இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஏப்ரல் 2026
உங்கள் தவறுகளுக்குப் பிறகு—பெரிய தவறுகளாக இருந்தாலும் கூட
அப்போஸ்தலனாகிய பேதுருவிடமிருந்து இரட்சகரைப் பற்றியும், அவருடைய பாவநிவர்த்தியை பற்றியும், மீண்டும் முயற்சி செய்வதைப் பற்றியும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
கார்ல் ப்ளோக் அவர்களின் பேதுரு மறுதலித்தல்
நம்மில் பெரும்பாலோர், முற்றிலும் மறந்துவிட விரும்பும் ஒரு நினைவையாவது குறைந்தபட்சம் உருவாக்கியிருப்போம். அது உண்மையிலேயே சங்கடமான தருணமாக இருந்தாலும் சரி, ஒரு வேதனையான விபத்தாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் திரும்பப் பெற விரும்பும் வார்த்தைகளை உபயோகித்த ஒரு விவாதமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் ஒரு முறை "மீண்டும் செய்யும்" அல்லது ஒரு "அழிக்கும்" பொத்தான் என்பது மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் பல தருணங்கள் உண்டு.
ஒரு கசப்பான தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பேதுரு ஒரு வியக்கத்தக்க நபராக இருந்தான். இயேசுவை நோக்கித் தண்ணீரின் மேல் நடந்து செல்லும் அளவுக்கு அவனுக்கு விசுவாசமும் தைரியமும் இருந்தது. ஆனால் சில கணங்களுக்குப் பிறகு, அவன் தன் பயங்கள் தன்னை மேற்கொள்ள அனுமதித்து, மூழ்கத் தொடங்கினான்; அப்போது அவன் உதவிக்காகக் கர்த்தரை நோக்கிக் கதறினான் ( மத்தேயு 14:28–31 காண்க). பேதுருவின் வாழ்க்கையைப் பற்றிய அனைத்து விவரங்களையும் நாம் அறியவில்லை என்றாலும், அவன் ஒருமுறை மனம் கசந்து அழுததை நாம் அறிவோம்.
இயேசு கிறிஸ்து கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்பாக பேதுரு தன்னை மூன்று முறை மறுதலிப்பான் என்று அவர் தீர்க்கதரிசனமாகச் சொன்னார். அத்தகைய தீர்க்கதரிசனத்தை நம்ப மறுத்த பேதுரு, "உம்முடனே நான் மரிக்க வேண்டியிருந்தாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன் என்று அதிக உறுதியுடன் சொன்னான்" (மாற்கு14:31).
நிச்சயமாக, இரட்சகரின் தீர்க்கதரிசனம் உண்மையானது. இரட்சகரின் கைதைச் சூழ்ந்திருந்த நடுக்கம் மற்றும் அச்சத்தால், பேதுருவின் தைரியம் அவனை விட்டுப் போனது. தான் இரட்சகரை அறிவேன் என்பதை ஏற்கனவே இரண்டு முறை மறுதலித்த பிறகு, மூன்றாவது முறையாக வற்புறுத்தப்பட்டபோது, பேதுரு சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கி, "நீங்கள் சொல்லுகிற இந்த மனுஷனை நான் அறியேன்" என்றான் (மாற்கு14:71).
சேவல் இரண்டு முறை கூவியபோது, இரட்சகரின் தீர்க்கதரிசனத்தைப் பேதுரு நினைவு கூர்ந்து, "வெளியே போய், மனங்கசந்து அழுதான்" (மத்தேயு26:75).
ஆனால் அது அவனுடைய கதையின் முடிவல்ல!
ஒரு திருப்புமுனை, என்றென்றும்.
வேதவாக்கியங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியவற்றின் படி, பேதுருவின் பயம் அதன்பின் ஒருபோதும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அவனுடைய சாட்சியத்தை மீண்டும் ஒருபோதும் அசைத்துப் பார்க்கவில்லை. அவன் எந்தவொரு தனிப்பட்ட ஆபத்து நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இரட்சகரைப் பற்றித் தைரியமாகச் சாட்சியமளித்தான். நினைவில் கொள்ளுங்கள், இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த ஜனங்களுக்குத் தான் பேதுரு போதித்துக் கொண்டிருந்தான்! ஆபத்து உண்மையானதாக இருந்தது.
பிறவியிலிருந்தே சப்பாணியாயிருந்த ஒரு மனுஷனை, "நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட" (அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6) என்று கட்டளையிட்டுப் பேதுரு குணமாக்கியபோது, அவனும் யோவானும் கைது செய்யப்பட்டு, இந்த அற்புதத்தை அவன் எப்படிச் செய்தான் என்று விசாரிக்கப்பட்டான்.
பேதுரு மிகவும் தைரியமாக பதிலளித்தான்: "உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமான நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே இந்த மனுஷன் உங்களுக்கு முன்பாக ஆரோக்கியமாய் நிற்கிறான் என்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும்."
வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:10–12).
என்ன ஒரு துணிச்சலான பதில்! அவனது உறுதியான நம்பிக்கைக்கு இது ஒரு தெளிவான சான்று.
குறைபாடுகள் உள்ள ஊழியர்கள், சேவையாற்ற முழுத் தகுதி உடையவர்கள்.
இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பாவம் செய்யப்போகிறோம். நமது மிகச் சிறந்த முயற்சிகளையும் மீறி, அவ்வப்போது நமது எதிர்பார்ப்புகளையும் நோக்கங்களையும் அடைய முடியாமல் நாம் தவறிவிடுவோம். பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் தலைவரான, தலைவர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் (1940–2025) ஒருமுறை கற்பித்தது போல, "அவருடைய ஒரே பரிபூரணமான பேறான குமாரனைத் தவிர, குறைபாடுகள் உள்ள ஜனங்களுடனேயே தேவன் எப்போதும் பணியாற்றி வருகிறார்."
உங்கள் ஆவிக்குரிய மதிப்பு உங்கள் தவறுகளால்—பெரிய தவறுகளால் கூட—வரையறுக்கப்படுவதில்லை! அவன் மனந்திரும்பி, கிறிஸ்து அவனை மன்னித்ததால், பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தது, அவன் பின்னர் மிகுந்த வல்லமையுடன் சாட்சியமளிப்பதையும், போதிப்பதையும், மக்களை மனமாற்றுவதையும் தடுத்து நிறுத்தவில்லை. வேதவாக்கியங்களில், பாவம் செய்து, மனந்திரும்பி, பின்னர் கிறிஸ்துவிடம் விசுவாசத்துடன் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்த மற்ற சீஷர்களைப் பற்றிய பல உதாரணங்கள் நிறைந்துள்ளன.
சாத்தான் எப்போதும் உங்கள் தவறுகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன என்றும், அவற்றை உங்களால் ஒருபோதும் வெல்ல முடியாது என்றும் உங்களை நம்ப வைக்க முயற்சி செய்வான். அவனுடைய பொய்களைப் புறக்கணியுங்கள்!
இளம் பெண்கள் பொதுத் தலைமையின் முதல் ஆலோசகரான சகோதரி தமாரா டபிள்யூ. ரூனியா கற்பித்தார்: "நீங்கள் இதைக் கேட்க வேண்டும், அதனால் நான் இந்த வார்த்தைகளை சத்தமாகச் சொல்கிறேன்: உங்கள் தலையில் ஒலிக்கும் குரலோ அல்லது நீங்கள் செய்த தவறுகளோ நீங்கள் அல்ல." நீங்களும் அதைச் சத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கலாம். சாத்தானிடம் சொல்லுங்கள், ’இன்று அல்ல.’ அவனை உங்களுக்குப் பின்னால் தள்ளுங்கள்.
"உங்களை உங்கள் இரட்சகரை நோக்கித் திருப்பும் அந்த தெய்வீகத் துயரத்தை, அந்த ஈர்ப்பை உணருங்கள்; உங்கள் வாழ்விலும் நீங்கள் நேசிப்பவர்களின் வாழ்விலும் அவருடைய கிருபை நுழைவதைக் காணுங்கள். நொறுங்குண்ட இருதயத்துடன் நாம் தைரியமாக அவரை நோக்கி வரும் அந்த நிமிடமே, அவர் உடனடியாக அங்கே இருப்பார் என்று நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்."
கிறிஸ்து ஆறுதலளிப்பவர் கார்ல் ப்ளோக்
உங்களுடைய பிரகாசமான நாட்கள் வரவிருக்கின்றன
இந்த ஈஸ்டர் காலத்தில், இரட்சகரின் பாவநிவர்த்தியைப் பற்றி நீங்கள் முழுமையாகச் சிந்திக்கும்போது, மனந்திரும்புவதற்கும் மீண்டும் முயற்சி செய்வதற்குமான திறன், நீங்கள் பெறக்கூடிய மிகப் பெரிய வரங்களில் ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் நிமித்தம், உங்கள் மிக மோசமான தவறுகள்கூட மன்னிக்கப்பட்டு, கனமான சங்கிலிகளைப் போல தூக்கி எறியப்படலாம்.
"இரட்சகர் எப்போதுமே அவமானத்தின் இருளை விட அதிகப் பிரகாசமானவர்," என்று சகோதரி ரூனியா கற்பித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் நிமித்தம், நீங்கள் அவர் மீது கவனம் செலுத்தும்போது, நம்பிக்கை எப்போதும் உங்களுக்கு முன்பாக பிரகாசமாக ஜொலிக்கும்.
© 2026 by Intellectual Reserve, Inc. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்தர இளைஞரின் பெலனுக்காக (For the Strength of Youth) செய்தி, ஏப்ரல் 2026-ன் மொழிபெயர்ப்பு. Tamil. 20064 418