2020–2024
எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்
அக்டோபர் 2020 பொது மாநாடு


15:1

எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்

இன்று, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எல்லா ஜனங்களுக்கும் ஜெபத்துக்கான எனது அழைப்பை விரிவுபடுத்துகிறேன்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, அவரது பூலோக வாழ்வின் கடைசி வாரத்தின்போது, இயேசு தன் சீஷர்களுக்கு போதித்தார், “இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பு நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”1

இரண்டாம் வருகைக்கு முன்பு, சம்பவிக்க வேண்டியவற்றினிடையே, “யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும்,… பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சிகளும், பல இடங்களில் உண்டாகும்.”2

கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் இரட்சகர் சொன்னார், ”எல்லாம் குழப்பமடையும், … ஏனெனில் ஜனங்கள்மீது பயம் வரும்.” 3

நிச்சயமாக, விஷயங்கள் குழப்பத்தில் இருக்கும் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம். பலர் எதிர்காலத்தைப்பற்றி அஞ்சுகிறார்கள், பல இருதயங்கள் தேவன் மீதும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீதும் உள்ள விசுவாசத்திலிருந்து விலகிவிட்டன.

செய்தி அறிக்கைகள் வன்முறை விவரங்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஒழுக்க சிதைவு நேரலையில் வெளியிடப்படுகிறது. கல்லறைகள், தேவாலயங்கள், மசூதிகள், ஜெப ஆலயங்கள் மற்றும் மதத் தலங்கள் அழிக்கப்படுகின்றன.

உலகளாவிய தொற்றுநோய் கண்கூடாக பூமியின் ஒவ்வொரு மூலையையும் அடைந்துள்ளது, மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், நூறாயிரக்கணக்கானோர் மரித்துள்ளனர். பட்டப்படிப்புகள், சபை வழிபாட்டு சேவைகள், திருமணங்கள், ஊழிய சேவை மற்றும் பல முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, எண்ணற்ற ஜனங்கள் தனிமையில் விடப்பட்டுள்ளனர்.

பொருளாதார எழுச்சிகள் பலருக்கு, குறிப்பாக நமது பரலோக பிதாவின் பிள்ளைகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

ஜனங்கள் அமைதியான முறையில் எதிர்ப்பதற்கான தங்கள் உரிமையை உணர்ச்சிவசமாகப் பயன்படுத்துவதை நாம் கண்டிருக்கிறோம், மேலும் கோபமான கும்பலின் கலவரத்தைக் கண்டிருக்கிறோம்.

அதே நேரத்தில், உலகெங்கிலும் மோதல்களை நாம் தொடர்ந்து காண்கிறோம்.

உங்களில் துன்பம், கவலை, பயம், அல்லது தனிமையாக உணர்கிறவர்களைப்பற்றி நான் அடிக்கடி நினைக்கிறேன். கர்த்தர் உங்களை அறிவார் என்றும், உங்கள் அக்கறை மற்றும் வேதனையை அவர் அறிந்தவர் என்றும், நெருக்கமாகவும், தனிப்பட்ட முறையிலும், ஆழமாகவும், என்றென்றும் அவர் உங்களை நேசிக்கிறார் என்றும், உங்கள் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கிறேன்.

ஒவ்வொரு இரவும் நான் ஜெபிக்கும்போது, துக்கம், வலி, தனிமை, சோகம் ஆகியவற்றால் பாரப்பட்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதிக்கும்படி கர்த்தரிடம் கேட்கிறேன். மற்ற சபைத் தலைவர்கள் அதே ஜெபத்தை எதிரொலிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். எங்கள் இருதயங்கள், தனித்தனியாகவும், கூட்டாகவும், உங்களிடம் வருகின்றன, எங்கள் ஜெபங்கள் உங்கள் சார்பாக தேவனிடம் செல்கின்றன.

நான் கடந்த ஆண்டு பல நாட்களாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்க மற்றும் சபை வரலாற்று தளங்களைப் பார்வையிட்டேன், நமது ஊழியக்காரர்கள் மற்றும் நமது அங்கத்தினர்களுடன் கூட்டங்களில் கலந்துகொண்டேன், அரசாங்க மற்றும் வணிகத் தலைவர்களை சந்தித்தேன்.

அக்டோபர் 20, ஞாயிற்றுக்கிழமை, மாசசூசெட்ஸின் பாஸ்டன் அருகே ஒரு பெரிய கூட்டத்தில் பேசினேன். நான் பேசிக் கொண்டிருந்தபோது, “இந்த நாட்டிற்காகவும், நமது தலைவர்களுக்காகவும், நமது மக்களுக்காகவும், தேவனால் நிறுவப்பட்ட இந்த மாபெரும் தேசத்தில் வாழும் குடும்பங்களுக்காகவும் ஜெபம் செய்யும்படி நான் உங்களிடம் மன்றாடுகிறேன்,” என்று சொல்ல தூண்டப்பட்டேன்.4

கடந்த காலங்களைப் போலவே அமெரிக்காவும் பூமியின் பல நாடுகளும் மற்றொரு முக்கியமான சந்திப்பில் உள்ளன, அவர்களுக்கு நமது ஜெபங்கள் தேவை என்றும் நான் சொன்னேன்.5

நான் ஆயத்தப்படுத்திய குறிப்புகளில் எனது வேண்டுகோள் இல்லை. ஆவியானவர் தங்கள் நாட்டிற்காகவும், தலைவர்களுக்காகவும் ஜெபிக்க அங்கிருந்தவர்களை அழைக்க என்னை தூண்டியபோது, அந்த வார்த்தைகள் எனக்கு வந்தன,

இன்று, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எல்லா ஜனங்களுக்கும் பிரார்த்தனைக்கான எனது அழைப்பை விரிவுபடுத்துகிறேன். நீங்கள் எப்படி ஜெபிக்கிறீர்கள் அல்லது யாரிடம் ஜெபிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, தயவுசெய்து உங்கள் விசுவாசத்தை, உங்கள் விசுவாசம் எதுவாக இருந்தாலும் பிரயோகியுங்கள், உங்கள் நாட்டிற்காகவும் உங்கள் தேசிய தலைவர்களுக்காகவும் ஜெபியுங்கள். கடந்த அக்டோபரில் மாசசூசெட்ஸில் நான் சொன்னது போல், நாம் இன்று வரலாற்றில் ஒரு பெரிய சந்திப்பில் நிற்கிறோம், பூமியின் நாடுகளுக்கு தெய்வீக உணர்த்துதல் மற்றும் வழிகாட்டுதல் தேவை. இது அரசியல் அல்லது கொள்கையைப்பற்றியது அல்ல. இது சமாதானம் மற்றும் தனி ஆத்துமாக்களுக்கும், நாடுகளின் ஆத்துமாவிற்கும் குணப்படுத்தல் அவற்றின் பட்டணங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு, சமாதான பிரபுவாகிய, எல்லா குணப்படுத்துதல்களின் ஆதாரமாகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் வரக்கூடியதைப்பற்றியது.

கடந்த சில மாதங்களாக, தற்போதைய உலக நிலைமைக்கு உதவுவதற்கான சிறந்த வழி, எல்லா ஜனங்களும் தேவனை முழுமையாக நம்புவதும், நேர்மையான ஜெபத்தின் மூலம் தங்கள் இருதயங்களை அவரிடம் திருப்புவதும் தான் என்ற எண்ணம் எனக்கு வந்துள்ளது. நம்மைத் தாழ்த்திக் கொள்வது, நமக்கு முன்னால் இருப்பதை சகித்துக்கொள்ள அல்லது வெல்ல பரலோகத்தின் உணர்த்துதலை தேடுவது இந்த கஷ்டமான காலங்களில் நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான நமது பாதுகாப்பான மற்றும் உறுதியான வழியாகும்.

இயேசு செய்த ஜெபங்களையும், அவருடைய பூலோக ஊழியத்தின் போது ஜெபத்தைப்பற்றிய போதனைகளையும் இந்த வசனங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கர்த்தருடைய ஜெபத்தை நீங்கள் நினைவில் கொள்வீர்கள்:

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்களுக்கு இன்று தாரும்.

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும். ஆமென்.”6

கிறிஸ்தவம் முழுவதிலும் அடிக்கடி மீண்டும் மீண்டும் கவனம் செலுத்தப்படுகின்ற இந்த அழகான ஜெபம், நம்மைத் தொந்தரவு செய்யும் விஷயங்களுக்கான பதில்களுக்காக “பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே” என்று நேரடியாக விண்ணப்பம் செய்வது பொருத்தமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே, தெய்வீக வழிகாட்டுதலுக்காக ஜெபிப்போம்.

எப்போதும் ஜெபிக்க உங்களை அழைக்கிறேன்.7 உங்கள் குடும்பத்திற்காக ஜெபியுங்கள். தேசங்களின் தலைவர்களுக்காக ஜெபியுங்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனங்களையும், பணக்காரர்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அனைவரையும் பாதிக்கும் சமூக, சுற்றுச்சூழல், அரசியல் மற்றும் உயிரியல் கொள்ளைநோய்களுக்கு எதிரான தற்போதைய போர்களில் முன் வரிசையில் இருக்கும் தைரியமான மக்களுக்காக ஜெபியுங்கள்.

நாம் யாருக்காக ஜெபிக்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று இரட்சகர் நமக்கு போதித்தார். அவர் சொன்னார், “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் , உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.”8

நம் பாவங்களுக்காக இயேசு மரித்த கல்வாரியின் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே ”என ஜெபித்தபோது அவர் போதித்ததை செய்தார்.{9

நம்முடைய எதிரிகளாகக் கருதப்படுபவர்களுக்காக உண்மையாக ஜெபிப்பது தேவன் நம் இருதயங்களையும் மற்றவர்களின் இருதயங்களையும் மாற்ற முடியும் என்ற நமது நம்பிக்கையை செயலில் காட்டுகிறது. இத்தகைய ஜெபங்கள் நம் சொந்த வாழ்க்கையிலும், குடும்பங்களிலும், சமூகங்களிலும் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான நமது தீர்மானத்தை பலப்படுத்த வேண்டும்.

நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள், எந்த மொழி பேசுகிறீர்கள், அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், தேவன் தம்முடைய சொந்த வழியிலும் அவருடைய நேரத்திலும் உங்களுக்குச் செவிசாய்த்து பதிலளிப்பார். நாம் அவருடைய பிள்ளைகள் என்பதால், உதவி, ஆறுதல் மற்றும் உலகில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட விருப்பம் ஆகியவற்றைப் பெற அவரை அணுகலாம்.

நீதி, சமாதானம், ஏழைகள் மற்றும் நோயுற்றவர்களுக்காக ஜெபிப்பது பெரும்பாலும் போதாது. நாம் ஜெபத்தில் முழங்கால் படியிட்ட பிறகு நமக்கும் பிறருக்கும் உதவ, நாம் முழங்காலிலிருந்து எழுந்து, நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்.10

தங்கள் சொந்த வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஜெபத்தை செயலுடன் இணைத்த விசுவாசமுள்ள ஜனங்களின் உதாரணங்கள் வேதத்தில் நிரம்பியுள்ளன. மார்மன் புஸ்தகத்தில், எடுத்துக்காட்டாக, ஏனோஸைப்பற்றி வாசிக்கிறோம். “அவனுடைய சிறு புத்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒரு ஜெபம் அல்லது தொடர்ச்சியான ஜெபங்களை விவரிக்கிறது, மேலும் மீதிப்பகுதி அவன் பெற்ற பதில்களின் விளைவாக அவன் என்ன செய்தான் என்பதை சொல்கிறது”என பார்க்கப்பட்டிருக்கிறது.11

1820 வசந்த காலத்தில் அவரது பெற்றோரின் மர வீட்டிற்கு அருகில் ஜோசப் ஸ்மித்தின் முதல் குரல் ஜெபம் தொடங்கி, நமது சொந்த சபை வரலாற்றில் ஜெபம் எவ்வாறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மன்னிப்பு மற்றும் ஆவிக்குரிய வழிநடத்துதலை நாடி, ஜோசப்பின் ஜெபம் வானத்தைத் திறந்தது. இன்று, நாம் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை ஸ்தாபிக்க தீர்க்கதரிசி ஜோசப் மற்றும் பிற உண்மையுள்ள பிற்காலப் பரிசுத்தவான் ஆண்களும் பெண்களும் ஜெபித்து செயல்பட்டதன் பயனாளிகளாக இருக்கிறோம்.

மேரி ஃபீல்டிங் ஸ்மித் போன்ற உண்மையுள்ள பெண்களின் ஜெபங்களைப்பற்றி நான் அடிக்கடி நினைக்கிறேன், தேவனின் உதவியுடன், இல்லினாயில் பெருகிவரும் துன்புறுத்தல்களிலிருந்து தனது குடும்பத்தை தைரியமாக வழிநடத்தி, இந்த பள்ளத்தாக்கில் வந்து அவரது குடும்பம் ஆவிக்குரிய ரீதியாகவும் உலகப்பிரகாரமாகவும் முன்னேறியது. முழங்காலில் மனதார ஜெபித்தபின், அவர் தனது சவால்களை சமாளிக்கவும், தன் குடும்பத்தை ஆசீர்வதிக்கவும் கடுமையாக உழைத்தார்.

ஜெபம் நம்மை உயர்த்தி, தனிநபர்களாகவும், குடும்பங்களாகவும், ஒரு சபையாகவும், உலகமாகவும் நம்மை ஒன்றிணைக்கும். ஜெபம் விஞ்ஞானிகளில் செல்வாக்கு ஏற்படுத்தும், மற்றும் இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் கண்டுபிடிப்புகளில் அவர்களுக்கு உதவும். அன்பானவரை இழந்தவர்களுக்கு ஜெபம் ஆறுதல் அளிக்கும். நமது சொந்த பாதுகாப்பிற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதில் அது நமக்கு வழிகாட்டும்.

சகோதர சகோதரிகளே, ஜெபத்திற்கான உங்கள் உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மறைவிடத்திலும், உங்கள் அன்றாட நடைப்பயணத்திலும், உங்கள் வீடுகளிலும், உங்கள் தொகுதிகளிலும், எப்போதும், உங்கள் இருதயங்களிலும் ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.12

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவர்கள் சார்பாக, எங்களுக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த கடினமான காலங்களில் சபையை வழிநடத்த உணர்த்துதலும் வெளிப்பாட்டையும் பெறும்படி தொடர்ந்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஜெபத்தால் நம் சொந்த வாழ்க்கையை மாற்ற முடியும். நேர்மையான ஜெபத்தினால் உணர்த்துதல் பெற்ற நாமும், முன்னேறி, மற்றவர்களும் இதைச் செய்ய உதவலாம்.

ஜெபத்தின் வல்லமையை எனது சொந்த அனுபவத்தால் நான் அறிவேன். சமீபத்தில் நான் என் அலுவலகத்தில் தனியாக இருந்தேன். நான் என் கையில் ஒரு மருத்துவ அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அது கருப்பு மற்றும் நீலம், வீக்கம், மற்றும் வலியுடன் இருந்தது. நான் என் மேசையில் அமர்ந்திருக்கும்போது, முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை, ஏனெனில் இந்த வலியால் நான் திசைதிருப்பப்பட்டேன்.

நான் ஜெபத்தில் முழங்கால்படியிட்டு, என் வேலையை முடிப்பதற்காக கவனம் செலுத்த முடியும்படியாக, எனக்கு உதவுமாறு கர்த்தரிடம் கேட்டேன். நான் எழுந்து என் மேசையில் இருந்த காகிதக் குவியலுக்குத் திரும்பினேன். கிட்டத்தட்ட உடனடியாக, தெளிவும் கவனமும் என் மனதுக்கு வந்தன, எனக்கு முன்னால் இருந்த அவசர விஷயங்களை முடிக்க முடிந்தது.

உலகின் தற்போதைய குழப்பமான நிலைமை, திரளான சிக்கல்களையும் சவால்களையும் கருத்தில் கொள்ளும்போது அச்சுறுத்தலாகத் தோன்றலாம். ஆனால், தேவையான ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் பரலோக பிதாவிடம் நாம் ஜெபித்து கேட்போம் என்றால், நம் குடும்பங்கள், அயலார், சமூகங்கள் மற்றும் நாம் வாழும் நாடுகளையும் கூட நாம் எவ்வாறு ஆசீர்வதிக்க முடியும் என்பதை அறிந்து கொள்வோம் என்பதே எனது தீவிரமான சாட்சியம்.

ஏழைகளுக்கு உணவளித்து, தேவைப்படுபவர்களுக்கு தைரியத்தையும் ஆதரவையும் வழங்கி, அவரிடம் வரும் அனைவருக்கும் அன்பு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் ஓய்வு ஆகியவற்றை அளித்து, இரட்சகர் ஜெபித்தார், பின்னர் “நன்மை செய்பவராக சுற்றித் திரிந்தார்.”13 அவர் தொடர்ந்து நம்மை அணுகுகிறார்.

மீட்பர் தம்முடைய சீஷர்களுக்கு அறிவுரை வழங்கியபடியே செய்ய சபை அங்கத்தினர்கள் அனைவரையும், அயலாரையும், உலகெங்கிலும் உள்ள மற்ற விசுவாசக் குழுக்களின் நண்பர்களையும் அழைக்கிறேன்: சமாதானத்துக்காகவும், ஆறுதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும், ஜெபம்பண்ணி விழித்திருங்கள். 14

ஜெபத்தின் வல்லமை எவ்வளவு பெரியது, இன்று தேவன் மீதும் அவருடைய அன்பான குமாரனிடமும் நம்முடைய விசுவாச ஜெபங்கள் எவ்வளவு தேவை! ஜெபத்தின் வல்லமையை நினைவில் வைத்துக் கொள்வோமாக. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. லூக்கா 21:36; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  2. மத்தேயு 24:6, 7.

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:91; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  4. M. Russell Ballard, in Sarah Jane Weaver, “President Ballard Pleads with Latter-day Saints to ‘Pray for This Country’ as United States Is at ‘Another Crossroad,’” Church News, Oct. 21, 2019, thechurchnews.com.

  5. Weaver, “President Ballard Pleads with Latter-day Saints” பார்க்கவும்.

  6. மத்தேயு 6:9–13. வசனம் 13ஐ ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு தெளிவுபடுத்துவதைக் கவனியுங்கள்: “மேலும் suffer [permit] us not to be led into temptation, but deliver us from evil” (Joseph Smith Translation, Matthew 6:14 [in Matthew 6:13, footnote a]).

  7. லூக்கா 18:1–8; 21:36; எபேசியர் 6:18; 2 நேபி 32:9; 3 நேபி 18:15, 18–21; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:5; 19:38; 33:17; 61:39; 88:126; 90:24 பார்க்கவும்.

  8. மத்தேயு 5:44.

  9. லூக்கா 23:34.

  10. ஆல்மா 34:27–29 பார்க்கவும்.

  11. Sharon J. Harris, Enos, Jarom, Omni: A Brief Theological Introduction (Provo, Utah: BYU Maxwell Institute, 2020), 18.

  12. ஆல்மா 33:3–11; 34:17–27 பார்க்கவும்.

  13. அப்போஸ். 10:38.

  14. லூக்கா 21:36, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டிருக்கிறது; 3 நேபி 18:15ஐயும் பார்க்கவும்.