“மனதில் வைக்க வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டில் வரலாற்று புத்தகங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
‘பழைய ஏற்பாட்டில் வரலாற்று புத்தகங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
மனதில் வைக்க வேண்டிய எண்ணங்கள்
பழைய ஏற்பாட்டில் வரலாற்று புத்தகங்கள்
யோசுவா முதல் எஸ்தர் புத்தகங்கள் வரை பாரம்பரியமாக பழைய ஏற்பாட்டின் “வரலாற்று புத்தகங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இதனால் பழைய ஏற்பாட்டில் உள்ள பிற புத்தகங்களுக்கு வரலாற்று மதிப்பு இல்லை என்று அர்த்தமல்ல. மாறாக, அவற்றின் எழுத்தாளர்களின் முக்கிய நோக்கம் இஸ்ரவேல் ஜனத்தின் வரலாற்றில் தேவனின் கரத்தை காண்பிப்பதாக இருப்பதால், வரலாற்று புத்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. லேவியராகமம் மற்றும் உபாகமம் செய்வது போல மோசேயின் நியாயப் பிரமாணத்தை கோடிட்டுக் காட்டுவது நோக்கமல்ல. சங்கீதம் மற்றும் புலம்பல் செய்வது போல, கவிதை வடிவத்தில் ஸ்தோத்திரத்தையும் புலம்பலையும் தெரிவிப்பதல்ல. ஏசாயா மற்றும் எசேக்கியேல் புத்தகங்கள் செய்வது போல தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை பதிவு செய்வதல்ல. மாறாக, வரலாற்று புத்தகங்கள் கதைகளைச் சொல்கின்றன.
கண்ணோட்டத்தின் காரியம்
இயற்கையாகவே, இந்தக் கதைகள் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலிருந்து சொல்லப்படுகிறது. ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களிலிருந்து ஒரு மலர், பாறை அல்லது மரத்தைப் பார்ப்பது இயலாதது போலவே, ஒரு வரலாற்று விவரம் அதை எழுதும் நபர் அல்லது குழுவின் கண்ணோட்டங்களை பிரதிபலிக்கும் என்பது தவிர்க்க முடியாதது. இந்த கண்ணோட்டத்தில் எழுத்தாளர்களின் தேச அல்லது இன உறவுகள் மற்றும் அவர்களின் கலாச்சார விதிமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் அடங்கும். இதை அறிந்துகொள்வது வரலாற்று புத்தகங்களின் எழுத்தாளர்களும் தொகுப்பாளர்களும் சில விவரங்களில் கவனம் செலுத்தி மற்றவைகளை விட்டுவிடு கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். மற்றவர்கள் செய்யாத சில அனுமானங்களை அவர்கள் செய்தார்கள். அந்த விவரங்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அவர்கள் முடிவுகளுக்கு வந்தார்கள். வேதாகம புத்தகங்களில் (மற்றும் சில நேரங்களில் ஒரே புத்தகத்திற்குள்) வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கூட நாம் காணலாம். இந்தக் கண்ணோட்டங்களைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக அறிந்திருந்தால், அவ்வளவு சிறப்பாக வரலாற்றுப் புத்தகங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
எல்லா பழைய ஏற்பாட்டு வரலாற்று புத்தகங்களுக்கும் பொதுவான ஒரு கண்ணோட்டம், தேவனின் உடன்படிக்கை ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரரைப்பற்றிய கண்ணோட்டம். கர்த்தரிடத்தில் அவர்கள் வைத்திருந்த விசுவாசம், அவர்கள் வாழ்க்கையிலும் அவர்களுடைய தேசத்தின் விவகாரங்களிலும் அவருடைய கரத்தைப் பார்க்கவும் உதவியது. மதச்சார்பற்ற வரலாற்று புத்தகங்கள் விஷயங்களை இந்த வழியில் பார்க்க முனைவதில்லை என்றாலும், இந்த ஆவிக்குரிய கண்ணோட்டம் பழைய ஏற்பாட்டு வரலாற்று புத்தகங்களை தேவன் மீது தங்கள் சொந்த விசுவாசத்தை வளர்க்க முற்படும் மக்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்குகிறது.
பழைய ஏற்பாட்டின் மீதமுள்ள உள்ளடக்கம்
இஸ்ரவேலர் பல ஆண்டுகளாக வனாந்தரத்தில் அலைந்து திரிதல் முடிவடையும்போது, உபாகமம் புத்தகம் வெளியேறும் இடத்திலிருந்து வரலாற்று புத்தகங்கள் தொடங்குகின்றன. யோசுவா புத்தகம் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வாக்குத்தத்தத்தின் தேசமான கானானுக்குள் நுழையத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது, அதை அவர்கள் எவ்வாறு கைப்பற்றினார்கள் என்பதை விவரிக்கிறது. நியாயாதிபதிகள் முதல் 2 நாளாகமம் வரை வரும் புத்தகங்கள், வாக்குத்தத்தத்தின் தேசத்தில் அவர்கள் குடியேறிய காலம் முதல் அசீரியா மற்றும் பாபிலோனால் கைப்பற்றப்பட்ட காலம் வரை இஸ்ரவேலின் அனுபவத்தை சித்தரிக்கின்றன. எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்கள் பல தசாப்தங்களுக்குப் பிறகு இஸ்ரவேலரின் பல குழுக்கள், தங்கள் தலைநகரான எருசலேமுக்கு திரும்பியதைக் கூறுகின்றன. இறுதியாக, எஸ்தர் புத்தகம் பாரசீக ஆட்சியின் கீழ் நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலர்களின் கதையை விவரிக்கிறது.
பழைய ஏற்பாட்டின் காலவரிசை முடிவடையும் இடம் அதுதான். முதல் முறையாக வேதாகமம் வாசிக்கும் சிலர் பழைய ஏற்பாட்டின் கதையை அவர்கள் அதன் பாதி பக்கங்களை வாசிப்பதற்கு முன்பே, உண்மையாகவே படித்து முடித்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எஸ்தருக்குப் பிறகு, இஸ்ரவேலரின் வரலாறு குறித்து நமக்கு அதிகமான தகவல்கள் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, தொடர்ந்து வரும் புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள் வழங்கிய காலவரிசைக்குள், குறிப்பாக தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் பொருந்துகின்றன. எரேமியா தீர்க்கதரிசியின் ஊழியம், உதாரணம் 2 இராஜாக்கள் 22–25 ல் பதிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளின் போது நடந்தது (மற்றும் 2 நாளாகமம் 34–36 ல் உள்ள இணையான விவரம்). இதை அறிவது வரலாற்று விவரிப்புகள் மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்கள் இரண்டையும் நீங்கள் படிக்கும் விதத்தை பாதிக்கும்.
ஒன்று பொருந்தாதபோது
பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது, எந்தவொரு வரலாற்றையும் போலவே, தற்கால கண்களுக்கு, விசித்திரமானதாகவோ அல்லது கவலையாகத் தோன்றும் விஷயங்களைச் செய்யும் அல்லது சொல்லும் ஜனங்களைப்பற்றி நீங்கள் படிக்க வாய்ப்புள்ளது. இதை நாம் எதிர்பார்க்க வேண்டும், பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் உலகை ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள், சில வழிகளில், நம்மிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட விதமாக. வன்முறை, இன உறவுகள் மற்றும் பெண்களின் பங்கு ஆகியவை பண்டைய எழுத்தாளர்கள் இன்று நம்மை விட வித்தியாசமாகக் கண்டிருக்கக்கூடிய சில பிரச்சினைகள்.
ஆகவே, வேதங்களில் கவலையாகத் தோன்றும் பாகங்களைக் காணும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, ஒவ்வொரு பாகத்தையும் ஒரு பரந்த நோக்கில் கருத்தில் கொள்ள இது உதவக்கூடும். தேவனின் இரட்சிப்பின் திட்டத்தில் இது எவ்வாறு பொருந்துகிறது? பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுபாவத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றுடன் இது எவ்வாறு பொருந்துகிறது? மற்ற வேதங்களில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களுடன் அல்லது ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் போதனைகளுடன் இது எவ்வாறு பொருந்துகிறது? உங்கள் சொந்த இருதயம் மற்றும் மனதில் ஆவியின் கிசுகிசுப்புக்களுடன் இது எவ்வாறு பொருந்துகிறது?
சில சந்தர்ப்பங்களில், இப்பாகம் எதுவுமே எவற்றுடனும் பொருந்தாததாகத் தோன்றும். சில நேரங்களில் அப்பாகம் நீங்கள் ஏற்கனவே சேர்த்திருந்த பிற துண்டுகளிடையே உள்ள புதிர் துண்டுகளோடு இடம் பெறாததாக தோன்றலாம். பொருத்தமாக்க அத்துண்டை கட்டாயப்படுத்த முயற்சிப்பது சிறந்த அணுகுமுறை அல்ல. ஆனால் இரண்டும் முழு புதிரையும் விட்டுவிடவில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் இப்போதைக்கு அத்துண்டை ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கலாம். நீங்கள் மேலும் கற்றுக் கொள்ளும்போது, மேலும் புதிரை ஒன்றிணைக்கும்போது, துண்டுகள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை நீங்கள் நன்கு காணலாம்.
ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், வேத வரலாறுகள் மனித பிழைக்கு உட்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ள இது உதவும். உதாரணமாக, பல நூற்றாண்டுகளாக “[வேதாகமத்திலிருந்து] பல தெளிவான மற்றும் விலைமதிப்பற்ற விஷயங்கள் [பறிக்கப்பட்டன]”, இதில் கோட்பாடு, உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களைப்பற்றிய முக்கியமான உண்மைகள் அடங்கும்(1 நேபி 13:28; வசனங்கள் 26, 29, 40 ஐயும் பார்க்கவும்). அதே நேரத்தில், நமது சொந்த கண்ணோட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை ஒப்புக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்: எப்போதும் நாம் முழுமையாக புரிந்து கொள்ளாத விஷயங்களும், இன்னும் பதிலளிக்க முடியாத கேள்விகளும் இருக்கும்.
சில வேத பாகங்கள் புதிர் துண்டுகள் போல இருக்கலாம், அவை புதிரின் மற்ற பகுதிகளுடன் எவ்வாறு பொருந்தும் என்று நமக்குத் தெரியாது.
ரத்தினங்களைக் கண்டுபிடித்தல்
ஆனால் இதற்கிடையில், பதிலளிக்கப்படாத கேள்விகள் பழைய ஏற்பாட்டில் காணப்படும் நித்திய சத்தியத்தின் விலைமதிப்பற்ற ரத்தினங்களிலிருந்து நம்மைத் தடுக்க வேண்டிய அவசியமில்லை—அந்த ரத்தினங்கள் சில சமயங்களில் சிக்கலான அனுபவங்கள் மற்றும் அபூரணமான ஜனங்களால் செய்யப்பட்ட மோசமான தேர்ந்தெடுப்புகள் ஆகியவற்றின் பாறை நிலத்தில் மறைந்திருந்தாலும் கூட. இந்த ரத்தினங்களில் மிகவும் விலைமதிப்பற்றது தேவனின் அன்பை சாட்சியளிக்கும் கதைகள் மற்றும் பத்திகளாகும்—குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் பலியை நோக்கி நம் மனதுக்கு சுட்டிக்காட்டுபவை. எந்த கோணத்தில் பார்த்தாலும், இது போன்ற ரத்தினங்கள் முன்பு இருந்ததைப் போலவே இன்றும் பிரகாசமாக பிரகாசிக்கின்றன. இந்த விவரங்கள் தேவனின் உடன்படிக்கை ஜனத்தைப்பற்றி கூறுகின்றன, மனித பலவீனங்களைக் கொண்டிருந்த ஆண்களையும் பெண்களையும், இன்னும் கர்த்தரை நேசித்து சேவை செய்தவர்கள், பழைய ஏற்பாட்டின் வரலாற்று புத்தகங்களில் சத்தியத்தின் ரத்தினங்கள் ஏராளமாக உள்ளன.