1.
தேவனின் திட்டம் உங்களுக்கானது
நீங்கள் பூமிக்கு வருவதற்கு முன்பு, உங்கள் பரலோக பெற்றோருடன் வாழ்ந்தீர்கள். நீங்கள் அவர்களுடைய பிரியமான பிள்ளை. பரலோகத்தில், அவருடைய குடும்பத்திற்கான தேவனின் திட்டத்தைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். நீங்கள் இந்த திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றீர்கள், ஏனென்றால் இது ஒரு மாம்ச உடலைப் பெறுவதன் மூலமும், பூமிக்குரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலமும், பூமியில் வாழ்க்கையை அனுபவிப்பதன் மூலமும் தேவனைப் போல வளரவும் முன்னேறவும் உதவும். இந்த அனுபவங்களில் சில கடினமாக இருக்கும். நமது பிதா இதை அறிந்திருந்தார், எனவே அவருடைய திட்டத்தின் ஒரு பகுதியாக, உங்களுக்கு உதவ ஒரு இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். இதை நாம் இரட்சிப்பின் திட்டம் அல்லது மகிழ்ச்சியின் திட்டம் என்று அழைக்கிறோம்.
நித்திய சத்தியங்கள்
பரலோக பிதா இந்தத் திட்டத்தை துவக்குபவராயிருக்கிறார். அவர் உங்கள் ஆவிக்கு பிதா, அவர் உங்களை நேசிக்கிறார். அவர் உங்களுக்குத் தம்முடைய மிகப்பெரிய ஆசீர்வாதத்தை—அவருடனான நித்திய ஜீவனை கொடுக்க விரும்புகிறார். வேறு வார்த்தைகளில் எனில், நீங்கள் அவரைப் போலவே மாறி, அவர் வாழும் மகிழ்ச்சியான, மகிமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருக்கு எல்லா வல்லமையும் உண்டு, எல்லாம் தெரியும். வாழ்க்கை கடினமாக இருந்தாலும் கூட, நீங்கள் அவரை நம்பலாம்.
இயேசு கிறிஸ்து இத்திட்டத்தை சாத்தியமாக்குகிறார். உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு, பரலோக பிதா அவரை உங்கள் இரட்சகராகத் தேர்ந்தெடுத்தார். இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே உங்களை உங்கள் பரலோக பிதாவிடம் திரும்பக் கொண்டு வர முடியும். இதனால்தான் நாம் அவரைப் பின்பற்றத் தேர்வு செய்கிறோம். எல்லாம் அந்தத் தேர்வைப் பொறுத்தது!
திருமணமும் குடும்பமும் தேவனின் திட்டத்திற்கு இன்றியமையாதவை. நீங்கள் தேவனின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள், அவருடைய ஆவிக்குரிய பிள்ளைகள் அனைவரும் ஒரு தாய் மற்றும் தகப்பன் மூலம் பூமிக்கு வருகிறார்கள். தேவன் தம்முடைய மகள்களும் மகன்களும் நித்திய பரிபூரணத்தை நோக்கி ஒன்றாக முன்னேற விரும்புகிறார். அன்பான, ஒன்றுபட்ட திருமணத்திற்கு ஆண்களும் பெண்களும் சமமாக பங்களிக்கின்றனர். பூமியில் குடும்ப வாழ்க்கை—அதன் எல்லா அபூரணங்களுடனும்கூட—மிகுந்த மகிழ்ச்சியைத் தர முடியும். இது தேவனுடன் நித்திய ஜீவனுக்கு உங்களை தயார்படுத்த உதவும்.
அழைப்புகள்
ஒரு நித்திய பார்வையை காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சோதனைகள், பாடுகள், ஏமாற்றங்கள் அல்லது கடினமான தேர்வுகளை எதிர்கொள்ளும் போதெல்லாம், தேவனின் திட்டத்தை உங்களுக்கு நீங்களே நினைவூட்டுங்கள். அவருடைய திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்த நித்திய சத்தியங்கள் உங்கள் சவால்களை வித்தியாசமாகப் பார்க்க எவ்வாறு உதவும் என்பதைப் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் அவருடைய கரத்தைத் தேடுங்கள். தேவன் உங்களை எப்படி ஆசீர்வதிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். அது யாரோ ஒருவரின் அன்பான செயலாகவோ, ஒரு கண நேர அமைதியாகவோ அல்லது ஜெபத்துக்கான பதிலாகவோ இருக்கலாம்.
தேவனின் திட்டத்தைப் பின்பற்றத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பரலோக பிதா நீங்கள் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். வேதங்களையும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும், குடும்ப பிரகடனத்தையும், உங்கள் கோத்திரத் தலைவனின் ஆசீர்வாதத்தையும் நீங்கள் படிக்கும்போது அவருடைய வழிகாட்டுதலைத் தேடுங்கள். இது ஒரு ஊழியக்காரராகவும், உங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்ய உங்களைத் தயார்படுத்த உதவும். கர்த்தருக்கு சேவை செய்தல், நித்திய திருமணம், பிள்ளைகளை வளர்த்தல் ஆகியவற்றை உயர்ந்த முன்னுரிமையாக ஆக்குங்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம், மகிழ்ச்சியான குடும்பத்தைப் பெற இப்போதே உங்கள் பங்கைச் செய்யுங்கள்.
வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
வாழ்க்கையின் சோதனைகளை நீங்கள் கிறிஸ்துவில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள முடியும். தேவனுடைய நித்திய திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதால், கடினமான காலங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு மதிப்புமிக்க கருவி உங்களிடம் உள்ளது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நடப்பதை விட வாழ்க்கையில் இன்னும் நிறைய இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் உண்மையில் யார், உங்கள் நோக்கம் என்ன, இரட்சகரின் உதவியுடன் நீங்கள் யாராக முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவே உங்கள் பெலன்!
நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது நித்திய ஜீவனைப் பெறலாம். அவரைப் போல ஆகவும், உங்கள் பரலோக பெற்றோரிடம் திரும்பவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் நித்தியமாக மகிழ்ச்சியாக வாழவும் அவர் உங்களுக்கு வல்லமையைத் தருவார். இயேசு கிறிஸ்துவை நம்புங்கள்
கேள்விகளும் பதில்களும்
வாழ்க்கை ஏன் சில நேரங்களில் மிகவும் கடினமாக இருக்கிறது? நான் எப்படி பலத்தைக் கண்டுபிடிக்கலாம்? இந்த வாழ்க்கையில் உங்கள் அனுபவங்கள்—மிகவும் கடினமானவை கூட—உங்கள் நன்மைக்காக இருக்கலாம். நீங்கள் இரட்சகரிடம் திரும்பும்போது அவை உங்களுக்கு வளரவும் முன்னேறவும் உதவும். அவரது பாவநிவாரண பலியின் காரணமாக இயேசு கிறிஸ்து புரிந்துகொள்ளாத எதையும் நீங்கள் அனுபவிக்கவில்லை. உங்களுக்கு எப்படி உதவுவது என்பது அவருக்குத் தெரியும். உங்கள் வாழ்க்கையை அவர் மீது திருப்புங்கள், அவர் உங்களை எல்லா சந்தேகங்களுக்கும் பயங்களுக்கும் மேலாக உயர்த்துவார்.
சில நேரங்களில், குடும்பத்திலும் திருமணத்திலும் மகிழ்ச்சி என்ற எண்ணம் வெகு தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது. நான் எப்படி நம்பிக்கையைக் கண்டறிவது? உங்கள் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், பரலோக பிதாவின் திட்டத்தைக் கைவிடாதீர்கள். அவர் உங்களை கைவிடமாட்டார். நீங்கள் இரட்சகருக்கும் உங்கள் உடன்படிக்கைகளுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் பதில்களைக் காண்பீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தையும் அவர் புரிந்துகொள்கிறார். அவர் மூலமாக, தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவர் வாக்குறுதியளிக்கும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான பலத்தைப் பெறுவீர்கள். அவரையும் அவருடைய சுவிசேஷத்தையும் நம்புங்கள்.
2 நேபி 9:13 பார்க்கவும் (நம் தேவனுடைய திட்டம் எவ்வளவு பெரியது!); மோசியா 2:41 (கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்கள் தேவனோடு முடிவில்லா மகிழ்ச்சியில் வாழ முடியும்); ஆல்மா 12:28–34 (தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு மீட்பின் திட்டத்தைத் தெரியப்படுத்தினார்); ஆபிரகாம் 3:22–26 (தேவனின் திட்டத்தில் நம்மை பூமிக்கு அனுப்புவதும் அடங்கும், அங்கு நாம் அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதை நாமே தேர்வு செய்யலாம்.).
ஆலய பரிந்துரை கேள்விகள்
-
நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியில் உங்களுக்கு விசுவாசமும் சாட்சியமுமுண்டா?