2020–2024
தேவனின் அன்பு
அக்டோபர் 2021 பொது மாநாடு


13:12

தேவனின் அன்பு

நமது பிதாவும் நமது மீட்பரும் நம்மை கட்டளைகளால் ஆசீர்வதித்திருக்கிறார்கள், அவர்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில், அவர்களின் பரிபூரண அன்பை நாம் முழுமையாகவும் அதிக ஆழமாகவும் உணர்கிறோம்.

நம் பரலோக பிதா நம்மை ஆழமாகவும், பரிபூரணமாகவும் நேசிக்கிறார்.1 அவருடைய அன்பில், அவர் பெறக்கூடிய மற்றும் இருக்கும் அனைத்தையும் சேர்த்து, நாம் பெறத் தயாராக இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மகிழ்ச்சிகளையும் நமக்குத் திறக்க அவர் ஒரு திட்டத்தை, மீட்பு மற்றும் மகிழ்ச்சியின் திட்டத்தை உருவாக்கினார்.2 இதை அடைய, அவர் தனது அன்பான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம் மீட்பராகக் கொடுக்க சித்தமாக இருந்தார். “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”3 அவருடையது ஒரு தகப்பனின் தூய அன்பு— உலகில் அனைவருக்கும் பொதுவானது, ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதமானது.

இயேசு கிறிஸ்து அதே பரிபூரண அன்பை பிதாவுடன் பகிர்ந்து கொள்கிறார். பிதா தனது மகிழ்ச்சியின் பெரிய திட்டத்தை முதலில் விவரித்தபோது, அந்த திட்டத்தின் இன்றியமையாத பகுதியாக அவர் நம்மை மீட்பதற்காக ஒரு இரட்சகராக செயல்பட ஒருவரை அழைத்தார். இயேசு தாமே முன்வந்தார், “இதோ நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்.”4 இரடசகர் “உலகத்தின் நன்மைக்கு ஏதுவானவையே அல்லாமல், எந்தக் காரியத்தையும் செய்யார். எல்லா மனிதரையும் தம்மிடம் கொண்டுவர தன் சொந்த ஜீவனைக் கொடுக்குமளவுக்கு அவர் இந்த உலகத்தை நேசித்தார். ஆதலால் தன் இரட்சிப்பை புசிக்கக்கூடாது என ஒருவருக்கும் அவர் கட்டளையிடுவதில்லை.”5

கிறிஸ்துவின் நாமத்தில் நாம் பிதாவிடம் ஜெபிக்கும்போது இந்த தெய்வீக அன்பு நமக்கு ஏராளமான ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வேண்டும். நம்மில் ஒருவர் கூட அவர்களுக்கு அந்நியர் அல்ல. நாம் தகுதியற்றவர்களாக உணர்ந்தாலும், தேவனை அழைக்க தயங்க தேவையில்லை. இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் தகுதிகள் கேட்கப்பட நாம் சார்ந்திருக்கலாம்.6 நாம் தேவனின் அன்பில் நிலைத்திருந்தால், நம்மை வழிநடத்த மற்றவர்களின் ஒப்புதலை நாம் குறைவாகவே சார்ந்திருப்போம்.

தேவனின் அன்பு பாவத்தை மன்னிப்பதில்லை; மாறாக அது மீட்பை வழங்குகிறது

தேவனின் அன்பு அனைவரையும் தழுவுவதால், சிலர் அதை “நிபந்தனையற்றது” என்று பேசுகிறார்கள், மேலும் அவர்களின் மனதில், தேவனின் ஆசீர்வாதங்கள் “நிபந்தனையற்றது” என்றும், இரட்சிப்பு “நிபந்தனையற்றது” என்ற அர்த்தத்தில் அவர்கள் முன்னிருத்தலாம். அவை அப்படியல்ல. சிலர், “இரட்சகர் நான் இருப்பது போலவே என்னை நேசிக்கிறார்” என்று சிலர் சொல்ல விரும்புகிறார்கள், அது நிச்சயமாகவே உண்மை. ஆனால், நாம் இருப்பதைப் போல் நம்மில் யாரையும் அவரின் ராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்ல முடியாது, ஏனென்றால் “எந்த அசுத்தமும் அங்கு வசிக்க முடியாது, அல்லது அவர் முன்னிலையில் வாழ முடியாது.”7 நமது பாவங்கள் முதலில் தீர்க்கப்பட வேண்டும்.

பேராசிரியர் ஹ்யூ நிப்லி ஒருமுறை குறிப்பிட்டார், தேவனின் ராஜ்யம் மிகச்சிறிய பாவத்தில் கூட நிலைத்திருக்க முடியாது: “ஊழலின் சிறிய கறை இருந்தாலும்கூட அடுத்த உலகம் குற்றமற்றதாக அல்லது நித்தியமாக இருக்காது. ஒரு கட்டிடம், நிறுவனம், விதி அல்லது குணாதிசயத்தில் உள்ள மிகச்சிறிய குறைபாடு நித்தியத்தின் நீண்ட காலத்திற்கு தவிர்க்க முடியாத ஆபத்தானதாக முடியும்.”8 தேவனின் கட்டளைகள் “கண்டிப்பானவை” 9 ஏனெனில் அவருடைய ராஜ்யமும் அதன் குடிமக்களும் தொடர்ந்து தீமையை நிராகரித்து நல்லதைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே நிற்க முடியும்.10

மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் சொன்னார், “நமது நவீன கலாச்சாரத்தில் பலர் மறந்துவிட்டதை இயேசு தெளிவாக புரிந்து கொண்டார்: பாவத்தை மன்னிப்பதற்கான கட்டளைக்கும் (அவருக்கு அதைச்செய்ய எல்லையற்ற திறன் இருந்தது) மற்றும் அதை அனுமதிப்பதற்கு எதிரான எச்சரிக்கைக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது ( அதை அவர் ஒரு முறை கூட செய்யவில்லை).”11

எவ்வாறாயினும், நமது தற்போதைய குறைபாடுகள் இருந்தபோதிலும், அவருடைய சபையிலும் சிலஸ்டியல் உலகத்திலும் “ஒரு பெயரும் நிலைப்பாடும்”12 உள்ள இடத்தைப் பெற நாம் இன்னும் நம்பலாம். அவர் பாவத்தை மன்னிக்கவோ அல்லது பார்க்காமலோ இருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்திய பிறகு, கர்த்தர் நமக்கு உறுதியளிக்கிறார்:

“ஆனாலும் மனந்திரும்பி கர்த்தருடைய கட்டளைகளின்படி நடக்கிறவன் மன்னிக்கப்படுவான்.”13

“ஆம், எப்போதைக்கெப்போது என் ஜனங்கள் மனந்திரும்புவார்களோ அவ்வளவாய் எனக்கு விரோதமான அவர்களின் மீறுதல்களை நான் மன்னிப்பேன்.”14

மனந்திரும்புதலும் தெய்வீக கிருபையும் இக்கட்டான நிலையை தீர்க்கும்:

“அம்மோனிகா நகரத்தில் சீஸ்ரமுடன் அமுலேக் பேசிய வார்த்தைகளையும் நினைவில் வையுங்கள், ஏனென்றால் கர்த்தர் கண்டிப்பாக தனது ஜனத்தை மீட்க வர வேண்டும், ஆனால் அவர்களின் பாவங்களில் அவர்களை மீட்க வரக்கூடாது . ஆனால் அவர்களின் பாவங்களில் இருந்து மீ்ட்பதற்கு வரவேண்டும் என்று கூறினான்.

“மேலும் மனந்திரும்புதலின் காரணமாக அவர்களின் பாவங்களிலிருந்து அவர்களை மீட்க அவருக்கு பிதாவிடமிருந்து வல்லமை வழங்கப்பட்டுள்ளது; ஆகையால், அவர் தன் தூதர்களை மனந்திரும்புதலின் நிபந்தனைகளின் செய்திகளை அறிவிக்க அனுப்பினார், அவர்களின் ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக இது மீட்பரின் வல்லமையைக் கொண்டுவருகிறது.”15

மனந்திரும்புதலின் நிபந்தனையுடன், நீதியைக் கொள்ளையடிக்காமல் கர்த்தர் இரக்கம் காட்ட முடியும், மேலும் “தேவன் தேவனாக இல்லாருப்பதை நிறுத்துகிறார்.”16

உலகத்தின் வழி, உங்களுக்குத் தெரிந்தபடி, கிறிஸ்துவுக்கு எதிரானது, அல்லது “கிறிஸ்துவைத் தவிர வேறு எதுவுமாகும்.” நமது நாள் மார்மன் புத்தகத்தின் மறுஇயக்கமாகும், இதில் கவர்ச்சியான நபர்கள் மற்றவர்கள் மீது அநியாய ஆதிக்கத்தைத் தொடர்கிறார்கள், பாலியல் உரிமத்தை கொண்டாடுகிறார்கள், மேலும் செல்வத்தை நம் இருப்பின் குறிக்கோளாக ஊக்குவிக்கிறார்கள். அவர்களின் தத்துவங்கள் ஒரு சிறிய பாவம், செய்வதைகூட நியாயப்படுத்துகின்றன,17 அல்லது நிறைய பாவங்களை கூட, ஆனால் யாரும் மீட்பை வழங்க முடியாது. அது ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் மூலம் மட்டுமே வருகிறது. “கிறிஸ்துவைத் தவிர வேறெதுவும்” அல்லது “மனந்திரும்புதலைத் தவிர எதையும்” நல்லதை கூட்டத்தார் வழங்க முடிவது, பாவம் இல்லை என்ற ஆதாரமற்ற கூற்று, அல்லது அது இருந்தால், அது இறுதியில் விளைவுகளை ஏற்படுத்தாது என்பதே. இறுதி நியாயத் தீர்ப்பில் அந்த வாதம் அதிகம் ஈர்க்கப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை.18

நம் பாவங்களை பகுத்தறிய முயற்சிப்பதில் சாத்தியமற்றதை நாம் முயற்சி செய்ய வேண்டியதில்லை. மறுபுறம், நம் சொந்த தகுதியால் மட்டுமே பாவத்தின் விளைவுகளை அழிக்க முடியாததை நாம் முயற்சி செய்ய வேண்டியதில்லை. நம்முடையது பகுத்தறிவு மதம் அல்லது பரிபூரணவாத மதம் அல்ல, ஆனால் மீட்பின் மதம், இயேசு கிறிஸ்துவின் மூலம் மீட்பு. நாம் தவம் செய்பவர்களில் ஒருவராக இருந்தால், அவருடைய பாவநிவர்த்தி மூலம், நம்முடைய பாவங்கள் அவருடைய சிலுவையில் அறையப்பட்டு, “அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.”19

தீர்க்கதரிசிகளின் ஏங்குகிற அன்பு தேவனின் அன்பை பிரதிபலிக்கிறது.

பாவத்திற்கு எதிரான எச்சரிக்கையில் தேவனின் தீர்க்கதரிசிகளின் ஏங்குகிற அன்பால் நான் நீண்ட காலமாக ஈர்க்கப்பட்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். அவர்கள் கண்டிக்கும் விருப்பத்தால் தூண்டப்படவில்லை. அவர்களின் உண்மையான வாஞ்சை தேவனின் அன்பைப் பிரதிபலிக்கிறது; உண்மையில், அது தேவனின் அன்பு ஆகும். அவர்கள் யாரிடம் அனுப்பப்படுகிறார்களோ, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை நேசிக்கிறார்கள். கர்த்தரைப் போலவே, அவருடைய ஊழியர்களும் பாவத்தின் வலிகள் மற்றும் மோசமான தேர்வுகளால் யாரும் பாதிக்கப்படுவதை விரும்புவதில்லை.20

ஆல்மா உள்பட கிறிஸ்தவ விசுவாசிகளை துன்புறுத்தவும், சித்திரவதை செய்யவும், கொல்லவும் தயாராக இருந்த வெறுக்கத்தக்க மக்களுக்கு மனந்திரும்புதல் மற்றும் மீட்பின் செய்தியை அறிவிக்க ஆல்மா அனுப்பப்பட்டான். ஆனாலும் அவன் அவர்களை நேசித்தான் மற்றும் அவர்களின் இரட்சிப்புக்காக ஏங்கினான். அம்மோனிகா ஜனங்களுக்கு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை அறிவித்த பிறகு, ஆல்மா கெஞ்சினான்:“ஆகவே என் சகோதரரே, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்தும் வேதனைக்குள்ளாக அதிக கவலையோடும் விரும்புகிறேன், நீங்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, உங்கள் பாவங்களை புறம்பே தள்ளி, உங்களின் மனந்திரும்புதலின் நாளை தள்ளிப்போடாமல்; … கடைசி காலத்தில் உயர்த்தப்பட்டு [தேவனின்] இளைப்பாறுதலில் பிரவேசிக்க வேண்டும்.”21

தலைவர் ரசல் எம். நெல்சனின் வார்த்தைகளில், “தேவனின் குழந்தைகள் அனைவரையும் பற்றி நாம் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதால்தான் அவருடைய சத்தியத்தை அறிவிக்கிறோம்.”22

தேவன் உங்களை நேசிக்கிறார்; நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா?

பிதா மற்றும் குமானின் அன்பு இலவசமாக வழங்கப்படுகிறது ஆனால் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியது. மீண்டும், தலைவர் நெல்சனை மேற்கோள் காட்டுகிறேன், “தேவனின் நியாயப்பிரமாணங்கள் முழுவதுமாக நம்மீது உள்ள எல்லையற்ற அன்பின் மூலமும், நம்மால் ஆக முடியும் என்ற அவரது விருப்பத்தின் மூலமும் ஊக்குவிக்கப்படுகின்றன.”23

அவர்கள் உங்களை நேசிப்பதால், அவர்கள் உங்களை “நீங்கள் இருப்பதைப் போலவே”விட்டுவிட விரும்பவில்லை. அவர்கள் உங்களை நேசிப்பதால், நீங்கள் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் உங்களை நேசிப்பதால், நீங்கள் மனந்திரும்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், ஏனென்றால் அது மகிழ்ச்சிக்கான பாதை. ஆனால் அது உங்கள் விருப்பம், அவர்கள் உங்கள் சுயாதீனத்தை மதிக்கிறார்கள். அவர்களை நேசிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் உங்களை ஏராளமாக ஆசீர்வதிப்பதோடு உங்களை நேசிக்கவும் முடியும்.

நம்மிடம் அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பு நாமும் நேசிக்க வேண்டும் என்பதே. “அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.”24 யோவான் எழுதினான், “பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.”25

முன்னாள் ஆரம்ப வகுப்பு பொதுத் தலைவர் ஜாய் டி. ஜோன்ஸ் ஒரு இளம் தம்பதியினராக, அவரும் அவரது கணவரும் பல ஆண்டுகளாக சபைக்குச் செல்லாத ஒரு குடும்பத்தை சந்திக்கவும், ஊழியம் செய்யவும் அழைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். அவர்கள் விரும்பவில்லை என்பது அவர்களின் முதல் சந்திப்பில் உடனடியாகத் தெரிந்தது. கூடுதல் தோல்வியுற்ற முயற்சிகளின் விரக்தியின் பின்னர், மிகவும் நேர்மையான ஜெபம் மற்றும் சிந்தனைக்குப் பிறகு, சகோதரர் மற்றும் சகோதரி ஜோன்ஸ் கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகளிலிருந்து இந்த வசனத்தில் ஏன் சேவை செய்தார்கள் என்பதற்கான பதிலைப் பெற்றனர்: “உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உங்கள் முழு பெலத்தோடும், மனதுடனும், வலிமையுடனும் நேசி; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் அவருக்கு சேவை செய்ய வேண்டும்.26

சகோதரி ஜோன்ஸ் கூறினார்: “நாங்கள் இந்த குடும்பத்திற்கு சேவை செய்வதற்கும், எங்கள் ஆயருக்கு சேவை செய்வதற்கும் முயல்கிறோம். ஆனால் நாம் உண்மையில் கர்த்தருக்கு அன்பினிமித்தம் சேவை செய்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். …

“…கர்த்தர் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த அன்பான குடும்பத்துடன் எங்கள் சந்திப்பை எதிர்நோக்கத் தொடங்கினோம் [1 நேபி 11:22 பார்க்கவும்]. நாங்கள் அதை அவருக்காகச் செய்தோம். அவர் போராட்டத்தை இனிமேலும் போராட்டமாக மாற்றவில்லை. நாங்கள் பல மாதங்கள் வீட்டு வாசலில் நின்ற பிறகு, குடும்பம் எங்களை உள்ளே அனுமதிக்கத் தொடங்கியது. இறுதியில், நாங்கள் வழக்கமான ஜெபம் மற்றும் மென்மையான சுவிசேஷ கலந்துரையாடல்களை ஒன்றாகச் செய்தோம். நீண்டகால நட்பு விருத்தியடைந்தது. அவருடைய குழந்தைகளை நேசிப்பதன் மூலம் நாம் அவரை ஆராதிக்கிறோம், நேசிக்கிறோம்.”27

தேவன் நம்மை பரிபூரணமாக நேசிக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதில், நாம் ஒவ்வொருவரும், கேட்கலாம், “நான் தேவனை எவ்வளவு நன்றாக நேசிக்கிறேன்? நான் அவர் மீது நம்பிக்கை வைப்பது போல் அவர் என் அன்பை நம்பலாமா?” நம்முடைய தோல்விகளின் மத்தியிலும் நாம் என்ன ஆகிறோம் என்பதாலும் தேவன் நம்மை நேசிக்க வேண்டும் என்பதற்காக வாழ்வது ஒரு தகுதியான லட்சியமாக இல்லையா? ஹைரம் ஸ்மித்தைப் பற்றி அவர் சொன்னது போல் அவர் உங்களையும் என்னையும் பற்றி சொல்ல முடியும், உதாரணமாக, “கர்த்தராகிய நான், அவனுடைய இருதயத்தின் உத்தமத்தால் அவனை நேசிக்கிறேன்.”28 யோவானின் கனிவான அறிவுரையை நாம் நினைவில் கொள்வோம்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூர்வதாகும், அவருடைய கட்டளைகள் துக்கமானவையல்ல.”29

உண்மையில், அவருடைய கட்டளைகள் சோகமானவை அல்ல, மாறாக எதிரானவை. அவைகள் குணப்படுத்துதல், மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆனந்தத்தின் பாதையைக் குறிக்கின்றன. நமது பிதாவும் நமது மீட்பரும் நம்மை கட்டளைகளால் ஆசீர்வதித்திருக்கிறார்கள், அவர்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில், அவர்களின் பரிபூரண அன்பை நாம் முழுமையாகவும் ஆழமாகவும் உணர்கிறோம்.30

நமது இடைவிடாத சண்டைக் காலங்களுக்கான தீர்வு இதோ, தேவனின் அன்பு. இரட்சகரின் ஊழியத்தைத் தொடர்ந்து மார்மன் புத்தக வரலாற்றின் பொற்காலத்தில், “ஜனங்களின் இதயங்களில் இருந்த தேவ அன்பின் காரணமாக தேசத்தில் எந்தவிதமான பிணக்கும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.31 நாம் சீயோனை நோக்கிச்செல்ல முயற்சிக்கும்போது, வெளிப்படுத்துதலில் உள்ள வாக்குறுதியை நாம் நினைவில் கொள்கிறோம்: “ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாக [பரிசுத்த] நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும், அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.”32

நமது பரலோக பிதா, மற்றும் நமது மீட்பராகிய இயேசு கிறிஸ்து இருப்பதன் உண்மை மற்றும் நம்மீது அவர்களது இடைவிடாத, மாறாத அன்பைப்பற்றி சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. இந்தச் செய்தியை ஆயத்தம் செய்வதில், தலைவர் ரசல் எம். நெல்சன் கற்பித்த கொள்கைகளிலிருந்து நான் எடுத்துரைக்கிறேன் “The Love and Laws of God” (Brigham Young University devotional, Sept. 17, 2019), speeches.byu.edu, and by President Dallin H. Oaks in “Love and Law,” Liahona, Nov. 2009, 26–29.

  2. மோசே 1:39 பார்க்கவும்.

  3. யோவான் 3:16.

  4. ஆபிரகாம் 3:27.

  5. 2 நேபி 26:24. இயேசு தாமே சொன்னார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” (யோவான் 15:13–14).

  6. 2 நேபி 2:8: மரோனி 6:4 பார்க்கவும்.

  7. மோசே 6:57.

  8. Temple and Cosmos: Beyond This Ignorant Present, vol. 12 of The Collected Works of Hugh Nibley (1992), 61; see also Approaching Zion, vol. 9 of The Collected Works of Hugh Nibley (1989), 274: “கட்டுமானத்தில் உள்ள சிறிய குறைபாடுகளால் கூட ஒரு பாலம் அல்லது கோபுரம் எப்போதும் பலவீனமாக நிற்பதை விட, அது [ஒரு நித்திய சீயோன்] எப்போதும் குறைகள் மற்றும் குறைபாடுகளால் நிரப்ப முடியாது.”

  9. ஆல்மா 37:13.

  10. இவ்வாறு, இரட்சகர் அறிவிக்கிறார், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது.”(மத்தேயு 7:14),மற்றும் “கர்த்தராகிய நான் பாவத்தை ஒரு துளியாகிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:31; மேலும் ஆல்மா 45:16 பார்க்கவும்).

  11. Jeffrey R. Holland, “The Cost—and Blessings—of Discipleship,” Liahona, May 2014, 8; see also Jeffrey R. Holland, “The Second Half of the Second Century of Brigham Young University” (university conference address, Aug. 23, 2021), 4, speeches.byu.edu: “நான் சொல்வது போல், கிறிஸ்து ஒரு போதும் தனது அன்பை யாரிடமிருந்தும் தடுத்து நிறுத்தவில்லை, ஆனால் அவர் ஒருபோதும் ஒருவரிடமும் சொல்லவில்லை, ‘நான் உன்னை நேசிப்பதால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் இருந்து உங்களுக்கு விலக்கு உண்டு.’”

  12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:24.

  13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:32.

  14. மோசியா 26:30.

  15. யோவான் 5:10–11;முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  16. ஆல்மா 42:23; ஆல்மா 13–15, 22, 24–25 பார்க்கவும்.

  17. 2 நேபி 28:8.

  18. 2 நேபி 9:46 பார்க்கவும்.

  19. ஏசாயா 53:5; மற்றும் மீகா 14:5 பார்க்கவும்.

  20. மோசியா 28:3 பார்க்கவும்.

  21. ஆல்மா 13:27, 29; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  22. Russell M. Nelson, “The Love and Laws of God,” 3.

  23. Russell M. Nelson, “The Love and Laws of God,” 3.

  24. 1 யோவான் 4:8.

  25. 1 யோவான் 4:11.

  26. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:5; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  27. Joy D. Jones, “For Him,” Liahona, Nov. 2018, 50.

  28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:15.

  29. 1 John 5:3; see also John 14:15; 2 John 1:6.

  30. யோவான் 15:10 பார்க்கவும்.

  31. 4 நேபி 1:15; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  32. வெளிப்படுத்தின விசேஷம் 22:14.