“அத்தியாயம் 3: பாடம் 4—இயேசு கிறிஸ்துவின் வாழ்நாள் சீஷர்களாக மாறுதல்” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)
“அத்தியாயம் 3: பாடம் 4,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
அத்தியாயம் 3: பாடம் 4
இயேசு கிறிஸ்துவின் வாழ்நாள் சீஷர்களாக மாறுதல்
இந்தப் பாடத்தைக் கற்பித்தல்
ஞானஸ்நானம் ஒரு மகிழ்ச்சியான நம்பிக்கையின் நியமம். நாம் ஞானஸ்நானம் பெறும்போது, தேவனைப் பின்பற்றி நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையில் நுழைய விரும்புகிறோம். வாழ்நாள் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கான நமது ஒப்புக்கொடுத்தலை நாம் காட்டுகிறோம்.
ஞானஸ்நானத்தில் நாம் செய்யும் உடன்படிக்கைகளின்படி இந்த பாடம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இது பின்வரும் முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது:
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற நமது உடன்படிக்கை
-
தேவனுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்வதற்கான நமது உடன்படிக்கை
நீங்கள் கற்பிக்கும் கொள்கைகளும் கட்டளைகளும் ஞானஸ்நானத்தின் போது அவர்கள் செய்யும் உடன்படிக்கையின் ஒரு பகுதி என்பதை மக்கள் புரிந்துகொள்ள உதவுங்கள். இந்தப் பாடத்தின் ஒவ்வொரு பகுதியும் “கிறிஸ்துவிடம் வரவும் … அவருடைய இரட்சிப்பில் பங்குபெறவும்” அவர்களுக்கு எப்படி உதவும் என்பதைக் காட்டுங்கள் (ஓம்னி 1:26; மேலும் 1 நேபி 15:14 பார்க்கவும்.)
இந்த பாடத்தை நீங்கள் பல சந்திப்புகளில் கற்பிக்க விரும்புவீர்கள். கற்பித்தல் சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல் அரிதாகவே இருக்க வேண்டும். பொதுவாக சிறிய பகுதிகளை உள்ளடக்கிய குறுகிய, சந்திப்புகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது.
நீங்கள் என்ன கற்பிப்பீர்கள், எப்போது கற்பிப்பீர்கள், எவ்வளவு நேரம் எடுப்பீர்கள் என்பதைத் திட்டமிடுங்கள். நீங்கள் கற்பிக்கும் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஆவியின் வழிகாட்டுதலைத் தேடுங்கள். ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்குத் தயாராவதற்கு மக்களுக்கு எது சிறந்தது என்பதைப் பொறுத்து கற்பிக்க உங்களுக்கு நெகிழ்வுத்தன்மை உள்ளது.
இந்தப் பாடத்தில் உள்ள சில பிரிவுகளில் குறிப்பிட்ட அழைப்புகள் உள்ளன. எப்படி, எப்போது அழைப்புகளை வழங்குவது என்பதை தீர்மானிப்பதில் உணர்த்துதல் தேடுங்கள். ஒவ்வொரு நபரின் புரிதலின் அளவையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் ஒரு படியாக சுவிசேஷத்தின்படி வாழ அவருக்கு உதவுங்கள்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது எடுத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற நமது உடன்படிக்கை
நாம் ஞானஸ்நானம் பெறும்போது, “முழு இருதயத்தோடும்” இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு உடன்படிக்கை செய்கிறோம். நாம் “கிறிஸ்துவினுடைய நாமத்தை, நம்மீது எடுத்துக்கொள்ள மனதுள்ளவர்களாயிருக்கிறோம்” என்று சாட்சியளிக்கிறோம் (2 நேபி 31:13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37ஐயும் பார்க்கவும்).
இயேசு கிறிஸ்து என்ற நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்வதன் அர்த்தம், நாம் அவரை நினைவு கூர்ந்து அவருடைய வாழ்நாள் சீஷர்களாக வாழ முயற்சிப்பதாகும். நாம் அவருடைய ஒளியை நம் முலமாக மற்றவர்களுக்குப் பிரகாசிக்கச் செய்கிறோம். நாம் நம்மை அவருடையவர்களாகக் கருதுகிறோம், நம் வாழ்வில் அவருக்கு முதலிடம் கொடுக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவை நாம் நினைவில் வைத்து பின்பற்றும் இரண்டு வழிகளை பின்வரும் பகுதிகள் விவரிக்கின்றன.
அடிக்கடி ஜெபியுங்கள்
ஜெபம் என்பது இருதயத்திலிருந்து வரும் பரலோக பிதாவுடனான எளிய உரையாடலாக இருக்கலாம். ஜெபத்தில், நாம் அவருடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுகிறோம். நாம் அவருக்கு அன்பையும், நமது ஆசீர்வாதங்களுக்கு நன்றியையும் தெரிவிக்கிறோம். உதவி, பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலையும் நாம் கேட்கிறோம். நாம் ஜெபங்களை முடிக்கும்போது, இடைநிறுத்தி செவிசாய்க்க நேரம் ஒதுக்க வேண்டும்.
“நீங்கள் எப்பொழுதும் என் நாமத்தினாலே பிதாவிடம் ஜெபிக்க வேண்டும்” என்று இயேசு போதித்தார் (3 நேபி 18:19, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது; மோசே 5:8 ஐயும் பார்க்கவும்). நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கும்போது, அவரையும் பரலோக பிதாவையும் நினைவுகூருகிறோம்.
நாம் ஜெபிக்கும்போது பின்பற்றுவதற்கு இயேசு முன்மாதிரி ஏற்படுத்தினார். வேதத்தில் உள்ள இரட்சகரின் ஜெபங்களைப் படிப்பதன் மூலம் ஜெபத்தைப் பற்றி நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம் (மத்தேயு 6:9–13; யோவான் 17 பார்க்கவும்).
நமது ஜெபங்கள் பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியிருக்கலாம்:
-
பரலோக பிதாவை அழைப்பதன் மூலம் தொடங்குங்கள்.
-
நாம் பெற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றியுணர்வு போன்ற நம் இருதயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.
-
கேள்விகளைக் கேளுங்கள், வழிகாட்டுதலை நாடுங்கள், ஆசீர்வாதங்களைக் கேளுங்கள்.
-
“இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்” என்று சொல்லி முடியுங்கள்.
காலையிலும் மாலையிலும் ஜெபிக்க வேண்டும் என்று வேதங்கள் அறிவுறுத்துகின்றன. இருப்பினும், எந்த நேரத்திலும் எந்த பின்னணியிலும் நாம் ஜெபிக்கலாம். நம்முடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபங்களுக்கு, நாம் ஜெபிக்கும்போது மண்டியிடுவது அர்த்தமுள்ளதாக இருக்கும். நம் இருதயத்தில் எப்போதும் ஒரு ஜெபம் இருக்க வேண்டும். (ஆல்மா 34:27; 37:36–37; 3 நேபி 17:13; 19:16 பார்க்கவும்.)
நமது ஜெபங்கள் சிந்தனையுடனும் இருதயத்திலிருந்தும் இருக்க வேண்டும். நாம் ஜெபிக்கும்போது, ஒரே விஷயங்களை ஒரே விதத்தில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
விசுவாசத்துடனும், நேர்மையுடனும், உண்மையான நோக்கத்துடனும் நாம் பெறும் பதில்களின்படி செயல்பட வேண்டும் என்று ஜெபிக்கிறோம். நாம் இதைச் செய்யும்போது, தேவன் நம்மை வழிநடத்துவார், நல்ல முடிவுகளை எடுக்க உதவுவார். நாம் தேவனுக்கு நெருக்கமாக உணர்வோம். அவர் நமக்கு புரிதலையும் சத்தியத்தையும் கொடுப்பார். அவர் நமக்கு ஆறுதலையும், சமாதானத்தையும், பலத்தையும் அருளுவார்.
வேதப் படிப்பு
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Prayer”
-
Bible Dictionary: “Prayer”
-
Gospel Topics: “Prayer”
வேதங்களை படியுங்கள்
நேபி போதித்தான், “கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பாருங்கள்; ஏனெனில் இதோ, நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும், கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லும்.” (2 நேபி 32:3; மேலும் 31:20 பார்க்கவும்).
வேதங்களைப் படிப்பது இயேசு கிறிஸ்துவை நினைவுகூரவும் பின்பற்றவும் இன்றியமையாத வழியாகும். வேதங்களில் அவருடைய வாழ்க்கை, ஊழியம், போதனைகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறோம். அவருடைய வாக்குத்தத்தங்களையும் கற்றுக்கொள்கிறோம். நாம் வேதத்தை வாசிக்கும்போது, அவருடைய அன்பை அனுபவிக்கிறோம். நம் ஆத்துமா விரிவடைகிறது, அவர் மீதான விசுவாசம் அதிகரிக்கிறது, நம் மனம் ஒளிமயமாகிறது. அவருடைய தெய்வீக ஊழியத்தின் நமது சாட்சியங்கள் வலுப்பெறுகின்றன.
நாம் இயேசுவின் வார்த்தைகளை நம் வாழ்வில் கடைபிடிக்கும்போது அவரை நினைவுகூர்வோம் பின்பற்றுவோம். நாம் தினசரி வேதங்களை, குறிப்பாக மார்மன் புஸ்தகத்தைப் படிக்க வேண்டும்.
பரிசுத்த வேதாகமம், மார்மன் புஸ்தகம், கோட்பாடும் உடன்படிக்கைகளும் மற்றும் விலையேறப்பெற்ற முத்து ஆகியவை பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் வேதங்கள். இவை “தரமான புஸ்தகங்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன.
வேதப் படிப்பு
-
யோவான் 20:31
-
2 தீமோத்தேயு 3:14–17
-
2 பேதுரு 1:20–21
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Scriptures”
-
Gospel Topics: “Scriptures”
தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கான நமது உடன்படிக்கை
குறிப்பு: இந்த பிரிவில் கட்டளைகளை கற்பிக்க பல வழிகள் உள்ளன. உதாரணமாக, ஒரு சில சந்திப்புகளில் நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கலாம். அல்லது முதல் மூன்று பாடங்களில் சிலவற்றை நீங்கள் கற்பிக்கலாம். கட்டளைகளை கற்பிக்கும் போது, ஞானஸ்நான உடன்படிக்கை மற்றும் இரட்சிப்பின் திட்டத்துடன் அவற்றை இணைக்க வேண்டும்.
நாம் ஞானஸ்நானம் பெறும்போது, “அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வோம்” என்று தேவனுடன் உடன்படிக்கை செய்கிறோம். (மோசியா 18:10; ஆல்மா 7:15).
தேவன் நம்மை நேசிப்பதால் நமக்குக் கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். இப்போதும் நித்தியத்திலும் நமக்குச் சிறந்ததையே அவர் விரும்புகிறார். நம்முடைய பரலோக பிதாவாக, நம்முடைய ஆவிக்குரிய மற்றும் சரீர நல்வாழ்வுக்கு நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். எது நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்பதும் அவருக்குத் தெரியும். ஒவ்வொரு கட்டளையும் ஒரு தெய்வீக வரம், நமது தீர்மானங்களை வழிநடத்தவும், நம்மைப் பாதுகாக்கவும், வளர உதவவும் வழங்கப்படுகிறது.
நாம் பூமிக்கு வந்ததற்கு ஒரு காரணம், நமது சுயாதீனத்தை ஞானமாகப் பயன்படுத்துவதன் மூலம் கற்றுக்கொள்வதும் வளருவதும் ஆகும் (ஆபிரகாம் 3:25 பார்க்கவும்). தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுப்பது—மற்றும் நாம் தவறு செய்யும்போது மனந்திரும்புவது—அடிக்கடி சவாலான இந்த உலகப் பயணத்தைத் தொடர உதவுகிறது.
தேவனின் கட்டளைகள் பெலன் மற்றும் ஆசீர்வாதங்களின் ஆதாரமாக உள்ளன (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 82:8– 9 பார்க்கவும்) கட்டளைகளைக் கடைபிடிப்பதன் மூலம், அவை நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் பாரமான விதிகள் அல்ல என்பதை அறிந்து கொள்கிறோம். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது. கீழ்ப்படிதல் என்பது பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிச்சத்தையும் அறிவையும் கொண்டுவரும் பெலத்தின் ஆதாரமாகும். இது நமக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் தேவனின் பிள்ளைகளாகிய நமது தெய்வீக திறனை அடைய உதவுகிறது.
நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, நம்மை ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்களிக்கிறார். சில ஆசீர்வாதங்கள் சில குறிப்பிட்ட கட்டளைகளுக்கானவை. அவருடைய மேலான ஆசீர்வாதங்கள் இந்த வாழ்க்கையில் சமாதானம் மற்றும் வரவிருக்கும் உலகில் நித்திய ஜீவன். (மோசியா 2:41; ஆல்மா 7:16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7; 59:23; 93:28; 130:20–21.)
தேவனின் ஆசீர்வாதங்கள் ஆவிக்குரியவை மற்றும் தற்காலிகமானவை. சில சமயங்களில், அவைகளுக்காகக் காத்திருப்பதில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும், அவருடைய விருப்பத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப அவைகள் வரும் என்று நம்பவேண்டும் (மோசியா 7:33; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:68 பார்க்கவும்). சில ஆசீர்வாதங்களைப் புரிந்துகொள்ள, நாம் ஆவிக்குரிய ரீதியில் கவனத்துடன் இருக்க வேண்டும். எளிமையான மற்றும் சாதாரணமான வழிகளில் வரும் ஆசீர்வாதங்களுக்கு இது குறிப்பாக உண்மையாகும்.
சில ஆசீர்வாதங்கள் பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே தெரியும். மற்றவை இந்த வாழ்க்கைக்குப் பிறகு வரை வராமலிருக்கலாம். தேவனின் ஆசீர்வாதங்களின் நேரம் அல்லது தன்மையைப் பொருட்படுத்தாமல், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ நாம் முயற்சி செய்யும்போது அவை வரும் என்று நாம் உறுதியாக நம்பலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 82:10 பார்க்கவும்).
தேவன் தம்முடைய எல்லா பிள்ளைகளையும் பரிபூரணமாக நேசிக்கிறார். அவர் நம்முடைய பலவீனத்தில் பொறுமையாக இருக்கிறார், நாம் மனந்திரும்பும்போது அவர் மன்னிக்கிறார்.
இரண்டு மிகப்பெரிய கட்டளைகள்
“நியாயப்பிரமாணத்தில் எந்தக் கட்டளை பிரதானமானது?” என இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் பதிலளித்தார், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.”
“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,” என்ற இரண்டாவது பெரிய கட்டளையானது முதல் கட்டளையைப் போன்றது என்று இயேசு சொன்னார். (மத்தேயு 22:36–39). “இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை” (மாற்கு 12:31).
தேவனுடைய ஆவிப் பிள்ளைகளாகிய நமக்கு அன்பின் பெரும் திறன் உள்ளது. இது நமது ஆவிக்குரிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். தேவனை முதலில் நேசிப்பதும், நம் அண்டை வீட்டாரை நேசிப்பதும் ஆகிய இரண்டு பெரிய கட்டளைகளை கைக்கொள்வது இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் வரையறுக்கும் பண்பு.
தேவனின் அன்பு
தேவன் மீதுள்ள நமது அன்பைக் காட்ட பல வழிகள் உள்ளன. அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடிக்க முடியும் (யோவான் 14:15, 21 பார்க்கவும்). நம் விருப்பத்தை அவருக்குச் சமர்ப்பித்து, நம் வாழ்வில் அவருக்கு முதலிடம் கொடுக்கலாம். நம் ஆசைகள், எண்ணங்கள் மற்றும் இருதயங்களை அவர் மீது மையப்படுத்தலாம் (ஆல்மா 37:36 பார்க்கவும்). அவர் நமக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்காக நன்றியுடன் வாழலாம்—மேலும் அந்த ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்வதில் தாராளமாக இருக்க வேண்டும் (மோசியா 2:21–24; 4:16–21 பார்க்கவும்). ஜெபம் மற்றும் பிறருக்கு சேவை செய்வதன் மூலம், அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவும் ஆழப்படுத்தவும் முடியும்.
மற்ற கட்டளைகளைப் போலவே, தேவனை நேசிக்க வேண்டும் என்ற கட்டளையும் நம் நன்மைக்காகவே உள்ளது. நாம் நேசிப்பது நாம் தேடுவதைத் தீர்மானிக்கிறது. நாம் தேடுவது, நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. நாம் என்ன நினைக்கிறோம் மற்றும் என்ன செய்கிறோம் என்பது நாம் யார்—மற்றும் நாம் யாராக மாறுவோம் என்பதை தீர்மானிக்கிறது.
பிறரிடத்தில் அன்பு
பிறரை நேசிப்பது தேவன் மீதுள்ள நம் அன்பின் விரிவாக்கம். மற்றவர்களை நேசிப்பதற்கான பல வழிகளை இரட்சகர் நமக்குக் கற்றுக் கொடுத்தார் (உதாரணமாக, பார்க்கவும் லூக்கா 10:25–37 மற்றும் மத்தேயு 25:31–46). நாம் அவர்களை நமது இருதயங்களிலும் வாழ்விலும் அணுகி வரவேற்கிறோம். சேவை செய்வது—சிறிய வழிகளில் கூட நம்மைக் கொடுப்பதன் மூலம் நாம் நேசிக்கிறோம். தேவன் நமக்குக் கொடுத்த வரங்களைப் பயன்படுத்தி மற்றவர்களை ஆசீர்வதிக்கிறோம்.
மற்றவர்களை நேசிப்பதில் பொறுமையாகவும், கனிவாகவும், நேர்மையாகவும் இருப்பது அடங்கும். இலவசமாக மன்னிப்பதும் இதில் அடங்கும். எல்லா மக்களையும் மரியாதையுடன் நடத்துவது என்று பொருள்.
நாம் ஒருவரை நேசிக்கும்போது, நாமும் அந்த நபரும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். நம் இருதயங்கள் வளர்கின்றன, நம் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக மாறும், நம் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
ஆசீர்வாதங்கள்
தேவனை நேசிப்பதும், நம் அண்டை வீட்டாரை நேசிப்பதும் ஆகிய இரண்டு பெரிய கட்டளைகள் தேவனின் அனைத்து கட்டளைகளுக்கும் அடித்தளம் (மத்தேயு 22:40 பார்க்கவும்). நாம் முதலில் தேவனை நேசித்து, மற்றவர்களையும் நேசிக்கும்போது, நம் வாழ்க்கையில் உள்ள அனைத்தும் அதன் சரியான இடத்திற்கு நகரும். இந்த அன்பு நமது பார்வை, நமது நேரத்தைப் பயன்படுத்துதல், நாம் முயலும் ஆர்வங்கள் மற்றும் நமது முன்னுரிமைகளின் வரிசை ஆகியவற்றைப் பாதிக்கும்.
வேதப் படிப்பு
-
மத்தேயு 22:36–40; 25:31–46
-
மாற்கு 12:28–33
-
லூக்கா 10:25–37
-
யோவான் 13:34–35; 14:15, 21
-
1 யோவான் 4:7–8, 20–21; 5:3
-
யோசுவா 22:5
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Charity,” “Love”
-
Gospel Topics: “Charity,” “Love”
தீர்க்கதரிசியைப் பின்பற்றுங்கள்
தேவன் தீர்க்கதரிசிகளை பூமியில் தமது பிரதிநிதிகளாக அழைக்கிறார். அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம், அவர் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் எச்சரிக்கைகளை வழங்குகிறார்.
பிற்காலத்தின் முதல் தீர்க்கதரிசியாக ஜோசப் ஸ்மித்தை தேவன் அழைத்தார் (பாடம் 1 பார்க்கவும்). ஜோசப் ஸ்மித்தின் பின்வந்தவர்களும் அவருடைய சபையை வழிநடத்த தேவனால் அழைக்கப்பட்டனர், இன்று அதை வழிநடத்தும் தீர்க்கதரிசி உட்பட. ஜீவிக்கும் தீர்க்கதரிசியின் தெய்வீக அழைப்பின் நம்பிக்கையை நாம் பெற்று, அவருடைய போதனைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் போதனைகள் நற்பண்புகள் மாறிவரும் உலகில் நித்திய சத்தியத்தின் நங்கூரத்தை வழங்குகின்றன. நாம் தேவனின் தீர்க்கதரிசிகளைப் பின்பற்றும்போது, உலகின் குழப்பமும் சண்டையும் நம்மை ஆட்கொள்ளாது. இந்த வாழ்க்கையில் நாம் அதிக மகிழ்ச்சியைக் காண்போம் மற்றும் நமது நித்திய பயணத்தின் இந்த பகுதிக்கான வழிகாட்டுதலைப் பெறுவோம்.
வேதப் படிப்பு
-
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34–43
-
எபேசியர் 2:19–20; 4:11–14
-
ஆமோஸ் 3:7.
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Prophet,” “Prophetess,” “Prophecy, Prophesy”
-
Gospel Topics: “Prophets,” “Prophecy”
பத்துக் கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும்
தேவன் தனது மக்களை வழிநடத்துவதற்காக மோசே என்ற பூர்வகால தீர்க்கதரிசிக்கு பத்து கட்டளைகளை வெளிப்படுத்தினார். இந்தக் கட்டளைகள் நம் நாளுக்கும் பொருந்தும். தேவனை வணங்கவும், பயபக்தி காட்டவும் அவை நமக்குக் கற்பிக்கின்றன. ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கின்றன.
-
“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.” (யாத்திராகமம் 20:3). பிற “கடவுள்கள்” உடைமைகள், அதிகாரம் அல்லது பிரபலம் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கலாம்.
-
“யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்” (யாத்திராகமம் 20:4).
-
“உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:7).
-
“ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” (யாத்திராகமம் 20:8).
-
“உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” (யாத்திராகமம் 20:12).
-
“கொலை செய்யாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:13).
-
“விபசாரம் செய்யாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:14).
-
“களவு செய்யாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:15).
-
“பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:16).
-
“யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:17).
வேதப் படிப்பு
-
யாத்திராகமம் 20:1–17
-
உபாகமம் 5:6–21
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Commandments, the Ten”
-
Gospel Topics: “Ten Commandments”
கற்புடைமை நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தல்
நமது இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான தேவனின் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக கற்புடைமை நியாயப்பிரமாணம் உள்ளது. கணவன்-மனைவி இடையேயான பாலியல் நெருக்கம் குழந்தைகளை உருவாக்குவதற்கும் திருமணத்திற்குள் அன்பை வெளிப்படுத்துவதற்கும் தேவனால் நியமிக்கப்பட்டது. இந்த நெருக்கமும் மனித வாழ்க்கையை உருவாக்கும் வல்லமையையும் அழகாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும்.
தேவனின் கற்புடைமை நியாயப்பிரமாணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான சட்டப்பூர்வ திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகளைத் தவிர்ப்பதாகும். இந்த நியாயப்பிரமாணம், திருமணத்திற்குப் பிறகு ஒருவரின் மனைவிக்கு முழுமையான இணக்கத்தையும் நேர்மையையும் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
கற்புடைமை நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்க உதவும் வகையில், நம் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் சுத்தமாக இருக்குமாறு தீர்க்கதரிசிகள் அறிவுறுத்தியுள்ளனர். எந்த வடிவத்திலும் நாம் ஆபாச படத்தை தவிர்க்க வேண்டும். கற்புடைமை நியாயப்பிரமாணத்தின்படி, நம் நடத்தையிலும் தோற்றத்திலும் அடக்கமாக இருக்க வேண்டும்.
ஞானஸ்நானம் பெறுபவர்கள் கற்புடமை நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு
தேவனின் பார்வையில், கற்புடைமை நியாயப்பிரமாணத்தை மீறுவது மிகவும் கொடுமையானது (யாத்திராகமம் 20:14; எபேசியர் 5:3 ஐப் பார்க்கவும்). உயிரை உருவாக்க அவர் கொடுத்த பரிசுத்த வல்லமையை அது தவறாகப் பயன்படுத்துகிறது. ஆனால் நாம் இந்த நியாயப்பிரமாணத்தை மீறியிருந்தாலும் அவர் தொடர்ந்து நம்மை நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் மூலம் மனந்திரும்பி சுத்தமாவதற்கு அவர் நம்மை அழைக்கிறார். பாவத்தின் விரக்தியை தேவனின் மன்னிப்பின் இனிமையான சமாதானத்தால் மாற்றலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42–43 பார்க்கவும்).
ஆசீர்வாதங்கள்
தேவன் நம்மையும் அவர் பூமிக்கு அனுப்பும் ஆவிக் குழந்தைகளையும் ஆசீர்வதிக்க கற்புடைமை நியாயப்பிரமாணத்தை கொடுத்துள்ளார். இந்த நியாயப்பிமாணத்திற்குக் கீழ்ப்படிவது தனிப்பட்ட சமாதானம் மற்றும் நம் குடும்ப உறவுகளில் அன்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றிற்கு அவசியம்.
நாம் கற்புடைமை நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்கும்போது, திருமணத்திற்கு வெளியே உள்ள பாலியல் நெருக்கத்தால் வரும் ஆவிக்குரிய தீங்குகளிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம். அத்தகைய உறவுகளுடன் அடிக்கடி வரும் உணர்ச்சி மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகளையும் நாம் தவிர்ப்போம். தேவனுக்கு முன்பாக நம் நம்பிக்கையில் வளருவோம் ( கோட்பாடுகளும் உடன்படிக்கைகளும் 121:45 பார்க்கவும்). பரிசுத்த ஆவியின் செல்வாக்கிற்கு நாம் மிகவும் திறந்த மனதுடனிருப்போம். நமது குடும்பங்களை நித்தியத்திற்கும் இணைக்கும் பரிசுத்த உடன்படிக்கைகளை ஆலயத்தில் செய்ய நாம் சிறப்பாக தயாராக இருப்போம்.
வேதப் படிப்பு
-
மத்தேயு 5:27–28
-
எபேசியர் 5:3–5.
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Chastity”
-
Gospel Topics: “Chastity”
தசமபாக நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தல்
சபையில் உறுப்பினராக இருப்பதற்கான ஒரு பெரிய சிலாக்கியம் தசமபாகம் செலுத்துவதற்கான வாய்ப்பாகும். நாம் தசமபாகம் கொடுக்கும்போது, தேவனின் பணியை மேலும் அதிகரிக்க உதவுகிறோம், அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறோம்.
தசமபாகம் என்ற நியாயப்பிரமாணம் பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்து வந்தது. உதாரணத்திற்கு, ஆபிரகாம் தீர்க்கதரிசி தன்னிடம் இருந்த எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் (ஆல்மா 13:15; ஆதியாகமம் 14:18–20 பார்க்கவும்).
தசமபாகம் என்ற வார்த்தைக்கு பத்தில் ஒன்று என்று அர்த்தம். நாம் தசமபாகம் செலுத்தும்போது, நமது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை சபைக்கு நன்கொடையாக அளிக்கிறோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 119: 3–4 பார்க்கவும். வருமானத்திலிருந்தும் என்பது வருமானம் என புரிந்துகொள்ளப்படுகிறது). நம்மிடம் இருப்பதெல்லாம் தேவன் கொடுத்த பரிசு. நாம் தசமபாகம் செலுத்தும்போது, அவர் நமக்குக் கொடுத்ததில் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் அவருக்கு நன்றியைக் காட்டுகிறோம்.
தசமபாகம் கொடுப்பது விசுவாசத்தின் வெளிப்பாடு. தேவனை மதிக்கும் வழியும் கூட. நாம் “முதலில் தேவனுடைய ராஜ்யத்தைத் தேட வேண்டும்” (மத்தேயு 6:33) என்று இயேசு போதித்தார், அதைச் செய்வதற்கான ஒரு வழி தசமபாகம்.
தசமபாக நிதிகளின் பயன்பாடு
தசமபாக நிதி பரிசுத்தமானது. நாம் நமது தசமபாகத்தை ஆயத்தின் உறுப்பினருக்கு வழங்குகிறோம் அல்லது பல பகுதிகளில் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். ஆயம் தசமபாகம் பெற்றவுடன், அவர்கள் அதை சபை தலைமையகத்திற்கு அனுப்புகிறார்கள்.
பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமம் மற்றும் தலைமை ஆயம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ஆலோசனைக்குழு தேவனின் பணியில் தசமபாக நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 120:1 ஐப் பார்க்கவும்). இந்த பயன்பாடுகளில் அடங்குபவை:
-
ஆலயங்கள் மற்றும் கூடுமிடங்களை கட்டி பராமரித்தல்.
-
வேதங்களை மொழிபெயர்த்து வெளியிடுதல்.
-
உள்ளூர் சபைகளின் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஆதரித்தல்.
-
உலகம் முழுவதிலும் உள்ள ஊழியப் பணியை ஆதரித்தல்.
-
குடும்ப வரலாற்றுப் பணியை ஆதரித்தல்.
-
பள்ளிகள் மற்றும் கல்விக்கு நிதியளித்தல்.
உள்ளூர் சபைத் தலைவர்களுக்கு ஊதியமளிக்க தசமபாகம் பயன்படுத்தப்படுவதில்லை. ஊதியம் எதுவும் இல்லாமல் தானாக முன்வந்து சேவை செய்கிறார்கள்.
ஆசீர்வாதங்கள்
நாம் தசமபாகம் செலுத்தும்போது, நாம் கொடுப்பதை விட மிக அதிகமான ஆசீர்வாதங்களை தேவன் வாக்களிக்கிறார். அவர் “வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பார்” (மல்கியா 3:10; வசனங்கள் 7–12 பார்க்கவும்). இந்த ஆசீர்வாதங்கள் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமானதாக இருக்கலாம்.
வேதப் படிப்பு
-
மத்தேயு 6:33
-
எபிரெயர் 7:1–2
-
ஆதியாகமம் 14:18–20.
-
லேவியராகமம் 27:30–33
-
மல்கியா 3:7–12
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Tithes, Tithing”
-
Gospel Topics: “Tithing”
ஞான வார்த்தைக்கு கீழ்ப்படியுங்கள்
ஆரோக்கியத்திற்கான கர்த்தரின் நியாயப்பிரமாணம்
நமது சரீரங்கள் தேவனின் பரிசுத்தமான வரங்கள். நாம் ஒவ்வொருவருக்கும் அவரைப் போல் ஆக ஒரு சரீரம் தேவை. நமது சரீரங்கள் மிகவும் முக்கியமானவை, வேதங்கள் அவற்றை ஆலயங்களுடன் ஒப்பிடுகின்றன (1 கொரிந்தியர் 6:19–20 பார்க்கவும் ).
நாம் நம் சரீரத்தை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இதைச் செய்ய நமக்கு உதவ, அவர் ஞான வார்த்தை என்று அழைக்கப்படும் ஆரோக்கிய நியாயப்பிரமாணத்தை வெளிப்படுத்தினார். இந்த வெளிப்பாடு, ஆரோக்கியமான உணவுகளை உண்பது பற்றியும், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது பற்றியும் கற்றுக்கொடுக்கிறது—குறிப்பாக மது, புகையிலை மற்றும் சூடான பானங்கள் (டீ மற்றும் காபி என்று பொருள்).
ஞான வார்த்தையின் தொனியில், தற்காலத் தீர்க்கதரிசிகள் தீங்கு விளைவிக்கும், சட்டவிரோதமான அல்லது அடிமையாக்கும் பிற பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்துள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று தீர்க்கதரிசி எச்சரித்துள்ளனர். (உங்கள் புவியியல் பகுதியில் உள்ள மற்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாதா என்ற கேள்விகளுக்கு உங்கள் ஊழியத் தலைவர் பதிலளிப்பார்.)
ஆசீர்வாதங்கள்
நமது சரீர மற்றும் ஆவிக்குரிய நல்வாழ்வுக்காக கர்த்தர் ஞான வார்த்தையை வழங்கினார். இந்தக் கட்டளையை நாம் கடைப்பிடிக்கும்போது அவர் பெரிய ஆசீர்வாதங்களை வாக்களிக்கிறார். இந்த ஆசீர்வாதங்களில் ஆரோக்கியம், ஞானம், அறிவின் பொக்கிஷங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை அடங்கும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:18–21 பார்க்கவும்).
ஞான வார்த்தைக்குக் கீழ்ப்படிவது, பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களை நாம் அதிகமாக ஏற்றுக்கொள்ள உதவும். நாம் அனைவரும் உடல்நல சவால்களை அனுபவித்தாலும், இந்த நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்படிவது உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றில் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
ஞானஸ்நானம் பெறுபவர்கள் ஞான வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
அடிமைத்தனத்துடன் போராடும் மக்களுக்கு உதவுவது பற்றிய வழிகாட்டுதலுக்கு, அத்தியாயம் 10ஐப் பார்க்கவும்.
வேதப் படிப்பு
-
1 கொரிந்தியர் 6:19–20
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Word of Wisdom”
-
Gospel Topics: “Health,” “Word of Wisdom”
-
Life Help: “Addiction”
ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரியுங்கள்
ஓய்வு மற்றும் ஆராதனைக்கான ஒரு நாள்
ஓய்வுநாள் என்பது ஒவ்வொரு வாரமும் நம் அன்றாட உழைப்பிலிருந்து ஓய்வெடுக்கவும், அவரை ஆராதிக்கவும் தேவன் நமக்கு ஒதுக்கியிருக்கும் ஒரு பரிசுத்த நாள். மோசேக்குக் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் ஒன்று “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” (யாத்திராகமம் 20:8; மேலும் வசனங்கள் 9–11 பார்க்கவும்).
ஒரு தற்கால வெளிப்பாட்டில், ஓய்வுநாள் என்பதை கர்த்தர் மீண்டும் உறுதிப்படுத்தினார், “உங்கள் பிரயாசங்களிலிருந்து ஓய்ந்திருக்கவும், உன்னதமானவருக்கு உங்கள் துதிகளை செலுத்தவும் உங்களுக்கு இந்த நாள் மெய்யாகவே நியமிக்கப்பட்டிருக்கிறது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:10). ஓய்வுநாள் மகிழ்ச்சி, ஜெபம் மற்றும் நன்றி செலுத்தும் நாளாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் (வசனங்கள் 14–15) பார்க்கவும்.
நமது ஓய்வுநாள் ஆராதனையின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாரமும் திருவிருந்துக் கூட்டத்தில் கலந்து கொள்கிறோம். இக்கூட்டத்தில், இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பாவநிவர்த்தியையும் நினைவுகூரும் வகையில், தேவனை ஆராதித்து, திருவிருந்தில் பங்கு கொள்கிறோம். நாம் திருவிருந்தில் பங்குபெறும்போது, தேவனுடனான நமது உடன்படிக்கைகளை புதுப்பித்து, நம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். திருவிருந்தின் நியமம் நமது ஓய்வுநாள் அனுசரிப்பின் மையமாகும்.
சபையில் நாம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பற்றி மேலும் அறியும் வகுப்புகளிலும் பங்கேற்கிறோம். வேதங்களை ஒன்றாகப் படிக்கும்போது நம்முடைய விசுவாசம் வளர்கிறது. நாம் ஒருவருக்கொருவர் சேவை செய்து பலப்படுத்தும்போது நம் அன்பு வளர்கிறது.
ஓய்வுநாளில் நமது பிரயாசங்களில் இருந்து ஓய்வெடுப்பதுடன், அதை ஒரு பொதுவான நாளாக உணரும் வகையில் கடைக்கு செல்லுதல் மற்றும் பிற செயல்பாடுகளை நாம் தவிர்க்க வேண்டும். உலகத்தின் செயல்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நமது எண்ணங்களையும் செயல்களையும் ஆவிக்குரிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம்.
நன்மை செய்ய ஒரு நாள்
ஓய்வுநாளில் நன்மை செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைப் பரிசுத்தமாக ஆசரிக்க குறைந்த பட்சம் நாம் எதைச் செய்வதைத் தவிர்க்கிறோமோ அதுவும் அவ்வளவு முக்கியமானது. நாம் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்கிறோம், விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோம், உறவுகளைக் கட்டியெழுப்புகிறோம், சேவை செய்கிறோம், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மற்ற மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்கிறோம்.
ஆசீர்வாதங்கள்
ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிப்பது பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்து மீதான நமது அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். நம்முடைய ஓய்வுநாளின் செயல்பாடுகளை தேவனின் நோக்கத்துடன் அன்று ஒத்துப்போகும்போது, நாம் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் உணர்வோம். நாம் ஆவிக்குரிய விதமாக ஊட்டமளித்து உடல் ரீதியாக புத்துணர்ச்சி பெறுவோம். நாமும் தேவனிடம் நெருக்கமாக உணர்வோம், நம் இரட்சகருடனான உறவை ஆழப்படுத்துவோம். நாம் இன்னும் நம்மை “உலகத்தால் கறைபடாதபடிக்கு முழுவதுமாக” வைத்திருப்போம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59: 9). ஓய்வுநாள் “மனமகிழ்ச்சியாக” மாறும் ஏசாயா 58:13; வசனம் 14 ஐயும் பார்க்கவும்).
வேதப் படிப்பு
-
மத்தேயு 12:10–13
-
யாத்திராகமம் 20: 8–11 ; 31: 12–13, 16–17
-
ஏசாயா 58:13–14
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Gospel Topics: “Sabbath Day”
-
Guide to the Scriptures: “Sabbath Day”
சட்டத்தை மதித்து நடக்கவும்
பரிசுத்தவான்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நல்ல குடிமக்களாக இருப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 134; விசுவாசப் பிரமாணங்கள் 1:12). சபை உறுப்பினர்கள் தங்கள் சமூகங்கள் மற்றும் நாடுகளை மேம்படுத்துவதற்கு சேவை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். சமுதாயத்திலும் அரசாங்கத்திலும் நல்ல ஒழுக்க விழுமியங்களுக்கு செல்வாக்கு செலுத்துவதற்கும் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சபை உறுப்பினர்கள் சட்டத்தின்படி அரசாங்கம் மற்றும் அரசியல் செயல்முறைகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்கள், சபையின் பிரதிநிதிகளாக அல்ல, அக்கறையுள்ள குடிமக்களாக இத்தகைய திறன்களில் செயல்படுகிறார்கள்.
வேதப் படிப்பு
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
“Political and Civic Activity” in section 38.8 of the பொது கையேடு
-
Gospel Topics: “Citizenship”
தேவனுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்வதற்கான நமது உடன்படிக்கை
சேவை
நாம் ஞானஸ்நானம் பெறும்போது, தேவனைச் சேவிக்கவும் மற்றவர்களுக்குச் சேவை செய்யவும் உடன்படிக்கை செய்கிறோம். மற்றவர்களுக்கு சேவை செய்வது நாம் தேவனுக்கு சேவை செய்யும் முதன்மையான வழிகளில் ஒன்றாகும் (மோசியா 2:17 பார்க்கவும்). ஞானஸ்நானம் பெற விரும்புவோருக்கு ஆல்மா தீர்க்கதரிசி கற்பித்தான், அவர்கள் “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, … ; துக்கப்படுவோரோடு கூட துக்கப்படவும், ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும்” வேண்டும். (மோசியா 18:8–9).
ஞானஸ்நானம் பெற்ற உடனேயே, புதிய உறுப்பினர்கள் பொதுவாக சபையில் சேவை செய்வதற்கான அழைப்பைப் பெறுவார்கள். இந்த அழைப்புகள் தன்னார்வ மற்றும் சம்பளம் பெறப்படாதவை. நாம் அவற்றை ஏற்றுக்கொண்டு கருத்துடன் சேவை செய்யும்போது, நாம் விசுவாசத்தில் வளர்கிறோம், திறமைகளை வளர்த்துக் கொள்கிறோம், மற்றவர்களை ஆசீர்வதிக்கிறோம்.
சபையில் நமது சேவையின் மற்றொரு பகுதி “ஊழிய சகோதரர்” அல்லது “ஊழிய சகோதரியாக” இருத்தல். இந்தப் பொறுப்பில், பணிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நாம் சேவை செய்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, ஒவ்வொரு நாளும் சேவை செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறோம். அவரைப் போலவே நாமும் “நன்மை செய்பவர்களாக சுற்றித்” திரிவோம் (அப்போஸ்தலர் 10:38). நாம் நமது அண்டை வீட்டாருக்கும் நமது சமூகத்தில் உள்ளவர்களுக்கும் சேவை செய்கிறோம். JustServe கிடைக்கும் இடத்தில் சேவை வாய்ப்புகளில் நாம் பங்கேற்கலாம். சபையின் மனிதாபிமான முயற்சிகளை நாம் ஆதரிக்கலாம் மற்றும் பேரிடர் தேவையில் பங்கேற்கலாம்.
வேதப் படிப்பு
-
மத்தேயு 25:31–46
-
லூக்கா 10:25–37
-
யாக்கோபு 1:27; 2:17
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Service”
-
Gospel Topics: “Service”
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்
நமது ஞானஸ்நான உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, “தேவனுக்கு சாட்சிகளாக நிற்கவும்” (மோசியா 18:9) உறுதியளிக்கிறோம். நாம் சாட்சிகளாக நிற்க ஒரு வழி இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதாகும். சுவிசேஷத்தைப் பெற மற்றவர்களுக்கு உதவுவது, நாம் செய்யக்கூடிய மிகவும் மகிழ்ச்சியான சேவைகளில் ஒன்றாகும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:15–16 பார்க்கவும்). இது நம் அன்பின் வல்லமையான வெளிப்பாடு.
சுவிசேஷத்தின்படி வாழ்வதன் ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கும் போது, நாம் இயல்பாகவே அந்த ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள், நாம் விசுவாசமிக்க முன்மாதிரியை ஏற்படுத்துவதால், சுவிசேஷம் நம் வாழ்க்கையை எவ்வாறு ஆசீர்வதிக்கிறது என்பதைப் பார்க்கும்போது அவர்கள் ஆர்வம் கொள்கின்றனர். நாம் சாதாரண மற்றும் இயற்கையான வழிகளில் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் (பொது கையேடு, அத்தியாயம் 23 பார்க்கவும்).
சேவை, சமூகம், பொழுதுபோக்கு மற்றும் சபை நிகழ்ச்சிகளில் நம்முடன் பங்கேற்க மற்றவர்களை அழைக்கிறோம். ஒரு சபைக் கூட்டத்திற்கு அல்லது ஞானஸ்நான சேவைக்கு அவர்களை அழைக்கலாம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விளக்கும் நேரலை காணொளியைப் பார்க்கவோ, மார்மன் புஸ்தகத்தைப் படிக்கவோ அல்லது ஆலய திறந்த வீட்டிற்குச் செல்லவோ நாம் அவர்களை அழைக்கலாம். மற்றவர்களுக்கு நம்மால் கொடுக்க முடிகிற நூற்றுக்கணக்கான அழைப்புகளிருக்கின்றன. பெரும்பாலும், அழைப்பது என்பது நாம் ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் செயலில் நமது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்வதாகும்.
நாம் கேட்டால், சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அது நம் வாழ்க்கையை எவ்வாறு ஆசீர்வதிக்கிறது என்பதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல தேவன் நமக்கு உதவுவார்.
நேசித்தல், பகிர்தல் மற்றும் அழைப்பது போன்ற கொள்கைகளைப் பயன்படுத்துவது பற்றிய கூடுதல் தகவலுக்கு,“Unite with Members” in chapter 9 பார்க்கவும்.
வேதப் படிப்பு
-
மத்தேயு 28:19–20
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Missionary Work”
-
Gospel Topics: “Missionary Work”
உபவாசம் மற்றும் உபவாச காணிக்கை
ஆவிக்குரிய பலத்தை வளர்த்துக்கொள்ளவும், தேவைப்படுபவர்களுக்கு உதவவும் தேவன் உபவாச நியாயப்பிரமாணத்தை ஏற்படுத்தினார்.
உபவாசம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு மற்றும் பானங்கள் இல்லாமல் இருப்பது. சபை வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையை உபவாச நாளாக ஒதுக்குகிறது. உபவாச நாள் என்பது பொதுவாக 24 மணி நேர காலத்திற்கு நம்மால் முடியுமானால் உணவு மற்றும் பானங்கள் இல்லாமல் இருப்பது அடங்கும். உபவாச ஞாயிற்றுக்கிழமையின் மற்ற முக்கிய பகுதிகளில் ஜெபம் மற்றும் சாட்சியம் ஆகியவை அடங்கும். தேவையை உணரும் போது மற்ற நேரங்களில் உபவாசம் இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறோம்.
ஆவிக்குரிய பலத்தை உருவாக்குதல்
உபவாசம் நாம் தாழ்மையுடன் இருக்கவும், தேவனிடம் நெருங்கி வரவும், ஆவிக்குரிய ரீதியில் புதுப்பிக்கப்படவும் உதவும். இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் உபவாசம் இருந்தார் (மத்தேயு 4:1–2 பார்க்கவும்). தீர்க்கதரிசிகள் மற்றும் பிறர் உபவாசித்த பல விவரங்களை வேதங்கள் பதிவு செய்கிறது, அதனால் அவர்கள் ஆவிக்குரிய பலத்தை அதிகரிக்கலாம் மற்றும் தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்காக சிறப்பு ஆசீர்வாதங்களை பெறலாம்.
உபவாசித்தலும் ஜெபித்தலும் ஒன்றாக நடக்கிறது. நாம் உபவாசம் இருந்து விசுவாசத்துடன் ஜெபிக்கும்போது, தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுவதற்கு நாம் மிகவும் பக்குவப்பட்டு இருக்கிறோம். சத்தியத்தை அங்கீகரிப்பதிலும் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதிலும் நாம் அதிகமாக மனதுடையவர்களாயிருப்போம்.
தேவையிலிருப்போருக்கு உதவுதல்
நாம் உபவாசிக்கும்போது, தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக சபைக்கு பணத்தை நன்கொடையாக வழங்குகிறோம். இது உபவாச காணிக்கை என்று அழைக்கப்படுகிறது. உண்ணாத உணவின் மதிப்புக்கு சமமான காணி்க்கையை வழங்க நாம் அழைக்கப்படுகிறோம். தாராளமாக இருக்கவும், முடிந்தால் இந்த உணவுகளின் மதிப்பை விட அதிகமாக கொடுக்கவும் நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். உபவாச காணிக்கை கொடுப்பது மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வழியாகும்.
உள்ளூர் மற்றும் உலகளவில் தேவைப்படும் மக்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க உபவாச காணிக்கை பயன்படுத்தப்படுகிறது. உபவாச காணிக்கைகளை எவ்வாறு நன்கொடை கொடுப்பது என்பது பற்றிய தகவலுக்கு, “Donating Tithes and Other Offerings” இந்தப் பாடத்தில் பார்க்கவும்.
வேதப் படிப்பு
உபவாசம்
-
ஏசாயா 58:6–11
தேவையிலிருப்போரைப் பராமரித்தல்
-
மத்தேயு 25:31–46
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Fast, Fasting”
-
பொது கையேடு, 22.2.2.
-
Gospel Topics: “Fasting and Fast Offerings”
இறுதிபரியந்தம் நிலைத்திருப்பதற்கான நமது உடன்படிக்கை
நாம் ஞானஸ்நானம் பெறும்போது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வதில் “முடிவுபரியந்தம் நிலைநிற்போமென்று” தேவனுடன் உடன்படிக்கை செய்கிறோம் (2 நேபி 31:20; மேலும் மோசியா 18:13 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் வாழ்நாள் சீஷர்களாக இருக்க நாம் முயற்சி செய்கிறோம்.
மார்மன் புஸ்தக தீர்க்கதரிசியான நேபி, ஞானஸ்நானத்தை நாம் சுவிசேஷ பாதையில் நுழையும் வாயில் என்று விவரித்தான் (2 நேபி 31:17 பார்க்கவும்). ஞானஸ்நானத்திற்குப் பிறகு, நாம் “கிறிஸ்துவில் திடநம்பிக்கையாய், பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தோடும், முன்னேறிச்செல்லவேண்டும்” (2 நேபி 31:20).
சீஷத்துவத்தின் பாதையில் நாம் “முன்னேறிச் செல்லும்போது”, நாம் ஆலயம் செல்லத் தயாராகிறோம். ஆலய நியமங்களைப் பெறும்போது அங்கே தேவனோடு நாம் உடன்படிக்கை செய்வோம். ஆலயத்தில், நாம் வல்லமையால் தரிப்பிக்கப்படுவோம், நித்தியத்திற்கும் குடும்பங்களாக முத்திரிக்கப்படுவோம். ஆலயத்தில் நாம் செய்யும் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது, தேவன் நமக்காக வைத்திருக்கும் ஒவ்வொரு ஆவிக்குரிய சிலாக்கியத்திற்கும் ஆசீர்வாதத்திற்கும் கதவைத் திறக்கும்.
சுவிசேஷ பாதையில் நாம் விசுவாசத்துடன் தொடரும்போது, இறுதியில் தேவனின் மிகப் பெரிய வரமாகிய நித்திய ஜீவனைப் பெறுவோம். (2 நேபி 31:20; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7 பார்க்கவும்).
நமது பூலோகப் பயணத்தின் இறுதிபரியந்தம் நிலைத்திருக்கவும் அதில் மகிழ்ச்சியைக் காணவும் தேவன் நமக்கு வழங்கிய சில அம்சங்களைப் பின்வரும் பிரிவுகள் விளக்குகின்றன.
ஆசாரியத்துவம் மற்றும் சபை அமைப்புகள்
ஆசாரியத்துவம் என்பது தேவனிடமிருந்து வரும் வல்லமை மற்றும் அதிகாரமாகும் ஆசாரியத்துவத்தின் மூலம், பரலோக பிதா தம் பிள்ளைகளின் “அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டு வர” தமது பணியை நிறைவேற்றுகிறார் (மோசே 1:39). இந்த வேலையைச் செய்ய உதவுவதற்காக பூமியில் உள்ள அவருடைய குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்கும் தேவன் அதிகாரத்தையும் வல்லமையையும் வழங்குகிறார்.
ஆசாரியத்துவம் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கிறது. ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து போன்ற நியமங்கள் ஆசாரியத்துவ அலுவல்களை வகிப்பவர்கள் மூலம் பெறப்படுகின்றன. குணப்படுத்துதல், ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்களையும் பெறுகிறோம்.
ஆசாரியத்துவம் மற்றும் சபைத் தலைமை மற்றும் அழைப்புகள்
சபை இயேசு கிறிஸ்துவால் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம் வழிநடத்தப்படுகிறது. இந்தத் தலைவர்கள் தேவனால் அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, இரட்சகரின் நாமத்தில் செயல்பட ஆசாரியத்துவ அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளனர்.
பண்டைய காலத்தில், கிறிஸ்து தம் அப்போஸ்தலர்களுக்கு இதே ஆசாரியத்துவ அதிகாரத்தை அளித்தார், இது அவர் பரலோகத்திற்கு ஏறிய பிறகு அவருடைய சபையை வழிநடத்த அனுமதித்தது. இறுதியில் மக்கள் சுவிசேஷத்தை நிராகரித்தபோது அந்த அதிகாரம் தொலைந்து போனது மற்றும் அப்போஸ்தலர்கள் மரித்தனர்.
பரலோக தூதுவர்கள் 1829 ஆம் ஆண்டில் ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி மூலம் ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்தனர், மேலும் கர்த்தர் மீண்டும் அப்போஸ்தலர்களுடனும் தீர்க்கதரிசிகளுடனும் தமது சபையை நிறுவினார். (பாடம் 1 பார்க்கவும்.)
உள்ளூர் மட்டத்தில், ஆயர்கள் மற்றும் பிணையத் தலைவர்கள் சபை கூட்டங்களை வழிநடத்த ஆசாரியத்துவ அதிகாரத்தை பெற்றுள்ளனர்.
சபையில் சேவை செய்ய ஆண்களும் பெண்களும் அழைக்கப்பட்டு பணிக்கப்பட்டால், அந்த அழைப்பில் செயல்பட அவர்களுக்கு தேவனிடமிருந்து அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த அதிகாரம் ஊழியக்காரர்கள், தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிறருக்கு அவர்களின் அழைப்புகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை வழங்கப்படுகிறது. ஆசாரியத்துவ திறவுகோல்களை வைத்திருப்பவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இது ஒதுக்கப்படுகிறது.
ஆசாரியத்துவ அதிகாரத்தை நீதியில் மட்டுமே பயன்படுத்த முடியும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121: 34–46 பார்க்கவும்). இந்த அதிகாரம் இரட்சகரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அவருடைய நாமத்தில் செயல்படுவதற்குமான ஒரு பரிசுத்தமான நம்பிக்கையாகும். அது எப்போதும் பிறரை ஆசீர்வதித்து சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டது.
ஆரோனிய ஆசாரியத்துவம் மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம்
சபையில், ஆசாரியத்துவத்தில் ஆரோனிய ஆசாரியத்துவம் மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் ஆகியவை அடங்கும். ஆசாரியத்துவத் திறவுகோல்களை தரித்திருப்பவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தகுதியுள்ள ஆண் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. பொருத்தமான ஆசாரியத்துவம் அருளப்பட்ட பிறகு, அவர் அந்த ஆசாரியத்துவத்தில் உள்ள உதவிக்காரர் அல்லது மூப்பர் போன்ற ஒரு அலுவலுக்கு நியமிக்கப்படுகிறார். தேவையான அதிகாரம் உள்ள ஒருவரால் அவர் நியமிக்கப்பட வேண்டும்.
ஒரு மனிதன் அல்லது வாலிபன் ஆசாரியத்துவத்தைப் பெறும்போது, பரிசுத்த கடமைகளை நிறைவேற்றவும், மற்றவர்களுக்கு சேவை செய்யவும், சபையைக் கட்டியெழுப்ப உதவவும் தேவனுடன் உடன்படிக்கை செய்கிறான்.
ஆண்டின் ஜனவரியில் தொடங்கி அவர்களுக்கு 12 வயதாகும்போது, வாலிபர்கள் ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெற்று, உதவிக்காரர்களாக நியமிக்கப்படலாம். அவர்கள் 14 வயதிற்குள் ஆசிரியர்களாகவும், 16 வயதிற்குள் ஆசாரியர்களாகவும் நியமிக்கப்படலாம். ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தப்பட்ட பிறகு, சரியான வயதுடைய மனம் மாறிய ஆண்கள் விரைவில் ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெறலாம். ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் திருவிருந்து மற்றும் ஞானஸ்நானம் போன்ற நியமங்களை நிர்வகிக்கிறார்கள்.
ஆரோனிய ஆசாரியத்துவத்தில் ஆசாரியராக சிறிது காலம் பணியாற்றிய பிறகு, குறைந்தபட்சம் 18 வயதுடைய ஒரு தகுதியான மனிதர் மெல்கிசேதேக்கு ஆசாரித்துவத்தைப் பெற்று மூப்பராக நியமிக்கப்படலாம். மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெறும் ஆண்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் குணப்படுத்துதல் மற்றும் ஆறுதல் போன்ற ஆசாரியத்துவ நியமங்களைச் செய்யலாம்.
ஆசாரியத்துவம் பெறும் புதிய உறுப்பினர்கள் பற்றிய தகவலுக்கு பொது கையேடு, 38.2.9.1 பார்க்கவும்.
குழுமங்கள் மற்றும் சபை அமைப்புகள்
ஆசாரியத்துவக் குழுமங்கள் ஒரு குழுமம் என்பது ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாகும். ஒவ்வொரு தொகுதியிலும் வயது வந்த ஆண்களுக்கான வயது வந்தோர் குழுமம் உள்ளது. உதவிக்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசாரியர்கள் குழுக்கள் வாலிபர்ர்களுக்கானது.
ஒத்தாசைச் சங்கம். ஒத்தாசைச் சங்கத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் உள்ளனர். ஒத்தாசைச் சங்கத்தின் உறுப்பினர்கள் குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் சமூகத்தை பலப்படுத்துகிறார்கள்.
இளம் பெண்கள் இளம் பெண்கள் 12 வயதை எட்டிய ஆண்டின் ஜனவரியில் இளம் பெண்கள் அமைப்பில் சேருவார்கள்.
ஆரம்ப வகுப்பு 3 முதல் 11 வயது வரையிலான பிள்ளைகள் ஆரம்ப வகுப்பு அமைப்பின் பகுதியாக உள்ளனர்.
ஞாயிறு பள்ளி வயதுவந்தோர் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஞாயிறு பள்ளிக்குச் செல்கிறார்கள், அங்கு அவர்கள் ஒன்றாக வேதங்களைப்ப் படிக்கச் சந்திக்கிறார்கள்.
ஆசாரியத்துவம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பொது கையேடு, அத்தியாயம் 3 பார்க்கவும்.
ஆசாரியத்துவக் குழுமங்கள் மற்றும் சபை அமைப்புகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பொது கையேடு, அத்தியாயம் 8–13 பார்க்கவும்.
வேதப் படிப்பு
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:38–65; 84:19–20; 107; 121:34–46
-
லூக்கா 9:1–6
-
யோவான் 15:16
-
யாக்கோபு 5:14–15
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
பொது கையேடு, அத்தியாயம் 3: “ஆசாரியத்துவக் கொள்கைகள்”
-
Gospel Topics: “Aaronic Priesthood,” “Melchizedek Priesthood,” “Priesthood”
திருமணம் மற்றும் குடும்பங்கள்
திருமணம்
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான திருமணம் தேவனால் நியமிக்கப்பட்டது. இது அவரது பிள்ளைகளின் நித்திய முன்னேற்றத்திற்கான அவரது திட்டத்தின் மையமாகும்.
திருமணத்தில் கணவன் மற்றும்மனைவி ஒன்றிணைவது அவர்களின் மிகவும் போற்றுகிற பூமிக்குரிய உறவாக இருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாகவும், தங்கள் திருமண உடன்படிக்கைக்கு விசுவாசமிக்கவர்களாகவும் இருக்க ஒரு பரிசுத்தமான பொறுப்பு உள்ளது.
தேவனின் பார்வையில் கணவனும் மனைவியும் சமம். ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. இருவரின் முழுப் பங்கேற்புடன் அவர்களின் முடிவுகள் ஒற்றுமையுடனும் அன்புடனும் எடுக்கப்பட வேண்டும்.
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நேசித்து, ஒன்றாக வேலை செய்வது, அவர்களது திருமணம் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களின் குழந்தைகள் நித்திய ஜீவனை நோக்கி முன்னேற உதவ முடியும்.
குடும்பம்
திருமணத்தைப் போலவே, குடும்பமும் தேவனால் நியமிக்கப்பட்டது மற்றும் நமது நித்திய மகிழ்ச்சிக்கான அவரது திட்டத்திற்கு மையமானது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளின்படி நாம் வாழும்போது நம் குடும்பங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்க முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்பித்து, அதன்படி வாழ்வதில் முன்னுதாரணமாக இருப்பார்கள். ஒருவரையொருவர் நேசிப்பதற்கும் சேவை செய்வதற்கும் குடும்பங்கள் வாய்ப்புகளை வழங்குகின்றன.
பெற்றோர்கள் தங்கள் குடும்பத்திற்கு உயர்வான முன்னுரிமை அளிக்க வேண்டும். பெற்றெடுக்க அல்லது தத்தெடுக்கக்கூடிய குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்கு ஒரு பரிசுத்த சிலாக்கியம் மற்றும் பொறுப்பு.
எல்லா குடும்பங்களுக்கும் சவால்கள் உள்ளன. நாம் தேவனின் ஆதரவைத் தேடும்போதும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போதும், குடும்பச் சவால்கள் நமக்குக் கற்றுக் கொள்ளவும் வளரவும் உதவும். சில நேரங்களில் இந்த சவால்கள் மனந்திரும்பவும் மன்னிக்கவும் கற்றுக்கொள்ள உதவுகின்றன.
சபைத் தலைவர்கள் வாராந்திர இல்ல மாலையை நடத்த உறுப்பினர்களை ஊக்குவித்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுவிசேஷம் கற்பிக்கவும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், ஒன்றாக வேடிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இந்த நேரத்தை பயன்படுத்துகின்றனர். சபைத் தலைவர்களும் குடும்பத்தைப் பற்றிய முக்கியமான சத்தியங்களைப் போதிக்கும் ஒரு பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர் (“ குடும்பம்: உலகிற்கு ஒர் பிரகடனம்,” ChurchofJesusChrist.org ).
குடும்பத்தை பலப்படுத்துவதற்கான மற்ற வழிகளில் குடும்ப ஜெபம், வேதப் படிப்பு மற்றும் சபையில் ஒன்றாக ஆராதித்தல் ஆகியவை அடங்கும். நாம் குடும்ப வரலாற்றை ஆராயலாம், குடும்பக் கதைகளைச் சேகரிக்கலாம் மற்றும் பிறருக்கு சேவை செய்யலாம்.
பலருக்கு திருமணம் அல்லது குடும்ப உறவுகளை நேசிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. பலர் விவாகரத்து மற்றும் பிற கடினமான குடும்ப சூழ்நிலைகளை அனுபவித்திருக்கிறார்கள். இருப்பினும், நமது குடும்பச் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தனித்தனியாக சுவிசேஷம் நம்மை ஆசீர்வதிக்கிறது. நாம் விசுவாசமிக்கவர்களாக இருப்பதால், அன்பான குடும்பங்களின் ஆசீர்வாதங்களைப் பெற தேவன் இந்த வாழ்க்கையில் அல்லது எதிர்காலத்தில் நமக்கு ஒரு வழியை வழங்குவார்.
வேதப் படிப்பு
திருமணம்
-
எபேசியர் 5:25
-
ஆதியாகமம் 2:18, 24
குடும்பம்
-
எபேசியர் 6:4
-
நீதிமொழிகள் 22:6.
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Family,” “Marriage, Marry”
-
பொது கையேடு, chapter 2: “Supporting Individuals and Families in the Work of Salvation and Exaltation”
-
Gospel Topics: “Marriage,” “Family,” “Parenting”
மரித்த மூதாதையர்களுக்கான ஆலய மற்றும் குடும்ப வரலாறு
பரலோக பிதா தம் பிள்ளைகள் அனைவரையும் நேசிக்கிறார் மற்றும் அவர்களின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலை விரும்புகிறார். இன்னும் கோடிக்கணக்கான மக்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்காமலோ அல்லது சுவிசேஷத்தின் இரட்சிக்கும் நியமங்களைப் பெறாமலோ மரித்துள்ளனர். இந்த நியமங்களில் ஞானஸ்நானம், திடப்படுத்தல், ஆண்களுக்கான ஆசாரியத்துவ நியமனம், ஆலய தரிப்பித்தல் மற்றும் நித்திய திருமணம் ஆகியவை அடங்கும்.
கர்த்தர் தம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், இந்த மக்கள் சுவிசேஷத்தையும் அதன் நியமங்களையும் பெறுவதற்கு மற்றொரு வழியை வழங்கியுள்ளார். ஆவி உலகில், சுவிசேஷம் பெறாமல் மரித்தவர்களுக்குப் பிரசங்கிக்கப்படுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138 பார்க்கவும்). ஆலயங்களில், மரித்த நம் முன்னோர்கள் மற்றும் பிறர் சார்பாக நியமங்களை நிறைவேற்றலாம். ஆவி உலகில், மரித்த இந்த மக்கள் சுவிசேஷத்தையும் அவர்களுக்காக செய்யப்படும் நியமங்களையும் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
இந்த விதிகளை நிறைவேற்றுவதற்கு முன், அவற்றைப் பெறாத நம் முன்னோர்களை அடையாளம் காண வேண்டும். நமது குடும்ப உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்கள் நியமங்களைப் பெறுவது, நமது குடும்ப வரலாற்றுப் பணியின் மைய நோக்கமாகும். அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டால், அதை சபையின் தரவுத்தளத்தில்FamilySearch.org சேர்ப்போம். பின்னர் நாம் (அல்லது மற்றவர்கள்) ஆலயத்தில் அவர்களுக்குப் பதிலி நியமங்களை செய்யலாம்.
நாம் நம் முன்னோர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான நியமங்களைச் செய்யும்போது, நம் குடும்பங்கள் என்றென்றும் ஒன்றுபடலாம்.
வேதப் படிப்பு
-
1கொரிந்தியர் 15:29.
-
1 பேதுரு 3:18–21; 4:6
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
பொது கையேடு, chapter 28: “Temple Ordinances for the Deceased”
-
Gospel Topics: “Baptisms for the Dead,” “Family History”
ஆலயங்கள், தரிப்பித்தல், நித்திய திருமணம் மற்றும் நித்திய குடும்பங்கள்
ஆலயங்கள்
ஆலயம் கர்த்தரின் வீடு. நாம் தேவனுடைய பரிசுத்த நியமங்களைப் பெறும்போது அவருடன் உடன்படிக்கைகளை செய்யக்கூடிய இது ஒரு பரிசுத்தமான இடம். இந்த உடன்படிக்கைகளை நாம் கடைபிடிக்கும்போது, நம் வாழ்வில் தெய்வத்தன்மையின் வல்லமை வெளிப்படும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–22109:22–23).
தரிப்பித்தல்
ஆலயத்தில் நாம் பெறுகிற ஒரு நியமம் தரிப்பித்தல் என அழைக்கப்படுகிறது. தரிப்பித்தல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் “ஒரு வரம்.” இந்த அறிவு மற்றும் வல்லமையின் வரம் தேவனிடமிருந்து வருகிறது. தரிப்பித்தலின் போது, தேவனுடனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் நம்மை இணைக்கும் உடன்படிக்கைகளை நாம் செய்கிறோம் (அத்தியாயம் 1 பார்க்கவும்).
சபையில் உறுப்பினராகச் சேர்ந்த ஒரு வருடத்திற்குப் பிறகு வயது வந்தோர் தங்களுடைய சொந்த ஆலய தரிப்பித்தல் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம். தரிப்பித்தல் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பொது கையேடு, 27.2 பார்க்கவும்.
நித்திய திருமணம் மற்றும் நித்திய குடும்பங்கள்
தேவனின் மகிழ்ச்சியின் திட்டம் குடும்ப உறவுகளை கல்லறைக்கு அப்பால் நிலைத்திருக்க உதவுகிறது. ஆலயத்தில் நாம் இக்காலத்துக்கும் மற்றும் நித்தியத்துக்குமாக திருமணம் செய்யலாம். குடும்பங்கள் என்றென்றும் ஒன்றாக இருப்பதை சாத்தியமாக்குகின்றன.
திருமணமான தம்பதிகள் தங்கள் ஆலய தரிப்பித்தல் பெற்ற பிறகு, அவர்கள் முத்திரிக்கப்படலாம் அல்லது நித்தியமாக திருமணம் செய்து கொள்ளலாம். அவர்களின் குழந்தைகள் அவர்களுடன் முத்திரிக்கப்படலாம்.
ஆலயத்தில் முத்திரிக்கப்பட்ட கணவனும் மனைவியும் நித்திய திருமணத்தின் ஆசீர்வாதத்தைப் பெற அவர்கள் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வேதப் படிப்பு
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
பொது கையேடு, chapter 27: “Temple Ordinances for the Living”
-
Gospel Topics: “Temples,” “Endowment,” “Marriage”