விசுவாசம்: நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் பிணைப்பு
நாம் இயேசு கிறிஸ்துவை நம்பும்போது விசுவாசம் துளிர்க்கிறது, அவருக்கு உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும்போது அது பூக்கிறது.
எனக்கு 17 வயதாக இருந்தபோது, என் நண்பன் ஜோஸ் லூயிஸுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதாக அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்தேன். அதனால் ஒரு நாள் காலை நாங்கள் பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்கினோம். எங்கள் பாடம் முடிந்து நான் குளத்தை விட்டு வெளியேறும்போது, என் நண்பன் உதவி கேட்டு கத்துவதைக் கேட்டேன். அவன் குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்தான்.
நான் தண்ணீரில் குதித்து, உதவிக்காக ஜெபித்துக் கொண்டே அவனை நோக்கி நீந்தினேன். நான் அவனது கையைப் பிடித்து அவனை மேற்பரப்புக்கு இழுக்கும்போது, என் நம்பிக்கையற்ற நண்பன் என் முதுகில் ஏறி நான் மூச்சுத் திணறச் செய்துவிட்டான். இப்போது நாங்கள் இருவரும் மூழ்கிக் கொண்டிருந்தோம். மேற்பரப்பை அடைய என்னால் முடிந்த அனைத்தையும் செய்து, தேவனிடமிருந்து ஒரு அதிசயத்திற்காக என் முழு பலத்தோடு ஜெபித்தேன். பின்னர், மெதுவாக ஆனால் சீராக, ஒரு கை என்னை குளத்தின் ஆழமற்ற முனையை நோக்கித் தள்ளி, எங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதை உணர்ந்தபோது தேவனின் வல்லமை வெளிப்பட்டது.
இந்த அனுபவம் தலைவர் ரசல் எம். நெல்சன் ஒருமுறை கற்பித்த ஒரு ஆழமான பாடத்தை உறுதிப்படுத்தியது: “மூழ்கிக்கொண்டிருப்பவர் காற்றைப் பிடிக்க மூச்சுத் திணறும்போது கொண்டிருக்கும் அதே தீவிரத்துடன் உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய வல்லமையை அடைய முயற்ச்சிக்கும்போது, இயேசு கிறிஸ்துவிடமிருந்து வரும் வல்லமை உங்களுடையதாக இருக்கும்.”
அன்புள்ள குழந்தைகளே, இளைஞர்களே, இன்று நான் உங்களிடம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் அத்தியாவசியக் கொள்கையைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.
கிறிஸ்துவில் விசுவாசம் என்பது அவரை நம்புவதாகும்.
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் அர்த்தம் என்ன? நாம் அவரை நம்புகிறோமா அல்லது அவர் உண்மையானவர் என்பதற்கு நமக்கு சாட்சி இருக்கிறதா? அது ஒரு தொடக்கமாக இருக்கலாம், ஆனால் அது அதை விட அதிகம். நீங்கள் எப்போதாவது விசுவாசத்தை நம்பிக்கை என்று நினைத்திருக்கிறீர்களா? நீங்கள் மிகவும் நம்பும் நபரைப் பற்றி யோசித்துப் பாருங்கள்— ஒருவேளை ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர். நீங்கள் ஏன் அவர்களை நம்புகிறீர்கள்? அவர்களின் நிலையான அன்பையும் உதவியையும் நீங்கள் பார்த்திருப்பதால் இருக்கலாம்.
நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, அவருடைய ஆசீர்வாதங்களை உணர்ந்து, அவருடன் நம்பிக்கையான உறவை வளர்த்துக் கொள்கிறோம்.
கிறிஸ்துவில் உங்கள் நம்பிக்கையை எவ்வாறு அதிகரிக்க முடியும்?
சமீபத்தில் நடந்த ஒரு இளைஞர் ஆராதனையில், “உங்கள் வாழ்க்கையில் பரலோக ஒளிக்கதிர் கிடைத்த ஒரு நேரத்தைப் பற்றி தியானிக்க” நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்!
கிறிஸ்துவைப் பற்றியும், அவருடைய பாவநிவர்த்தி மற்றும் சுவிசேஷம் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் மகிழ்ச்சியைப் பற்றியும் தியானிப்பதன் மூலம் தொடங்குங்கள். மேலும், உங்களுக்காகவும், உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும், வேதங்களில் உள்ள மக்களுக்காகவும் தேவன் இருந்த “ஆவிக்குரிய ரீதியான நிச்சயமான நினைவுகளை” பதிவு செய்யுங்கள். இப்போது, இந்த சாட்சியங்கள் உங்கள் இருதயத்தின் “மாம்ச பலகைகளில்” ஆவியானவர் பொறிக்கும் வரை உங்கள் வாழ்க்கைக்கு வல்லமையைக் கொண்டுவராது. எனவே இந்த அற்புதங்கள் சரியான நேரத்தில் நடக்க தேவன் என்ன செய்தார் என்பதை சிந்தித்துப் பதிவு செய்யுங்கள்.
அடுத்து, இந்தப் பயிற்சியை தேவனிடம் நெருங்கிச் செல்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். உங்கள் பரலோக பிதாவிடம் முதல் முறையாக ஜெபிப்பது போல் ஜெபியுங்கள். அவருடைய ஆசீர்வாதங்களுக்காக உங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்துங்கள். அவர் உங்களைப் பற்றியும், உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்கிறது என்பதைப் பற்றியும் எப்படி உணருகிறார் என்றும் அவரிடம் கேளுங்கள்.
நீங்கள் உண்மையுள்ளவராகவும் பணிவுள்ளவராகவும் இருந்தால், அவருடைய பதிலைக் கேட்டு, பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் தனிப்பட்ட மற்றும் நீடித்த உறவைத் தொடங்குவீர்கள். அது மட்டுமல்ல, உங்கள் மதப் பழக்கவழக்கங்களும் அர்த்தமுள்ளதாக மாறும்! உதாரணமாக, உங்கள் ஜெபங்கள், தனிப்பட்ட படிப்பு மற்றும் ஆலய வழிபாடு ஆகியவற்றை அவர்களை அறிந்துகொள்ளவும் அவர்களுடன் இருக்கவும் வாய்ப்புகளாக நீங்கள் எதிர்நோக்குவீர்கள்.
விசுவாசம் அர்ப்பணிப்புடன் செழிக்கிறது
நாம் இயேசு கிறிஸ்துவை நம்பும்போது விசுவாசம் துளிர்க்கிறது, அவருக்கு உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும்போது அது பூக்கிறது என்பதைக் கவனியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் உண்மையான உறவை விரும்பினால், உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றை அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் கௌரவிப்பதன் மூலம் அவருக்குக் காட்டுங்கள். இயேசு கிறிஸ்துவுடன் உடன்படிக்கைகள் செய்வது நம்பிக்கையை உருவாக்குகிறது. அவைகளை மதிப்பது நம்பிக்கையை வளர்க்கிறது.
ஒரு தனிப்பட்ட உதாரணத்தைப் பயன்படுத்துகிறேன்: நான் பாலகனாக இருந்தபோது, ஒரு நாள் என் அம்மா தனியாக அழுவதைக் கண்டேன். நான் ஏன் என்று அவளிடம் கேட்டபோது, அவள் மெதுவாக, “நீ ஒரு நல்ல பையனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றாள். அவளுடைய துயரத்திற்கு நான் காரணம் இல்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், வேறு யாரையும் போல அல்லாமல் என் அம்மாவை நான் நேசித்தேன், நம்பினேன், அவளுடைய வாழ்க்கை கஷ்டத்தைக் குறைக்க விரும்பினேன். அதனால், என் கண்களில் கண்ணீருடன், ஒன்பது வயது பிள்ளைக்கு இருக்கக்கூடிய திடமனதுடனும், அன்று நான் அவளுக்கு எப்போதும் சிறந்த மகனாக இருக்கவும், அவளைப் பெருமைப்படுத்தவும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தேன்.
அந்த வாக்குறுதி எனக்கு எவ்வளவு வலிமையைக் கொடுத்தது—இன்னும் என்னுடன் இருக்கிறது என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
அவளுடனான அந்த வாக்குறுதி என் வாழ்க்கையை வழிநடத்தும். தீர்மானங்களை எடுப்பதற்கு முன், என் செயல்கள் அவளைப் பிரியப்படுத்துமா என்று யோசிப்பேன். இந்த வாக்குறுதியின் பிணைப்பும், என் அம்மாவுடனான உறவும் என் வாழ்நாள் முழுவதும் என் நடத்தைக்கு நங்கூரமாக இருந்தன.
பல வருடங்களுக்குப் பிறகு, இயேசு கிறிஸ்துவை நான் நன்கு அறிந்தபோது, அவர் மீது என் நம்பிக்கையை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. நான் கர்த்தருடன் உடன்படிக்கைகளைச் செய்தேன், அவற்றை மதிக்க நான் முயன்றதால், அவர் என் பாவங்களை மன்னித்து, என் வாழ்க்கையை வழிநடத்தி, என் உள்மனம் வரை “அவர் என்னைத் தன் அன்பினால் நிரப்பினார்.” கிறிஸ்து எனக்குள் அவர் மீது ஆழ்ந்த அன்பு, மரியாதை மற்றும் விசுவாசத்தை வைத்துள்ளார்.
விசுவாசம் என்பது ஒரு செயல் கொள்கை, மற்றும் “விசுவாசம் இல்லாமல் [தேவனை] பிரியப்படுத்துவது சாத்தியமில்லை” என்பது ஏன் என்பது உங்களுக்குப் புரிகிறதா?
நீங்கள் அவருக்குப் பிரியமானதைச் செய்ய முயற்சிக்கும்போது, எகிப்தில் போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டபோது யோசேப்பைப் போல நீங்களும் சொல்வீர்கள்: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.?” எதிர்ப்பை எதிர்கொள்ளும்போது, இளம் தீர்க்கதரிசி ஜோசப்பைப் போல நீங்கள் கூறுவீர்கள்: “அதை நான் அறிவேன், அதை தேவன் அறிவாரென நான் அறிவேன், அதை என்னால் மறுக்க முடியாது, … அப்படிச் செய்வதால் தேவனை நான் சினம்கொள்ளச்செய்வேன் என்பதை நான் அறிந்திருந்தேன்.”
எனவே இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பது அர்ப்பணிப்பிலும் அன்பிலும் இணைக்கப்பட்ட நம்பிக்கையின் பிணைப்பாகும். வேறு வார்த்தைகளில் எனில், தேவனின் இரக்கமுள்ள அன்புக்கு நன்றியுடன் (hesed), அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, நாம் நமது அர்ப்பணிப்புள்ள அன்பைக் காட்டுகிறோம் (emunah).
கிறிஸ்து வாக்களிக்கிறார், “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே … பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.” நீங்கள் அவருக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதற்கு உறுதியளித்தால், அவர் உங்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவார்.
துன்பங்களை எதிர்கொள்ளும்போது விசுவாசம்
ஆனால் அவருடைய அற்புதங்கள் தேவைப்படும் இத்தகைய பாதகமான சூழ்நிலைகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? சவால்கள் தவிர்க்க முடியாதவை மற்றும் சில நேரங்களில் பயமுறுத்தும் என்றாலும், இபெ 2025 மாநாட்டு தலைப்பு அழைப்பது போல, அவரை நோக்கி தைரியமாக நடந்து செல்லுங்கள்: : “ஒவ்வொரு சிந்தனையிலும் என்னைப் பாருங்கள்; சந்தேகப்படாதே, பயப்படாதே.”
நீங்கள் எப்படி அவரை நோக்கி தைரியமாக நடக்க முடியும்?
நீங்கள் ஒரு அறியப்படாத பிரதேசத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். முன்னால் உள்ள தடைகளை கடக்க, உங்களுக்கு ஒரு ஒளி ஆதாரம் தேவை. தேவனிடம் நீங்கள் காட்டும் விசுவாசமும், அவருடனான உங்கள் தொடர்ச்சியான தொடர்புகளும் உங்கள் விளக்குக்கான எரிபொருளாகும். எனவே, நீங்கள் இருண்ட மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது, அவற்றை நோக்கி குருட்டுத்தனமாக நடப்பதற்குப் பதிலாக, நிச்சயமற்ற பாதையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளைப் பாய்ச்ச கிறிஸ்துவின் மீதான விசுவாச எண்ணெயால் நிரப்பப்பட்ட உங்கள் விளக்கை ஏற்றுவீர்கள். உங்கள் கடந்தகால அனுபவங்கள், உங்கள் பயணத்தில் கர்த்தர் உங்களைத் தாங்குவார் என்ற நம்பிக்கையை அதிகரிக்கும்.
கிறிஸ்துவில் உங்கள் நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள்?
நீச்சல் குளத்தில் என் கதை நினைவிருக்கிறதா? அந்த விரக்தியான தருணத்தில், நான் எதிர்பார்த்த விதத்தில் அற்புதம் நடந்தது, ஆனால் அது எப்போதும் நம் விருப்பப்படி நடக்கும் என்று தேவன் உத்தரவாதம் அளிக்கவில்லை. நமது விசுவாசம் கிறிஸ்துவின் மீதும், நமது நம்பிக்கை அவருடைய ஆசீர்வாதங்களில் மையமாகவும் இருக்க வேண்டும், அவர் அவற்றை அனுப்பத் தேர்ந்தெடுக்கும் போது. “அற்புதங்களை எதிர்பாருங்கள்,” ஆனால் “தேவன் நம் வாழ்வில் ஜெயங்கொள்ளட்டும்.”
தம்முடைய விசுவாசமிக்க மக்களுக்குக் தேவன் அளித்த வாக்குறுதிகள்
என் இளம் நண்பர்களே, நாங்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறோம், நம்புகிறோம்! நீங்கள் தேவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடன்படிக்கையின் பிள்ளைகள். நம்புங்கள் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வையுங்கள். அவர் உங்களை உண்மையிலேயே அவருடைய சீடர்களாக சாத்தியமாக்குவார்.
இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் உறவை வளர்க்க இன்றே தொடங்க உங்களை அழைக்கிறேன். அவரை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று உறுதிமொழி எடுங்கள்.
கிறிஸ்துவின் மீதான உங்கள் விசுவாசம், அன்பு மற்றும் நம்பிக்கை உங்கள் குணத்தையும் அடையாளத்தையும் அவரைப்போல வடிவமைக்கும். சாத்தானின் தாக்குதல்களை வெல்லும் தன்னம்பிக்கையையும் பலத்தையும் பெறுவீர்கள். நீங்கள் தவறுகள் செய்யும்போது, அவருடைய மன்னிப்புக்காக ஏங்குவீர்கள். இறுதியாக, உங்கள் எதிர்கால நம்பிக்கை பிரகாசமாக இருக்கும். அவர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் எதையும் நிறைவேற்றும் வல்லமையை உங்களிடம் ஒப்படைப்பார், அவருடைய பிரசன்னத்திற்குத் திரும்பும் வல்லமையையும் கூட.
“மீட்பின் அன்பைப் பற்றியதான பாடலை” பாடுவதிலிருந்தும், “அவருடைய அன்பின் கரங்களில் நித்தியமாக சூழப்பட்டிருப்பதிலிருந்தும்” வரும் மகிழ்ச்சியை நான் உங்களுக்கு சாட்சியமளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.