதானம் நீங்கள் விரும்பும் அளவுக்கு விரைவாக வராமல் போகலாம், ஆனால் நீங்கள் கர்த்தரை நம்பினால், அவருடைய சமாதானம் வரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நம்பிக்கையின் பரிபூரண பிரகாசத்துடன் முன்னேறி, நம்முடைய விலைமதிப்பற்ற விசுவாசத்தை வளர்த்துக்கொள்வோமாக. நம்முடைய நம்பிக்கை நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே என்று நான் சாட்சி கூறுகிறேன். அவர் மூலமாக நமது நீதியான கனவுகள் அனைத்தும் நனவாகும். அவர் நம்பிக்கையின் தேவன்—நம்பிக்கையின் வெற்றி. அவர் ஜீவிக்கிறார், உங்களை நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.