“அத்தியாயம் 3: பாடம் 1—இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித செய்தி” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)
“அத்தியாயம் 3: பாடம் 1,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
அத்தியாயம் 3: பாடம் 1
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித செய்தி
மக்கள் ஆச்சரியப்படலாம்
-
தேவன் இருக்கிறாரா?
-
நான் எப்படி தேவனுக்கு நெருக்கமாக உணர முடியும்?
-
இன்றைய குழப்பமான உலகில் நான் எப்படி சத்தியத்தைக் கற்றுக்கொள்வது?
-
மதம் எனக்கு எப்படி உதவும்?
-
ஏன் இவ்வளவு சபைகள் உள்ளன?
-
எனக்கு ஏன் இத்தனை சவால்கள் உள்ளன?
-
கொந்தளிப்பு காலங்களில் நான் எப்படி அமைதி காணலாம்?
-
நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
-
இன்றைய உலகிற்கு ஒரு தீர்க்கதரிசி எவ்வாறு உதவ முடியும்?
உலகம் தோன்றியதிலிருந்தே, தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் தம் பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக இதைச் செய்திருக்கிறார். பண்டைய காலத்தில், ஆதாம், நோவா, ஆபிரகாம் மற்றும் மோசே போன்ற தீர்க்கதரிசிகளுக்கு இயேசு சுவிசேஷத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பலர் அதை நிராகரித்தனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து தாமே தம்முடைய சுவிசேஷத்தைப் போதித்து அவருடைய சபையை ஸ்தாபித்தார். மக்கள் இயேசுவை கூட நிராகரித்தனர். அவருடைய மரணத்திற்குப் பிறகு விரைவில், கர்த்தருடைய சத்தியத்திலிருந்தும் சபையிலிருந்தும் பரவலான வீழ்ச்சி ஏற்பட்டது. சுவிசேஷத்தின் முழுமையும் ஆசாரியத்துவ அதிகாரமும் இனிமேலும் பூமியில் இல்லை.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஜோசப் ஸ்மித் என்ற மற்றொரு தீர்க்கதரிசியை தேவன் அழைத்தார். தேவன் அவர் மூலம் சுவிசேஷத்தின் முழுமையை மறுஸ்தாபிதம் செய்தார் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சபையை மீண்டும் ஒழுங்கமைக்க அவருக்கு அதிகாரம் அளித்தார்.
இயேசு கிறிஸ்துவின் பூரண சுவிசேஷத்தை பூமியில் பெற்றிருப்பது நமது நாளின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க சுவிசேஷம் நமக்கு உதவுகிறது. ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் சவாலான காலங்களில் நம்மை வழிநடத்துகிறார்கள். தேவனுடைய ஆசாரியத்துவ அதிகாரம், அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க மீண்டும் பூமியில் இருக்கிறது.
கற்பித்தலுக்கான ஆலோசனைகள்
இந்தப் பிரிவு உங்களுக்குக் கற்பிக்கத் தயாராவதற்கு ஒரு மாதிரி குறிப்பை வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தக்கூடிய கேள்விகள் மற்றும் அழைப்புகளின் எடுத்துக்காட்டுகளும் இதில் அடங்கும்.
நீங்கள் கற்பிக்கத் தயாராகும்போது, ஒவ்வொருவரின் சூழ்நிலையையும் ஆவிக்குரிய தேவைகளையும் ஜெபத்துடன் கருத்தில் கொள்ளுங்கள். எது கற்பிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை முடிவு செய்யுங்கள். மக்கள் புரிந்து கொள்ளாத சொற்களுக்கு அர்த்தம் சொல்ல தயாராகுங்கள். பாடங்களை சுருக்கமாக வைத்திருக்க நினைவில் வைத்து, உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்பதைத் திட்டமிடுங்கள்.
நீங்கள் கற்பிக்கும்போது பயன்படுத்த வேதவாக்கியங்களைத் தேர்ந்தெடுங்கள். பாடத்தின் “கோட்பாட்டு அடித்தளம்” பிரிவில் பல உதவிகரமான வேத வாக்கியங்கள் உள்ளன.
நீங்கள் கற்பிக்கும்போது என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் செயல்பட ஊக்குவிக்கும் வகையில் கொடுக்க அழைப்புகளைத் திட்டமிடுங்கள்.
தேவனின் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை வலியுறுத்துங்கள், நீங்கள் கற்பிப்பதைப் பற்றிய உங்கள் சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
15–25 நிமிடங்களில் நீங்கள் மக்களுக்கு என்ன கற்பிக்கலாம்
கற்பிக்க பின்வரும் கொள்கைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கொள்கைக்கும் கோட்பாட்டு அடித்தளம் இந்த குறிப்புக்குப் பிறகு வழங்கப்படுகிறது.
தேவனே நமது அன்புமிக்க பரலோக பிதா.
-
தேவன் நம்முடைய பரலோக பிதா, நாம் அவருடைய பிள்ளைகள். அவருடைய சாயலில் நம்மைப் படைத்தார்.
-
தேவன் நம்மை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார், நம்மை நேசிக்கிறார்.
-
மாம்சமும் எலும்பும் கொண்ட மகிமையான, பரிபூரண சரீரம் தேவனுக்கிருக்கிறது.
-
நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் சமாதானத்துடனும், நிறைவான மகிழ்ச்சியுடனும் தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.
-
தேவன் நம்மை நேசிப்பதால், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்க தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.
தேவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் தீர்க்கதரிசிகள் மூலம் சுவிசேஷத்தை வெளிப்படுத்துகிறார்
-
தேவன் தீர்க்கதரிசிகளை பூமியில் தனது பிரதிநிதிகளாக அழைக்கிறார்.
-
பண்டைய காலத்தில், தேவன் ஆதாம், நோவா, ஆபிரகாம் மற்றும் மோசே போன்ற தீர்க்கதரிசிகளை அழைத்தார்.
-
இன்று நமக்குக் கற்பிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெறுகிறார்.
இயேசு கிறிஸ்துவின் பூலோக ஊழியம் மற்றும் பாவநிவர்த்தி
-
இயேசு கிறிஸ்துதான் தேவ குமாரன்.
-
தம்முடைய பூலோக ஊழியத்தின்போது, இயேசு தம்முடைய சுவிசேஷத்தைப் போதித்து அவருடைய சபையை ஸ்தாபித்தார்.
-
இயேசு பன்னிரு அப்போஸ்தலர்களை அழைத்து, தம் சபையை வழிநடத்த அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
-
இயேசு தம் வாழ்வின் இறுதியில், கெத்சமனே தோட்டத்திலும் சிலுவையில் அறையப்பட்ட போதும் தாம் அனுபவித்த பாடுகளால் நம்முடைய பாவங்களுக்காக பரிகாரம் செய்தார். இயேசு மரணத்திற்குப் பிறகு, உயிர்த்தெழுந்தார்.
-
இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, நாம் மனந்திரும்பும்போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படலாம். இது நமக்கு சமாதானம் தருகிறது மற்றும் தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்பவும் மகிழ்ச்சியின் முழுமையையும் பெறுவதை சாத்தியமாக்குகிறது.
-
இயேசுவின் உயிர்த்தெழுதலின் காரணமாக, நாம் அனைவரும் மரித்த பிறகு உயிர்த்தெழுப்பப்படுவோம். இதன் பொருள் ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைந்து என்றென்றும் வாழும்.
வீழ்ச்சி
-
இயேசுவின் அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிறகு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் சபையிலிருந்து ஒரு பரவலான வீழ்ச்சி ஏற்பட்டது.
-
இந்த நேரத்தில், மக்கள் பல சுவிசேஷ போதனைகளை மாற்றினர். ஞானஸ்நானம் போன்ற ஆசாரியத்துவ நியமங்களையும் மக்கள் மாற்றினார்கள். ஆசாரியத்துவ அதிகாரமும் இயேசு ஸ்தாபித்த சபையும் இதற்குமேல் பூமியில் இல்லை.
ஜோசப் ஸ்மித் மூலம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம்
-
ஜோசப் ஸ்மித் எந்த சபை தேவனின் உண்மையான சபை, ஆகவே அவர் அதில் சேரலாம் என்பதை அறிய முயன்றார். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் 1820 இல் அவருக்குத் தோன்றினர். இந்த நிகழ்வு முதல் தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
-
அவர் முந்தைய காலங்களில் தீர்க்கதரிசிகளை அழைத்ததுபோல, தேவன் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக இருக்க அழைத்தார்.
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஜோசப் ஸ்மித்தால் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது.
-
பிற பரலோக தூதுவர்கள் ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்தனர், மேலும் இயேசு கிறிஸ்துவின் சபையை ஒழுங்கமைக்க ஜோசப் அதிகாரமளிக்கப்பட்டார்.
-
இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம் தம்முடைய சபையை தொடர்ந்து வழிநடத்துகிறார்.
மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு
-
மார்மன் புஸ்தகம் என்பது பண்டைய காலங்களில் அமெரிக்காவிலிருந்த தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட வேதத்தின் ஒரு தொகுதி ஆகும். ஜோசப் ஸ்மித் அதை தேவ வரத்தாலும் வல்லமையாலும் மொழிபெயர்த்தார்.
-
வேதாகமத்துடன், மார்மன் புஸ்தகம் நமது இரட்சகராக இயேசுவின் ஊழியம், போதனைகள் மற்றும் பணி ஆகியவைபற்றிய சாட்சியை வழங்குகிறது.
-
மார்மன் புஸ்தகத்தை வாசிப்பதன் மூலமும், அதன் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் நாம் தேவனுக்கு நெருக்கமாகலாம்.
-
மார்மன் புஸ்தகம் தேவனுடைய வார்த்தை என்பதை நாம் அதைப் படிப்பதன் மூலமும், சிந்தித்துப் பார்ப்பதன் மூலமும், அதைப் பற்றி ஜெபிப்பதன் மூலமும் அறியலாம். ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி என்பதை அறியவும் இந்த செயல்முறை உதவும்.
பரிசுத்த ஆவியின் மூலம் சத்தியத்தை அறிய ஜெபியுங்கள்
-
ஜெபம் என்பது தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையிலான இருவழி தொடர்பு.
-
நேர்மையான ஜெபத்தின் மூலம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் செய்தி உண்மையானது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
-
நாம் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்கு சத்தியத்தைப் போதித்து உறுதிப்படுத்துகிறார்.
நீங்கள் மக்களிடம் கேட்கக்கூடிய கேள்விகள்
பின்வரும் கேள்விகள் நீங்கள் மக்களிடம் என்ன கேட்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்தவும் ஒரு நபரின் தேவைகள் மற்றும் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும்.
-
தேவனைப் பற்றி நீங்கள் என்ன நம்புகிறீர்கள்?
-
தேவனிடம் நெருக்கமாக உணர்வது உங்களுக்கு எப்படி உதவும்?
-
இயேசு கிறிஸ்துவைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவருடைய வாழ்க்கையும் போதனைகளும் உங்களில் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்தியுள்ளது?
-
இன்றைய குழப்பமான உலகில் நம்பகமான பதில்களை எவ்வாறு கண்டறிவது?
-
இன்று பூமியில் ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதை அறிய இது உங்களுக்கு எப்படி உதவும்?
-
மார்மன் புஸ்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஏன் முக்கியமானது என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாமா?
-
ஜெபம் பற்றிய உங்கள் நம்பிக்கைகளை நீங்கள் பகிர்ந்து கொள்வீர்களா? ஜெபம் பற்றிய எங்களின் நம்பிக்கைகளை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாமா?
நீங்கள் கொடுக்கக்கூடிய அழைப்புகள்
-
நாங்கள் கற்பித்தது உண்மை என்பதை அறிய உதவும்படி தேவனிடம் ஜெபத்தில் கேட்பீர்களா? (இந்தப் பாடத்தின் கடைசிப் பாகத்தில் உள்ள “கற்பித்தல் உள்ளுணர்வுகள்: ஜெபம்” என்பதைப் பார்க்கவும்.)
-
நாங்கள் கற்பித்ததைப் பற்றி மேலும் அறிய இந்த ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வருவீர்களா?
-
நீங்கள் மார்மன் புஸ்தகத்தை வாசித்து, அது தேவனுடைய வார்த்தை என்பதை அறிய ஜெபிப்பீர்களா? (குறிப்பிட்ட அத்தியாயங்கள் அல்லது வசனங்களை நீங்கள் பரிந்துரைக்கலாம்.)
-
நீங்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி ஞானஸ்நானம் பெறுவீர்களா? (இந்தப் பாடத்திற்கு உடனடியாக முந்திய “ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தப்படுவதற்கான அழைப்பு” பார்க்கவும்.)
-
நமது அடுத்த சந்திப்புக்கான நேரத்தை அமைக்கலாமா?
கோட்பாட்டு அஸ்திபாரம்
சுவிசேஷத்தைப் பற்றிய உங்கள் அறிவையும் சாட்சியத்தையும் பலப்படுத்தவும், கற்பிக்க உங்களுக்கு உதவவும் உங்களுக்குக் கோட்பாடு மற்றும் வேதவாக்கியங்களை இப்பாகம் வழங்குகிறது.
தேவனே நமது அன்புமிக்க பரலோக பிதா.
தேவன் நம்முடைய பரலோக பிதா, நாம் அவருடைய பிள்ளைகள். அவருடைய சாயலில் நம்மைப் படைத்தார். ஒரு மகிமைப்படுத்தப்பட்ட, பூரணப்படுத்தப்பட்ட “மனுஷனுடையது போல தொட்டுணரத்தக்கதான மாம்சமும் எலும்புமுள்ள சரீரம்” அவருக்கிருக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:22).
தேவன் நம்மை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார், மேலும் அவர் நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார். அவர் நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்கிறார், மேலும் அவை மூலம் நம்மை ஆதரிக்க முன்வருகிறார். அவர் நம் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடைகிறார், சரியான தேர்வுகளைச் செய்ய உதவுவார். அவர் நம்முடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார், மேலும் ஜெபத்தின் மூலம் நாம் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.
தேவன் நமக்கு இந்த அனுபவத்தை பூமியில் கொடுத்துள்ளார், அதனால் நாம் கற்றுக்கொள்ளவும், வளரவும், மேலும் அவரைப் போல ஆகவும் முடியும். பரிபூரண அன்புடன், நாம் இறந்த பிறகு நாம் அவரிடம் திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இருப்பினும், இதை நாம் நாமாக செய்ய முடியாது. தேவன் நம்மை நேசிப்பதால், நம்மை மீட்க தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை … தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் … அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:16–17 ).
நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் சமாதானத்துடனும், நிறைவான மகிழ்ச்சியுடனும் தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் திட்டத்தை அவர் வழங்கியுள்ளார். இந்தத் திட்டம் இரட்சிப்பின் திட்டம் என்று அழைக்கப்படுகிறது (பாடம் 2 ஐப் பார்க்கவும்).
வேதப் படிப்பு
-
அப்போஸ்தலர் 17:27–29
-
ரோமர் 8:16
-
எபிரெயர் 12:9
-
ஆதியாகமம் 1:26–27.
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Father in Heaven,” “God, Godhead”
-
Gospel Topics: “God the Father”
தேவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் தீர்க்கதரிசிகள் மூலம் சுவிசேஷத்தை வெளிப்படுத்துகிறார்
தீர்க்கதரிசிகள் பூமியில் தேவனின் பிரதிநிதிகள்
தீர்க்கதரிசிகளை அழைப்பதுவும், அவர்களுக்கு ஆசாரியத்துவ அதிகாரம் கொடுப்பதுவும், அவருக்காகப் பேச அவர்களுக்கு உணர்த்துவதும் தேவன் நம்மீது தம்முடைய அன்பைக் காண்பிக்கும் ஒரு முக்கியமான வழி. தீர்க்கதரிசிகள் பூமியில் தேவனின் பிரதிநிதிகள். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி ஆமோஸ், “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என பதிவு செய்தான். (ஆமோஸ் 3:7). ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளிடமிருந்து நாம் பெறும் சில ஆசீர்வாதங்கள் கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
இயேசு கிறிஸ்துவின் சாட்சிகள். தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகள், அவரை நமது இரட்சகர் மற்றும் மீட்பர் என்று சாட்சியளிக்கிறார்கள்.
போதனைகள். பிழையிலிருந்து உண்மையைப் பகுத்தறிவதற்கு நமக்கு உதவுவதற்காக தீர்க்கதரிசிகள் தேவனிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுகிறார்கள். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், நாம் தவறுசெய்யும்போது மனந்திரும்பவும் அவர்கள் நமக்குக் கற்பிக்கிறார்கள். அவர்கள் பாவத்தைக் கண்டித்து அதன் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கிறார்கள்.
தீர்க்கதரிசிகளின் போதனைகள் நம்மை தேவனிடம் உயர்த்தி, அவர் விரும்பும் ஆசீர்வாதங்களைப் பெற உதவுகின்றன. அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் கொடுக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளைப் பின்பற்றுவதிலேயே நம்முடைய மிகப்பெரிய பாதுகாப்பு இருக்கிறது.
ஆசாரியத்துவ அதிகாரம் தற்போதைய தீர்க்கதரிசி பூமியில் தலைமை தாங்கும் ஆசாரியத்துவம் தரித்திருப்பவர். ஆசாரியத்துவம் என்பது தேவனிடமிருந்து வரும் வல்லமை மற்றும் அதிகாரமாகும். அவரது பிள்ளைகளின் இரட்சிப்புக்காக தேவனின் நாமத்தில் பேசவும் செயல்படவும் தீர்க்கதரிசி அதிகாரம் பெற்றவர்.
சபை வழிகாட்டுதல். இயேசு கிறிஸ்துவின் சபை தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது (எபேசியர் 2:19–20; 4:11–14 பார்க்கவும்).
பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகள்
பூமியின் முதல் தீர்க்கதரிசி ஆதாம். தேவன் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார் மற்றும் அவனுக்கு ஆசாரியத்துவ அதிகாரத்தை வழங்கினார். ஆதாமும் ஏவாளும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த சத்தியங்களைக் கற்றுக்கொடுத்து, விசுவாசத்தை வளர்த்து, சுவிசேஷத்தின்படி வாழ ஊக்குவித்தார்கள்.
இறுதியில் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினர் கலகம் செய்து சுவிசேஷத்திலிருந்து விலகினர். இது மதமாறுபாடு அல்லது வீழ்ச்சி என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. பரவலான மதமாறுபாடு நிகழும்போது, தேவன் தம் ஆசாரியத்துவ அதிகாரத்தைத் திரும்பப் பெறுகிறார், இது சுவிசேஷத்தின் நியமங்களைக் கற்பிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அவசியமானது.
பரவலான மதமாறுபாட்டின் பல நிகழ்வுகளை பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. இந்த காலகட்டங்களை முடிக்க, தேவன் மற்றொரு தீர்க்கதரிசியை அழைப்பதன் மூலம் தனது பிள்ளைகளை அணுகினார். அவர் இந்த தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷத்தின் சத்தியங்களை புதிதாக வெளிப்படுத்தினார் மற்றும் அவர்களுக்கு ஆசாரியத்துவ அதிகாரத்தை வழங்கினார். இந்த தீர்க்கதரிசிகளில் சிலர் நோவா, ஆபிரகாம் மற்றும் மோசே. துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில் மீண்டும் மீண்டும், மக்கள் தீர்க்கதரிசிகளை நிராகரித்தனர் மற்றும் வீழ்ந்து போனார்கள்.
வேதப் படிப்பு
-
லூக்கா 1:68–70
-
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34–43
-
எபேசியர் 4:11–14
-
ஆமோஸ் 3:7.
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Prophet”
-
Gospel Topics: “Prophets,” “Restoration of the Church”
இயேசு கிறிஸ்துவின் பூலோக ஊழியம் மற்றும் பாவநிவர்த்தி
இயேசு கிறிஸ்துதான் தேவ குமாரன். இயேசுவும் அவருடைய பாவநிவர்த்தியும் நமக்கான தேவனின் திட்டத்தில் மையமாக உள்ளது. அவருடைய பாவநிவர்த்தியில் கெத்செமனே தோட்டத்தில் அவர் பாடுபட்டது, அவருடைய துன்பம் மற்றும் சிலுவை மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல் ஆகியவை அடங்கும்.
ஆதாம் மற்றும் ஏவாளின் காலத்திலிருந்தே, மக்கள் தங்கள் இரட்சகராகவும் மீட்பராகவும் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பரலோக பிதா 2,000 ஆண்டுகளுக்கும் அதிக முன்பு இயேசுவை பூமிக்கு அனுப்பினார்.
இயேசு ஒரு பரிபூரணமான, பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்தார். அவர் தனது சுவிசேஷத்தைக் கற்பித்தார் மற்றும் அவரது சபையை ஸ்தாபித்தார். அவர் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை அழைத்து, அவர்களுக்கு போதனை செய்வதற்கும் ஞானஸ்நானம் போன்ற பரிசுத்த நியமங்களைச் செய்வதற்கும் ஆசாரியத்துவ அதிகாரத்தை வழங்கினார். அவருடைய சபையை வழிநடத்தும் அதிகாரத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
இயேசு தம் வாழ்வின் இறுதியில் கெத்செமனேயிலும் சிலுவையில் அறையப்பட்டபோதும் பாடுபட்ட துன்பங்களால் நம்முடைய பாவங்களுக்காகப் பாவநிவர்த்தி செய்தார். நாம் மனந்திரும்பும்போது, இயேசு கிறிஸ்துவின் பாவ நிவாரண பலியின் நிமித்தமாக, நமது பாவங்களுக்காக நாம் சுத்திகரிக்கப்பட முடியும். இது தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்பவும் மகிழ்ச்சியின் முழுமையையும் பெறுவதை சாத்தியமாக்குகிறது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவர் உயிர்த்தெழுந்தார், பரலோக பிதாவின் வல்லமையால் மரணத்தின் மீது வெற்றி பெற்றார். இயேசுவின் உயிர்த்தெழுதலின் காரணமாக, நாம் அனைவரும் இறந்த பிறகு உயிர்த்தெழுப்பப்படுவோம். இதன் பொருள் ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைக்கப்படும், மேலும் நாம் ஒவ்வொருவரும் பூரணப்படுத்தப்பட்ட, உயிர்த்தெழுந்த சரீரத்தில் என்றென்றும் வாழ்வோம். (“இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி” பாடம் 2- இல் பார்க்கவும்.)
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார், “நமது மதத்தின் அடிப்படைக் கொள்கைகள், இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார், பரலோகத்திற்கு ஏறினார் என்பதற்கான அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சியமே; நமது மதத்தைப்பற்றிய மற்ற எல்லா விஷயங்களும் அதனுடன் இணைப்புகள் மட்டுமே”(Teachings of Presidents of the Church: Joseph Smith, [2007],49).
வேதப் படிப்பு
-
யோவான் 3:16–17
-
1 கொரிந்தியர் 15:1–4, 20–22
-
1 யோவான் 1:7
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Jesus Christ,” “Atone, Atonement”
-
Bible Dictionary: “Atonement”
-
Gospel Topics: “Jesus Christ,” “Atonement of Jesus Christ”
வீழ்ச்சி
இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கோட்பாட்டை தூய்மையாக வைத்திருக்கவும், சபையில் ஒழுங்கை பராமரிக்கவும் முயன்றனர். இருப்பினும், பல சபை உறுப்பினர்கள் அப்போஸ்தலர்களிடமிருந்தும் இயேசு கற்பித்த கோட்பாட்டிலிருந்தும் விலகினர்.
அப்போஸ்தலர்கள் கொல்லப்பட்ட பிறகு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் சபையிலிருந்து ஒரு பரவலான வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த வீழ்ச்சி சில நேரங்களில் பெரிய மதமாறுபாடு என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாக, தேவன் ஆசாரியத்துவ அதிகாரத்தை பூமியிலிருந்து விலக்கினார். இந்த இழப்பு சபையை வழிநடத்த தேவையான அதிகாரத்தை உள்ளடக்கியது. இதன் விளைவாக, இயேசு ஸ்தாபித்த சபை அப்போது பூமியில் இல்லை.
இந்த நேரத்தில், மக்கள் பல சுவிசேஷ போதனைகளை மாற்றினர். பரலோக பிதா, இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியின் உண்மையான இயல்பைப் பற்றிய பெரும்பாலான அறிவு சிதைக்கப்பட்டது அல்லது இழக்கப்பட்டது. ஞானஸ்நானம் போன்ற ஆசாரியத்துவ நியமங்களையும் மக்கள் மாற்றினார்கள்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சத்தியத்தைத் தேடும் ஆண்களும் பெண்களும் மாற்றப்பட்ட போதனைகளையும் நடைமுறைகளையும் சீர்திருத்த முயன்றனர். அவர்கள் அதிக ஆவிக்குரிய ஒளியை நாடினர், அவர்களில் சிலர் சத்தியத்தின் மறுஸ்தாபிதத்தின் அவசியத்தைப் பற்றி பேசினர். அவர்களின் முயற்சிகள் பல சபைகளை அமைப்பதற்கு வழிவகுத்தன.
இந்த காலகட்டத்தில் மத சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, இது தேவனிடமிருந்து சத்தியத்தையும் அதிகாரத்தையும் மறுஸ்தாபிதம் செய்வதற்கான வழியைத் திறந்தது.
தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் வீழ்ச்சியை முன்னறிவித்தனர் (2 தெசலோனிக்கேயர் 2:1–3 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமும் சபையும் பூமியில் மறுஸ்தாபிதம் செய்யப்படும் என்றும் அவர்கள் முன்னறிவித்துள்ளனர் (அப்போஸ்தலர் 3:20–21 பார்க்கவும்). வீழ்ச்சி ஏற்படாமல் இருந்திருந்தால், மறுஸ்தாபிதம் தேவைப்பட்டிருக்காது.
வேதப் படிப்பு
-
மத்தேயு 24:9–11
-
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28–30
-
கலாத்தியர் 1:6–9
-
2 தெசலோனியக்கேயர் 2:1–12 (Joseph Smith Translation, வசனங்கள் 2, 3, 7–9)
-
2 தீமோத்தேயு 4:3–4
-
2 பேதுரு 2:1–2
-
ஆமோஸ் 8:11–12
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Apostasy”
-
Topical Guide: “Apostasy of the Early Christian Church”
-
Gospel Topics: “Apostasy”
ஜோசப் ஸ்மித் மூலம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம்
முதல் தரிசனம் மற்றும் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்தல்
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமை பூமியில் இல்லாத பல நூற்றாண்டுகளில், பரலோக பிதா தம் பிள்ளைகளை அணுகிக்கொண்டே இருந்தார். காலப்போக்கில், அவருடைய பூரண சுவிசேஷத்தால் அவர்கள் மீண்டும் ஆசீர்வதிக்கப்படுவதற்கு அவர் வழியை ஆயத்தம் செய்தார். சூழ்நிலைகள் சரியாக இருந்தபோது, அவர் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்தார், அவர் மூலம் சுவிசேஷம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சபை மறுஸ்தாபிதம் செய்யப்படும்.
ஜோசப் ஸ்மித் கிழக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய மத உற்சாகத்தின் போது வாழ்ந்தார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தேவனிடம் அர்ப்பணிப்புடன் சத்தியத்தைத் தேடினார்கள். பல சபைகள் சத்தியத்தைக் கொண்டிருப்பதாகக் கூறின, மேலும் எது சரியானது என்பதை அறிய ஜோசப் விரும்பினார் (ஜோசப் ஸ்மித்–வரலாறு 1:18 ஐப் பார்க்கவும்). “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” (எபேசியர் 4:5) என்று வேதாகமம் போதிக்கிறது. ஜோசப் வெவ்வேறு சபைகளுக்குச் சென்றதால், எதில் சேருவது என்பதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவர் சொன்னார்:
பல்வேறு சபைகளுக்கிடையே குழப்பமும் விவாதமும் பெரிதாக இருப்பினும், … என்னைப்போன்ற இளைஞனுக்கு யார் சொல்வது சரி, யார் தவறு என்ற குறிப்பான முடிவுக்கு வர முடியாததாக இருந்தது.…”
“இந்த வார்த்தை யுத்தத்திற்கும் கருத்துக்களின் சந்தடிக்கும் நடுவில், நான் அடிக்கடி என்னையே கேட்டுக் கொண்டேன்: என்ன செய்யப்பட வேண்டும்? இந்தப் பிரிவுகளில் யாரெல்லாம் சரியானவர்கள், அல்லது மொத்தத்தில் அவர்கள் எல்லோருமே தவறானவர்களா? அவைகளில் எதாவது ஒன்று சரியாயிருந்தால் அது எது, அதை நான் எவ்வாறு அறிந்துகொள்வது?” ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:8,10.
பலரைப் போலவே, ஜோசப் ஸ்மித்துக்கும் அவரது ஆத்தும இரட்சிப்பு பற்றிய கேள்விகள் இருந்தன. அவர் தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனுக்கு முன்பாக சுத்தமாக இருக்க விரும்பினார். தன் கேள்விகளுக்கு வெவ்வேறு சபைகளில் பதில் தேடி ஜோசப் வேதாகமத்தில் வாசித்தார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” யாக்கோபு 1:5
இந்த பத்தியின் காரணமாக, ஜோசப் தேவனிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க முடிவு செய்தார். 1820 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மரத்தோப்பிற்குச் சென்று ஜெபம் செய்ய முழங்கால்படியிட்டார். ஜோசப் ஸ்மித் அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்ட தரிசனத்தின் நான்கு விவரங்கள் உள்ளன. (see Gospel Topics Essays, “First Vision Accounts”). புனித நூலாக அறிவிக்கப்பட்ட விவரத்தில், அவர் தனது அனுபவத்தை பின்வருமாறு விவரித்தார்:
“சூரிய பிரகாசத்துக்கும் அதிகமான, ஒரு ஒளிக்கற்றை சரியாக என்மீது இறங்குவதை நான் கண்டேன். அது என் மீது விழும் வரை மெதுவாக இறங்கியது. “… ஒளி என்மீது விழுந்தபோது, எல்லா விளக்கத்திற்கும் சவாலான பிரகாசத்திலும் மகிமையிலுமிருந்த, எனக்கு மேலே காற்றில் நின்றுகொண்டிருந்த இரண்டு பிரமுகர்களை நான் கண்டேன். அவர்களில் ஒருவர் என்னுடன் பேசி, என்னைப் பெயர் சொல்லி அழைத்து மற்றவரைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்—இவர் என் நேச குமாரன். இவருக்குச் செவி கொடு!” ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:16–17.
இந்த தரிசனத்தில், பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து, ஜோசப் ஸ்மித்துக்கு தோன்றினர். எந்த சபையிலும் சேர வேண்டாம் என்று இரட்சகர் சொன்னார்.
இந்த தரிசனத்தின் மற்றொரு விவரத்தில், இரட்சகர் தன்னிடம் கூறியதாக ஜோசப் பகிர்ந்துகொண்டார்: “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. … இதோ, நான் மகிமையின் தேவன். என் நாமத்தை நம்புபவர்கள் யாவரும் நித்திய ஜீவன் பெறும்படியாக, நான் உலகத்துக்காக சிலுவையிலறையப்பட்டேன்.”
தரிசனத்திற்குப் பிறகு, ஜோசப் சொன்னார், “என் ஆத்துமா அன்பால் நிறைந்தது, பல நாட்கள் நான் மிகுந்த மகிழ்ச்சியில் களிகூர்ந்தேன், கர்த்தர் என்னுடன் இருந்தார்” (Joseph Smith History, circa Summer 1832, 3, josephsmithpapers.org; spelling and punctuation modernized).
இந்த தரிசனத்தின் மூலம், ஜோசப் ஸ்மித் இயேசு கிறிஸ்துவின் சாட்சியாக ஆனார் மற்றும் தேவத்துவத்தைப் பற்றிய முக்கியமான சத்தியங்களைக் கற்றுக்கொண்டார். உதாரணமாக, பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் தனித்தனி நபர்கள் என்பதை அவர் கற்றுக்கொண்டார். அவர்கள் அவரைப் பெயர் சொல்லி அழைத்தபோது, அவர்களுக்கு அவரைத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்று தெரிந்துகொண்டார். ஜோசப் மன்னிக்கப்பட்டதாகக் கூறப்பட்டபோது, தேவன் இரக்கமுள்ளவர் என்பதை அறிந்தார். இந்த அனுபவம் அவரை மகிழ்ச்சியில் நிறைத்தது.
பல முந்தைய தீர்க்கதரிசிகளுடன் தேவன் செய்ததைப் போலவே, அவர் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்தார், அவர் மூலம் பூரண சுவிசேஷம் பூமியில் மறுஸ்தாபிதம் செய்யப்படும். இந்த மறுஸ்தாபிதம், தேவனின் பிள்ளைகள் இந்த உலகத்தில் மகிழ்ச்சியையும், வரவிருக்கும் உலகில் நித்திய ஜீவனையும் காண உதவும்—அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் மூலம்.
ஆசாரியத்துவம் மற்றும் ஆசாரியத்துவ திறவுகோல்கள் மறுஸ்தாபிதம் செய்யப்படுதல்
பிதாவும் குமாரனும் தோன்றிய பிறகு, மற்ற பரலோக தூதுவர்கள் ஜோசப் ஸ்மித் மற்றும் அவரது தோழரான ஆலிவர் கவுட்ரியிடம் அனுப்பப்பட்டனர். யோவான் ஸ்நானன் உயிர்த்தெழுப்பப்பட்டவனாக தோன்றி, ஆரோனிய ஆசாரியத்துவத்தையும் அதன் திறவுகோல்களையும் அவர்களுக்கு வழங்கினான். ஆரோனிய ஆசாரியத்துவம் ஞானஸ்நானம் கொடுக்கும் அதிகாரத்தை உள்ளடக்கியது.
பின்பு விரைவில், பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான்—கிறிஸ்துவின் முதல் அப்போஸ்தலர்களில் மூன்று பேர்—உயிர்த்தெழுப்பப்பட்டவர்களாகத் தோன்றி, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தையும் அதன் திறவுகோல்களையும் ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரிக்கு அருளினர். இந்த ஆசாரியத்துவம்தான் கிறிஸ்து தம் அப்போஸ்தலர்களுக்கு பூர்வ காலத்தில் கொடுத்த அதே அதிகாரம்.
கர்த்லாந்து ஆலயத்தில், மோசே, எலியாஸ் மற்றும் எலியா ஆகியோர் ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரிக்கு தோன்றி, கடைசி நாட்களில் தேவனின் பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான கூடுதல் அதிகாரம் மற்றும் ஆசாரியத்துவத் திறவுகோல்களை அவர்களிடம் ஒப்படைத்தனர். மோசே இஸ்ரவேலின் கூடுகையின் திறவுகோல்களை ஒப்படைத்தான். ஆபிரகாமின் சுவிசேஷத்தின் உழியக்காலத்தை எலியாஸ் ஒப்படைத்தான். எலியா முத்திரிக்கும் வல்லமையியின் திறவுகோல்களை ஒப்படைத்தான். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:11–16 பார்க்கவும்; மற்றும் General Handbook, 3.1 பார்க்கவும்.
சபை அமைப்பு
ஜோசப் ஸ்மித் இயேசு கிறிஸ்துவின் சபையை மீண்டும் பூமியில் ஒழுங்கமைக்க வழிநடத்தப்பட்டார். அவர் மூலம், இயேசு கிறிஸ்து பன்னிரண்டு அப்போஸ்தலர்களை அழைத்தார்.
வேதாகம காலங்களில் தீர்க்கதரிசிகள் நாம் வாழும் காலத்தை கடைசி நாட்கள் அல்லது பிற்காலம் என்று குறிப்பிடுகிறார்கள். இது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முந்தைய நேரம். அதனால்தான் சபை பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என்று அழைக்கப்படுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:3–4ஐப் பார்க்கவும்; 3 நேபி 27:3–8ஐயும் பார்க்கவும்).
ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் இன்று
இயேசு தம்முடைய சபையை வழிநடத்துவதற்காக தம்முடைய பூலோக ஊழியத்தின் போது அப்போஸ்தலர்களை அழைத்தது போல், இன்றும் அதை வழிநடத்த அப்போஸ்தலர்களை அழைத்திருக்கிறார். பிரதான தலைமை, மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினர் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள், வெளிப்படுத்துபவர்கள்.
மூத்த அப்போஸ்தலர் மட்டுமே தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் முழு சபைக்கும் தலைமை தாங்குகிறார் மற்றும் கர்த்தருக்காகப் பேசுவதற்கு தனிப்பட்ட அதிகாரம் பெற்றவர். அவர் ஜோசப் ஸ்மித்தின் அங்கீகரிக்கப்பட்ட வாரிசு ஆவார். ஜோசப் ஸ்மித் பரலோக தூதுவர்களின் கைகளால் நியமிக்கப்பட்டபோது தொடங்கிய ஒரு அறுக்கப்படாத கட்டளைகளின் சங்கிலியில் அவரும் தற்போதைய அப்போஸ்தலர்களும் இயேசு கிறிஸ்துவுக்கு தங்கள் அதிகாரத்தை தொடர்புபடுத்துகின்றனர்.
வேதப் படிப்பு
-
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19–22
-
எபேசியர் 4:5.
-
யாக்கோபு 1:5
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Restoration of the Gospel”
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பூரணத்தின் மறுஸ்தாபிதம்: உலகிற்கு ஓர் இருநூற்றாண்டு பிரகடனம்
-
Gospel Topics: “Restoration of the Church,” “Restoration of the Priesthood”
மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு
மார்மன் புஸ்தகம் என்பது வேதாகமத்தைப் போன்ற ஒரு பண்டைய பரிசுத்த புஸ்தகம். வேதாகமம் இயேசு கிறிஸ்துவின் ஒரு சாட்சி, மற்றும் மார்மன் புஸ்தகம் அவருடைய ஊழியம், அவருடைய போதனைகள் மற்றும் நமது இரட்சகராக அவருடைய ஊழியம் ஆகியவற்றின் இரண்டாவது சாட்சியாகும்.
ஜோசப் ஸ்மித், பல நூற்றாண்டுகளாக புதைந்து கிடக்கும் ஒரு பூர்வகால பதிவேடுள்ள மலைக்கு மரோனி என்ற பரலோக தூதனால் வழிநடத்தப்பட்டார். தங்கத் தகடுகளில் (மெல்லிய உலோகத் தாள்கள்) பொறிக்கப்பட்ட இந்தப் பதிவேட்டில், அமெரிக்காவின் பண்டைய குடிமக்களுடன் தேவனின் தொடர்புகள் பற்றிய தீர்க்கதரிசிகளின் எழுத்துக்கள் இருந்தன. ஜோசப் ஸ்மித் இந்த பதிவேட்டை தேவனின் வரம் மற்றும் வல்லமையால் மொழிபெயர்த்தார்.
மார்மன் புஸ்தகத்தில் உள்ள தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் பற்றி அறிந்து அவருடைய சுவிசேஷத்தைப் போதித்தார்கள். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவர் இந்த மக்களுக்குத் தோன்றி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்தார். அவர் அவர்களுக்கு கற்பித்தார் மற்றும் அவரது சபையை ஸ்தாபித்தார்.
மார்மன் புஸ்தகம், அதன் போதனைகளைக் கற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு, பிரயோகிக்கும்போது தேவனிடம் நெருங்கி வர நமக்கு உதவுகிறது. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னார், “ஒரு ஆண் [அல்லது பெண்] வேறு எந்த புஸ்தகத்தையும் விட [இந்த புஸ்தகத்தின்] கொள்கைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் தேவனிடம் நெருங்கி வருவார்” (Teachings: Joseph Smith, 64).
மார்மன் புஸ்தகம் தேவனுடைய வார்த்தை என்பதை அறிய, நாம் அதைப் படிக்கவும், சிந்திக்கவும், அதைப் பற்றி ஜெபிக்கவும் வேண்டும். ஒரு மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி, நாம் உண்மையான இருதயத்தோடும், உண்மையான நோக்கத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசத்தோடும் ஜெபிக்கும்போது, புஸ்தகத்தின் சத்தியத்தை தேவன் நமக்கு வெளிப்படுத்துவார் என்று உறுதியளித்தார் (மரோனி 10:3-5 பார்க்கவும்). நீடித்த மனமாற்றத்துக்கு மார்மன் புஸ்தகத்தைப் படித்தல் தேவை.
நாம் மார்மன் புஸ்தகத்தைப் படித்து அதைப் பற்றி ஜெபிக்கும்போது, நம் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்களைக் கற்றுக்கொள்வோம். ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி என்பதையும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் சபை அவர் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது என்பதையும் நாம் அறிந்து கொள்வோம்.
“மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு ஒவ்வொரு நாளும், நீங்கள் படிக்கும்போதுஒவ்வொரு நாளும் நீங்கள் சிறந்த தீர்மானங்களை எடுப்பீர்கள். நீங்கள் படிப்பதை தியானிக்கும்போது, வானத்தின் பலகணிகள் திறக்கும், உங்கள் சொந்த கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் பெறுவீர்கள், உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் வரும் என்று நான் வாக்களிக்கிறேன். மார்மன் புஸ்தகத்தில் தினமும் உங்களை நீங்களே மூழ்கடித்தீர்கள் என்றால், அந்தந்த நாட்களின் தீமைகளுக்கு எதிராக இருந்து தற்காக்கப்படுவீர்கள்” (ரசல் எம். நெல்சன் “The Book of Mormon: What Would Your Life Be Like without It?” Liahona, Nov. 2017, 62–63).
வேதப் படிப்பு
-
மார்மன் புஸ்தகத்துக்கு முன்னுரை, பத்திகள் 1–7
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Book of Mormon”
-
Gospel Topics: “Book of Mormon”
பரிசுத்த ஆவியின் மூலம் சத்தியத்தை அறிய ஜெபியுங்கள்
தேவன் நம் பிதாவாக இருப்பதால், அவர் உண்மையை அடையாளம் காண உதவுவார். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித செய்தி உண்மையானது என்பதை நாம் மார்மன் புஸ்தகத்தைப் படித்து தேவனிடம் ஜெபிக்கும்போது அறிந்து கொள்ளலாம். நாம் விசுவாசத்துடனும் உண்மையான நோக்கத்துடனும் ஜெபிக்கும்போது, அவர் நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளித்து, நம் வாழ்க்கையை வழிநடத்துவார்.
தேவன் பொதுவாக நமது ஜெபங்களுக்கு பரிசுத்த ஆவியின் மூலமாக பதிலளிக்கிறார். நாம் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைப் போதித்து உறுதிப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியின் தொடர்புகள் வல்லமை வாய்ந்தவை. அவை பொதுவாக நமது உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அபிப்பிராயங்கள் மூலம் அமைதியான உத்தரவாதமாக வருகின்றன (1 ராஜாக்கள் 19:11-12; ஏலமன் 5:30; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2 பார்க்கவும்).
வேதங்களை (குறிப்பாக மார்மன் புஸ்தகம்) தொடர்ந்து வாசித்தல், வாராந்திர திருவிருந்தில் கலந்துகொள்வது மற்றும் நேர்மையான ஜெபம் ஆகியவை பரிசுத்த ஆவியின் வல்லமையை உணரவும் உண்மையை கண்டறியவும் நமக்கு உதவுகின்றன.
வேதப் படிப்பு
-
யோவான் 14:26
-
மார்மன் புஸ்தகத்துக்கு முன்னுரை, பத்திகள் 8– 9
இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்
-
Guide to the Scriptures: “Prayer”
-
Bible Dictionary: “Prayer”
-
Gospel Topics: “Prayer”
குறுகியது முதல் நடுத்தர பாட குறிப்பு
உங்களுக்கு ஒரு சிறிது நேரம் மட்டுமே இருந்தால், நீங்கள் ஒருவருக்கு என்ன கற்பிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு பின்வரும் குறிப்பாகும். இந்த குறிப்பைப் பயன்படுத்தும் போது, கற்பிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கொள்கைக்கும் கோட்பாட்டு அடித்தளம் பாடத்தில் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கற்பிக்கும்போது, கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் செவிகொடுங்கள். தேவனிடம் எப்படி நெருக்கமாக வளருவது என்பதை மக்கள் அறிய உதவும் அழைப்புகளை கொடுக்கவும். ஒரு முக்கியமான அழைப்பு அந்த நபர் உங்களை மீண்டும் சந்திப்பதற்கானதாகும் . பாடத்தின் நீளம் நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் நீங்கள் செவிகொடுக்கும் விதத்தைப் பொறுத்தது.
3—10 நிமிடங்களில் நீங்கள் மக்களுக்கு என்ன கற்பிக்கலாம்
-
தேவன் நம்முடைய பரலோக பிதா, அவர் நம்மை அவருடைய சாயலில் படைத்தார். அவர் நம்மை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார், நம்மை நேசிக்கிறார். நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் சமாதானத்துடனும் மகிழ்ச்சியின் முழுமையுடனும் அவர் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.
-
இயேசு கிறிஸ்துதான் தேவ குமாரன். நம்முடைய பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, மரணத்தை வென்று நித்திய ஜீவனைப் பெறுவதை சாத்தியமாக்குவதே அவருடைய ஊழியம்.
-
தேவன் தீர்க்கதரிசிகளை பூமியில் தமது பிரதிநிதிகளாக அழைக்கிறார். பூர்வ காலத்தில், அவர் ஆதாம், நோவா, ஆபிரகாம் மற்றும் மோசே போன்ற தீர்க்கதரிசிகளை அழைத்தார். இன்று நமக்குக் கற்பிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெறுகிறார்.
-
இயேசுவின் பூலோக ஊழியத்தின் போது, அவர் தனது சபையை ஸ்தாபித்தார். இயேசுவின் அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிறகு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் சபையிலிருந்து ஒரு பரவலான வீழ்ச்சி ஏற்பட்டது. ஞானஸ்நானம் போன்ற பல சுவிசேஷ போதனைகள் மற்றும் ஆசாரியத்துவ நியமங்களை மக்கள் மாற்றினர்.
-
அவர் முந்தைய காலங்களில் தீர்க்கதரிசிகளை அழைத்ததுபோல, தேவன் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக இருக்க அழைத்தார். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் அவருக்குத் தோன்றினார்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அவர் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது.
-
மார்மன் புஸ்தகம் வேதத்தின் தொகுப்பாயிருக்கிறது. வேதாகமம் போலவே, இது இயேசு கிறிஸ்துவின் ஒரு ஏற்பாடு ஆகும், மேலும் நாம் அதைப் படிக்கும்போதும் அதன் கொள்கைகளைப் பின்பற்றும்போதும் தேவனிடம் நெருங்கி வர உதவுகிறது. ஜோசப் ஸ்மித் அதை தேவ வரத்தாலும் வல்லமையாலும் மொழிபெயர்த்தார்.
-
நேர்மையான ஜெபத்தின் மூலம், நாம் தேவனுடன் தொடர்பு கொள்ளலாம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித செய்தி உண்மை என்பதை நாம் அறியலாம்.