2020–2024
கிறிஸ்துவை நம்பி நமது ஆவிக்குரிய சூறாவளிகளை எதிர்கொள்ளுதல்
அக்டோபர் 2021 பொது மாநாடு


9:49

கிறிஸ்துவை நம்பி நமது ஆவிக்குரிய சூறாவளிகளை எதிர்கொள்ளுதல்

கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதாலும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதாலும், நமது ஆவிக்குரிய சூறாவளிகளை சிறப்பாக நாம் எதிர்கொள்கிறோம்.

கடந்த ஆறு ஆண்டுகளாக, எனக்கினிய, ஆன்னும் நானும் வளைகுடா கடற்கரைக்கு அருகிலுள்ள டெக்சாஸில் வசித்து வருகிறோம், அங்கு மிகப்பெரிய சூறாவளிகள் அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தாக்கி, பெரும் அழிவையும் உயிர்ப் பலிகளையும் கூட விட்டுச் சென்றன. துரதிர்ஷ்டவசமாக, சமீபத்திய மாதங்கள் இதுபோன்ற பேரழிவு தரும் நிகழ்வுகளுக்கு அந்நியமானவை அல்ல. எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எங்கள் அன்பும் ஜெபங்களும் நீள்கின்றன. 2017 ம் ஆண்டில், ஹார்வி சூறாவளியை நாங்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்தோம், இது 60 அங்குலங்கள் (150 செ.மீ) வரை பதிவான மழையைக் கொட்டியது.

இயற்கை விதிகள் சூறாவளி ஏற்படுவதை ஆளுகின்றன. சமுத்திரத்தின் வெப்பநிலை குறைந்தது 80 டிகிரி பாரன்ஹீட் (27 செ.டிகிரிகள்) இருக்க வேண்டும், இது சமுத்திரத்தின் மேற்பரப்பின் கீழிருந்து 165 அடி (50மீ வரை) நீட்டிக்க வேண்டும். காற்று சூடான சமுத்திர நீரைச் சந்திக்கும் போது, அது நீரை ஆவியாக்கி வளிமண்டலத்தில் உயர்ந்து, அது திரவமாகிறது. பின்னர் மேகங்கள் உருவாகி, சமுத்திரத்தின் மேற்பரப்பில் சுழல் வடிவத்தை காற்று உருவாக்குகிறது.

சூறாவளி

சூறாவளிகள் அளவில் பிருமாண்டமாக உள்ளன, வளிமண்டலத்தில் 50,000 அடி (15,240 மீ) அல்லது அதற்கு மேல் அடைந்து, குறைந்தது 125 மைல்கள் (200 கி.மீ) முழுவதும் பரவுகின்றன. சுவாரஸ்யமாக, சூறாவளிகள் நிலத்தை சந்திக்கும் போது, அவை வலுவிழக்கத் தொடங்குகின்றன, ஏனெனில் அவை அவற்றின் வலிமையை ஊக்குவிக்கத் தேவையான சூடான நீருக்கு மேல் இனியும் இல்லை.1

ஒரு பேரழிவு தரும் சரீர சூறாவளியை நீங்கள் ஒருபோதும் எதிர்கொள்ளமாட்டீர்கள். எவ்வாறாயினும், நாம் ஒவ்வொருவரும் வானிலையால் பாதிக்கப்பட்டு, நமது சமாதானத்தை பயமுறுத்துகிற, நமது விசுவாசத்தை சோதிக்கிற ஆவிக்குரிய சூறாவளிகளை எதிர்கொள்வோம். இன்றைய உலகத்தில், அடுக்கு நிகழ்வுகளிலும், தீவிரத்திலும் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது. நன்றி கூறும் விதமாக, அவைகளை மகிழ்ச்சியுடன் கடக்க கர்த்தர் நமக்கு ஒரு உறுதியான வழியை வழங்கியுள்ளார் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வதன் மூலம், “இருண்ட மேகங்கள் நமக்கு மேலே தொங்கும்போது, நமது அமைதியை அழிக்க அச்சுறுத்தும் போது, நம்பிக்கை நமக்கு முன்னால் பிரகாசமாகப் புன்னகைக்கிறது.”2

தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கினார்:

“எல்லா சூழ்நிலையின் கீழும் பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒரு மோசமான நாள், ஒரு மோசமான வாரம், அல்லது ஒரு மோசமான வருஷம்கூட நமக்கிருந்தாலும் நாம் சந்தோஷத்தை உணரமுடியும்!

“…நமது வாழ்க்கையின் சூழ்நிலைகளுடன், நாம் உணரும் மகிழ்ச்சிக்கும் நமது வாழ்க்கையில் கவனத்துடன் செய்யவேண்டிய அனைத்துக்கும் சம்மந்தமில்லை.

“நமது வாழ்க்கையின் கவனம் … இயேசு கிறிஸ்துவினிடத்திலும், அவருடைய சுவிசேஷத்திலுமிருக்கும்போது, நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது அல்லது நடக்கவில்லை என்பதைப் பொருட்படுத்தாது நாம் மகிழ்ச்சியை உணரமுடியும்.”3

இயற்கையின் விதிகள் உலக சூறாவளிகளை ஆளுவதைப்போல, நமது ஆவிக்குரிய சூறாவளிகளின்போது எவ்வாறு மகிழ்ச்சியை உணருவதென்பதை, தெய்வீக விதிகள் ஆட்சி செய்கின்றன. வாழ்க்கையின் புயல்களை நாம் தைரியமாக எதிர்கொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சி அல்லது துன்பம் தேவன் அமைத்த விதிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. “அவைகள் கட்டளைகள் என அழைக்கப்படுகின்றன, ஆனால், வாழ்க்கையின் விதியைப்போல, புவிஈர்ப்பின் விதியைப்போல, [மற்றும்] இதயத்துடிப்பை ஆளுகிற விதியைப்போல அவை உண்மையானவை” என தலைவர் நெல்சன் பகிர்ந்துகொள்கிறார்.

தலைவர் நெல்சன் தொடருகிறார், “இது மிகவும் எளிமையான சூத்திரமாக மாறுகிறது: நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், கட்டளைகளைக் கைக்கொள்ளவும்.”4

சந்தேகம், விசுவாசத்தின், மகிழ்ச்சியின் ஒரு எதிரி. சூடான சமுத்திரத்தின் நீர் சூறாவளி உருவாகும் இடத்தைப் போலவே, சந்தேகமும் ஆவிக்குரிய சூறாவளிகளின் உருவாக்கம் ஆகும். நம்பிக்கை ஒரு தேர்ந்தெடுப்பைப்போல, சந்தேகமும் ஒரு தேர்ந்தெடுப்பு. நாம் சந்தேகப்பட தேர்ந்தெடுக்கும்போது, நாம் செயல்படுவதைத் தேர்ந்தெடுத்து, எதிரிக்கு வல்லமையை அளித்து, அதன் மூலம் நம்மை பலவீனமாகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் ஆக்குகிறோம்.5

சந்தேகத்தின் உருவாக்க இடத்திற்கு நம்மை நடத்த சாத்தான் வகைதேடுகிறான். நாம் நம்பாலிருக்கும்படியாக நமது இருதயங்களைக் கடினப்படுத்த அவன் வகைதேடுகிறான். சந்தேகத்தின் உருவாக்கத்தின் தளம் அழைப்பதாகத் தோன்றலாம், ஏனெனில் “தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையிலும்” வாழ அதன் சமாதானமாக, வெதுவெதுப்பாகத் தோன்றும் நீருக்கு நாம் தேவையில்லை.7 அத்தகைய நீரில் சாத்தான் நம் ஆவிக்குரிய விழிப்புணர்வை தளர்த்த நம்மை சோதிக்கிறான். அந்த கவனக்குறைவு ஆவிக்குரிய நம்பிக்கையின் பற்றாக்குறையைத் தூண்டலாம், அங்கு நாம் “குளிருமில்லாமல் அனலுமில்லாமலும்”8 இருக்கிறோம். நாம் கிறிஸ்துவின் மீது நங்கூரமிடவில்லை என்றால், சந்தேகமும் அதன் கவர்ச்சிகளும் நம்மை அக்கறையின்மைக்கு வெளியே நடத்திச் செல்லும், அங்கு நாம் அற்புதங்களையோ, நீடித்த மகிழ்ச்சி, அல்லது “நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலையோ” காண முடியாது.9

சூறாவளிகள் நமது தேசத்தை பலவீனப்படுத்துவதைப்போல, கிறிஸ்துவின்மீது நமது அஸ்திபாரத்தை கட்டும்போது சந்தேகம் விசுவாசத்தால் மாற்றப்படுகிறது. பின்னர், ஆவிக்குரிய சூறாவளிகளை அவற்றின் சரியான கண்ணோட்டத்தில் நம்மால் பார்க்க முடிகிறது, அவற்றை வெல்லும் நமது திறன் விரிவடைகிறது. பின்னர், பிசாசு தன் பலத்த காற்றுக்களையும், ஆம், சூறாவளியில் தன் அம்புகளையும், அனுப்பும்போது, அது [நம்மை] பொல்லாத துரவிற்கும், நித்திய துன்பத்திற்கும் இழுத்துச் செல்ல வல்லமையற்றுப்போகும். ஏனெனில் [நாம்] கட்டப்பட்டிருக்கிற கன்மலை மெய்யான அஸ்திபாரமாயிருக்கிறது.” 10

தலைவர் நெல்சன் போதித்தார்:

இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் எல்லா நம்பிக்கையின் அடித்தளமாகவும், தெய்வீக வல்லமையின் வாய்க்காலாகவும் இருக்கிறது. …

அவருடைய பரிபூரண வல்லமையைப் பெறுவதற்கு கர்த்தருக்கு பரிபூரண விசுவாசம் தேவையில்லை. ஆனால் அவர் நம்மை நம்பச் சொல்கிறார்.”11

“[எங்களுடைய] சவால்களை இணையற்ற வளர்ச்சி மற்றும் வாய்ப்பாக மாற்றுவதற்கு” எங்களுக்கு உதவ, ஏப்ரல் பொது மாநாட்டிலிருந்து, என் குடும்பமும் நானும் இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய பாவநிவர்த்தியிலும் எங்களுடைய விசுவாசத்தை வலுப்படுத்த வகை தேடிக்கொண்டிருக்கிறோம்.12

எங்கள் பேத்தி, ரூபி, வலுவான, பொறுப்பேற்கும் விருப்பத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாள். அவள் பிறந்தபோது, அவளது உணவுக்குழாய் அவளது வயிற்றில் இணைக்கப்படவில்லை. கைக்குழந்தையாக இருந்தாலும், ரூபி, தன் பெற்றோரின் உதவியுடன், இந்த சோதனையை வழக்கத்திற்கு மாறான தீர்மானத்துடன் சந்தித்தாள். ரூபிக்கு இப்போது ஐந்து வயதாகிறது. அவள் இன்னும் இளமையாக இருந்தாலும், அவளுடைய சூழ்நிலைகள் அவளுடைய மகிழ்ச்சியைத் தீர்மானிக்க விடாததற்கு அவள் ஒரு சக்திவாய்ந்த உதாரணம். அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

கடந்த மே மாதத்தில், ரூபி தனது வாழ்க்கையில் கூடுதல் சூறாவளியை விசுவாசத்துடன் எதிர்கொண்டாள். புனரமைப்பு அறுவை சிகிச்சை தேவைப்படுகிற அளவிற்கு முழுவதுமாக வளராத கையுடன் அவள் பிறந்தாள். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சைக்கு முன், நாங்கள் சென்று அவளைச் சந்தித்து, ஒரு குழந்தையின் கையை இரட்சகரின் கை அன்பாகப் பிடித்திருப்பதை அழகாக சித்தரிக்கும் ஒரு படத்தை அவளிடம் கொடுத்தோம். அவள் பதட்டமாக இருக்கிறாளா என்று நாங்கள் அவளிடம் கேட்டபோது, “இல்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என அவள் பதிலளித்தாள்.

இரட்சகரின் கரத்தின் ஓவியத்துடன் ரூபி

“ரூபி, அது எப்படி அப்படியாகுமென?” பின்னர் நாங்கள் அவளிடம் கேட்டோம்.

“ஏனெனில் இயேசு என் கையைப் பிடிப்பார் என்று எனக்குத் தெரியும்” என ரூபி நம்பிக்கையுடன் வலியுறுத்தினாள்.

ரூபி குணமடைதல் அற்புதமாயிருந்தது, அவள் தொடர்ந்து சந்தோஷமாக இருந்தாள். நமக்கு வயதாகும்போது, நம்மை அடிக்கடி சோதிக்கிற சந்தேகத்தின் முட்டாள்தனத்துடன் எவ்வாறு குழந்தையின் விசுவாசத்தின் தூய்மை மாறுபடுகிறது!13 ஆனால் நாம் அனைவரும் சிறு குழந்தைகளாக மாறி நமது அவநம்பிக்கையை ஒதுக்கி வைக்கலாம். இது ஒரு எளிய தேர்ந்தெடுப்பாகும்.

“நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், … எங்களுக்கு உதவி செய்யவேண்டும்” என அக்கறையுள்ள ஒரு தகப்பன் இரட்சகரிடம் வேண்டினான்.14

பின்னர் இயேசு அவனிடத்தில் சொன்னார்:

“நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.

“உடனே பிள்ளையின் தகப்பன், விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.”15

இந்த தாழ்மையான தகப்பன் தனது சந்தேகத்தை விட கிறிஸ்து மீதான அவனது நம்பிக்கையை நம்புவதற்குத் தேர்ந்தெடுத்தான். தலைவர் நெல்சன் பகிர்ந்தார், “உங்கள் அவநம்பிக்கை மட்டுமே, உங்கள் வாழ்க்கையில் மலைகளை நகர்த்த அற்புதங்களால் தேவன் உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்காமல் தடுக்கும்16

அறியும் அளவில் அல்ல, நம்பும் நிலையில் நமக்காக, கோலை வைப்பதில் தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவர்!

ஆல்மா போதிக்கிறான்:

“தேவ வசனத்தை விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.”17

“[ஏனெனில்] தம்முடைய நாமத்தை விசுவாசிக்கிற யாவர் மேலும் தேவன் இரக்கமாயிருக்கிறார், அதனால்தான் முதலாவது நீங்கள் விசுவாசிக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார்.”18

ஆம், முதலாவதாக, அவரில் நாம் விசுவாசிக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.

கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதாலும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதாலும், நமது ஆவிக்குரிய சூறாவளிகளை சிறப்பாக நாம் எதிர்கொள்கிறோம். நம் வாழ்க்கையில் “[எது] நடந்தாலும் அல்லது நடக்காமல் போனாலும் அதை மேற்கொள்ள நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் நமது நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் நம்மை இணைக்கிறது.19 ஆம், நம்பிக்கைக்காகவும் கீழ்ப்படிதலுக்காகவும் தேவன் “[நம்மை] உடனேயே ஆசீர்வதிக்கிறார்”.20 உண்மையில், காலப்போக்கில் நம் நிலை மகிழ்ச்சியாக மாறுகிறது மற்றும் அவரில் நம் விசுவாசத்தை வைத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது “நாம் கிறிஸ்துவிலே ஜீவனைப் பெற்றவர்களானோம்.”21

சகோதர சகோதரிகளே, “சந்தேகப்படாமல் நம்பிக்கையுடனிருக்க” நாம் இன்று தேர்ந்தெடுப்போமாக.22 “கிறிஸ்துவை நம்புவதே சரியான வழி.”23 நாம் “[அவருடைய] உள்ளங்கையிலே வரையப்பட்டிருக்கிறோம்.”24 நமது கதவருகே நின்று தட்டிக்கொண்டிருக்கிற அவர் நமது இரட்சகர், நமது மீட்பர்.25 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Lee Cook, “What Weather Conditions Create a Hurricane,” July 29, 2019, Sciencing, sciencing.com பார்க்கவும்.

  2. “We Thank Thee, O God, for a Prophet,” Hymns, no. 19.

  3. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 82.

  4. Russell M. Nelson, in “Eternal Laws: From Scrabble to the Commandments” (video), Church News, Aug. 31, 2019, thechurchnews.com; மோசியா 2:41; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:20–21 ஐயும் பார்க்கவும்.

  5. 2 நேபி 2:26–27 பார்க்கவும்.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:32–33 பார்க்கவும்.

  7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:44; உபாகமம் 8:3; மத்தேயு 4:4; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:11 ஐயும் பார்க்கவும்.

  8. வெளிப்படுத்தின விசேஷம் 3:15–16.

  9. 2 நேபி 28:21–26 பார்க்கவும். மாறாக, மத்தேயு 11:28–30 பார்த்து, நாம் அவரண்டை வரும்போது கிறிஸ்து நமக்குக் கொடுக்கிற “இளைப்பாறுதலைக்” கவனிக்கவும்.

  10. ஏலமன் 5:12.

  11. Russell M. Nelson, “Christ Is Risen; Faith in Him Will Move Mountains,” Liahona, May 2021, 102.

  12. Russell M. Nelson, “Christ Is Risen; Faith in Him Will Move Mountains,” 104.

  13. 2 நேபி 9:28–29 பார்க்கவும்.

  14. மாற்கு 9:22. இரட்சகரின் அன்பையும் குணப்படுத்தும் வல்லமையையும் நாடி, பெற்றோரும் குழந்தையும் சேர்ந்து “எங்களுக்கு” உதவுமாறு கிறிஸ்துவிடம் தகப்பன் மன்றாடுவதைக் கவனிக்கவும்.

  15. மாற்கு 9:23–24.

  16. Russell M. Nelson, “Christ Is Risen; Faith in Him Will Move Mountains,” 103.

  17. ஆல்மா 32:16. முழு வசனம் சொல்கிறது, “ஆதலால், தாழ்மையாயிருக்கும்படி கட்டாயப்படுத்தப்படாமலேயே, தாழ்மையாயிருப்பவர்கள் பாக்கியவான்கள், அதாவது, ஆம் அவர்கள் விசுவாசிப்பதற்கு முன்னமே, வசனத்தை அறியும்படி கொண்டுவரப்படாமல், அல்லது அவர்கள் அறிந்துகொள்ளத்தக்கதாக, பலவந்தம் படுத்தப்படாமலேயேகூட தேவ வசனத்தை விசுவாசித்து, இருதய பிடிவாதமில்லாமல் ஞானஸ்நானம் பெறுபவர்கள் பாக்கியவான்கள்.” (முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது) தாழ்மையாயிருக்க கட்டாயப்படுத்தப்படாமல், பிடிவாதமாக இருக்காமல், தெரிந்து கொள்ள “கொண்டுவரப்படாமல்,” நாம் நம்புவதற்கு முன் “தெரிந்து கொள்ள” நிர்பந்திக்கப்படாமல் நாம் நம்ப வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதை கவனிக்கவும்.

  18. ஆல்மா 32:22.

  19. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” 82.

  20. மோசியா 2:24; மோசியா 2:41; ஏத்தேர் 12:4 ஐயும் பார்க்கவும்.

  21. 2 நேபி 25:24–25 பார்க்கவும்.

  22. மார்மன் 9:27; 1 நேபி 4:3 ஐயும் பார்க்கவும்.

  23. 2 நேபி 25:28.

  24. 1 நேபி 21:16.

  25. வெளிப்படுத்தின விசேஷம் 3:20 பார்க்கவும். “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கொடுக்கப்பட்ட” வாக்குறுதியை வசனம் 21ல் கவனிக்கவும்.