உங்கள் மனந்திரும்புதல் இயேசு கிறிஸ்துவை பாரப்படுத்துவதில்லை; அது அவருடைய மகிழ்ச்சியைப் பிரகாசமாக்குகிறது.
மனந்திரும்புவதற்கான அழைப்பு தேவனின் அன்பின் வெளிப்பாடாகும். அந்த அழைப்பிற்கு ஆம் என்று சொல்வது நம்முடைய தெரிவித்தலாகும்.
பல வருடங்களுக்கு முன்பு, புளோரிடாவுக்கு ஒரு பயணம் சென்றிருந்தபோது, நான் வெளியே உட்கார்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். நாம் இப்போது சரியானவர்களாக இல்லாவிட்டாலும், நாம் இன்னும் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்பதை அதன் தலைப்பு உணர்த்தியது. அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண், “அது சாத்தியமென நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
நான் குழப்பத்துடன் மேலே பார்த்தேன், பிறகு அவள் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறாள் என்பதை உணர்ந்தேன். “சரி, எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை, ஆனால் அது எப்படி முடிகிறதென்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கேலியாக ஒன்றை நான் சொன்னேன்.
நான் காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! நான் அவளிடம் சொல்வேன், “ஆம், அது சாத்தியம்!” ஏனென்றால், பரலோகம் என்பது பரிபூரணமாக மரித்தவர்களுக்கு அல்ல; அது மன்னிக்கப்பட்டவர்களுக்கும், மீண்டும் மீண்டும் கிறிஸ்துவைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் உரியது.”
“மனந்திரும்புதலும் மன்னிப்பும் என்னைத் தவிர மற்ற அனைவருக்கும் பயனளிக்கிறது போல் தெரிகிறது” என்று சில சமயங்களில் உணருபவர்களிடம் இன்று நான் பேச விரும்புகிறேன். “நான் அதே தவறுகளைச் செய்து கொண்டே இருப்பதால், ஒருவேளை நான் இப்படித்தான் இருப்பேன்” என்று தனிப்பட்ட முறையில் யோசிப்பவர்கள். என்னைப் போலவே, உடன்படிக்கைப் பாதை மிகவும் செங்குத்தானதாக உணரும் நாட்களைக் கொண்டிருப்பவர்களுக்கு, இது கிட்டத்தட்ட ஒரு உடன்படிக்கை ஏற்றம் போன்றது.
ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புதமான ஊழியக்காரர், பிஜியைச் சேர்ந்த மூப்பர் காகா, தனது பிரிவு உபச்சார சாட்சியத்தில் இதேபோன்ற உணர்வைப் பகிர்ந்து கொண்டார்: “தேவன் என்னை நேசிக்கிறார் என்பது எனக்குத் தெரியும், ஆனால் சில நேரங்களில் நான் ஆச்சரியப்படுகிறேன், நான் அவரை நேசிக்கிறேன் என்பது தேவனுக்குத் தெரியுமா? ஏனென்றால் நான் பரிபூரணமானவன் அல்ல, இன்னும் தவறுகள் செய்கிறேன்.”
அந்த ஒரு மென்மையான, மனதைத் தொடும் கேள்வியில், நான் அடிக்கடி கவலைப்பட்டதை மூப்பர் காகா சரியாகச் சுருக்கமாகக் கூறினார். ஒருவேளை நீங்களும் யோசித்துக்கொண்டிருக்கலாம், “நான் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறேன், ஆனால் நான் உண்மையிலேயே முயற்சி செய்கிறேன் என்று தேவனுக்குத் தெரியுமா?” நான் தொடர்ந்து தவறு செய்யும்போது, நான் இன்னும் அவரை நேசிக்கிறேன் என்று தேவனுக்குத் தெரியுமா?
இதை ஒப்புக்கொள்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது, ஆனால் நான் எவ்வளவு சரியாக வாழ்கிறேன் என்பதன் மூலம் இரட்சகருடனான எனது உறவை அளவிடுவது வழக்கம். கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை என்றால் நான் ஒருபோதும் மனந்திரும்ப வேண்டியதில்லை என்று நினைத்தேன். நான் தவறுகள் செய்தபோது, அதாவது ஒவ்வொரு நாளும் “அவர் என் மீது மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார்” என்று நினைத்து, தேவனிடமிருந்து என்னைத் தூர விலக்கிக் கொண்டேன்.
அது உண்மையே அல்ல.
நீங்கள் இரட்சகரிடம் செல்ல, சுத்தமாகவோ அல்லது பரிபூரணமாகவோ ஆகும் வரை காத்திருந்தால், நீங்கள் முழு விஷயத்தையும் தவறவிட்டிருக்கிறீர்கள் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
கட்டளைகள் மற்றும் கீழ்ப்படிதலைப் பற்றி நாம் வேறு விதமாக சிந்தித்தால் என்ன செய்வது?
தேவன் நம் தவறுகளைப் பற்றி அக்கறை கொண்டாலும், நாம் தவறு செய்த பிறகு என்ன நடக்கிறது என்பதில் அவர் அதிக அக்கறை கொண்டுள்ளார் என்று நான் சாட்சியமளிக்கிறேன். நாம் மீண்டும் மீண்டும் அவரிடம் திரும்பப் போகிறோமா? இந்த உடன்படிக்கை உறவில் நாம் நிலைத்திருக்கப் போகிறோமா?
“[நீங்கள்] என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.” என்ற கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்டு, எல்லா கட்டளைகளையும் நீங்கள் கடைப்பிடிக்காததால் சோர்வடைந்ததாக உணரலாம். மனந்திரும்புவதும் ஒரு கட்டளை என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்! உண்மையில், இது வேதங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கட்டளையாக இருக்கலாம்.
ஆல்மாவின் தனிப்பாடலில், “நான் தூதனாயிருந்தால், என் இருதயத்தின் வாஞ்சையின்படியே, போய் …மனந்ததிரும்புதலை கூக்குரலிட்டிருக்க வேண்டும்,” அவர் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டி நம்மை அவமானப்படுத்த முயற்சிக்கவில்லை. நீங்களும் நானும் உலகில் துன்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக அவர் மனந்திரும்புதலுக்காக கூக்குரலிட விரும்பினார். ஆல்மா பாவத்தை வெறுத்ததற்கு ஒரு காரணம், அது நமக்கு வலியை ஏற்படுத்துகிறது என்பதால்தான்.
சில நேரங்களில், என் நெற்றியில் ஒரு ஒட்டி வைக்கும் குறிப்பைப் போல, கட்டளைகள்தான் வலியிலிருந்து விலகிச் செல்லும் பாதை என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் மனந்திரும்புதலும் கூட. நமது தீர்க்கதரிசி கூறினார், “இரட்சகர் நம்மை எப்போதும் நேசிக்கிறார், ஆனால் விசேஷமாக நாம் மனந்திரும்பும்போது.”
எனவே, “நீங்கள் மனந்திரும்புங்கள், மனந்திரும்புங்கள்!” என்று கர்த்தர் கூறும்போது, அவர் “நான் உங்களை நேசிக்கிறேன்” என்று சொல்வதை நீங்கள் கற்பனை செய்தால் என்ன? “நான் உங்களை நேசிக்கிறேன்!” திட்டுவதை அல்ல, மாறாக உங்களிடம் கெஞ்சுவதை கற்பனை செய்து பாருங்கள், உங்களுக்கு வலியை ஏற்படுத்தும் நடத்தையை எவ்வாறு விட்டுவிடுவது என்பதைக் காட்டி, இருளிலிருந்து வெளியேறி அவருடைய ஒளியின் பக்கம் திரும்ப உங்களை அழைக்கிறார்.
என் மகள் கார்லியின் தொகுதியில், ஒரு புதிய ஆசாரியர் திருவிருந்தை ஆசீர்வதிக்க மண்டியிட்டார், மேலும், “உமது குமாரனுடைய இரத்தத்தை நினைவுகூரும்படிக்கு” என்று சொல்வதற்குப் பதிலாக, அவர் கவனக்குறைவாக, “உம்முடைய குமாரனுடைய அன்பை நினைவுகூரும்படிக்கு” என்று கூறினார். அந்த வார்த்தைகளின் உண்மை புரிந்ததும் கார்லியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
நமது இரட்சகர் உங்களை நேசிப்பதால், தம்முடைய பாவநிவர்த்தியின் வேதனையை அனுபவிக்கத் தயாராக இருந்தார். உண்மையில், அவர் துன்பப்பட்டபோது “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷம்,” நீங்கள்தான்.
மனந்திரும்புவதற்கான அழைப்பு தேவனின் அன்பின் வெளிப்பாடாகும்.
அந்த அழைப்பிற்கு ஆம் என்று சொல்வது நம்முடைய தெரிவித்தலாகும்.
உங்களுக்குப் பிடித்த கிறிஸ்துவின் படத்தை கற்பனை செய்து பாருங்கள். இப்போது நீங்கள் அவருடைய வரத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அவர் மகிழ்ச்சியுடன் பிரகாசமாகச் சிரிப்பதை கற்பனை செய்து பாருங்கள், ஏனென்றால் அவர் “பூரணமான நம்பிக்கையின் பிரகாசம்.”
ஆம், உங்கள் மனந்திரும்புதல் இயேசு கிறிஸ்துவுக்கு பாரமாக இல்லை; அது அவருடைய மகிழ்ச்சியை பிரகாசமாக்குகிறது.
நாம் அதைக் கற்பிப்போமாக!
ஏனென்றால் மனந்திரும்புதல் நமக்குச் சிறந்த செய்தி!
நாம் ஒருபோதும் தவறு செய்யாமல் உடன்படிக்கைப் பாதையில் நிலைத்திருப்பதில்லை. நாம் ஒவ்வொரு நாளும் மனந்திரும்புவதன் மூலம் பாதையில் நிலைத்திருக்கிறோம்.
நாம் மனந்திரும்பும்போது, தேவன் நம்மை வெட்கப்படுத்தாமல், வேறு யாருடனும் ஒப்பிடாமல், அல்லது நம்மைத் திட்டாமல் மன்னிக்கிறார், ஏனென்றால் கடந்த வாரம் நாம் மனந்திரும்பிய அதே விஷயம் இதுதான்.
நாம் மண்டியிடுவதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவர் உற்சாகமாக இருக்கிறார். நாம் அவருக்குப் பிரியமானவர்கள் என்பதால் அவர் நம்மை மன்னிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.
அது உண்மை என உங்களுக்குத் தோன்றவில்லையா?
பிறகு ஏன் நமக்கு நம்புவது இவ்வளவு கடினமாக இருக்கிறது?!
பெரிய குற்றஞ்சாட்டுபவனும் ஏமாற்றுபவனுமான சாத்தான், நம்மை தேவனிடமிருந்து விலக்கி வைக்க வெட்கத்தைப் பயன்படுத்துகிறான். வெட்கம் என்பது மிகவும் கனமான இருள், ஆகவே அதை உங்கள் உடலில் இருந்து வெளியே எடுத்தால், அது ஒரு உண்மையான எடை அல்லது கனத்தை கொண்டிருக்கும் என்று உணர்கிறது.
“நீ என்ன யோசித்துக்கொண்டு இருந்தாய்? என்று உங்களைத் தாக்கும் குரல்தான் வெட்கம்.” “உங்களுக்கு எப்போதாவது ஏதாவது சரியாகப் புரிகிறதா?”
வெட்கம் என்பது நாம் தவறு செய்தோம் என்று சொல்வதில்லை; அது நாம்தான் நமது தவறுகள் என்று சொல்கிறது. “மறை” என்று கூட சொல்வதை நீங்கள் கேட்கலாம். சத்துரு தன் வல்லமைக்குட்பட்ட அனைத்தையும் செய்து, பாரத்தை உள்ளேயே வைத்திருக்கிறான், விலை மிக அதிகம் என்றும், இது இருளில் இருந்தால், எல்லா நம்பிக்கையையும் நீக்கிவிட்டால் அது எளிதாகிவிடும் என்றும் நமக்குச் சொல்கிறான்.
சாத்தான் நம்பிக்கையின் திருடன்.
நீங்கள் இதைக் கேட்க வேண்டும், அதனால் நான் இந்த வார்த்தைகளை சத்தமாகச் சொல்வேன்: நீங்கள் உங்கள் தலையில் உள்ள குரலோ அல்லது நீங்கள் செய்த தவறுகளோ அல்ல. நீங்களும் அதை சத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கலாம். சாத்தானிடம், “இன்று வேண்டாம்” என்று சொல்லுங்கள். அவனை உங்கள் பின்னால் தள்ளுங்கள்.
அந்த இழுவையை உணருங்கள், உங்கள் இரட்சகரை நோக்கி உங்களைத் திருப்பும் தெய்வீக துக்கம், அவருடைய கிருபை உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் நேசிப்பவர்களின் வாழ்க்கையிலும் நுழைவதைப் பாருங்கள். உடைந்த இருதயத்தை நாம் தைரியமாக அவரிடம் கொண்டு வரும் நிமிடத்தில், அவர் உடனடியாக அங்கே இருப்பார் என்று நான் உறுதியளிக்கிறேன்.
யாராவது நீரில் மூழ்குவதை நீங்கள் கண்டால், உங்கள் கையை நீட்டி அவர்களைக் காப்பாற்ற மாட்டீர்களா? உங்கள் நீட்டிய கையை உங்கள் இரட்சகர் நிராகரிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? உண்மையில், அவர் தண்ணீரில் மூழ்கி, எல்லாவற்றிற்கும் கீழே இறங்கி, நாம் ஒரு புதிய மூச்சை எடுக்க முடியும்படிக்கு நம்மை தூக்குவார், என்று நான் கற்பனை செய்கிறேன்! கிறிஸ்துவின் ஒளி பிரகாசிப்பதற்கும் கீழாக யாரும் மூழ்கிவிட முடியாது.
இரட்சகர் என்றென்றும் வெட்கத்தின் இருளை விட பிரகாசமாக இருக்கிறார். அவர் உங்கள் மதிப்பை ஒருபோதும் தாக்க மாட்டார். எனவே கூர்ந்து கவனியுங்கள்.
-
இந்தக் கை மதிப்பைக் குறிக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.
-
இந்தக் கை கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. ஒருவேளை நீங்கள் இன்று காலை விழித்தெழுந்து, அர்த்தமுள்ள ஜெபத்தைச் செய்து, தேவனுடைய குரலைக் கேட்க வேதத்தைத் தேடியிருக்கலாம். நீங்கள் நல்ல முடிவுகளை எடுத்துள்ளீர்கள், உங்களைச் சுற்றியுள்ள மக்களை கிறிஸ்துவைப் போல நடத்துகிறீர்கள். நீங்கள் பொது மாநாட்டைக் கேட்கிறீர்கள்! உங்கள் கீழ்ப்படிதல் இங்கிருக்கிறது!
-
அல்லது ஒருவேளை விஷயங்கள் அவ்வளவு நன்றாக நடக்காமலிருக்கலாம். பரலோகத்துடன் இணைவதற்கு அந்த சிறிய, எளிய விஷயங்களைச் செய்ய நீங்கள் சமீபத்தில் போராடி வருகிறீர்கள். நீங்கள் பெருமைப்படாத சில முடிவுகளை எடுத்துள்ளீர்கள்.
-
உன் மதிப்பு எங்கே? இந்தக் கை அசைந்திருக்கிறதா?
உங்கள் மதிப்பு கீழ்ப்படிதலுடன் பிணைக்கப்படவில்லை. உங்கள் மதிப்பு நிலையானது; அது ஒருபோதும் மாறுவதில்லை. இது தேவனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது, அதை மாற்ற உங்களாலோ அல்லது வேறு யாராலோ எதுவும் செய்ய முடியாது. கீழ்ப்படிதல் ஆசீர்வாதங்களைத் தருகிறது; அது உண்மைதான். ஆனால் மதிப்பு அவற்றில் ஒன்று அல்ல. உங்கள் முடிவுகள் உங்களை எங்கு கொண்டு சென்றாலும், உங்கள் மதிப்பு எப்போதும் “தேவனின் பார்வையில் பெரிதாயிருக்கிறது.”
நான் தவறுகள் செய்தாலும், கிறிஸ்துவுடன் உடன்படிக்கை உறவில் நிலைத்திருக்க விரும்புகிறேன், ஏன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
நான் டைவிங் பாடங்களைக் கற்று வளர்ந்தேன், நடுவர்கள் டைவை மதிப்பிடும்போது, அவர்கள் செயல்படுத்தப்படுவதைப் பார்க்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொண்டேன். கால் விரல்கள் நேராக கீழ்நோக்கி தண்ணீருக்குள் இறங்கியது, ஒரு சிறிய தெறிப்புடன் சரியாக செங்குத்தாக இருந்ததா? பின்னர் அவர்கள் அசாதாரணமான ஒன்றைச் செய்கிறார்கள். அவர்கள் சிரமத்தின் அளவைக் காரணியாக்குகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சிரமத்தின் அளவைக் கொண்டு டைவிங் செய்கிறார்கள். நீங்கள் டைவிங் செய்யும் சிரமத்தை உண்மையிலேயே அறிந்தவர் உங்கள் இரட்சகர் மட்டுமே. என்னை விரும்புகிற, என் இருதயத்தை அறிந்த, நான் எவ்வளவு கடினமாக முயற்சி செய்கிறேன் என்பதை அறிந்த ஒருவருடன் எனக்கு ஒரு உறவு வேண்டும்!
இருளின் மூடுபனி பயணிகளாகிய நம் அனைவரின் மீதும் இறங்குவதை அவர் அறிவார், நமது பயணம் அழுக்கான நதியைக் கடந்து செல்கிறது—எனவே நாம் இருப்புக்கோலைப் பிடித்திருந்தாலும் கூட, நம்மீது தெறிக்கப் போகிறது.
கிறிஸ்துவிடம் வருவது என்பது நம்பிக்கையுடன், அவருடைய கரங்கள் எப்போதும் உன்னை நோக்கி நீட்டப்பட்டுள்ளன என்ற வெளிப்படுத்தப்பட்ட உறுதியுடன், “நீர் எனக்கு உதவி செய்வீரா?” என்று கேட்பதாகும். மனந்திரும்புதலைப் பற்றிய இந்தப் புதிய பார்வை, இப்போது நமக்குப் பரிபூரண கீழ்ப்படிதல் இல்லாவிட்டாலும், நாம் அவரை நேசிப்பதால், மீண்டும் மீண்டும் பாசத்துடன் இப்போது கீழ்ப்படிதலை முயற்சி செய்கிறோம், தங்கியிருக்கத் தேர்வு செய்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
பொல்லாப்பை இனிச் செய்ய மனமில்லாமல், நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு மனதாயிருந்த பென்யமீன் ராஜாவின் ஜனங்களை நினைவில் கொள்கிறீர்களா? அவர்கள் கூடாரங்களை மூட்டை கட்டிவிட்டு, வீட்டுக்குப் போய், இன்னொரு தவறு செய்யவில்லை என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் இனி பாவம் செய்ய விரும்பவில்லை. அவர்களிடம் பாசமான கீழ்ப்படிதல் இருந்தது! அவர்கள் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களின் இருதயங்கள் திரும்பி, தேவனிடம் இசைந்திருந்தன!
ஒருமுறை, கடற்கரையில், ஒரு பறவை காற்றில் பறப்பதைக் கண்டேன், அதன் இறக்கைகளை மிகவும் கடினமாக, கிட்டத்தட்ட வெறித்தனமாக அடித்தது, ஆனால் அதே இடத்தில் இருந்தது. பின்னர் நான் மேலே இன்னொரு பறவையைக் கவனித்தேன். அது மேல்நோக்கி, காற்றில் எந்த பாரமின்றி தொந்தரவும் இல்லாமல் எளிதாக மிதந்து கொண்டிருந்தது. நாமாகவே இதைச் செய்ய முயற்சிப்பதற்கும், நமது இரட்சகரிடம் திரும்பி, “அவரது செட்டைகளின்கீழ் ஆரோக்கியத்துடன் இருக்க” நம்மை உயர்த்த அனுமதிப்பதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
ஆஸ்திரேலியாவில் ஊழியத் தலைவர்களாக, ஒவ்வொரு ஊழியக்காரருடனும் எங்கள் கடைசி சந்திப்பின்போது, 3 நேபி 17 பற்றிப் பேசினோம், அங்கு ஜனங்கள் இரட்சகருக்கு நெருக்கமாக இருந்தனர், மேலும் அவர் அவர்களுக்காக ஜெபிப்பதைக் கேட்க முடிந்தது. “இரட்சகர் உங்களுக்காக ஜெபிப்பதை நீங்கள் கேட்க முடிந்தால், அவர் என்ன சொல்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம்.
அவர்களின் பதில்களைக் கேட்பது என் வாழ்க்கையின் மிகவும் ஆவி நிறைந்த அனுபவங்களில் ஒன்றாகும். அந்த ஊழியக்காரர்கள் ஒவ்வொருவரும் நிறுத்திப் பேசுவார்கள், நாங்கள் அவர்களுக்கு நினைவூட்டும்போது அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகும், “நீங்கள் அனுபவிக்கும் சிரமத்தின் அளவை உங்கள் இரட்சகர் அறிவார். அவர் அதை உணர்ந்திருக்கிறார்!”
அந்த ஊழியக்காரர்கள் அமைதியாகவும் மென்மையாகவும் பகிர்ந்து கொண்டது இதுதான்: ஒரு சகோதரி கூறினார், “இயேசு பிதாவிடம், ‘அவள் தன்னால் முடிந்ததைச் செய்கிறாள்’ என்று கூறுவார்.” அவள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்கிறாள் என்பது எனக்குத் தெரியும்.’” ஒரு மூப்பர் சொன்னார், “அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் வைத்து, நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.
இதை முயற்சிப்போம். இன்றிரவு, நீங்கள் ஜெபிப்பதற்கு முன், இயேசு கிறிஸ்து அருகில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அவர் பிதாவிடம் உங்களின் பரிந்து பேசுபவராக இருக்கிறார். “என் இரட்சகர் என்னைப் பற்றி பிதாவிடம் என்ன சொல்வார்?” என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
பின்னர் அமைதியாக இருங்கள்.
உங்களைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்லும் அந்தக் குரலைக் கேளுங்கள்—உங்கள் சிறந்த நண்பர், இரட்சகர் மற்றும் பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவின் குரல், அவர்கள் உண்மையாகவே அங்கே இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் அன்பும் உங்கள் மதிப்பும் எப்போதும் பெரியவை, எதுவாக இருந்தாலும் சரி.
இருளில் அமர்ந்திருப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்து ஒளியைக் கொடுக்கிறார் என்பதற்கு நான் இங்கே சாட்சியாக நிற்கிறேன். எனவே, அந்த குரல் உங்களை ஒளிந்து கொள்ளச் சொல்லும் அந்த நாட்களில், நீங்கள் ஒரு இருண்ட அறையில் தனியாக ஒளிந்துகொள்ள வேண்டும் என்று உணரும்போது, தைரியமாக இருக்கவும், கிறிஸ்துவை விசுவாசிக்கவும் நான் உங்களை அழைக்கிறேன்! நடந்து சென்று ஒளியை ஏற்றுங்கள்—நமது முழுமையான நம்பிக்கையின் பிரகாசம்.
அவருடைய ஒளியில் குளித்த பிறகு, உங்களைச் சுற்றியுள்ள மக்களை நீங்கள் காண்பீர்கள், அவர்கள் தனிமையாக உணர்ந்தார்கள், ஆனால் இப்போது, விளக்கை எரியவிட்ட பிறகு, நீங்களும் அவர்களும், “இருட்டில் நாம் ஏன் இவ்வளவு பயந்தோம்?” என்று யோசிப்பீர்கள். ஏன் இவ்வளவு நேரம் அங்கேயே தங்கினோம்?”
“ஒளியின் கர்த்தர் உங்களைத் தம்முடைய கரங்களில் போர்த்தி, ஆறுதல்படுத்தி, தொடர்ந்து உங்களை நேசிப்பாராக.” நாம் அவரை நேசித்து மீண்டும் மீண்டும் அவரைத் தேர்ந்தெடுப்போமாக. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.