இளைஞர்
7. நியமங்களும் உடன்படிக்கைகளும் தேவனின் ஆசீர்வாதங்களை நீங்கள் பெற உதவுகின்றன.


யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

7.

நியமங்களும் உடன்படிக்கைகளும் தேவனின் ஆசீர்வாதங்களைப்பெற உங்களுக்கு உதவுகின்றன.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20

உங்கள் பரலோக பிதா உங்களுக்குக் கற்பிக்கவும் ஆசீர்வதிக்கவும் ஆர்வமாக உள்ளார். அவர் இதைச் செய்வதற்கான ஒரு வழி, ஞானஸ்நானம், திடப்படுத்தல் மற்றும் திருவிருந்து போன்ற நியமங்கள் மூலம் ஆகும். இது போன்ற நியமங்கள் மூலம், நாம் தேவனுடன் ஒரு உடன்படிக்கை அல்லது வாக்குறுதியைச் செய்கிறோம். உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை அதிகரிக்கிறது மற்றும் நித்திய ஜீவனுக்கு உங்களைத் தயார்படுத்த உதவுகிறது. இதனால்தான் நியமங்களும் உடன்படிக்கைகளும் நமக்கு விலைமதிப்பற்றவை—ஏனென்றால் அவை நமது பரலோக பிதாவுடனும் நமது இரட்சகருடனும் நமது தொடர்பை வலுப்படுத்தி, அவர்களைப் போல ஆக நமக்கு உதவுகின்றன.

நித்திய சத்தியங்கள்

நியமங்கள் உங்களை இயேசு கிறிஸ்துவிடம் சுட்டிக் காட்டுகிறது. ஒரு நியமம் என்பது இயேசு கிறிஸ்துவைப் பற்றி கற்பிக்கும் அடையாள அர்த்தங்களைக் கொண்ட ஒரு பரிசுத்த சடங்காகும். உதாரணமாக, திருவிருந்து என்பது வெறும் அப்பமும் தண்ணீரும் மட்டுமல்ல. இது இரட்சகரை நமக்கு நினைவூட்டுகிறது.

உடன்படிக்கைகள் தேவனின் அன்பு, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளின் அடையாளம். அவை தேவனுடனான உங்கள் உறவை ஆழமான நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. ஒரு உடன்படிக்கை செய்வது நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள் என்பதையும், அவருக்குக் அர்ப்பணித்துள்ளீர்கள் என்பதையும் காட்டுகிறது. நீங்கள் அவரை நம்பலாம், அவர் உங்களை நம்பலாம். அந்த ஆழமான அர்ப்பணிப்புடன், உங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது, ​​அவருடைய வல்லமையையும் உதவியையும் அதிகமாகப் பெற முடியும்.

நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போதும், திடப்படுத்தும்போதும், திருவிருந்தில் பங்குகொள்ளும்போதும் தேவனுடன் உடன்படிக்கை செய்கிறீர்கள். நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போது, ​​இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உங்கள் மீது தரித்துக்கொள்வதாகவும், அவருக்கு சேவை செய்வதாகவும், உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதாகவும் உறுதியளிக்கிறீர்கள். திருவிருந்தின் போது, ​​நீங்கள் அவரை எப்போதும் நினைவில் கொள்வதாகவும் வாக்களிக்கிறீர்கள். இவை உங்கள் வாக்குறுதிகள். நீங்கள் அவற்றைக் கைக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, ​​தேவன் உங்களுக்குப் பரிசுத்த ஆவியை ஒரு நிலையான தோழனாகக் கொடுப்பதாக வாக்களிக்கிறார்.

அழைப்புகள்

திருவிருந்தை ஒரு பரிசுத்த வரமாகக் கருதுங்கள். திருவிருந்தின் போது ஒரு பரிசுத்த அனுபவத்திற்குத் தயாராவதன் மூலம் இயேசு கிறிஸ்து மீதான உங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுங்கள். இந்த நியமத்தை உங்கள் வாரத்தின் ஆவிக்குரிய சிறப்பம்சமாக மாற்ற நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்தியுங்கள்.

அந்த நியமங்களில் இரட்சகரைத் தேடுங்கள். நீங்கள் ஒரு நியமத்தைப் பார்க்கும்போது அல்லது பங்கேற்கும்போது, ​​உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், “இயேசு கிறிஸ்துவைப் பற்றி இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?” அல்லது “இது என்னை எவ்வாறு அவருக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது?” ஆவியானவர் உங்களுக்கு என்ன கற்பிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

உங்கள் உடன்படிக்கைகள் உங்கள் செயல்களை வழிநடத்தட்டும். நீங்கள் ஒரு தேர்வு செய்ய வேண்டியிருக்கும் போது, ​​தேவனுடனான உங்கள் உடன்படிக்கை உறவை நினைவில் கொள்ளுங்கள். அவருக்கு விசுவாசமாக இருங்கள். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: இது எனது உடன்படிக்கைகளுடன் ஒத்துப்போகிறதா? உதாரணமாக, நான் மற்றவர்களை நேசித்து அவர்களுக்கு ஊழியம் செய்கிறேனா, ஆறுதல் தேவைப்படும் மக்களை ஆறுதல்படுத்துகிறேனா, எல்லா இடங்களிலும் எப்போதும் கிறிஸ்துவின் சாட்சியாக நிற்கிறேனா?

நேபியர்களுக்கான திருவிருந்தைத் தயாரிக்கும் மேஜையில் கிறிஸ்து

வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.

நீங்கள் சோதனையையும், பாவத்தையும், வாழ்க்கையின் சோதனைகளையும் வெல்லும் வல்லமையைப் பெறலாம். உடன்படிக்கைகளைச் செய்து அவற்றைக் காத்துக்கொள்வது தேவனின் வல்லமையை நீங்கள் பெற உதவுகிறது. அந்த வல்லமையுடன், நீங்கள் எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவே உங்கள் பெலன்!

நீங்கள் சுத்தமாகவும் மன்னிக்கப்பட்டவராகவும் இருக்க முடியும். உங்கள் ஞானஸ்நான உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக தேவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதி, உங்கள் பாவங்களை மன்னிப்பதாகும். அதாவது, நீங்கள் மனந்திரும்பி தேவனுடன் உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றும்போது, ​​அவர் உங்களை மன்னித்து, உங்களை மேம்படுத்த உதவுவார்.

உங்களுடன் பரிசுத்த ஆவியை எப்போதும் பெற்றிருக்க முடியும். ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தோடு தொடர்புடைய மற்றொரு வாக்குறுதி, அவருடைய ஆவியின் நிலையான தோழமை மற்றும் தூதர்களின் ஊழியம் ஆகும். வாழ்க்கையின் சவால்களை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. தேவன் தனது உடன்படிக்கைப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை—நீங்கள் அதை நம்பலாம்.

தேவனுடைய உடன்படிக்கை ஜனங்களின் ஆதரவை நீங்கள் பெறலாம். நீங்கள் இரட்சகரின் சபையில் உடன்படிக்கை மக்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். நீங்கள் ஒருவரையொருவர் உயர்த்தி ஊக்குவிக்கிறீர்கள். நீங்கள் ஒன்றாக துக்கப்படுகிறீர்கள், ஒன்றாக மகிழ்கிறீர்கள். நீங்கள் ஒருவர் சுமைகளை ஒருவர் சுமக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினர், ஆயர், தலைவர்கள் மற்றும் பிற சபை உறுப்பினர்கள் உங்களுக்கு உதவ இங்கே இருக்கிறார்கள், நீங்கள் அவர்களுக்கு உதவலாம்.

கேள்விகளும் பதில்களும்

நியமங்களும் உடன்படிக்கைகளும் இல்லாமல் நான் இயேசு கிறிஸ்துவின் நல்ல சீஷனாக இருக்க முடியுமா? ஞானஸ்நானம் பெறாமலோ அல்லது ஆலயம் செல்லாமலோ கூட, இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றும் பல நல்ல மனிதர்கள் உள்ளனர். இருப்பினும், பரலோக பிதா தனது எல்லாப் பிள்ளைகளும் அவரது நியமங்களைப் பெற்று, அவருடன் உடன்படிக்கைகளைச் செய்ய விரும்புகிறார், இதனால் அவர்கள் அவரது உதவி, இரக்கம் மற்றும் பலத்தை அதிகமாகப் பெற முடியும். இயேசு கிறிஸ்து தனது சபையை மறுஸ்தாபிதம் செய்ததற்கு அதுவே முக்கிய காரணங்களில் ஒன்றாகும்! நித்திய ஜீவனுக்குத் தேவையான நியமங்களையும் உடன்படிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள, இந்த ஜீவனிலோ அல்லது மறுபிறவியிலோ, தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

நான் எப்போதும் என் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருந்ததில்லை. எனக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? ஆம்! இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒரு நம்பிக்கை மற்றும் புதிய ஆரம்பங்களின் சுவிசேஷம். இதனால்தான் நாம் ஒவ்வொரு வாரமும் திருவிருந்து எடுத்துக்கொள்கிறோம். நாம் தவறுகள் செய்வோம், புதிய தொடக்கம் தேவை என்று பரலோக பிதா அறிந்திருந்தார். உங்களுக்கு ஒரு வழியைக் கொடுக்க இரட்சகர் தனது உயிரைக் கொடுத்தார். நீங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து மனந்திரும்பும்போது, ​​தேவனுடைய வல்லமையை மீண்டும் பெறலாம்.

1 கொரிந்தியர் 11:23–26 பார்க்கவும் (திருவிருந்து எடுத்துக்கொள்வது நாம் இயேசு கிறிஸ்துவையும் அவரது பாவநிவர்த்தியையும் நம்புகிறோம் என்பதைக் காட்டுகிறது); மோசியா 18:10, 13 (ஞானஸ்நான உடன்படிக்கை); கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13 (ஆரோனிய ஆசாரியத்துவம் மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் தூதர்களின் ஊழியம் ஆகியவற்றின் திறவுகோல்களை உள்ளடக்கியது); 20:37 (ஞானஸ்நானத்திற்கான தேவைகள்); 20:77, 79 (திருவிருந்து ஜெபங்கள்).

ஆலய பரிந்துரை கேள்விகள்

  • வீ்ட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்கவும், உங்கள் கூட்டங்களில் பங்கேற்கவும், திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தவும் தகுதியுள்ளவராக பங்கெடுக்கவும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுடனும் கட்டளைகளுடனும் இணக்கத்துடன் உங்கள் வாழ்க்கையை வாழ நீங்கள் முயற்சிக்கிறீர்களா?