2020–2024
நாம் அவருடைய பிள்ளைகள்.
அக்டோபர் 2023 பொது மாநாடு


9:42

நாம் அவருடைய பிள்ளைகள்.

இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலம் அவருடைய தெய்வீக நோக்கம் மற்றும் அதிகப்படியான வல்லமை நமக்கு உள்ளது.

இஸ்ரவேலின் புதிய ராஜாவை அபிஷேகம் செய்வதற்காக கர்த்தர் தீர்க்கதரிசி சாமுவேலை ஈசாயின் வீட்டிற்கு அனுப்பியபோது அவன் பெற்ற அனுபவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சாமுவேல் ஈசாயின் முதல் மகனான எலியாபைப் பார்த்தார். எலியாப், உயரமானவனாகவும், தலைவரின் தோற்றத்தைக் கொண்டவனாகவும் தெரிந்தான். அவனைப் பார்த்த சாமுவேல் முடிவெடுக்க தயாரானான். அது தவறான முடிவாக இருந்தது, கர்த்தர் சாமுவேலுக்குக் போதித்தார்: “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்…மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்றார்.1

கர்த்தர் சவுலை ஆசீர்வதிக்க அனுப்பியபோது சீஷன் அனனியாவுக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சவுலின் கீர்த்தி அங்கே வெளிப்பட்டிருந்தது, மேலும் பரிசுத்தவான்களை அவன் கொடூரமாக மற்றும், இடைவிடாமல் துன்புறுத்துவதைப் பற்றியும் அனனியா கேள்விப்பட்டிருந்தான். அனனியா இதையெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் சவுலுக்கு ஊழியம் செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான். அது தவறான முடிவாக இருந்தது, கர்த்தர் அனனியாவுக்குக் போதித்தார்: “அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்”2

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சாமுவேல் மற்றும் அனனியா செய்த தவறு என்ன? அவர்கள் தங்கள் கண்களால் பார்த்தார்கள், தங்கள் காதுகளால் கேட்டார்கள், அதன் விளைவாக, அவர்கள் தோற்றம் மற்றும் செவிவழிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்கள் மீது தீர்ப்பு வழங்கினர்.

வேதபாரகரும் பரிசேயரும் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்டபெண்ணிடம் ​​என்ன கண்டார்கள்? அதி துன்மார்க்கமான பெண், மரணத்திற்கு தகுதியான பாவி. இயேசு அவளைப் பார்த்தபோது, ​​என்ன கண்டார்? மாம்சத்தின் பலவீனத்திற்கு தற்காலிகமாக அடிபணிந்த ஒரு பெண், ஆனால் மனந்திரும்புதல் மற்றும் அவரது பாவ நிவர்த்தியின் மூலம் மீட்கப்பட முடியும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேலைக்காரனின் நூற்றுக்கு அதிபதியிடம் ஜனங்கள், ​​என்ன கண்டார்கள்? அநேகமாய் அவர்கள் அத்துமீறுபவர், அயல்நாட்டவர் மற்றும், வெறுக்கப்பட வேண்டியரென்று நினைத்திருக்கலாம். இயேசு அவரைப் பார்த்தபோது, ​​என்ன கண்டார்? நீதியுடனும் விசுவாசத்தினோடும் கர்த்தரைத் தேடும் மற்றும் தனது குடும்ப உறுப்பினரின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு மனிதர். பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயை ஜனங்கள் பார்த்தபோது, ​​என்ன கண்டார்கள்? அநேகமாக சுத்தமற்ற ஒரு பெண், புறக்கணிக்கப்பட வேண்டிய ஒதுக்கப்பட்டவள். இயேசு அவளைப் பார்த்தபோது, ​​என்ன கண்டார்? ஒரு நோய்வாய்ப்பட்ட ஸ்திரி, தனிமையாகவும், கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலைகளால் அந்நியமாகவும் மேலும் குணமடைந்து மீண்டும் சொந்தமாகிவிடுவாள் என்று நம்பிய ஸ்திரீ.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கர்த்தர் இந்த நபர்களை அவர்கள் யார் என்று பார்த்தார், அதன்படி ஒவ்வொருவருக்கும் ஊழியம் செய்தார். நேபியும் அவனுடைய சகோதரர் யாக்கோபுவும் அறிவித்தபடி:

“… வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும் அடிமையாகிலும், சுதந்திரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும்” அவரண்டையில் வர அவர் அனைவரையும் வரவேற்கிறார். மற்றும் புறஜாதியரை நினைவுகூறுகிறார்.”3

“அவர் பார்வையில் ஒரு ஜீவன் மற்றொன்றைப்போலவே விலையேறப்பெற்றதாயுள்ளது.”4

நாமும் அவ்வாறே நம் கண்கள், காதுகள் அல்லது நம் கலக்கம் நம்மை தவறாக வழிநடத்த அனுமதிக்காமல், நம் இருதயங்களையும் மனதையும் திறந்து, அவர் செய்தது போல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு தாராளமாக ஊழியம் செய்வோம்.

சில வருடங்களுக்கு முன்பு, என் மனைவி இசபெல்லுக்கு ஒரு அசாதாரண ஊழிய பணி கிடைத்தது. எங்கள் தொகுதியிலுள்ள வயதான உடல்நலக்குறைவுள்ள ஒரு விதவையைச் சந்திக்குமாறும் தனிமை அவளது வாழ்க்கையில் கசப்பைக் கொண்டு வந்துவிட்டது என்றும் அவளுக்கு சொல்லப்பட்டது. அவளுடைய திரைச்சீலைகள் மூடப்பட்டிருந்தது; அவளது வீடு நெரிசலானது; அவள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை மற்றும் “நான் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது” என்று தெளிவுபடுத்தினாள். தயங்காமல், இசபெல் பதிலளித்தாள், “உங்களால் செய்ய முடியும்! நாங்கள் உங்களை வந்து சந்திக்க அனுமதிப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்ய முடியும். மேலும் இசபெல் விசுவாசத்துடன் சென்றாள்.

சில நாட்கள் கழித்து, இந்த நல்ல சகோதரியின் கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஒவ்வொரு நாளும் அவளது கட்டுகளை மாற்ற வேண்டியிருந்தது, அது அவளால் செய்ய முடியாததாயிருந்தது. பல நாட்களாக, இசபெல் அவள் வீட்டிற்குச் சென்று, கால்களைக் கழுவி, கட்டுகளை மாற்றினாள். அவள் அருவருப்பைப் பார்க்கவில்லை, துர்நாற்றம் அவளைப் பாதிக்கவில்லை. அன்பும் கனிவான கவனிப்பும் தேவைப்படும் கர்த்தரின் சவுந்தர்யமான ஸ்திரீயை மட்டுமே அவள் பார்த்தாள்.

பல ஆண்டுகளாக, நானும் என்னைப்போன்று மற்றவர்களும் இசபெல்லின் வரத்தால் கர்த்தர் பார்ப்பது போல் பார்க்க ஆசீர்வதிக்கப்பட்டோம். நீங்கள் பிணையத் தலைவராக இருந்தாலும் சரி, தொகுதி வரவேற்பாளராக இருந்தாலும் சரி, நீங்கள் இங்கிலாந்தின் ராஜாவாக இருந்தாலும் சரி, குடிசையில் வசிப்பவராக இருந்தாலும் சரி, நீங்கள் அவருடைய மொழியைப் பேசினாலும் அல்லது வேறொரு மொழியைப் பேசினாலும், நீங்கள் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடித்தாலும் அல்லது சில கட்டளைகளில் தவறினாலும், அவளுடைய மிகச் சிறந்த தட்டுகளில் மிகச் சிறந்த உணவை உங்களுக்கு பரிமாறுவாள். பொருளாதார நிலை, தோல் நிறம், கலாச்சார பின்னணி, தேசியம், நீதியின் அளவு, சமூக நிலை அல்லது வேறு ஏதேனும் அடையாளங்காட்டி அல்லது முத்திரைகள் அவளுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அவள் இருதயத்தால் பார்க்கிறாள்; அவள் எல்லோரையும் கர்த்தரின் குழந்தையாகப் பார்க்கிறாள்.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்:

தலைவர் நெல்சன் போதித்தார்: “சத்துரு அடையாளங்களில் மகிழ்ச்சி அடைகிறான், ஏனென்றால் அவை நம்மைப் பிரித்து, நம்மைப் பற்றியும் ஒருவரையொருவர் பற்றியும் நாம் சிந்திக்கும் விதத்தை கட்டுப்படுத்துகின்றன. நாம் ஒருவரையொருவர் மதிப்பதை விட அடையாளங்களை மதிப்பது எவ்வளவு வருந்தத்தக்கது.

“அடையாளங்கள் தீர்த்தல் மற்றும் விரோதத்திற்கு வழிவகுக்கும். “தேசியம், இனம், பாலியல் நோக்குநிலை, பாலினம், கல்விப் பட்டங்கள், கலாச்சாரம் அல்லது பிற குறிப்பிடத்தக்க அடையாளங்கள் ஆகியவற்றின் காரணமாக மற்றவருக்கு எதிரான எந்தவொரு துஷ்பிரயோகம்அல்லது தப்பெண்ணம் நமது சிருஷ்டிகரை புண்படுத்தும்!”5

பிரஞ்சு நான் அல்ல; நான் பிறந்த இடம் அது. வெள்ளை நான் அல்ல; அது என் தோலின் நிறம், அல்லது சில குறைபாடு. பேராசிரியர் நான் அல்ல; என் குடும்பத்தை ஆதரிக்க நான் செய்யும் வேலை. எழுபதின்மரின் பொது அதிகாரி நான் அல்ல; இந்த நேரத்தில் அவரின் ராஜ்யத்தில் சேவை செய்கிறேன்.

தலைவர் நெல்சன் நமக்கு நினைவூட்டியபடி, “முதன்மையும் முக்கியமுமாக,” “நான் தேவனின் பிள்ளை.”6 நீங்களும் அப்படித்தான்; நம்மைச் சுற்றியுள்ள மற்ற எல்லா மக்களும் அப்படித்தான். இந்த அற்புதமான உண்மையை நாம் அதிகமதிகமாக உணர்ந்துகொள்ளும்படி நான் வேண்டுகிறேன். இது எல்லாவற்றையும் மாற்றுகிறது!

நாம் வெவ்வேறு கலாச்சாரங்களில் வளர்ந்திருக்கலாம்; நாம் வெவ்வேறு சமூகப் பொருளாதார சூழ்நிலைகளில் இருந்து வரலாம்; நமது தேசியம், தோலின் நிறம், உணவு விருப்பத்தேர்வுகள், அரசியல் நோக்குநிலை போன்றவை உட்பட நமது பாரம்பரியம் பெரிதும் மாறுபடலாம். ஆனால் நாம் அனைவரும் விதிவிலக்கின்றி அவருடைய பிள்ளைகள். இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலம் அவருடைய தெய்வீக நோக்கம் மற்றும் அதிகப்படியான வல்லமை நமக்கு உள்ளது.

“சி. எஸ். லூயிஸ் இதை இவ்வாறு கூறினார்: சாத்தியமான தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் சமுதாயத்தில் வாழ்வது ஒரு கடினமான விஷயம், நீங்கள் பேசக்கூடிய மிகவும் ஆர்வமற்ற நபர் ஒரு நாள் ஒரு ஜீவனாக இருந்து அதை இப்போது பார்த்தால், நீங்கள் வணங்குவதற்கு வலுவாக ஆசைப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்வது. … சாதாரணஜனங்கள் என்று யாருமில்லை. நீங்கள் எந்தவொரு அற்பமான உயிரிடம் உரையாடியதில்லை. தேசங்கள், கலாச்சாரங்கள், கலைகள், நாகரீகம் போன்ற நமது அழியும் வாழ்க்கையும் கொசுவின் வாழ்க்கையும் ஒன்றுதான். நாம் யாருடன் வேடிக்கை செய்கிறோம், வேலை செய்கிறோம், திருமணம் செய்கிறோம், துக்கப்படுத்துகிறோம், சுரண்டுகிறோம், ஆனால் அவை அழிவில்லாதவைகள்.”7

எங்கள் குடும்பம் வெவ்வேறு நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறது; எங்கள் குழந்தைகள் வெவ்வேறு இனங்களுக்குள் திருமணம் செய்து ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் ஒரு பிரதான சமத்துவம் என்பதை நான் உணர்ந்தேன். நாம் அதை உண்மையாக ஏற்றுக்கொண்டால், “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று பரிசுத்த ஆவியே நமது ஆவியோடு சாட்சியளிக்கும்.”8 இந்த அற்புதமான உண்மை நம்மை விடுவிக்கிறது, மேலும் நம்மையும் நம் உறவுகளையும் பாதிக்கக்கூடிய அனைத்து அடையாளங்களும் வேறுபாடுகளும் வெறுமனே “கிறிஸ்துவில் விழுங்கப்படுகின்றன.”9 நாமும் மற்றவர்களும் “இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாரும்” என்பது விரைவில் தெரியவரும்.”10

மூப்பர் கெரிட் டபிள்யூ. காங் அவர்களின் உடன்படிக்கைக்குச் சொந்தமாதல், உரையை எங்கள் பன்முக கலாச்சார மொழிப் பிரிவு ஒன்றின் கிளைத் தலைவர் குறிப்பிடுவதை நான் சமீபத்தில் கேள்விப்பட்டேன்.11 என்ன ஒரு அழகான கருத்து! இரட்சகரையும் அவரது உடன்படிக்கைகளையும் தங்கள் வாழ்வின் மையமாக வைத்து, சுவிசேஷத்தின்படி மகிழ்ச்சியுடன் வாழ முயற்சிக்கும் ஜனங்கள் நாம். எனவே, உலக வாழ்வின் உருக்குலைந்த கண்ணாடி மூலம் ஒருவரையொருவர் பார்ப்பதற்குப் பதிலாக, சுவிசேஷம் நம் பார்வைகளை உயர்த்துகிறது மற்றும் நமது பரிசுத்த உடன்படிக்கைகளின் குறைபாடற்ற, அழிவில்லாத கண்ணாடி மூலம் ஒருவரையொருவர் பார்க்க அனுமதிக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், மற்றவர்களிடம் நம்முடைய சுபாவ தப்பெண்ணங்கள் மற்றும் பாகுபாட்டை அகற்றத் தொடங்குகிறோம், ஒரு அற்புதமான நல்லொழுக்க சுழற்சியில் இது அவர்களின் தப்பெண்ணங்களையும், நம்மை நோக்கிய பாகுபாட்டையும் குறைக்க உதவுகிறது,12 உண்மையில், நம்முடைய அன்பான தீர்க்கதரிசியின் அழைப்பை நாங்கள் பின்பற்றுகிறோம், என் அன்பான சகோதர சகோதரிகளே, நாம் ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானது! வீட்டில், சபையில், பணியிடத்தில் மற்றும் ஆன்லைனில் மற்றவர்களிடம் எப்படிப் பேசுகிறோம், மற்றவர்களைப்பற்றி எப்படிப் பேசுகிறோம் என்பது முக்கியம். இன்று, மற்றவர்களுடன் உயர்ந்த, பரிசுத்தமான முறையில் தொடர்பு கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.”13

இன்று மதியம், அந்த அழைப்பின் ஆவியில், நமது அருமையான ஆரம்ப வகுப்பு குழந்தைகளின் உறுதிமொழியுடன் எனது உறுதிமொழியைச் சேர்க்க விரும்புகிறேன்.

பெரும்பாலான ஜனங்கள் போல் நீங்கள் நடக்கவில்லை என்றால்,

சிலர் உங்களை விட்டு விலகி விடுவார்கள்,

ஆனால் நான் விலக மாட்டேன்! நான் விலக மாட்டேன்!

பெரும்பாலான ஜனங்கள் போல் நீங்கள் பேசவில்லை என்றால்,

சிலர் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள், கேலி பேசுவார்கள்,

ஆனால் நான் விலக மாட்டேன்! நான் விலக மாட்டேன்!

நான் உன்னுடன் நடப்பேன். நான் உன்னுடன் பேசுவேன்.

அப்படிமட்டுமே உன் மீது என் அன்பை வெளிப்படுத்துவேன்.

இயேசு யாரையும் விட்டு விலகிச் செல்லவில்லை.

அவர் தனது அன்பை அனைவருக்கும் வழங்கினார்.

ஆதலால் நானும் செய்வேன்! நானும் செய்வேன்!14

பரலோகத்திலிருக்கும் பிதா என்று நாம் யாரை அழைக்கிறோமோ, அவர் உண்மையில் நம் தந்தை என்றும், அவர் நம்மை நேசிக்கிறார் என்றும், அவர் தனது ஒவ்வொரு குழந்தைகளையும் நெருக்கமாக அறிந்திருக்கிறார் என்றும், ஒவ்வொருவரையும் அவர் ஆழமாக கவனித்துக்கொள்கிறார் என்றும், நாம் அனைவரும் அவருக்கு ஒன்றே என்றும் சாட்சி கூறுகிறேன். நாம் ஒருவரையொருவர் நடத்தும் விதம், அவருடைய குமாரனும், நம்முடைய இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இறுதியான பலி மற்றும் பாவநிவர்த்தி ஆகியவற்றைப் பற்றிய நமது புரிதல் மற்றும் போற்றுதலின் நேரடி பிரதிபலிப்பாகும் என்று நான் சாட்சியமளிக்கிறேன். அவரைப் போலவே நாமும் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன், ஏனென்றால் அதுதான் சரியான விஷயம், அவர்கள் சரியானதைச் செய்கிறார்களோ அல்லது “சரியான” அச்சுக்குப் பொருந்துகிறார்களோ என்பதற்காக அல்ல. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. 1 சாமுவேல் 16:7.

  2. அப்போஸ்தலர் 9:15.

  3. 2 நேபி 26:33.

  4. யாக்கோபு 2:21

  5. ரசல் எம். நெல்சன், “Choices for Eternity” (worldwide devotional for young adults, May 15, 2022), broadcasts.ChurchofJesusChrist.org.

  6. Russell M. Nelson, “Choices for Eternity.”

  7. C. S. Lewis, The Weight of Glory and Other Addresses (1949), 14–15.

  8. ரோமர் 8:16.

  9. ஆல்மா 31:38.

  10. எபேசியர் 2:19.

  11. See Gerrit W. Gong, “Covenant Belonging,“ Liahona, Nov. 2019, 80–83.

  12. Dale G. Renlund and Ruth L.Renlund, The Melchizedek Priesthood: Understanding the Doctrine, Living the Principles (2018), 112.

  13. Russell M. Nelson, “Peacemakers Needed,“ Liahona, May 2023, 99.

  14. I’ll Walk with You,” Children’s Songbook, 140–41.